Thursday, February 28, 2008

மனஓசை - 22 (பக்கம்:135-140)



அதிகாலையில் ஒலித்த தொலைபேசி அழைப்பில் திடுக்கிட்டெழுந்த கோபுவின் நெஞ்சு படபடத்தது. ரெஸ்ரோறன்ற் வேலையை முடித்து விட்டு வந்து மூன்று மணிக்குப் படுத்தவனை நான்கு மணிக்கே தொலைபேசி குழப்பி விட்டது. சற்று எரிச்சலுடன் போர்வையை இழுத்து எறிந்து விட்டு தொலைபேசியை நோக்கி ஓடினான்.

இந்த அகால வேளையில் இப்படி தொலைபேசி அலறினால் அது ஊரிலிருந்து வரும் அழைப்பாகத்தான் இருக்கும் என்பது அவனுக்குத் தெரியும். ´வேறு யார் அப்பாவாகத்தான் இருக்கும்.´ மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

முன்னர் என்றால் ஊரிலிருந்து வரும் தொலைபேசி அழைப்பில் காசு கரைந்தாலும், அப்பாவுடன் பேசுவதில் அவனிடம் உற்சாகம் பிறக்கும். இப்போது போட்டி போட்டுக் கொண்டு பல ரெலிபோன் கார்ட்டுகள் வந்து தொலைபேசிச் செலவைக் குறைத்திருந்தாலும் அவனது உற்சாகம் முன்னரைப் போலில்லாது குறைந்து விட்டது.

ஊரில் உள்ளவர்கள் பாடு கஷ்டந்தான். அவன் இல்லையென்று சொல்லவில்லை. மாடு போல் உழைத்து… அப்படிச் சொல்வதையும் விட அதிகமாகத் தன்னை வருத்தி, உழைத்து உழைத்து ஊருக்குத்தான் அனுப்பினான்.

பதினைந்து வருடங்களின் முன் 84 இல் அவன் ஜேர்மனிக்கு வந்த போது, அவன் இருபது வயது கூட நிரம்பாத அழகிய வாலிபன். வாழ்க்கையின் கனவுகள், வசந்தத்தின் தேடல்கள் எல்லாமே அவனுள்ளும் நிறைய இருந்தன.

ஆமியிடம் பிடிபட்டு பூசாவில் அடைபடவோ அல்லது அநியாயமாகச் சுடுபடவோ விரும்பாமல் அம்மா, அப்பாவின் ஆலோசனையுடன் சொந்த நாட்டை விட்டு ஓடி வந்தவன்.

வெளிநாடு, அதுவும் ஐரோப்பா… கோட், சூட்டுடன், ´ரை´யும் கட்டிக் கொண்டு... அழகிய நினைவுகளும், இனிய கனவுகளும் ஜேர்மனியில் முகாம்களுக்குள் எட்டுப் பேரை அல்லது ஒன்பது பேரை ஒரு அறைக்குள் விட்ட போது முழுவதுமாகக் கலையாது போனாலும் கொஞ்சங் கொஞ்சமாகக் கரையத் தொடங்கின.

ஊருக்குக் கடிதம் எழுதவும், சில்லறைச் செலவுகளுக்கும் போதுமாயிருந்த அவர்கள் கொடுத்த பொக்கற்மணி 70மார்க்கும், வேலையும் இல்லாது வேறு இடம் போக அனுமதியும் இல்லாது இருந்ததில் வெறெதுவும் செய்ய வழி தெரியாது பியர்கேஸ் இற்கும், சிகரெட்டுக்கும் அடிமையாகிப் போன கூட இருந்தவர்களுடன் கூட வைத்துக் காணாமற் போயின.

களவாய் ஸ்ரோபெரி பழம் பிடுங்கும் வேலை செய்ததில் சிறிது பணம் சேர்ந்தாலும் அழகாய் இருந்த கைகளும், சுகமாக இருந்த முதுகும் கறுக்கவும், வலிக்கவும் தொடங்கின.

ஆரம்பத்தில் கறுத்துப் போன கன்னங்களையும், வெடித்துப் போன விரல்களையும் பார்த்து மனம் சிறிது வெறுத்துப் போனாலும் ஊருக்கு அனுப்பப் பணம் கிடைத்ததில் தொடர்ந்து வெலை செய்ய மனம் மறுக்கவில்லை.

முகாமில் கிடைக்கும் ஜேர்மனியச் சாப்பாட்டைச் சாப்பிட முடியாமல், ஆளுக்கு 1மார்க் என்று முகாமிலிருந்த எல்லாத் தமிழர்களுமாய் போட்டு வாங்கிய மின்சார அடுப்பை அறைக்கு அறை மாற்றி, கட்டிலுக்குக் கீழே ஒளித்து வைத்து ´ஹவுஸ்மைஸ்ரர்´ இற்குத் தெரியாமல் சமைப்பதே ஒரு சாதனையாகி, ஒரு கோழியை ஒன்பது பேர் பகிர்ந்துண்பது அதை விடப் பெரிய சாதனையாகி, கொட்டும் பனியில், குளிரின் கொடுமையில் வாழ்க்கையே வேதனையாகியதில், படிக்கும் நினைவும், ஐரோப்பிய வாழ்க்கை பற்றிய கனவும் கலைந்த போதுதான் ஆளுக்கொரு நகரமாய் அனுப்பப் பட்டார்கள்.

கோபுவுடன் இன்னொரு தமிழனையும் அனுப்பினார்கள். அவனுக்கு அந்த நகர் பிடிக்கவில்லை என்று, யாரையோ பிடித்து, எப்படியோ கதைத்து கனடா போய்ச் சேர்ந்து விட்டான்.

முகாமை விட்டு வெளியில் வந்த சந்தோசத்தை வாய் விட்டுச் சொல்லக் கூட ஒரு தமிழ்க்குருவி இல்லாது கோபு தனித்துப் போய் விட்டான். தனிமையில் பேசி, தனிமையில் சிரித்து வேலை செய்ய அனுமதியோ, வேறு நகரம் செல்ல ஒரு விதியோ இல்லாத நிலையில் பைத்தியக்காரன் போலத் திரிந்தான்.

வாழ்க்கைச் செலவுக்கென அவர்கள் கொடுக்கத் தொடங்கி விட்ட 350மார்க்கில் சோறையும், கோழியையும் சாப்பிட்டு விட்டு மீதியை ஊருக்கு அனுப்பினான். பணம் கிடைத்ததும் அம்மாவும், அப்பாவும், தங்கை தம்பிமாரும் எப்படியெல்லாம் மகிழ்வார்கள் என நினைத்துத் தனக்குள் மகிழ்ந்தான்.

“என்ரை ராசா…” என்ற படி பாசம் பொங்க ஊரிலிருந்து வந்த கடிதங்கள் நியமாகவே பாசத்தைச் சுமந்து வந்தாலும் போகப் போக “சாமான் விலையேற்றம், கூட அனுப்பு.” என்றன.

பாஷை தெரியா விட்டாலும் படிகள் ஏறி “வேலை இருக்கா?” என்று கேட்டதில் பேக்கரி, பிற்சேரியா, ரெஸ்ரோறன்ற்… என்று வேலைகள் கிடைத்தன. வேலைக்கான அனுமதிப் பத்திரம் இல்லாது களவாய் வேலை என்பதால் வேலை கொடுத்தவர்களும் போதிய ஊதியம் கொடுக்க மறுத்தார்கள். வேலையை மட்டும் நன்றாக வாங்கினார்கள். ஊரிலுள்ள உறவுகளின் தேவைகள் அவனால்தான் தீர்க்கப்பட வேண்டும் என்பதால் ´வேண்டாம்´ என்று வேலையை விட்டுப் போகவும் வழி தெரியாது கூட்டல், கழுவல், துடைத்தல், சலாட் கழுவுதல்... என்று எல்லா வகையான வேலைகளையும் செய்தான்.

இப்படியே வாழ்க்கை மாறி, அழகிய இருபது வயது வாலிபனான கோபு குளிரிலும், பனியிலும், வேலையிலும் ஆறு வருடங்களைக் கழித்த பின்னே வேலை செய்யவும், வேறு நகரம் செல்லவும் அனுமதி கிடைத்தது.

இனியாவது வாழ்க்கை சிறப்பாகி விடுமென்ற நம்பிக்கையில் ஓடி ஓடி வேலை தேடினான். வேறு நகரங்களுக்குச் சென்று நண்பர்களைச் சந்தித்தான்.

பாஷை தெரியாத நாட்டில் படித்த படிப்புக்கோ, பகட்டான வேலைக்கோ இடமில்லை என்பதை வேலை தேடிய போதும், நண்பர்களுடன் பேசிய போதும் தெரிந்து கொண்டான்.

படிக்க என்று ஆசை வந்தது. ஊருக்குப் பணம் அனுப்ப வேண்டிய பாரிய பிரச்சனையில் ஆசை ஆசையாகவே இருக்க களவாய் செய்த வேலைகளையே அனுமதியுடன் தொடர்ந்தான்.

ஊரில் தங்கைமார் வளர வளர, ஒரு வேலையில் கிடைத்த பணம் போதாமல் இரண்டு வேலை, மூன்று வேலை என்று தேடி வாழ்க்கை பணத்துக்கு ஓடுவதாய் மாறி விட்டது.

“பக்கத்து வீடு மாடியாய் எழுந்து விட்டது. நாங்கள் மட்டும் இப்பிடி இருக்கிறது உனக்குத்தான் அழகில்லைத் தம்பி!”

“தங்கைச்சிக்கு ஒரு வரன் சரி வந்திருக்கு. கனடாப் பெடியன். ஆறு இலட்சம் சீதனம் கேட்கினம். இந்தியாவிலை கலியாணத்தை வைக்கோணுமாம்... உன்ரை கையிலைதான் அவளின்ரை வாழ்க்கை தங்கியிருக்கு…”

இப்படியாகத் தொடர்ந்த ஊர்க் கடிதங்கள் அவனைப் பணத்துக்காகத் துரத்தின. பஸ்சிலும், ரெயினிலும் ஓடிக் களைத்தவன் சொந்தமாகக் கார் வாங்கி ஓடி இன்னும் களைத்தான். பாசம் ´பேசாதே´ என்று கட்டிப் போட அலுத்தான்.

உழைத்து உழைத்து அனுப்பியவன், முப்பதைத் தாண்டிய பின்னும் ´உனக்கொரு கல்யாணம் செய்து பார்க்க எமக்காசை´ என அம்மாவோ, அப்பாவோ ஒரு வரி எழுதாததில் மனதுக்குள் சலித்தான்.

வாழ்க்கையின் ஆசைகளும், வசந்தத்தின் தேடல்களும் ஏக்கங்களாய் மாறின. நரையோடத் தொடங்கி விட்ட தலையில் மெல்லிய வழுக்கையும் விழத் தொடங்கியது.

அடிக்கடி கண்ணாடியைப் பார்த்து ஆதங்கப் படும் பலநூறு ஐரோப்பியத் தமிழ் இளைஞர்களின் வரிசையில், 35 வயதைத் தொட்டு நிற்கும் பிரமச்சாரியாக அவனும் நின்ற போதுதான் அவன் மதுவைக் கண்டு கொண்டான்.

மதுவின் சினேகம் அவனைத் தென்றலாய் தழுவியது. அவள் அன்பில் தனக்குள் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தான். தனக்கும் ஒரு வாழ்வு வரப் போகிறதென்ற மகிழ்வில் அது பற்றி ஊருக்கு எழுதினான்.

“இன்னுமொரு தங்கை இருபந்தைந்து வயதில், கல்யாணமாகாமல் இருக்க... உனக்கென்ன அவசரம்?” என்றது ஊர்க்கடிதம். வாழ்க்கை ஆசை அவனை வாட்ட, யார் சம்மதமுமின்றி பதிவுத் திருமணம் செய்து மதுவை மனைவியாக்கிக் கொண்டான்.

அதுதான் இப்போது பிரச்சனை. “தங்கை இருக்க, நீ கல்யாணம் செய்தது மாபெருந்தப்பு” என்று அம்மாவும், அப்பாவும் மட்டுமல்ல, மாமா, மாமி, சித்தப்பா சித்தி... என்று எல்லோருமே மனங் கொண்ட மட்டும் திட்டி எழுதி விட்டார்கள்.

மனம் சலித்து விட்டது. யாரும் அவனுக்கு இப்போது கடிதம் எழுதுவதில்லை. ஆனாலும் மாசம் தவறாது வவுனியா வரை வந்து, தொலைபேசியில் அழைத்து, பணத்தை உண்டியல் மூலம் எடுத்துப் போக அப்பா மறப்பதில்லை.

ஓடிப்போனவன், ரெலிபோனை எடுத்தான். அப்பாவின் அழைப்புத்தான் அது. ஒரு நிமிட அழைப்பில் “திருப்பி எடு” என்று சொல்லி விட்டு அப்பா வைத்து விட்டார். திருப்பி எடுத்தான். ஊர் நிலைமை பற்றி, கஷ்டங்கள் பற்றி அப்பா நிறையச் சொன்னார். அம்மா, சகோதரங்கள் பற்றி நாத்தழுதழுக்க விசாரித்தான்.

“தம்பி, இந்த முறை கொஞ்சங் கூடவா அனுப்பு தம்பி! நீ அனுப்பிறது ஒரு மூலைக்கும் போதுதில்லை. எல்லாம் விலை. கொக்கான்ரை பிள்ளைக்கும் பிறந்தநாள் வருது. அதுவும் பெரிசாச் செய்யாட்டி உனக்குத்தான் மரியாதையில்லை. ஒரு ஆயிரமாவது கூட அனுப்பு... நாளைக்குக் காசு கொண்டு வந்து தந்திடுவினைதானே?” அப்பா மூச்சு விடாமல் சொல்லி முடித்தார்.

ஏற்கெனவே ஏஜென்சிக்குக் காசு கட்டிவிட்டு மொஸ்கோவில் இரண்டு வருடங்களாக நிற்கும் தம்பியை வெளியில் எடுக்க இன்னும் சில ஆயிரங்கள் ஏஜென்சிக்குக் கொடுக்க வேண்டும். அந்தப் பணப் பிரச்சனையே கோபுவின் தலைக்குள் சுமையாக இருக்க, அப்பா இன்னுமொரு ஆயிரம் கூடக் கேட்கிறார்.

ஏற்கெனவே குற்றவாளிக் கூண்டில் உறவுகளால் நிறுத்தப் பட்ட அவனால் அப்பாவின் வேண்டுதலை மறுக்க முடியவில்லை.

“ஓமப்பா, நான் அனுப்புறன். நாளைக்கே காசைக் கொண்டு வந்து தருவினம்.” என்றான்.

“உன்ரை மனைவி மது எப்பிடி இருக்கிறாள்?” என்று அப்பா ஒரு வார்த்தை கேட்கவில்லை. தொலைபேசி வைக்கப் பட்டு விட்டது.

கோபுவின் மனம் வேதனைப் பட்டது. ´இந்த ஆயிரங்களை எப்படிச் சமாளிக்கலாம்´ என்ற யோசனையில் மூளை குழம்பியது. ஆறுதல் படுத்த இருக்கும் மனைவியுடனும் ஆறி இருந்து பேச நேரமில்லை. அடுத்த வேலைக்குப் போவதற்கிடையில் இன்னும் ஒரு மணித்தியாலந்தான் படுக்கலாம். ஓடிப் போய்ப் படுத்தான். ஆனால் தூக்கம் அவனை விட்டுத் தூர விலகியிருந்தது.

3.10.2000

மனஓசை - 23 (பக்கம்:141-146)



இன்றைய சுமதியின் கனவு மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. வழமையான கனவுகள் போல கட்டிலில் இருந்து தொப்பென்று விழுவதாயோ, திடுக்கிட்டு விழித்து அழுவதாயோ இருக்கவில்லை.

நேற்றிரவு படுக்கையிலேயே சுமதிக்கும் அவள் கணவனுக்கும் காரசாரமான சண்டை வந்து விட்டது. சண்டை என்னவோ வழமையாக வரும், ஊருக்குப் பணம் அனுப்பும் விடயத்தில்தான் ஆரம்பித்தது.

சுமதியின் அம்மாவிடமிருந்து நேற்றுக் கடிதம் வந்திருந்தது. அதில் ´பொம்பிளைப் பிள்ளையைக் கேட்கக் கூடாதுதான். ஆனாலும் என்ன செய்யிறது பிள்ளை, என்னாலை ஒண்டையும் சமாளிக்கேலாமல் கிடக்கு. சாப்பாட்டுக்கே கஷ்டமாயிருக்கு. ஏதாவது உதவி செய் பிள்ளை...´ என்று எழுதியிருந்தது.

சுமதி இதைப் பற்றி முதலே கணவன் மாதவனோடு கதைக்கத்தான் விரும்பினாள். ஆனால் மாதவனோ ´இவள் இது பற்றிக் கதைத்து விடுவாளே´ என்ற பயத்தில், தான் முக்கியமான வேலையில் இருப்பது போல கொம்பியூட்டரின் முன் இருந்து ஏதோ தேடுவது மாதிரியும், ரெலிபோனில் முக்கிய விடயங்கள் பேசுவது மாதிரியும் பாசாங்கு பண்ணிக் கொண்டிருந்தான்.

இவள் காத்திருந்து சலித்து படுக்கைக்குப் போய் அரை மணித்தியாலத்தின் பின்பே அவன் படுக்க வந்தான்.

அம்மாவின் கடிதம், சாப்பாட்டுக்கே காசில்லையென்று, பணம் கேட்டு வந்த நிலையில் எந்த மகளால் நிம்மதியாக நித்திரை கொள்ள முடியும். சுமதி நிம்மதியின்மையோடு படுக்கையில் புரண்ட படியே “இஞ்சருங்கோ..! அம்மான்ரை லெட்டர் பார்த்தனிங்கள்தானே. தம்பியவங்கள் என்ன கஷ்டப் படுறாங்களோ தெரியேல்லை. என்ரை இந்த மாசச் சம்பளத்திலை கொஞ்சக் காசு அனுப்பட்டே?" மாதவனிடம் கேட்டாள்.

மாதவனிடமிருந்து மௌனந்தான் பதிலாய் வந்தது.

“என்ன… சொல்லுங்கோவன். அனுப்பட்டே?" சுமதி கெஞ்சலாய்க் கேட்டாள்.

“உன்னோடை பெரிய தொல்லை. மனுசன் இராப்பகலா வேலை செய்திட்டு வந்து நிம்மதியாக் கொஞ்ச நேரம் படுப்பம் எண்டால் விட மாட்டாய். லைற்றை நிப்பாட்டிப் போட்டுப் படு." கத்தினான் மாதவன்.

சுமதிக்கும் கோபம் வந்து திருப்பிக் கதைக்க, வாய்ச்சண்டை வலுத்தது.

“..............."

“..............."

“..............."

இறுதியில் “நீயும், உன்ரை குடும்பமும் கறையான்கள் போலை எப்பவும் என்னைக் காசு, காசெண்டே அரிச்செடுப்பீங்கள்." மாதவன் இரவென்றும் பாராமல் கத்தினான்.

“என்ரை குடும்பத்துக்கு நீங்களென்ன அனுப்பிக் கிளிச்சுப் போட்டிங்கள். நான் வந்து பத்து வருஷமாப் போச்சு. இப்ப மட்டிலை ஒரு ஆயிரம் மார்க் கூட நீங்கள் என்னை அனுப்ப விடேல்லை. நானும் வேலை செய்யிறன்தானே. என்ரை காசை வீட்டுச் செலவுக்கு எடுத்துக் கொண்டு உங்கடை காசை உங்கடை அண்ணன்மார் கனடாவிலையும், அமெரிக்காவிலையும் வீடு வேண்டுறதுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறிங்கள்." சுமதியும் ஆக்ரோஷமாகச் சீறினாள்.

மாதவனுக்கு ரோசம் பொத்துக் கொண்டு வர “என்ரை குடும்பத்துக்குக் காசு அனுப்புறதைப் பற்றி, நீ என்னடி கதைக்கிறாய். நான் ஆம்பிளை அனுப்புவன். அதைப் பற்றி நீயென்ன கேட்கிறது?" கத்திய படியே எழுந்து, சுமதியின் தலையைக் கீழே அமத்தி, முதுகிலே ஓங்கி ஒரு குத்து விட்டான்.

சுமதி வலி தாளாமல் “அம்மா..!" என்று அலறினாள். மீண்டும் மாதவன் கையை ஓங்க, தன்னைக் காத்துக் கொள்ள எண்ணிய சுமதி அவன் கைகளை அமத்திப் பிடித்துத் தள்ளினாள்.

“என்னடி எனக்கு நுள்ளுறியோடி..? உனக்கு அவ்வளவு திமிரோ..? மாறி மாறி அவள் நெஞ்சில், கைகளில், முதுகில் என்று தன் பலத்தை எல்லாம் சேர்த்து மாதவன் குத்தினான்.

சுமதியால் வலியைத் தாங்க முடியவில்லை. “மிருகம்" என்று மனதுக்குள் திட்டியவாறு அப்படியே படுத்து விட்டாள்.

மாதவன் விடாமல் திட்டிக் கொண்டே அருகில் படுத்திருந்தான். சுமதி எதுவுமே பேசவில்லை. மௌனமாய்ப் படுத்திருந்தாள், மனதுக்குள் பேசியபடி.

கண்ணீர் கரைந்தோடி தலையணையை நனைத்துக் கொண்டிருந்தது. மனசை நிறைத்திருந்த சோகம் பெருமூச்சாய் வெளியேறிக் கொண்டிருந்தது.

சுமதி படுத்திருந்தாள். மாதவனின் திட்டல்கள் எதுவும் அவள் காதுகளில் விழவில்லை.

அப்போது அவள் முன்னே ஒரு அழகிய ஆண்மகன் குளித்து விட்டு ஈரத்தைத் துடைத்த படி, பின்புறமாக நின்றான். திரண்ட புஜங்களுடன் மாநிறமான ஒரு ஆண் மகன் ஈரம் சொட்ட நின்ற போது, சுமதிக்கு அவன் முகத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. அந்த நேரம் பார்த்து அந்த ஆண்மகன் சுமதியின் பக்கம் முகத்தைத் திருப்பினான். அழகிய முகம்.

அவன் புன்னகை சுமதியைக் கொள்ளை கொண்டது. ´என் இலட்சிய புருஷன் இவன்தான்´ சுமதியின் மனம் நினைப்பிலே களிப்புற்றது. சுமதி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இடையில் இன்னொருவன் வந்து நின்றான். அந்த இன்னொருவனைப் பார்க்கச் சுமதிக்குப் பிடிக்கவில்லை. தன் மனங்கவர்ந்த முதலாமவனை அவள் தேடினாள். முதலாமவனின் கண்கள் அந்த இன்னொருவனையும் தாண்டி இவளுள் எதையோ தேடின.

தேடியவன் மெதுவாக இவளருகில் வந்தமர்ந்தான். அந்த நேரம் பார்த்து யாரோ இடையே வந்து விட அவன் போய் விட்டான்.

அடுத்த நாள் அவனைப் பற்றிய நினைவுகளுள் மூழ்கிய படியே சுமதி லயித்திருந்தாள். அவன் வந்தான்.

தனக்காக, தன்னைத் தேடி, தனக்குப் பிரியமான ஒருவன் வந்திருக்கிறான், என்ற நினைப்பில் சுமதி மிகவும் சந்தோஷப் பட்டாள்.

அதற்கடுத்த நாளும் அவன் நினைவுகளைச் சுமந்த படி ´வருவானா..!´ என்ற எதிர்பார்ப்பு நிறைந்த கேள்வியோடு, அவள் வீட்டிலிருந்து வெளியேறி வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கினாள். அது இரு பக்கமும் மரங்களடர்ந்த ஒரு அமைதியான, அழகான பாதை.

அந்த ரம்மியமான சூழலில், காதல் உணர்வுகள் மனதை நிறைக்க, அதில் அவன் நினைவுகளை மிதக்க விட்ட படி சுமதி நடந்து கொண்டிருந்தாள். தூரத்தில் அவன் வந்து கொண்டிருப்பதைக் கண்டதும் அவள் இனம் புரியாத இன்பத்தில் மிதந்தாள்.

´எனக்காக வருகிறான். எனக்கே எனக்காக வருகிறான். தேநீரோ, சாப்பாடோ கேட்க அவன் வரவில்லை. என்னில் காதல் கொண்டு, என்னைத் தேடி வருகிறான். என்னைப் பார்க்க ஆசை கொண்டு வருகிறான். என்னோடு கதைத்துக் கொண்டு இருக்க வருகிறான். என்னைச் சமையலறைக்குள் அனுப்பி விட்டு தான் ஒய்யாரமாக இருந்து தொலைக்காட்சி பார்க்கும் எண்ணம் அவனுக்கு இல்லை. என்னைச் சாமான்கள் வாங்கக் கடைக்கு அனுப்பி விட்டு, நான் தோள் வலிக்கச் சாமான்களைத் தூக்கிக் கொண்டு வரும் போது, ரெலிபோனில் நண்பருடன் அரட்டை அடிப்பது மட்டுமல்லாமல், “நான் என்ரை மனிசிக்கு முழுச் சுதந்திரமும் குடுத்திருக்கிறன்." என்று சொல்லுகிற வக்கிரத்தனம் அவனுக்கு இல்லை.

அவனிடம் எந்த சுயநலமும் இல்லை. எனக்கே எனக்காக, என்னைப் பார்க்க, என்னைத் தேடி வருகிறான். என்னைப் பக்கத்தில் வேலைக்காரி போல வைத்து விட்டு, ஊர்ப் பெண்களுடன் அரட்டை அடித்துத் திரியும் கயமைத்தனம் இவனிடம் இல்லை.´ ஆயிரம் நினைவுகள் சுமதியை ஆக்கிரமிக்க ஆவலுடன் அவன் வருவதைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

அன்று போல் அரை குறை ஆடையுடன் இன்று அவன் இல்லை. தூய உடை அணிந்திருந்தான். அவன் நெருங்க நெருங்க சுமதி அவனை முழுமையாகப் பார்த்தாள்.

புன்னகையால் அவள் மனதை ஜொலிக்க வைத்த அவன் தலையில், மெலிதாக நரையோடியிருந்தது. சுமதி அவன் வரவில் மகிழ்ந்தாள். வானத்தில் பறந்தாள். ஏதோ தோன்றியவளாய் பக்கத்தில் இருந்த பாதையில் திரும்பினாள். அவன் இரண்டு அடி தள்ளி அவள் பின்னே தொடர்ந்தான். அது ஒரு பூங்கா. அங்கு ஒரு சிறு குடில். அவன் அதனுள் நுழைந்து அங்கிருந்த வாங்கிலில் அமர்ந்து சுமதியைக் கண்களால் அழைத்தான். சுமதி அவன் பார்வைக்குக் கட்டுண்டவள் போல், போய் அவனருகில் அமர்ந்து கொண்டாள்.

அவன் சுமதியின் வலதுகை விரல்களை பூக்களைத் தொடுவது போல், மிகவும் மெதுவாகத் தொட்டுத் தூக்கி, தன் மறுகையில் வைத்தான். அவன் தொடுகையில் உடற் பசியைத் தீர்க்கும் அவசரமெதுவும் இல்லை. அன்பு மட்டுமே தெரிந்தது.

சுமதியின் வானத்தில் நட்சத்திரங்கள் தெரியத் தொடங்கின. அவள் மிகமிகச் சந்தோஷமாயிருந்தாள். வாழ்க்கையின் அர்த்தம் அவளுக்குப் புரிந்தது.

திடீரென்று, அவளை யாரோ தோளில் பிடித்து உலுப்பியது போல இருந்தது. திடுக்கிட்ட சுமதி விழிகளைத் திறந்து பார்த்தாள்.

அங்கே பூங்காவும் இல்லை. புஷ்பங்களும் இல்லை. கனவுக் காதலனும் இல்லை. மாதவன்தான் விழிகளை உருட்டியபடி, கோபமாக “அலாம் அடிக்கிறது கூடக் கேட்காமல் அப்பிடியென்ன நித்திரை உனக்கு வேண்டிக் கிடக்கு. எழும்படி. முதல்லை பொம்பிளையா லட்சணமா இருக்கப் பழகு.!

கெதியாத் தேத்தண்ணியைப் போட்டுக் கொண்டு வா. நான் வேலைக்குப் போகோணும்." கத்தினான்.

ஏதோ ´பொம்பிளையளுக்குச் சுதந்திரம் கிடைச்சிட்டு´ என்று ஊரெல்லாம் பேசிக் கொண்டிருக்கினம். சுமதிக்குச் ´சுதந்திரம்´ என்ற வார்த்தையின் அர்த்தமே புரியவில்லை.

அம்மாவின் கடிதம் மேசையில் மடித்த படி இருந்தது. மனசு கனக்க, அவள் மௌனமாய் தேநீரைப் போடத் தொடங்கினாள். உடலெல்லாம் வலித்தது. அன்றைய கனவு மட்டும் மனதின் ஓரத்தில் அமர்ந்திருந்து, வாழ்க்கையின் இனிமை எங்கோ தொலைந்து விட்டது என்பதை அவளுக்கு உணர்த்தியது.

6.12.2000

மனஓசை - 24 (பக்கம்:147-152)



கதவை அடித்துச் சாத்திய போது நெஞ்சில்தான் அறைந்தது போலிருந்தது. இலையுதிர்த்த மரங்களே விறைத்து நிற்கும் குளிர் வெளிக்குள் கவின் நுழைந்து விட்டான். சந்தியாவுக்கு மனம் விறைத்தது. சுந்தரேசனோ எந்தவித அலட்டலுமின்றிப் படுக்கையறையுள் புகுந்து படுக்கையில் சாய்ந்து கொண்டான்.

கவின் அமெரிக்காவுக்குப் போக வேண்டுமாம். அதுதான் இப்போது சில வாரங்களாகவே வீட்டில் புயல். இன்று உச்சக் கட்டம். மகன் அமெரிக்காவுக்குப் போவதில் சந்தியாவுக்கும் எந்தவித உடன்பாடும் இல்லைத்தான். அதற்காக அப்பா சுந்தரேசனும், மகன் கவினும் இத்தனை வாக்குவாதங்களும், சண்டைகளும் போட்டுக் கொள்ள வேண்டுமா?

பிள்ளைகளுக்கும், அப்பாவுக்கும் இடையில் சண்டைகள் வந்து விடக் கூடாதென்று எத்தனை விடயங்களைப் பக்குவமாகச் சமாளித்திருப்பாள். இந்த விடயம் தவிர்க்க முடியாததாய், அவள் கையை விட்டு நழுவி முற்று முழுதாகச் சுந்தரேசனிடம் சென்று விட்டது. அதுவும் கவின் இப்படி கதவை அடித்துச் சாத்தி, வீட்டை விட்டு வெளியில் போகுமளவுக்கு வந்து விட்டதே என்பதில் அவளுக்கு நியமாகவே வருத்தம். அவளால் அதைத் தாங்க முடியவில்லை.

எல்லாம் இந்த இணையத்தால் வந்ததுதான். சட், எஸ்.எம்.எஸ் என்று எல்லாப் பிள்ளைகளையும் போலத்தான் கவினும் கணினியோடும், கைத்தொலைபேசியோடும் திரிவான். படிப்பிலும் படு கெட்டிக்காரன் என்பதால் அவன் கணினியோடு மினைக்கெடும் போது சந்தியாவோ அன்றி சுந்தரேசனோ அவ்வளவான கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை. ஆனால் அது இப்படி முகம் தெரியாத ஒருத்தி மீது காதலை ஏற்படுத்தும் என அவர்கள் துளியும் எதிர்பார்க்கவில்லை.

´இங்கை, ஜேர்மனியிலை இல்லாத பொம்பிளையையே கொம்பியூட்டருக்குள்ளை கண்டிட்டான்´ என சந்தியா சலித்துக் கொள்வதும் உண்டு. ஆனாலும் அது இணையத்தோடே போய்விடும் என்றுதான் நினைத்திருந்தாள். இந்தளவு தூரம் வரும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.

“அண்ணாவை மட்டும் அவுஸ்திரேலியாவிலை ஒரு வருசம் போயிருந்து படிக்க விட்டீங்கள். ஏன், நான் போனால் என்ன? என்னையும் விடுங்கோ" இதுவே அவன் அடிக்கடி பாவிக்கும் ஆயுதமாக இருந்தது.

“அண்ணாவுக்குப் பதினெட்டு வயசாகீட்டுது. அவனாலை இப்பத் தனிய இருந்து படிக்கேலும். அதாலை பயமில்லாமல் விட்டம். உனக்கு இப்பத்தானே பதினாறு வயசு. உனக்கும் பதினெட்டு வயசு வரக்கை பார்ப்பம்." என்று எத்தனையோ தடவைகள் சுந்தரேசன் சொல்லி விட்டான்.

கவினும் விடுவதாயில்லை. “உங்களுக்கு அண்ணனிலைதான் பாசம். என்னிலை இல்லை. அவன் என்ன கேட்டாலும் விடுவீங்கள். செய்வீங்கள். நான் கேட்டால்தான் உங்களாலை ஏலாது." என்பான்.

“அவுஸ்திரேலியா போலையோ அமெரிக்கா. அங்கை ஒரு நாளும் உன்னைத் தனிய விடேலாது." சந்தியாவும் முந்திக் கொண்டு கத்துவாள்.

வாக்குவாதங்களும், கருத்து முரண்பாடுகளின் வெளிப்பாடுகளும் இப்படித்தான் சில வாரங்களாகத் தொடர்ந்து கொண்டிருந்தன. இன்றோ, எப்படியாவது அப்பாவைச் சம்மதிக்க வைத்து விடுவது என்ற முடிவோடுதான் கவினும் ஆரம்பித்திருக்கிறான். அவனுக்கு அங்கு அமெரிக்காவில் இருக்கிற யூலியா என்ற பெண்பிள்ளை மேல் காதலாம். அந்தப் பிள்ளை பாவமாம். அதுன்ரை அம்மா கான்சர் வந்து இறந்து விட்டாவாம். அது அம்மம்மாவோடைதான் வாழ்கிறதாம். அதுவும் இவனைப் பார்க்கத் துடியாய்த் துடிக்கிறதாம். கணினியூடு வந்த அந்தப் பிள்ளையின் படங்களை இவன் பிறின்ற் பண்ணி தன் அறைச் சுவர் முழுவதும் கொழுவி வைத்திருக்கிறான்.

சுந்தரேசனுக்குத் தெரியாத காதலே. அவன் அதைப் பற்றி ஒன்றுமே கதைக்க மாட்டான். “நீ, அமெரிக்காவுக்கு இப்போதைக்குப் போகேலாது. முதல்லை இங்கை படிச்சு முடி. பிறகு பார்ப்பம்." என்று அடித்துச் சொல்லி விடுவான்.

சந்தியாதான் “அவள் சும்மா ஒரு படத்தை அனுப்பியிருப்பாளடா. உன்னை விட வயசு கூடவாயும் இருக்கும். வீணா அவளை நினைச்சுக் கொண்டிராதை" என்று அவனைச் சமாதானம் செய்யப் பார்ப்பாள்.

எப்படியோ இன்றைய சுந்தரேசனுக்கும், கவினுக்குமான வாக்குவாதம் சற்றுக் காரமாகவேதான் இருந்தது. சுந்தரேசன் என்னவோ அமைதியாக, நிதானமாகத்தான் கதைத்தான். கவின்தான் வீட்டின் மேற்கூரையில் போய் முட்டாத குறையாகத் துள்ளிக் குதித்தான். “நீங்கள் ஒரு அப்பாவோ?" என்று வாய்க்கு வாய் கேட்டான். சுந்தரேசன் அசையவில்லை. “முடியாது" என்று திடமாகச் சொல்லி விட்டான்.

அந்தக் கோபந்தான். தான் வீட்டை விட்டுப் போகிறேன், என்று சொல்லி, கவின் அந்த இரவில் விறைக்கும் குளிருக்குள் வெளியில் போய் விட்டான்.

அவன் இப்படி விறைக்கும் குளிருக்குள் போக, சுந்தரேசன் தன்பாட்டில் போய்ப் படுத்துக் கொண்டது சந்தியாவை இன்னும் கோபத்துக்கும், கவலைக்கும் ஆளாக்கியது. கவினின் வேண்டுதல் நியாயமற்றதுதான். என்றாலும் இந்த நிலையில் சுந்தரேசனின் பாராமுகம் அவளைக் குமுற வைத்தது. படுக்கையறைக்குள் ஓடிச் சென்று “நீங்கள் ஒரு அப்பாவே? அவன் இந்தக் குளிருக்குள்ளை விறைச்சுச் சாகப் போறான். நீங்கள் நிம்மதியாப் படுப்பிங்களோ? போய் அவனைக் கூட்டிக் கொண்டு வாங்கோ!" கத்தினாள்.

சுந்தரேசன் மிகவும் அமைதியான சிரிப்புடன் “உனக்கு வேணுமெண்டால் நீ போய்ப் பார். கூட்டிக் கொண்டு வந்து உன்ரை அன்பு மகனைப் படுக்க வை. எனக்கு நாளைக்குக் காலைமை வேலை. நான் படுக்கப் போறன்." என்று விட்டு இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்து விட்டான்.

சந்தியாவுக்கு மனங் கொள்ளவில்லை. அழுகை அழுகையாக வந்தது. ஓடிச் சென்று ஜன்னலாலும், பல்கணியாலும் எங்காவது அவன் தெரிகிறானா என எட்டிப் பார்த்தாள். குளிர் மட்டுமே உறைந்து கிடந்தது. வேறு எந்த அசுமாத்தமும் இல்லை.

சுந்தரேசனை எட்டிப் பார்த்தாள். அவன் தூங்கி விட்டான் போலிருந்தது. மெதுவாக ஜக்கற்றை எடுத்துப் போட்டு, சப்பாத்தையும் போட்டுக் கொண்டு வெளியில் இறங்கினாள். குளிர், செவிப்பறையை அறைந்தது. சப்பாத்தையும் தாண்டி கால்விரல்களில் ஊசியாகக் குத்தியது. அவளோ தன் குளிரைப் பொருட்படுத்தாது ´கவின் இந்தக் குளிரில் எங்கு உறைந்து கிடப்பானோ´ என்ற பதைப்போடு வீட்டைச் சுற்றியுள்ள எல்லா இடங்களையும் ஓடி ஓடித் தேடினாள். இளைப்பாறுவதற்கென ஆங்காங்கு வைக்கப் பட்டிருக்கும் வாங்கில்கள், கதிரைகள் என்று எல்லாவற்றையும் பார்த்தாள்.

12மணியாகப் போகும் அந்த நடுநிசியில் அவள் தனியாக அலைந்தாள். இடையிடையே ஒளி பாய்ச்சிச் செல்லும் மோட்டார் வாகனங்கள், குருவியோ, கோட்டானோ எழும்பும் ஓசைகள், அவ்வப்போது அவளைத் தாண்டிச் செல்லும் ஓரிரு மனிதர்கள் தவிர வேறெதையும் அவளால் காண முடியவில்லை. குளிரையும் விட தூரத்து இருள்களே அவளை அடிக்கடி அச்சத்தில் சில்லிட வைத்தன. ஒரு தரம் கவினின் நண்பன் ஒருவன் அவளைத் தாண்டிய போது மனதில் நம்பிக்கை ஒளி வீச ஓடிச்சென்று “கவினைக் கண்டாயா?" என்று கேட்டாள். அவனும் “இல்லை" என்ற போது அப்படியே ஏமாற்றத்தில் மனம் துவண்டாள்.

அவனைக் கண்டு பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை தளர, கூடவே, இனி அந்தக் குளிரில் முடியாது என்று கால்களும், கைகளும் கெஞ்ச… வீடு திரும்பினாள்.

சுந்தரேசன் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். ´எப்படி இந்த மனுசனால் முடிகிறது?´ என்ற வியப்பும், கோபமும் மனதை விள்ள கதிரையில் அமர்ந்தாள். அவளால் முடியவில்லை. அழுகையும், பயமும் அவளின் அமைதியைக் குலைத்தன. ´இந்தக் குளிரில் அவன் எங்கே போவான்! சொந்தம் என்று சொல்ல யாரும் இல்லாத ஊர். நண்பர்கள் வீடுகளுக்கும் இந்த நடுநிசியில் எப்படிப் போவது? குளிரில் உறைந்து விடுவானோ?´ அவளுக்கு நடுங்கியது. மீண்டும் சப்பாத்தையும், ஜக்கற்றையும் போட்டுக் கொண்டு வெளியில் படியில் இறங்கினாள்.

ஏதோ ஒரு நப்பாசையில் வெளிக்கதவைத் திறவாமல் கெலருக்கான(நிலவறை) படிகளில் இறங்கி, கீழே போனாள். அங்கும் அவர்களுக்கான அறையின் திறப்பு அவனிடம் இல்லை. ஆனாலும் ஒரு தரம் திறந்து பார்த்தாள். இல்லை. அவன் இல்லை. ஏமாற்றம் இன்னும் ஒரு படி அவளைச் சோர வைக்க அந்த வீட்டின் பிளாற்றுகளில் வசிக்கும் எல்லோருக்கும் பொதுவான சைக்கிள்கள் வைக்கும் அறைக்குச் சென்று எட்டிப் பார்த்தாள். அங்கும் ஒருத்தரையும் தெரியவில்லை. ஏதோ ஒரு உந்துதலில் இன்னும் உள்ளே போய்ப் பார்த்தாள்.

ம்.. உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உணர்வு. அவன் இருந்தான். கூனிக் குறுகி குளிர் தாங்க முடியாமல் கைகளைக் குறுக்காகப் போட்டு தன்னைத் தானே கட்டிப் பிடித்த படி, கவின் நடுங்கிக் கொண்டு இருந்தான். இவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த அழுகை அடக்க முடியாமல் பீறிட, சந்தியா குமுறிக் கொண்டு அவனைக் கட்டிப் பிடித்தாள்.

“ஏனடா, ஏனடா இப்பிடியெல்லாம் செய்யிறாய். இந்தக் குளிரிலை இப்பிடிக் கெலருக்கை(நிலக்கீழ் அறை) இருக்கிறது உனக்கு நல்லாயிருக்கோ? வா, மேலை வா."

“ம்.. நான் வர மாட்டன். நான் அமெரிக்காவுக்குப் போப்போறன்." வார்த்தைகள் இன்னும் திமிறலோடே வெளி வந்தன.

“முதல்லை மேலை வா. அங்கை போயிருந்து கதைப்பம்"

“இல்லை, அந்தாள் இருக்கிற இடத்துக்கு வரமாட்டன்."

“டேய், அவர் உன்ரை அப்பாவடா. அவர் உன்ரை நல்லதுக்குத்தான் சொல்லுறார்."

“அவர் அப்பாவே?"

“அதைப் பிறகு கதைப்பம். முதல்லை வா."

ஒருவாறு அவனை மேலே கூட்டிக் கொண்டு போய் படுக்க வைப்பதற்குள் சந்தியாவுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது.

அடுத்த நாள் காலையில் சுந்தரேசன் “என்ன, மோன் வந்திட்டாரே?" என்றான்.

“ம்..." என்றாள் சந்தியா. அவளுக்கு சுந்தரேசன் அப்படிப் பாராமுகமாகப் படுத்து விட்டதில் மெலிதான கோபம்.

“வேறையெங்கை போறது? வருவார் என்று எனக்குத் தெரியும். நீதான் சும்மா தேவையில்லாமல்..."

சந்தியா பதில் எதுவும் சொல்லவில்லை. அவன் வந்தது காணும் என்றிருந்தது அவளுக்கு.

3.4.2007

மனஓசை - 25 (பக்கம்:153-160)



இந்த உடுப்பு எனக்குப் பிடிக்கேல்லை இதை ஆருக்காவது குடுங்கோ என்று சொல்லிக் கழட்டி எறிவது போல, “அம்மா எனக்கு அவரைப் பிடிக்கேல்லை. நான் தனிய வாழப் போறன்." என்று துளசி சொன்ன போது கோமதிக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“என்ன நீ விளையாடுறியே..? அதென்ன பிடிக்கேல்லை எண்டிறதும் அவரை விட்டிட்டுத் தனிய வாழப் போறன் எண்டிறதும்..! எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை. உனக்கென்ன பைத்தியம் கியித்தியம் பிடிச்சிட்டுதே?" கோமதி அதிர்ச்சியும், ஆச்சரியமுமாய் கத்தினாள்.

“இல்லை அம்மா. எனக்குப் பைத்தியமும் இல்லை. கியித்தியமும் இல்லை. அவரோடை வாழத்தான் பிடிக்கேல்லை. துளசி சற்று எரிச்சலுடன் கீச்சிட்டாள்.

´என்ன கிரகசாரமடா இது! ஐநூறு கிலோமீற்றர் தூரத்திலை இருக்கிற ஹனோபர் வரை போய் தில்லையம்பலத்தார் நல்ல சாத்திரி எண்டு எல்லாரும் சொல்லுகினம் எண்டு அவரட்டைச் சாதகத்தைக் காட்டி பொருத்தம் பார்த்து, பிறகு ஐயரிட்டைப் போய் நாள், நட்சத்திரம் எல்லாம் பார்த்துத்தானே எல்லாம் செய்தது. பிறகேன் இப்பிடி நடக்குது.´ கோமதி குழம்பினாள்.

ஊர் கூட்டி, உறவுகளுக்கெல்லாம் சொல்லி, உலகின் அந்த அந்தத்திலிருந்து இந்த அந்தம் வரை பார்த்துப் பார்த்து ஈமெயிலாய் அனுப்பி, ரெலிபோனாய் அடித்து, கடிதங்களாய் எழுதி தம்பட்டம் அடித்து, ஹோல் எடுத்து மணவறை போட்டு, இல்லாத அருந்ததி பார்த்து எல்லாரும் வாழ்த்தத்தானே திருமணம் நடந்தது. ஐந்து மாதங்கள் கூட சரியாக நகரவில்லை. அதற்கிடையில் இவளுக்கு என்ன வந்தது. ஏன் இப்படி அதிரடி முடிவெடுத்தாள்? கோமதிக்குத் தலையில் இடி விழுந்தது போல இருந்தது.

“நீ கெட்டிக்காரி. மோளுக்கு நல்ல ஒரு பெடியனாப் பார்த்துக் கட்டிக் குடுத்துப் போட்டாய். ஜேர்மனியிலை இப்பிடிப் படிச்ச, நல்ல குடும்பத்து மாப்பிளை கிடைக்கிறதெண்டால் லேசில்லை. நீ கெட்டிக்காரிதான். இனியென்ன! உனக்கு ஒரு பெரிய பாரம் குறைஞ்ச மாதிரித்தான்." ஏதாவது விழாக்களிலோ அல்லது கடைத் தெருக்களிலோ யாராவது தெரிந்த தமிழ்ப் பெண்களைச் சந்திக்கும் போது அவர்கள் இப்படித்தான் சொல்லி கோமதியின் மனதைக் குளிர வைப்பார்கள்.

´நல்லாத்தான் இப்பப் பாரம் குறைஞ்சிருக்கு. இவள் என்ரை தலையிலை பாறாங்கல்லை எல்லோ தூக்கிப் போட்டிருக்கிறாள்.´ கோமதியின் மனசு முணுமுணுத்தது.

துளசியோ ஒரு கவலையுமில்லாமல் சீடீ ஸ்ராண்;ட்டில் இருந்து சீடீ ஒன்றை எடுத்துப் போட்டு, பாட்டை ஓட விட்டிட்டு இடுப்பை வளைத்து வளைத்து ஆடிக் கொண்டிருந்தாள்.

கோமதிக்கு அவளின் இந்த அலட்டிக் கொள்ளாத தன்மை எரிச்சலையே தந்தது.

கோமதியும் அந்த நாட்களில் ஆடினவள்தான். ஆனால் அது பரதநாட்டியம். அதுவும் அவளின் கழுத்தில் எப்போ தாலி ஏறியதோ அன்று வரைக்குந்தான். அதற்குப் பிறகு எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.

அவளுக்கும் அந்த நாட்களில் வீட்டில் சில சமயங்களில் ஆடவேண்டும் போல ஆசை வரும். இனி ஆட முடியாதென்னும் போது அழுகையும் வரும். ஆடவேண்டும் போல் காலும், கையும் பரபரக்கும் போதெல்லாம் “நீ ஆடுறது எனக்குப் பிடிக்கேல்லை” என்று அவள் கணவன் அதுதான் துளசியின் அப்பா முதலிரவன்றே சொன்ன வார்த்தைகள் நினைவுகளில் ஒலிக்க, அப்படியே கண்கள் பனிக்க கோமதி தன்னைக் கட்டிப் போட்டு விடுவாள்.

பரதநாட்டியம் மட்டுமே! இப்படி எத்தனை விடயங்கள் திருமண பந்தத்தில் உருவழிந்து போய் விட்டன. அதற்காக இந்த இருபத்தைந்து வருடத்தில் ஒருக்காலும் அவள் தன் கணவனை விட்டிட்டுப் போக வேண்டும் என்று நினைத்ததில்லையே!

ஆனால் ஐந்தே ஐந்து மாதத்தில், அவள் பத்து மாதங்கள் சுமந்து பெற்ற அவள் மகள் துளசி வந்து, வேண்டிக் கொடுத்த பொம்மையை வேண்டாம் என்று சொல்வது போல கணவனை வேண்டாம் என்கிறாளே! என்ன செய்வதென்று தெரியாமல் கோமதி குழம்பினாள்.

இந்தக் காலப் பிள்ளைகளிடம் எதையும் அலட்சியமாக எடுத்துக் கொள்ளும் தன்மையும், எதையும் தூக்கி எறிந்து பேசும் தன்மையும் சற்று மிகையாகவேதான் உள்ளன. அதுவும் புலம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகள், ஒரு விதமான இரட்டைக் கலாச்சாரத்துக்குள் அகப்பட்டு, அவர்களை அழுத்தும் மனஉளைச்சல் காரணமாகவோ அல்லது எதிலும் முழுமையாக ஒட்ட முடியாத இயலாமை காரணமாகவோ தமக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல பெற்றோருடன் முட்டி, மோதிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு கோமதியின் மகளும் விதி விலக்கானவளல்ல.

இரவுகளில் பிறந்தநாள் விழாக்களுக்கோ, அல்லது வேறு விழாக்களுக்கோ, அல்லது டிஸ்கோவுக்கோ செல்ல அனுமதி மறுக்கப்படும் போது துளசியின் முட்டி மோதல்களையும், வாக்குவாதங்களையும் சட்டை செய்யாதவள் போல் கோமதி நடித்திருந்தாலும், இந்த ஜேர்மனிய வாழ்வில் அது எத்தகையதொரு பாதிப்பை துளசியிடம் ஏற்படுத்தியிருக்கும் என்பதை அவள் உணராமலில்லை. அதனால் சமயம் வரும் போதெல்லாம் துளசியை தன்னுடன் அழைத்து, அன்பால் அணைத்து, ஆறுதலான வார்த்தைகளால் அறிவுரை சொல்லுவாள். அது துளசியின் ஆதங்கங்களை முற்றாகச் சமாதானப் படுத்தவில்லை என்பது கோமதிக்குத் தெரிந்தாலும் கோமதியாலும் ஒன்றும் செய்ய முடியாமலே இருந்தது.

கோமதியும் பெண்தானே. அவளும் இந்தக் கலாச்சாரம், பண்பாடு என்ற போர்வைகளுக்குள் மூச்சடங்கி முக்குளித்தவள் தானே. ஆனாலும் “இந்தக் கலாச்சாரம், பண்பாடு எல்லாம் உனக்குத் தேவையில்லை. நீ ஐரோப்பியக் கலாச்சாரத்துடன் வாழ்" என்று தன் பெண்ணிடம் சொல்ல, மற்றைய சாதாரண பெண்கள் போலவே கோமதிக்கும் மனம் துணியவில்லை.

என்னதான் புதுமை, புரட்சி என்று பேசினாலும், எழுதினாலும் தமது குடும்பம் என்று வரும் போது, ´என் பெண் இந்தக் கலாச்சாரம், பண்பாடுகளிலிருந்து நழுவி விடக் கூடாதே´ என்ற முனைப்போடுதான் பெண்களைப் பெற்ற பலர் நடந்து கொள்வார்கள். இந்த நிலையில் தானுண்டு, தன் குடும்பமுண்டு என்றும், சமூகம் என்ன சொல்லும் என்று பயந்தும் வாழும் கோமதியின் நிலை பற்றிச் சொல்லவே தேவையில்லை.

கோமதி கூட ஒரு இரண்டும் கெட்டான் மனநிலையில் போராடுபவள்தான். படித்த, உலகம் தெரிந்த அவள் மனதுக்கும், நான் ஆண் என்ற திமிர்த்தனம் சற்றும் குறையாத கணவனுடனான அவள் வாழ்வுக்கும் இடையில் அவள் நிறையவே போராட்டம் நடத்தி விட்டாள். ஆனால் அவள் போராட்டம் எப்பொழுதுமே அவள் மனதுக்குள்தான். மற்றும் படி கணவன் “எள்” என்ற உடனே இவள் ´எண்ணெய்´யாக நிற்பாள்.

இந்த மனதோடு ஒரு வாழ்வு, நியத்தில் ஒரு வாழ்வு என்ற இரட்டை வேஷம் கோமதி அறியாமலே கோமதியிடம் ஒரு வித மன உளைச்சலைக் கூட ஏற்படுத்தியிருந்தது. அதனால்தானோ என்னவோ கோமதி துளசியின் விடயத்தில், துளசியின் சின்னச் சின்ன ஏமாற்றங்களையெல்லாம் புரிந்து கொள்ளக் கூடியவளாக இருந்தாள். இருந்தாலும் பெரிதாக ஒன்றும் செய்து விட முடியாத நிலையில் துவண்டாள்.

பெண் என்ற ஒரே காரணத்துக்காக, சில சின்னச் சின்ன விடயங்களில் கூட தடைகள் விதிக்கப்பட்டு, அனுமதிகள் மறுக்கப் பட்ட போது, துளசி அப்பா, அம்மாவை மீற முடியாத இயலாமையில் பொங்கி எழுந்து, அழுது ஆர்ப்பரிக்கையில் கோமதியும் அழுதாள். நாங்கள் தமிழ்ப் பெண்கள் என்பதையும், பண்பாட்டின் பெருமையையும் விளக்கி அவளைச் சமாதானப் படுத்தினாள். ஆனாலும் துளசியின் ரீன்ஏஜ் பருவம் துளசிக்கு மட்டுமல்லாமல், துளசியைத் திருப்திப் படுத்த முடியாத கோமதிக்கும் கூட மிகுந்த மன உளைச்சலான, வேதனையான கால கட்டமாகவே இருந்தது.

அதன் பிரதிபலன்தான் இதுவோ! துளசி கணவனை வேண்டாம் என்று சொல்வது ஏதோ பழி தீர்க்கும் படலம் போலவே கோமதிக்குத் தோன்றியது.

கட்டுப்பாடுகளை உடைத்தெறிய அன்று பதின்னான்கு வயதில் அவளுக்கு முடியவில்லை. இன்று இருபத்தி நான்கு வயதில் அவள் அப்பாவை மட்டுமல்ல இந்த சமூகத்தையே பழிவாங்க நினைக்கிறாளோ!

கோமதியின் சிந்தனை பல விதமாக எண்ணியது. இருபத்தி நான்கு வயதுப் பெண்ணுக்கு அடித்தோ, உதைத்தோ ஒன்றையும் திணிக்க முடியாது. அதுவும் துளசி அப்பா போலவே பிடிவாதக்காரி. அவளிடம் அன்பால் மட்டுந்தான் எதையாவது சாதிக்க முடியும். கோமதிக்கு அது நன்கு தெரியும்.

என்ன செய்யலாம், துளசியை எப்படி வழிக்குக் கொண்டு வரலாம் என்ற யோசனைகளோடே அன்றைய இரவு அமைதியின்றிய அரை குறைத் தூக்கமும், யோசனை நிறைந்த விழிப்புமாய் அவளுக்குக் கழிந்தது. விடிந்தும் விடியாத பொழுதிலேயே தூக்கம் முழுவதுமாய்க் கலைந்து விட எழுந்து வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கி விட்டாள். நினைவு மட்டும் துளசியுடன் எப்படிப் பேசலாமென்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தது. கணவருக்குக் கூட இன்னும் நிலைமையைச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் ஒரு குதி குதித்து, ஆர்ப்பாட்டம் பண்ணி “நல்ல வளர்ப்புத்தான் வளர்த்து வைச்சிருக்கிறாய்" என்று கோமதியையும் சாடி விட்டு வேலைக்குப் போயிருப்பார். அவளின் எண்ணம், கணவரின் காதுக்கு விடயம் எட்டாமலே துளசியின் மனத்தை மாற்றி விட வேண்டும் என்பதுதான்.

அவள் நினைவுகளுடன் போராடியபடி இருக்க துளசி எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டு வந்தாள். வந்தவள் “அப்பா என்னவாம்" என்றாள்.

“அப்பாக்கு நானொண்டும் சொல்லேல்லை. சொன்னால் இப்ப ஒரு பிரளயமெல்லோ நடந்திருக்கும். ஏதோ இண்டைக்கு நேற்றுத்தான் உனக்கு அப்பாவைத் தெரியும் போலை இருக்கு உன்ரை கேள்வி. இதை என்னெண்டு அப்பாட்டை நான் சொல்லுறது!" கோமதி தனது எரிச்சலையும், கோபத்தையும் வெளியில் காட்டாமல் துளசியின் வினாவுக்குப் பதிலளித்தாள்.

“அம்மா, இது மறைக்கிற விசயமில்லை. அப்பா குதிப்பார் எண்டதுக்காண்டி முழுப் பூசணிக்காயை சோத்துக்குள்ளை மறைக்கேலாது." துளசி கத்தினாள். “இஞ்சை பார் துளசி. இங்கை கத்திறதிலையோ, ஆர்ப்பாட்டம் பண்ணுறதிலையோ ஒரு அர்த்தமும் இல்லை. கொஞ்சமாவது யதார்த்தத்தை யோசிக்கோணும். கலியாணம் எண்டிறது ஆயிரம் காலத்துப் பயிர். அதை நீ, இப்பிடித் தூக்கி எறிஞ்சிட்டு வாற விசயமெண்டு மட்டும் நினைக்காதை. ஏன், அவருக்கும் உனக்கும் இடையிலை என்ன பிரச்சனை நடந்தது? இன்னொருக்கால் அவரோடை கதைச்சுப் பார்க்கலாந்தானே!" கோமதி துளசியின் குணம் தெரிந்தவளாய் துளசியை ஆறுதல் படுத்தும் விதமாகக் கதைத்தாள்.

“அம்மா, நானும் அவரும் கதைச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தனாங்கள். எனக்கும் அவருக்கும் ஒத்து வராது. என்ரை இன்ரெஸ்ற் வேறை, அவற்றை இன்ரெஸ்ற் வேறை. அது தான்…" துளசி இழுத்தாள்.

“கலியாணம் எண்டு நடந்தால், இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் குடுத்து இன்ரெஸ்றுகளை மாத்தித்தான் வாழோணும். அதை விட்டிட்டு, இதுக்காண்டி ஆரும் எல்லாத்தையும் தூக்கி எறிவினமோ? என்ன ஒரு முட்டாள் தனமான முடிவெடுத்திருக்கிறாய்?" வினவினாள் கோமதி.

“பின்னை என்ன உங்களை மாதிரி என்னையும் வாழச் சொல்லுறிங்களே? நீங்கள் ஆசை ஆசையாப் படிச்ச பரதநாட்டியத்தை அப்பாக்காண்டி விட்டது போலை…

அம்மா, நான் வாழ ஆசைப்படுறன். ஆருக்காண்டியும் என்ரை ஆசையளை, கனவுகளை புதைக்க நான் தயாரா இல்லை. ஒருவருக்கொருவர் விட்டுக் குடுத்துத்தான் வாழோணும் எண்டு பேச்சுக்குச் சொல்லலாம். ஆனால் வாழுற போது அப்பாக்காண்டி நீங்கள் எல்லாத்தையும் விட்டுக் குடுத்திங்கள். உங்களுக்காண்டி அப்பா என்னத்தை விட்டுத் தந்தவர் எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ பாப்பம். எங்கடை ஆக்கள் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் குடுக்கிறது எண்டு சொன்னால் அதுக்கு அர்த்தம் பொம்பிளையள் எல்லாத்தையும் விட்டுக் குடுக்கோணும் எண்டிறதுதான். என்னாலை அது முடியாது.” துளசி ஆக்ரோசமாகக் கத்தினாள்.

கோமதி சில நிமிடங்களுக்கு வாயடைத்துப் போனாள். பிறகு நிலைமை விபரீதமாகப் போகப் போவதை உணர்ந்து கொண்டவளாய் “என்ன செய்யிறது துளசி. வாழ்க்கை எண்டால் அப்பிடி இப்பிடித்தான் இருக்கும். பொம்பிளையள்தான் ஒரு மாதிரி சமாளிச்சு, விட்டுக் குடுத்து கெட்டித்தனமா வாழோணும். இஞ்சை பார் நான் இருபத்தைஞ்சு வருசமா உன்ரை அப்பாவோடை வாழேல்லையே?” என்று சமாளிக்கும் வகையில் கதைத்தாள்.

“அம்மா, நீங்கள் வாழுறது ஒரு வாழ்க்கையே! நீங்கள் வாழுறிங்களே, அதுக்குப் பேர் வாழ்க்கையெண்டு மட்டும் சொல்லாதைங்கோ. திருமணம் எண்ட பேரிலை ஒரு அடிமை சாசனம் எழுதி, அதுக்கு வாழ்க்கை எண்டு ஒரு பெயர் வைச்சிருக்கிறிங்கள். எனக்குப் பிடிக்காத, எனக்கு சந்தோசம் தராத வாழ்க்கையை நான் வாழோணுமெண்டு ஏன் என்னைக் கட்டாயப் படுத்திறிங்கள்?” மிகவும் எரிச்சலுடன் துளசி சத்தம் போட்டாள்.

கோமதிக்கு ஒன்று மட்டும் தெரிந்தது. பதினாறு வயதில் கதைத்தே துளசியின் காதலைக் கத்தரித்தது போல, இருபத்தி நான்கு வயதில் துளசியைக் கதைத்து வெல்வது சுலபமான விடயமல்ல என்பது. கட்டுப்பாடுகள், அதனால் வந்த ஏமாற்றங்கள் மட்டும் என்றில்லாமல், புலம் பெயர் மண்ணின் பல்கலைக்கழகப் படிப்பும் துளசியைப் புடம் போட்டு எடுத்திருந்தது.

இனி என்ன நடக்கப் போகிறது, என்ற யோசனையில் கோமதியின் மனம் கவலை கொள்ளத் தொடங்கியது. “மகளை நல்ல இடத்தில் கட்டிக் குடுத்திட்டாய்” என்று வாயாரப் புகழ்ந்தவர்கள் எல்லோரும் இப்போ முன்னால் நீலிக் கண்ணீர் வடித்திட்டு, பின்னால், முகவாய்க்கட்டையை தோள் மூட்டில் இடித்து “பாரன் நல்ல வளர்ப்பு வளர்த்திருக்கிறா” என்று சொல்லி நையாண்டி பண்ணப் போகிறார்கள், என்ற நினைப்பே கோமதிக்குச் சங்கடமாக இருந்தது.

இனி செய்வதற்கொன்றும் இல்லை. கடைசி ஆயுதம் இந்த மனுசன்தான். அப்பாவை எதிர்க்கும் தைரியம் துளசியிடம் இருந்ததில்லை, என்று நினைத்துக் கொண்டு கோமதி மௌனமாகி விட்டாள்.

ஆனாலும் மாலையில் கணவன் வந்ததும் ஒரு பெரிய பிரளயமே நடக்கப் போகின்றது என்ற பயத்தில் மனதுக்குள் போராடினாள்.

அவர் வேலையால் வந்து சாப்பிட்டு முடித்து, ஆறுதலாக அமர்ந்த போதுதான் மெதுவாக விடயத்தைச் சொல்லத் தொடங்கினாள்.

நெற்றியில் யோசனைகள் கோடுகளாக, அவர் துளசியை அழைத்துப் பேசத் தொடங்கினார். வழமையான துள்ளல்கள் எதுவும் இன்றி மிகவும் நிதானமாக பிரச்சனைகளைச் செவிமடுக்கத் தொடங்கியவர், துளசி சொல்லச் சொல்ல மெதுமெதுவாகப் பொறுiமையை இழக்கத் தொடங்கினார். அவளது கணவனின் போக்குச் சரியில்லை, என்று கோபப் பட்டார். செயல்கள் நியாயமற்றவை எனக் கொதித்தார். துளசியின் ஆசைகளுக்கும், கனவுகளுக்கும் தடையாக இருக்கிறானே என்று வருந்தினார்.

இறுதியில், கோமதியை தான் கீறிய கோட்டிற்குள் வைத்திருக்கும் அவர், துளசி அப்படியொரு கோட்டுக்குள் நிற்கத் தேவையில்லை என்பதை ஆமோதித்தார்.

எல்லாம் பிழைக்கப் போகின்றது என்பதை உணர்ந்த கோமதி “என்னப்பா, நீங்களும் அவளோடை சேர்ந்து பாடுறிங்கள்...” என்று தொடங்கிய போது “உனக்கென்ன தெரியும். நீ வாயை மூடிக் கொண்டிரு. எங்கடை பிள்ளையை இதுக்கே நாங்கள் இப்பிடி வளர்த்து வைச்சிருக்கிறம். அவன் ஆர் எங்கடை பிள்ளையிலை இப்பிடி ஆதிக்கம் செலுத்த...” சீறினார்.

துளசியிடம் சொன்னார் “உன்ரை முடிவை நீயே எடு. உனக்கு அவனோடை வாழ்க்கை சரிவராது எண்டு பட்டால் விட்டிடு. உன்னை என்னத்துக்கு நான் படிக்க வைச்சிருக்கிறன். நீ, உன்ரை கால்லை நிக்கோணும் எண்டுதானே! அவசரப்படாமல் நிதானமா யோசிச்சு எது நல்லது, எது கெட்டது எண்டு நீயே தீர்மானி. நீ இன்னும் சின்னப்பிள்ளை இல்லை” என்றார்.

கோமதியால் அவரது நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மனைவிக்கும், மகளுக்கும் இடையிலான அவர் பார்வையின் பேதம் அவளை ஆச்சரியப் படுத்தியது. பிரளயத்தை எதிர்பார்த்த படி காத்திருந்தவள் பேச முடியாமல் நின்றாள்.

மே-2002

மனஓசை - 26 (பக்கம்:161-166)



சங்கவிக்குக் கையும் ஓடேல்லை. காலும் ஓடேல்லை. இண்டைக்கு அவர் வாறார். எத்தினை வருசக் காத்திருப்புக்குப் பிறகு வாறார். சரியாப் பத்து வருசங்கள்.

அவளுக்கு இருபத்தைஞ்சு வயசா இருக்கேக்கை பேசின கலியாணம்.

மாப்பிள்ளை ஜேர்மனியாம். அப்ப அவருக்கு முப்பத்தெட்டு வயசு. சங்கவியை விட பதின்மூண்டு வயசு கூட எண்டாலும் பரவாயில்லை. சீதனம் ஒண்டும் வேண்டாம், எண்டெல்லே சொல்லியிருக்கிறார். இனி இதுக்குள்ளை வயசைப் பார்த்துக் கொண்டிருக்கேலுமே!

போதாதற்கு சங்கவிக்குப் பின்னாலை 23, 20, 16 எண்டு மூண்டு குமருகள் எல்லோ காத்துக் கொண்டு நிக்குதுகள். அதுதான் மாப்பிள்ளைக்கு தலை முன்பக்கத்தாலை வெளிச்சுப் போனதைப் பற்றிக் கூட ஒருத்தரும் அக்கறைப் படேல்லை.

இந்த விசயத்திலை சங்கவி கோயில் மாடு மாதிரித்தான். பெரியாக்கள் எல்லாருமாப் பேசித் தீர்மானிச்சிட்டினம். அவள் தலையை ஆட்ட வேண்டியதுதான் பாக்கி இருந்தது. அவளுக்கு வேறை வழியில்லை. ஆட்டீட்டாள்.

என்ன..! அம்மா கல்கி, குமுதம், ஆனந்தவிகடன் எண்டு எல்லாச் சஞ்சிகைகளையும் வேண்டிப் படிச்சதோடை விடாமல், அதிலை வந்த தொடர்கதைகள் எல்லாத்தையும் சேர்த்துக் கட்டி வைச்சிருந்தவள். அந்தப் புத்தகங்களுக்கை இருந்த பொன்னியின் செல்வன், ராஜமுத்திரை போன்ற அரச கதையளை எல்லாம் வாசிச்சு வாசிச்சு, அதிலை வாற ராஜகுமாரர்களைப் போலவும், இளவரசர்களைப் போலவும் தனக்குள்ளை ஒரு இலட்சிய புருசனை வரிச்சு வைச்சிருந்தவளுக்கு, இப்ப கறுப்பா, கட்டையா வழுக்கைத் தலையோடை ஒருத்தன் வரப் போறான். ஆனால் வெளிநாட்டிலை இருந்து வரப் போறான்.

கதைகளிலை வந்த மாநிறமான வீரபுருசர்களைக் கற்பனையிலை கண்ட சங்கவிக்கு, ஜேர்மனி மாப்பிள்ளைதான் இனி தன்ரை புருசன் எண்டதை மனசிலை பதிய வைக்கிறதுக்குக் கொஞ்சக் காலங்கள் தேவைப்பட்டுது.

அது பல காலங்கள் ஆகியிருந்தால் கூட ஒண்டும் ஆகியிருக்காது. ஏனெண்டால் நியம் பார்க்காமல், நிழற்படம் பார்த்து, இரண்டு வருச கடிதக் குடித்தனத்துக்குப் பிறகு, திடீரென்று ஒரு நாள் மாப்பிள்ளையைத் தூக்கி ஜெயில்லை போட்டுட்டாங்களாம். என்ன, அவர் ஒண்டும் பெரிய பிழை விடேல்லையாம். தூள் வித்தவராம். கறிக்குப் போடுற தூள் இல்லை, மற்றது.

ஜேர்மனிய சட்டதிட்டங்களும், பொலிஸ் கெடுபிடியளும் எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே. மாப்பிள்ளையோடை சேர்ந்து இன்னும் நாலு பேராம். சங்கவி ராஜகுமாரர்களை எல்லாம் களைஞ்சு போட்டு, ஜேர்மனிய மாப்பிள்ளையை மனசுக்குள்ளை குடி வைச்ச பிறகுதான் இந்தப் பிரச்சனை வந்ததெண்ட படியால், பிறகு ஜேர்மனி மாப்பிள்ளையையும் மனசிலை இருந்து களைஞ்செறிய அவளுக்குத் துணிவு வரேல்லை.

இனி என்ன செய்யிறது! ´கிரிமினல் குற்றவாளி´ என்ற பட்டப் பெயரோடை வெளியிலை வரப்போற மாப்பிள்ளைக்காண்டி இன்னும் ஐஞ்சு வருசம் காத்திருக்க வேண்டி வந்திது.

இதுவே இப்ப எண்டால் மாப்பிள்ளையை நேரே கொண்டு போய் நாட்டிலை இறக்கி விட்டிருப்பாங்கள். அந்த நேரம் அந்தக் கடும் சட்டம் வராத படியால் மாப்பிள்ளையாலை ஜேர்மனியிலையே இருக்க முடிஞ்சுது.

சங்கவி காத்திருந்தாள். மனசு ஒண்டையே சுத்திச் சுத்திக் காத்துக் கொண்டிருக்க வயசு மட்டும் சொல்லாமல் கொள்ளாமல் அவசரமாய் ஓடி 32 ஐத் தொட்டிட்டுது.

ஜெயிலிலை இருந்து வெளியிலை வந்தவன் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு திருமணத்துக்காண்டி சிங்கப்பூரை நோக்கின பயணத்துக்கு ஆயுத்தமாக இன்னும் 3 வருசங்கள் தேவைப்பட்டுது.

அதிலையென்ன வந்தது இப்ப..? சங்கவி 35 ஐத் தொட்டிட்டாள். அவ்வளவுதான். மனசு மட்டும் இன்னும் 25 போலை மிகவும் இளமையாய் கனவுகளோடை காத்திருந்திச்சுது.

மாப்பிள்ளை எல்லாச் செலவுகளையும் பார்க்கிறார் எண்டுதான் பேச்சு. ஆனால் பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு சிங்கப்பூருக்கு வாறதுக்கிடையிலை சங்கவின்ரை அம்மாவுக்குத்தான் கொஞ்ச ஆயிரங்கள் செலவழிஞ்சிட்டுது.

எல்லாப் பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு வந்திருந்தால் இன்னும் கூடப் போயிருக்கும். தனிய சங்கவியின்ரை 16 வயசுத் தங்கைச்சி பார்கவியையும், - அவளுக்கு இப்ப 26 ஆச்சு - அப்பா இல்லாத படியால் துணைக்கு மாமாவையுந்தான் கூட்டிக் கொண்டு வந்தவள். அப்பா கடைசித் தங்கைச்சிக்கு 10 வயசா இருக்கக்கையே மாடு மிதிச்சுச் செத்திட்டார்.

சங்கவிக்கு காசெல்லாம் செலவழியுது எண்டு கொஞ்சம் அந்தரமாத்தான் இருந்தது. ஆனால் கலியாணக் கனவுக்கு முன்னாலை அது சிம்பிள்தான். சிங்கப்பூருக்கு வந்து இரண்டு கிழமை பறந்தோடிட்டு. நல்ல காலமா சிங்கப்பூரிலை சங்கவியின்ரை தூரத்து உறவு மாமா குடும்பத்தோடை இருந்ததாலை ஹொட்டேல் செலவு இல்லாமல் தங்க வழி கிடைச்சிட்டு. மாப்பிள்ளை ஹொட்டேல் செலவை தான் பார்க்கிறன் எண்டு ஹொட்டேல்லை தங்கச் சொன்னவர். அவரும் எவ்வளவுக்கெண்டு தாறது. அவர் அங்கையிருந்து வந்தாப் பிறகு, “இவ்வளவு நாளும் ஹொட்டேல்லை இருந்து சாப்பிட்ட காசைத் தாங்கோ" எண்டு கேக்கேலுமே!

சங்கவிக்கு சிங்கப்பூரிலை ஒண்டுமே தெரியாது. வந்ததுக்கு ஒண்டையும் பார்க்கவும் இல்லை. எதையும் அறியோணும், பார்க்கோணும் எண்ட ஆர்வம் கூட பெரிசாய் இல்லாமல், வரப்போற மாப்பிள்ளையையே மனசு வட்டமிட்டுக் கொண்டிருந்திச்சுது.

மீண்டும் மீண்டுமாய் அரசகதைக் கதாநாயகர்கள் நினைவிலை வந்து போச்சினம். கச்சை கட்டின ராஜகுமாரிகளைப் போலை தன்னைக் கற்பனை செய்து கொண்டாள். அரண்மனைக்குச் சொந்தமான நீச்சல் தடாகத்திலை, தான் குளிச்சுக் கொண்டிருக்க குதிரையிலை வந்த மாப்பிள்ளை, தன்ரை அழகைக் கள்ளமாய் ரசிப்பது போலை... சங்கவிக்குக் கன்னம் எல்லாம் சிவந்து... தனக்குள்ளை தானே நாணி..!

குளிச்சு, சேலை உடுத்தி, முகத்தை நேர்த்தியாக்கிப் போட்டு நேரத்தைப் பார்த்தாள். இன்னும் மூண்டு மணித்தியாலங்கள். ´சே... இந்த நேரம் ஏன் இப்பிடி நத்தை மாதிரி நகருது?´ காத்திருக்கிறது சுகமானதுதான். ஆனால் எத்தினையோ வருசமாக் காத்திருக்கிற பொழுது தோன்றாத அவஸ்தை இறுதி நாளிலை தோன்றிறது விசித்திரந்தான். நேற்று இரவிலையிருந்து சங்கவிக்குள்ளை இன்னதெண்டு சொல்ல முடியாத போராட்டம். ´இன்னும் காத்திருக்க வேணுமோ´ எண்ட ஏக்கம். மணித்தியாலங்களை எண்ணி எண்ணி ´இன்னும் இத்தனை மணித்தியாலங்கள் காக்க வேணுமே!´ எண்ட மலைப்பு.

மாப்பிள்ளையின்ரை சொந்தங்கள், அக்காமார், அண்ணாமார் எல்லாரும் சுவிஸ், ஜேர்மனி, பாரிஸ் எண்டு பரந்திருக்கினம். அவையளும் எல்லாரும் இண்டைக்கு சிங்கப்பூர் வந்து, சங்கவியைப் பார்க்கச் சேர்ந்து வருவதாத்தான் திட்டம்.

சங்கவி பொறுமை இழந்து மீண்டும் நேரத்தைப் பார்த்தாள். குறிப்பிட்ட நேரம் தாண்டீட்டுது. அம்மா, தங்கைச்சி பார்கவி, மாமா எல்லாரும் கூட குளிச்சு, வெளிக்கிட்டு மாப்பிள்ளையை வரவேற்க ரெடியா இருந்திச்சினம்.

´ஆ... வந்திட்டினம்.´ சங்கவியின்ரை கால்கள் இரண்டும் பின்னிப் பிணைஞ்சு தடுமாறி, முடியேல்லை அவளாலை. ஓடீட்டாள் அறைக்குள்ளை.

உள்ளையிருந்து திறப்புத் துவாரத்துக்குள்ளாலை வாறவயளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ´எங்கை, மாப்பிள்ளையைக் காணேல்லை. இவர் எங்கை போட்டார்? வரேல்லையோ?´ மனசு படபடத்திச்சு. இதயம் அடிச்சுக் கொண்டு இருந்திச்சு. வண்ண வண்ணச் சீலையளிலை பொம்பிளையள், சிட்டுக்களாய் குழந்தையள்... ´இவர் மட்டும் எங்கை?´

“சங்கவீ..! வெளீலை வா" அம்மா கூப்பிட்டாள். சங்கவி மெல்லிய ஏமாற்றத்தோடை வெளியிலை வந்தாள். எல்லாரின்ரை பார்வையளும் சங்கவிக்கு மேலை மேய்ஞ்சு, பிறகு பார்கவிக்கு மேலை பாய்ஞ்சன. சங்கவியின்ரை கண்களோ மாப்பிள்ளையைத் தேடிக் கொண்டிருந்தன. ம்..கும் காணேல்லை. “எங்கை, அவர் வரேல்லையோ?" வெட்கத்தை விட்டிட்டுக் கேட்டிட்டாள்.

இப்ப எல்லாரின்ரை பார்வையளும் ஒருமிச்சு அவற்றை பக்கம்... அதுதான் ´கொல் கொல்´ எண்டு இருமிக் கொண்டிருந்த ஒருவரின்ரை பக்கம் திரும்பின. ´இவர்தானோ அவர்?!´ சங்கவியாலை நம்பவே முடியேல்லை. விரிஞ்சிருந்த கற்பனைச் சிறகுகள் சட்டென்று மடிஞ்சன. ஒரு கணந்தான். சுதாரிச்சிட்டாள்.

´38வயசு மாப்பிள்ளையும் பத்து வருசத்திலை 48வயசைத் தொட்டிருப்பார்தானே. என்ரை மரமண்டைக்குள்ளை இதேன் ஏறேல்லை? அது மட்டுமே 5வருசம் ஜெயிலுக்கை இருந்தவரில்லோ! வருத்தம் பிடிச்சிருக்குந்தானே! அவரும் அதுக்குப் பிறகு ஒரு போட்டோவும் அனுப்பேல்லை. ம்ம்… ஆர் நினைச்சது! இப்பிடிக் கேவலமாப் போயிருப்பார் எண்டு.´ மனசைச் சமாளிச்சாள்.

ஒருவாறு சம்பிரதாயப் பேச்சுக்கள், சாப்பாடுகள் எல்லாம் முடிஞ்சு, அண்டைய பொழுதும் இருண்டு கொண்டு போச்சுது. அதுக்கிடையிலை மாப்பிள்ளை வீட்டுக்காரர் ஏதேதோ குசுகுசுத்திச்சினம். மாப்பிள்ளையின்ரை அக்கான்ரை புருசன், மாமாவை வெளியிலை வரச் சொல்லிக் கூட்டிக் கொண்டு போனார்.

திரும்பி வரக்கை மாமா பேயறைஞ்சது போலை வந்தார். அவையள் ஹொட்டேல் புக் பண்ணியிருக்கிறதாச் சொல்லிப் போட்டுப் போயிட்டினம். சங்கவி எதிர்பார்த்த போலை மாப்பிள்ளை அவளோடை தனியா ஒண்டுமே கதைக்கேல்லை. கடிதங்களிலை கதைச்ச மாப்பிள்ளை இப்ப சற்று அந்நியப் பட்டுப் போனார் போலை உணர்ந்தாள். மாமா நிறையப் பேசேல்லை. கவலையா இருந்தார்.

சங்கவிக்கு, மாப்பிள்ளை வரமுன்னம் மனசுக்குள்ளை இருந்த குழுகுழுப்பான நினைவுகள் எல்லாம் இப்ப இல்லாமல் போன போலை ஒருவித வெறுமையா இருந்திச்சு. தங்கைச்சிதான் சும்மா சும்மா சீண்டிக் கொண்டிருந்தாள்.

இரவு நெடு நேரத்துக்குப் பிறகு, மாமா அம்மாட்டை குசுகுசுக்கிறது சங்கவியின்ரை செவிகளிலை நாராசமாய் விழுந்திச்சு.

“35வயசு வந்த பொம்பிளையை ஆராவது கலியாணம் கட்டுவினையோ எண்டு அத்தான்காரன் கேட்டான். சங்கவின்ரை தங்கச்சியை வேணுமெண்டால் மாப்பிள்ளை கட்டுறாராம். 35 வயசான சங்கவியைக் கட்டி என்ன பிரயோசனமாம்."

சங்கவிக்கு, வானம் தரையிலை இடிஞ்சு விழுறது போலையொரு பிரமை.

´எனக்கு மட்டுந்தான் வயசு ஏறியிருக்கோ, அவருக்கு வயசென்ன இறங்கியிருக்கோ, 48 வயசுக் கிழடுக்கு 26 வயசுப் பொம்பிளை தேவைப்படுதோ..?´ நாடி, நரம்பெல்லாம் புடைச்சு, கோபம் அனல் கக்கிச்சுது. ´நாளைக்கு வரட்டும் கேட்கிறன்.´ சங்கவி மனசுக்குள்ளை கறுவிக் கொண்டாள்.

“சங்கவிக்குத்தான் வாழ்க்கை அமையேல்லை. பார்கவியாவது வாழட்டும்" எண்டு அம்மாவும் மாமாவுமாத் தீர்மானிச்சது அவளின்ரை காதுகளிலை விழேல்லை.

பங்குனி-2002

மனஓசை - 27 (பக்கம்:167-174)



சில மணி நேரத்திற்கு முன்பு, என்றைக்கும் இல்லாத சந்தோசத்துடன் அந்தப் பெரிய நாற்சார வீட்டில் வளைய வந்த செல்வமலர், இப்போதுதான் அவளின் வீட்டுக்குள் இருந்து நடுவீதிக்கு இழுத்துக் கொண்டு வந்து இருத்தப் பட்டாள். தெரு விளக்குகள் கூட எரியாத அந்த நடு இரவின் கும்மிருட்டுக்கும் அவளது அன்றைய அசாதாரண சந்தோசத்துக்கும் எந்த விதமான பொருத்தமும் இல்லாவிட்டாலும், அவளது அன்றைய சந்தோசத்துக்குக் காத்திரமான காரணம் இருந்தது.

இளம் வயதிலேயே நாட்டைக் காக்க என்று வீட்டை விட்டுப் போன அவள் மகன் ராஜன் இப்போது இரண்டு நாட்களுக்கு முன்தான் ´வெள்ளை´ என்ற பெயருடன் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான்.

கொப்புளிப்பான் அவனில் கொப்புளங்களை அள்ளிப் போட்டதால்தான் நண்பர்கள் அவனைக் கொண்டு வந்து விட்டார்கள்.

பத்து மாதங்கள் சுமந்து பெற்ற மகனை, ராஜா போல் அந்த வீட்டில் வளர்ந்தவனை வாடி வதங்கியபடி கண்டதும் செல்வமலர் சந்தோசம், துன்பம் எல்லாம் கலந்த ஒன்று நெஞ்சிலிருந்து பீறிட்டுக் கண்ணீராய்ப் பாய “பெத்த வயிறு எப்பிடித் துடிக்குதடா..?!" என்றபடி கட்டியணைத்துக் கதறினாள்.

´களத்தில் நின்றபோதும் அம்மா, உன்னை ஒரு கணமும் நான் மறக்கவில்லை´ என்று மனதுக்குள் கூறிய படி ராஜனும் செல்வமலரைக் கட்டிப் பிடித்தான். கலங்காத அவன் நெஞ்சும் ஒரு தரம் குலுங்கியது. ஒரு வருடப் பிரிவையும், அதனால் ஏற்பட்ட இதயம் நிறைந்த பாச தாகத்தையும் சில நிமிட நேரத் தழுவலில் ஓரளவுக்காவது அவர்கள் தீர்த்துக் கொண்டார்கள்.

கொப்புளங்கள் ராஜனின் மேனியில் அள்ளிப் போட்டிருப்பதால்தான் அவனால் இங்கு வர முடிந்தது என்றாலும், இந்தச் சாட்டிலாவது அவனை அருகிருந்து கவனிக்க முடிந்ததில் செல்வமலருக்குச் சந்தோசமாக இருந்தது. அந்தச் சந்தோசத்தையும் அவளால் முழுமையாக அனுபவிக்க முடியாமல் நெருஞ்சி முள்ளாய் பய நினைவொன்று நெஞ்சத்தில் குத்திக் கொண்டிருந்தது. மூன்று மாதங்களுக்கு முன் வியாபார விடயமாகக் கிளிநொச்சி வரை போன கணவன் கனகசுந்தரம் இன்னும் வந்து சேராததுதான் அவளுக்குள் கலக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இன்று வருவான், நாளை வருவான் என்றெண்ணிக் காத்திருப்பதும், போக்குவரத்து வசதி சரியாக அமையவில்லைப் போலும் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்வதுமாயே மூன்று மாதங்கள் ஓடி விட்டன.

இப்போ, வராத மகன் வந்து இரண்டு நாட்களாகியும் இந்த மனுசனைக் காணவில்லையே. வந்து மகனைக் கண்டால் எப்படி மகிழ்ந்து போவார், என்ற எண்ணம் ஏக்கமாய் அவளை வதைக்க எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள். பக்கத்துக் கோயில் வைரவரையும், புட்டளைப் பிள்ளையாரையும், மந்திகை அம்மனையும், வல்லிபுர ஆழ்வாரையும் மனதுக்குள் மன்றாடினாள்.

“என்ரை மனுசன் நல்ல படி வந்து சேர்ந்திடோணும். நான் பட்டுச் சாத்துவன், பொங்கிப் படைப்பன்…" என்றெல்லாம் மனதுக்குள் கடவுள்களுக்கு வாக்குறுதி கொடுத்தாள். அவள் மன்றாட்டம் வீண் போகவில்லை. சரியாக மகன் வந்த மூன்றாம் நாள் மாலை, அதுதான் இன்று மாலை கனகுவும் வந்து சேர்ந்து விட்டான். செல்வமலரின் மகிழ்வைச் சொல்லவும் வேண்டுமா! அப்படியொரு சந்தோசத் துள்ளல் அவளிடம்.

நீண்ட மாதங்களின் பின் நிறைவான குடும்பமாய் இருந்ததில் அவள் மனம் நிறைந்திருந்தது. கணவன் கொண்டு வந்த மரக்கறிகளை மணக்க மணக்கச் சமைத்துப் பரிமாறினாள். கனகுவுக்குக் கூட அவளது குழந்தைத் தனமான சந்தோசத் துள்ளலில் குதூகலம் பிறந்திருந்தது. அவளது மூத்தமகள் கவிதாவும், கடைக்குட்டி தீபிகாவும், களத்திலிருந்து வந்த மகன் ராஜனும் அந்தக் குதூகலத்துக்கு எந்தக் குந்தகமும் வந்து விடாத படி கூடியிருந்து கதைத்து விட்டு பத்து மணியளவில் படுக்க ஆயத்தமானார்கள்.

அகிம்சையைப் போதித்த காந்தி பிறந்த மண்ணிலிருந்து ´அமைதி காக்க´ என்று வந்த இந்தியப்படை தமது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிய பின் பருத்தித்துறை மக்களைப் பற்றிக் கொண்ட பீதி கிராமக்கோட்டில் வாழ்கின்ற செல்வமலரையும் தொற்றிக் கொள்ளத் தவறவில்லை.

இந்திய இராணுவத்தின் கற்பழிப்புகளும், காட்டுமிராண்டித் தனங்களும் இன்னும் செல்வமலரின் வீடு வரை வரவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கையாக அவள் கவிதாவையும், தீபிகாவையும் அவர்களின் அறைகளில் படுக்க விடாமல் தனது படுக்கையறையிலேயே படுக்க வைப்பாள். மகன் ராஜனையும் கடந்த இரண்டு நாட்களும் தனது பெரிய படுக்கை அறையின் ஒரு மூலையிலேதான் படுக்க வைத்தாள். இன்றும், கொப்புளிப்பான் ஆக்கிரமிப்பு இன்னும் அவனில் இருந்ததால் அவனைக் கைத்தாங்கலாய் பிடித்துக் கூட்டிக் கொண்டு போய் தனது அறையிலேயே படுக்க வைத்தாள்.

கனகு மாங்காய்ப்பூட்டைக் கொண்டு போய் கேற்றைப் பூட்டுகையில் மெதுவாக வெளியில் வீதியையும் எட்டிப் பார்த்தான். வலது பக்கம் கிராமக்கோட்டுச் சந்தியை நோக்கிய வீதியிலும் சரி, இடது பக்கம் பல்லப்பையை நோக்கிய வீதியிலும் சரி எந்த வித மனித நடமாட்டமும் தெரியவில்லை. ஊரே அடங்கிப் போயிருந்தது. எந்த வீடுகளிலும் வெளிச்சம் தெரியவில்லை.

பத்து மணிக்கே ஊரடங்கிப் போகும் படியாக நாட்டுக்கு வந்த நிலையை மனதுக்குள் எண்ணி வருந்தியவாறே கேற்றைப் பூட்டி விட்டு உள்ளே வந்தவன் படுத்கை அறைக்குள் புகுந்து கொண்டான்.

மூன்று பிள்ளைகளும், கணவனும் தன் அருகிலேயே இருக்கிறார்கள் என்ற எண்ணம் செல்வமலரின் மனதை நிறைத்திருக்க படுக்கையிலேயே கணவனுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். இரவு பன்னிரண்டு மணியையும் தாண்டிய அந்த அர்த்த ராத்திரியில் கனவு போல் அந்தச் சத்தம் கேட்டது.

“கனகசுந்தரம்... கனகசுந்தரம்... கதவைத் திற."

முதலில், ஏதோ கனவென்றுதான் செல்வமலர் நினைத்தாள். கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்ட போதுதான் ஆழ்ந்து தூங்கியிருந்தவள் துடித்துப் பதைத்து எழுந்தாள்.

´மூன்று மாதங்களின் பின் இன்றுதானே வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் தூங்குகிறேன்´ என்ற நிம்மதியுடன் தூங்கிக் கொண்டிருந்த கனகுவும் திடுக்கிட்டுக் கண் விழித்து, விபரம் புரியாமல் விழித்து, எதுவோ உறைக்க விறைத்துப் போய் விட்டான்.

´அது இந்தியப்படைதான்.´ பிறழ்ந்த அவர்களின் தமிழில் புரிந்து கொண்ட கனகுவும், செல்வமலரும் செய்வதறியாது திகைத்தார்கள். தடுமாறினார்கள்.

“கனகசுந்தரம்..!"

அதட்டலான கூப்பிடுகையில் மீண்டும் அதிர்ந்து பதறினார்கள்.

“டேய், அப்பு எழும்படா. இந்தியன் ஆமி வந்திட்டானடா" செல்வமலர் குரல் எழுப்பிக் கதைக்க முடியாமல் பயத்தில் குரலைத் தனக்குள் அடக்கி, கிசுகிசுப்பாக, தழதழத்த குரலில் ராஜனைக் கட்டிப்பிடித்து எழுப்பினாள்.

“கனகசுந்தரம், கதவைத் திற!"

மீண்டும் அதட்டலாய் ஒலித்த அந்தக் குரல் செல்வமலரினதும், கனகுவினதும் செவிப்பறைகளில் அறைந்தது. இதற்குள் கவிதாவும், தீபிகாவும் உசாராகி விட கொப்புளிப்பானில் சுருண்டு போயிருந்த ராஜனும் உசாராகி விட்டான்.

“அப்பு, நான் போய் முன் கதவைத் திறக்க முன்னம் நீ பின்பக்கத்தாலை ஓடிப் போயிடடா." செல்வமலரிடமிருந்து அழுகை பீறிட்டது. ராஜன் மனதளவில் உசாராகி விட்டாலும் கொப்புளிப்பானில் வெந்து, துவண்டு போயிருந்த அவனின் உடல் அவன் மனதின் வேகத்துக்கேற்ப இயங்க மறுத்தது.

“தம்பி, வா. நான் உன்னைக் கூட்டிக் கொண்டு போய் பின்னுக்கு விடுறன்." கவிதா அவனின் கையைப் பிடித்துக் கொண்டு நாற்சார வீட்டின் நடு முற்றத்தில் இறங்கினாள். குரோட்டன்கள், மல்லிகைக் கொடிகள், ரோஜாச் செடிகள்… எல்லாம் அவர்கள் இருவரையும் தழுவி, உரசி பின் தவிப்போடு நிற்க, அவை பற்றிய எந்த வித பிரக்ஞையும் இல்லாமல் ராஜனும், கவிதாவும் முன்னேறி குசினி விறாந்தையில் ஏறினார்கள்.

கவிதா குசினிக்குப் பக்கத்திலிருந்த பின் பக்கக் கதவை மெதுவாகத் திறக்க, ராஜன் எதுவும் தெரியாத கும்மிருட்டில் வெளியில் காலை வைத்தான். அவன் கால் நிலத்தில் பட முன்னரே படபடவென்று துப்பாக்கி வேட்டுக்கள் வெடித்தன.

கவிதா வெலவெலத்துப் போனாள். “தம்பி போகாதை, இங்காலை வா" மெல்லிய குரலில் பதைப்புடன் கூப்பிட்டுக் கொண்டு அப்படியே குசினிச் சுவருடன் ஒட்டிக் கொண்டு நின்றாள். அவளுக்கு வெளியில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.

இதே நேரம் தயங்கித் தயங்கி முன் கதவைத் திறந்த செல்வமலர் வெடிச் சத்தத்தில் அவள் நெஞ்சே அதிர, குளறியடித்துக் கொண்டு, வாசலில் நின்ற இந்திய இராணுவத்தைக் கூடக் கண்டு கொள்ளாமல் திரும்பி வீட்டுக்குள் ஓடினாள்.

அவள் இரண்டடிதான் ஓடியிருப்பாள். ஒரு முரட்டுக்கை அவளை முரட்டுத் தனமாக அழுத்திப் பிடித்தது. “இங்கை புலி இருக்குது." பார்வையால் அவளை விழுங்கிய படியே அந்தக் கைக்குரியவன் கர்ச்சித்தான். “இல்லை, இல்லை" செல்வமலர் நடுங்கிய படி மறுத்தாள். அவன் தன் அழுங்குப் பிடியை சற்றும் தளர்த்தாமல் அவளைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் வீட்டின் முன், நடுவீதியில் இருத்தினான்.

“ஐயோ… என்ரை பிள்ளையளும், மனுசனும் உள்ளை" கதறினாள். அவள் கதறலில் கொஞ்சம் கூடக் கலக்கமடையாத கல்நெஞ்சுக் காரர்களில் ஒருவன் தீபிகாவையும், கனகுவையும் வெளியிலே கூட்டிக் கொண்டு வந்து செல்வமலரின் அருகில் இருத்தி விட்டு அவர்கள் பக்கம் துப்பாக்கியைக் குறி பார்த்து நீட்டிய படி நின்றான்.

கனகுதான் முதலில் கதவைத் திறக்கப் போனவன். செல்வமலர்தான் அவனை அனுப்பப் பயந்து, அவனை அறையிலேயே இருக்கச் சொல்லி விட்டுத் தான் வந்து கதவைத் திறந்தவள். எப்படியாவது புருசனையும், பிள்ளைகளையும் இவர்கள் கண்களில் பட விடாது காப்பாற்றி விடலாம் என்றுதான் முதலில் நம்பினாள். இப்படி நடுச்சாமத்தில் நடுவீதியில் இருத்தப் படுவாள் என்று அவள் துளி கூட நினைக்கவில்லை. இதெல்லாம் நியமாக நடக்கிறதா அல்லது கெட்ட கனவா என்றும் அவளுக்குப் புரியவில்லை. பின் பக்கம் போன கவிதாவும், ராஜனும் என்ன ஆனார்கள் என்பதும் அவளுக்குத் தெரியவில்லை. ´எப்பிடியாவது என்ரை பிள்ளை தப்பியோடியிருப்பான்.´ பொங்கி வந்த கண்ணீருக்கு நம்பிக்கை நினைவுகளால் அணை போட்டாள்.

அவள் நெஞ்சைத் துளைப்பது போல் வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த துப்பாக்கி வேட்டுக்கள் மௌனமாகி விட்டன. ஆனால் அவளின் சிறு அசைவைக் கூட அவதானித்த படி துப்பாக்கி முனையொன்று அவளை நோக்கி நீண்டிருந்தது. வீட்டு வாசலில், பயப்பிராந்தியைத் தரக் கூடிய முகங்களுடனான இந்திய இராணுவத்தினர் காவலுக்கு நிற்க அவர்களுக்குள் முகமூடி போட்ட எட்டப்பன் ஒருவனும் நின்றான்.

´என்ரை பிள்ளையைக் காட்டிக் குடுக்கவோடா இவங்களைக் கூட்டிக் கொண்டு வந்தனி? நீ ஒரு தமிழனாய் இருந்து கொண்டு இப்பிடிச் செய்யலாமோடா?´ செல்வமலருக்கு அவன் நெஞ்சுச் சட்டையைப் பிடித்திழுத்துக் கேட்க வேண்டும் போல ஒரு வெறி வந்தது.

பிள்ளைகள் இரண்டு பேரும் என்ன ஆனார்கள் என்று தெரியாத பயத்தில், வெறி கோபமாய் மாறி அதைக் கொப்புளிக்க முடியாமல் திணறி அழுகையாய் சிதறியது. நடுவீதி என்றும் பாராமல் வீதியில் புரண்டு புலம்பினாள். கண்ணுக்கெட்டிய தூரத்திலிருக்கும் அந்த வைரவர் கோயில் வைரவரையும், புட்டளையிலிருக்கும் புட்டளைப் பிள்ளையாரையும் கூப்பிடக் கூடத் திராணியின்றிப் பிதற்றினாள்.

இதே நேரம் குசினிச் சுவருடன் ஒட்டிக் கொண்டு நின்ற கவிதாவின் கண்கள் அந்த இருட்டிலும் ராஜனைத் தேடின.

“தம்பி.., தம்பி.., எங்கையடா நீ.." கிசுகிசுப்பாய்க் கேட்டாள்.

சத்தம் இல்லை.

மெதுவாகச் சுவரோடு ஒட்டிய படியே வாசலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள். திடீரென்று அவளை “அக்கா..!" என்ற படி ராஜன் கட்டிப் பிடித்தான்.

“அக்கா, தண்ணி.." திக்கிய படி அவன் முனகலுடன் கேட்டான். கவிதாவின் நெஞ்சுச் சட்டையின் உள்ளே எதுவோ பிசுபிசுத்தது.

“தம்பி..!" இறுகக் கட்டிப் பிடித்தாள்.

“அக்..கா.., தண்...ணி.."

சில முரட்டுக் கைகள் அவர்களை இழுத்துப் பிரித்தன.

“விடு... என்ரை தம்பி" கவிதா திமிறினாள்.

“தம்பிக்குத் தண்ணி..." அவள் முடிக்க முன்னரே இன்னுமொரு முரட்டுக்கை அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனது.

“அ..க்..கா..!" மெலிதாக ராஜன் முனகும் ஒலியைத் தொடர்ந்து தொப்பென்று எதுவோ விழுந்த சத்தம் கேட்டது.

இழுத்து வரப்பட்ட கவிதாவும் இப்போது நடுவீதியில் இருத்தப் பட்டாள். இருட்டிலும், அவள் நெஞ்சுச் சட்டை சிவப்பாக இருப்பது தெரிந்தது. பிசுபிசுத்தது தம்பியின் குருதி என்பது அவளுக்குத் தெளிவாகப் புரிந்ததும், “தம்..பி..!" குழறிய படி வீட்டை நோக்கி ஓடினாள்.

மீண்டும் முரட்டுக்கை அவளை இறுகப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து நடுவீதியில் இருத்தியது.

நான்கு மணி நேரத்துக்கு முன்பு சந்தோச வெள்ளத்தில் மூழ்கியிருந்த அந்த வீட்டின் குசினி விறாந்தையில், இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த ராஜனை இந்திய இராணுவத்தினர் வெற்றிக் களிப்புடன் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தனர்.

ராஜன் கொப்புளிப்பானில் வீட்டுக்கு வந்திருப்பதை மோப்பம் பிடித்து இந்திய இராணுவத்திடம் காட்டிக் கொடுத்த அந்த முகமூடித் தமிழன் அவர்களைப் பின்தொடர.. கனகு அவர்களிடம் போய் “என்ரை பிள்ளை..?" கேட்டான்.

“நாளைக்கு மந்திகை ஆஸ்பத்திரிக்கு வந்து, அவன் ´புலி´ எண்டு சொல்லிக் கையெழுத்துப் போட்டிட்டு எடுத்துக் கொண்டு போ." சொல்லிக் கொண்டு சந்தோசமாகப் போனார்கள் அவர்கள்.

களத்தில் காவியமாக வேண்டிய ராஜன், எட்டப்பன் வழி வந்த காட்டிக் கொடுப்பவனால், அவன் தவழ்ந்த வீட்டிலேயே உயிரையும், உதிரத்தையும் சிந்திய கொடுமையைத் தாங்க முடியாமல் அந்த வீடே ஆழ்ந்த சோகத்தில், அசாதாரண அமைதியில் மூழ்கிக் கிடக்க, நடைப்பிணங்களாக கனகசுந்தரமும், செல்வமலரும், கவிதாவும், தீபிகாவும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

காலம் - 4.12.1987

செப்டெம்பர் 1999

மனஓசை - 28 (பக்கம்:175-178) விவாகரத்து



யன்னலினூடு தெரிந்த கஸ்தானியன் மரங்களோ, அதை அசைத்துக் கொண்டு வந்த தென்றலோ இன்று யாரையும் இதமாகத் தழுவவில்லை. றோசியின் புறுபுறுப்பும், கரகரப்பும், இடையிடையே தெறித்து விழுந்து கொண்டிருந்த அநாகரிகமான வார்த்தைகளும் அறையிலிருந்த எல்லோரையும் ஓரளவுக்கு மௌனிகளாக்கி விட்டிருந்தன.

அவளது தொணதொணப்பு அவளருகிலிருந்த எனக்குத் தாங்கவில்லை. வந்ததிலிருந்து கீறுபட்ட கிராமபோன் போல ஒன்றையே சொல்லிக் கொண்டிருந்தாள். எள்ளும், கொள்ளும் அவள் முகத்தில் வெடித்துக் கொண்டே இருந்தன.

எனக்கு இதற்கு மேல் கேட்க முடியவில்லை என்பதை அவளுக்கு உணர்த்துவதற்காக இரண்டாவது தடவையாகவும் எழுந்து சென்று தேநீர் போட்டு, குசினிக்குள்ளேயே நின்று குடித்து விட்டு வந்தேன்.

வந்து இருந்ததும் மீண்டும் தொடங்கி விட்டாள். “இந்த முறை நான் தீர்க்கமான முடிவெடுத்திட்டன். அந்தப் பன்றியை எப்பிடியாவது விவாகரத்துச் செய்யப் போறன். என்ன நினைக்கிறான் அவன். சரியான இடியட்..."

அவள் பன்றி என்றது அவளது கணவனைத்தான். என்னிடம் ´ஸ்வைனுக்கான´ தமிழ்ச் சொல்லை தனது கணவனைத் திட்டுவதற்காகவே கேட்டுப் பாடமாக்கி வைத்திருக்கிறாள்.

வழமை போலவே நேற்று மதியமும் இவள் சமைத்த பன்றிப் பொரியலும், உருளைக்கிழங்கு சலாட்டும் அவனுக்குப் பிடிக்கவில்லையாம். பிடிக்காததற்குக் காரணம் சுவை சம்பந்தமானதல்ல. முதல்நாளிரவு அவன் குடித்து விட்டுத் தள்ளாடிக் கொண்டு வந்ததால், இவள் நாய்க்கத்தல் கத்தி விட்டு அவனை வரவேற்பறையில் படுக்க விட்டிருக்கிறாள். அதற்கான பழி தீர்ப்புத்தான் அது.

பன்றிப்பொரியல் பிடிக்கவில்லை என்று அவன் சாப்பிடாமல் போயிருந்தால் இவளுக்கு இத்தனை தூரம் கோபம் ஏற்பட்டிருக்காது. நானும் இந்தத் தொணதொணப்பில் இருந்து தப்பியிருப்பேன். அவன் அதைச் சாப்பிட்டுக் கொண்டே இவளது முக அலங்காரத்தைப் பற்றி நையாண்டியாகச் சொல்லியிருக்கிறான். “உன்னை விடக் குரங்கு வடிவு" என்று நெளித்துக் காட்டியிருக்கிறான். அதுதான் இவளை உச்சக்கட்டக் கோபத்துக்குத் தள்ளியிருக்கிறது.

“நாளையிலை இருந்து எனக்கு விடுதலை. அப்ப பாரன் இவன் எவ்வளவு பாடுபடப் போறான் எண்டு.." மீண்டும் தொடங்கினாள்.

“இப்ப நீ இதை எத்தனையாவது தரம் சொல்லிப் போட்டாய்? நூறாவது தடவையா? இருநூறாவது தடவையா? அல்லது ஆயிரமாவது தடவையா?" இரண்டாவது மேசையில் இருந்த ரெகீனா எரிச்சலும், கோபமும் பீறிட கேலித் தொனியில் கேட்டாள்.

“நீ சும்மாயிரு. உனக்கென்ன தெரியும் அந்த ஸ்வைனைப் பற்றி.. இதுக்கு மேலையும் என்னாலை அவனோடை வாழேலாது. நான் தீர்க்கமான முடிவுக்கு வந்திட்டன். கண்டிப்பா அவனை விவாகரத்துச் செய்யப் போறன்."

“எனக்கு உன்ரை கணவனைத் தெரியுமோ இல்லையோ, உன்னை நல்லாத் தெரியும். உன்னோடை வேலை செய்யிற இந்தப் 13 வருசத்திலை.. நான் நினைக்கிறன், ஆயிரம் தடவைக்கு மேலை உன்ரை கணவனை விவாகரத்துச் செய்யிறதாய் சொல்லிப் போட்டாய். ஆனால் இன்னும் செய்யேல்லை. நான் உனக்குச் சொல்லக் கூடியது என்னெண்டால் உடனடியா விவாகரத்தைச் செய். அப்பதான் நாங்கள் தொடர்ந்து இந்த வேலையிலை இருக்கலாம். இல்லையெண்டால் உன்ரை தொணதொணப்பைக் கேட்டே எங்களுக்குத் தலை வெடிச்சிடும்."

“ஏ...ய். கத்தாதை. என்ரை புருசன் எனக்குக் கடுப்பேத்தினது காணும். நீயும் பிறகு என்ரை எரிச்சலைக் கிளறாதை. இந்த முறை கண்டிப்பா விவாகரத்துத்தான். நான் வீடு கூடப் பார்த்திட்டன். தளபாடங்கள்தான் பிரச்சனை. அதுகளை நான் வங்கியிலை கடனெடுத்தாவது வேண்டிப் போடுவன்."

இம்முறை அவள் சொல்வதைப் பார்த்தால் நியமாகவே விவாகரத்துச் செய்து விடுவாள் போல இருந்தது. நாளைக்கே வீடு மாறக் கூடிய விதமாக ஒரு நண்பி அவளது வீட்டின் மேல் மாடியை ஒதுக்கிக் கொடுத்து விட்டாளாம்.

என்ன இருந்தாலும் 13 வருடங்களாக என்னோடு வேலை பார்க்கிறாள். அவளைச் சமாதானப் படுத்தி விவாகரத்து எண்ணத்திலிருந்து மீட்க வேண்டும். மனம் எண்ணிக் கொண்டது.

“இஞ்சை பார். விவாகரத்துச் செய்து போட்டுத் தனிய வாழுறது மட்டும் பெரிய நல்ல விசயம் எண்டு நினைக்கிறியே. மொக்கு வேலை பார்க்காமல் நல்லா யோசிச்சு ஒரு முடிவெடு. விவாகரத்து எண்டிறது விளையாட்டு இல்லை."

“நான் நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தனான். இவனோடை என்னாலை வாழேலாது."

“விவாகரத்துச் செய்து போட்டு எத்தினை காலத்துக்குத் தனிய வாழப் போறாய்! அடுத்ததா கிடைக்கப் போறவன் இவனை விட நல்லவனா இருப்பான் எண்டிறதுக்கு என்ன உத்தரவாதம்?"

“சும்மா பேய்க்கதை கதைக்காதை. இவனை விடக் கூடாதவன் இந்த உலகத்திலையே இருக்க மாட்டான்."

அந்த நேரம் அவளோடு தொடர்ந்து கதைப்பதில் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என்ன நடக்குமோ, என்று மனது சற்று அச்சப் பட்டது. அவள் தொடர்ந்தும் தொணதொணத்துக் கொண்டே இருந்தாள். கலகலப்பாகக் கழிய வேண்டிய எங்கள் வேலை நேரம் இவளது தொணதொணப்பில் விரயமாகக் கரைந்து போனது. வேலைகள் கூட சரியான முறையில் முடியவில்லை.

நேற்றைய சண்டை காரணமாக “காரைத் தொடக் கூடாது" என அவன் சொல்லி விட்டானாம். அவசரமாய் ஜக்கற்றைப் போட்டுக் கொண்டு கைப்பையையும் கொழுவிக் கொண்டு சூஸ்(bye bye) சொல்லிய படி எங்களுக்காகக் காத்திராமல் லிப்றுக்குள் புகுந்து கொண்டாள். பேரூந்தைப் பிடிக்க வேண்டுமென்ற அவசரம் அவளுக்கு.

அவளை விட அவசரமாய் லிப்ற் இறங்கியது. நானும், மற்றவர்களும் நிதானமாக எமது ஜக்கற்றுகளைப் போட்டுக் கொண்டோம். அவளுக்காக ஒரு சிலர் பரிந்துரைத்து அவள் கணவனை மனங் கொண்ட மட்டும் திட்ட.. ரெகினா மட்டும் உதட்டை நெளித்துச் சிரித்தாள். “இப்பத்தான் காதுக் குடைச்சல் தீர்ந்தது. பிறகு நீங்களும் தொணதொணக்காதைங்கோ" என்றாள்.

ஒருவரும் யன்னலைப் பூட்டுவதாகத் தெரியவில்லை. ´வளவளா´ என்று கதை அளப்பதிலேயே குறியாக இருந்தார்கள். கஸ்தானியன் மரங்களின் அசைவில் யன்னல் சேலைகள் ஆடிக் கொண்டே இருந்தன. ஓடிச் சென்று யன்னலைப் பூட்ட முனைந்த நான் ஏதோ ஒரு ஈர்ப்பில் வெளியில் எட்டிப் பார்த்தேன்.

ம்... யாரது? யன்னலுக்கு நேரே கீழே... பெரிய பூங்கொத்து ஒன்று கைகளில் மலர்ந்திருக்க, றோசியும், அவளது கணவனும் உதட்டோடு உதடு பதித்து... இறுக அணைத்து..

நான் கண்களைக் கசக்கிப் பார்த்தேன். அவர்களேதான். ´என்னை மன்னிச்சுக்கொள்´ என்ற வாக்கியம் பூங்கொத்தில் சொருகப் பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.

என் காதுகளுக்குள் இன்னும் அவளது தொணதொணப்பு ஒட்டிக் கொண்டே இருந்தது. அவர்களோ ஒருவரின் இடுப்பை ஒருவர், கைகளால் வளைத்த படி நடக்கத் தொடங்கினார்கள். இடை இடையே கண்களால் நோக்கி, உதடுகளைக் கவ்வி... உலகின் அதி அற்புதமான காதல் ஜோடிகளில் ஒரு ஜோடி போல...

திரும்பினேன். இவர்கள், அதுதான் எனது சக வேலைத் தோழிகள் றோசியின் விவாகரத்துப் பற்றி அநுதாபத்தோடும், அது சரியா, பிழையா என்பது பற்றி அக்கறையோடும் விவாதித்துக் கொண்டு லிப்றை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள்.

12.9.2004

மனஓசை - 29 (பக்கம்:179-187)



வெளியிலை மைதானத்திலை சின்னச் சின்னப் பிள்ளையள் எல்லாரும் விளையாடிக் கொண்டிருக்கினம். சில பிள்ளையளோடை அவையளின்ரை தாய், தகப்பன்மாரும் நிற்கினம்.

இவரை இன்னும் காணேல்லை. வழக்கத்திலை நாலு மணிக்கெல்லாம் வந்திடுவார். இண்டைக்கென்ன ஐஞ்சு மணியாகியும் காணேல்லை. யன்னலாலை அவர் வாற வழியைப் பார்த்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறன். வருகிற பாடாவே தெரியேல்லை. நல்லா வேலை குடுத்திட்டாங்களோ? பிள்ளையளும் ரியூசனுக்குப் போயிட்டினம்.

மே மாதம் எண்ட படியால் பனி போய் வெய்யிலும் வந்திட்டுது. இந்த ஜேர்மன் சனம் வெய்யிலைக் கண்டால் வீட்டுக்குள்ளையே இருக்காதுகள். எப்பவும் வெளியிலைதான் நிக்குங்கள்.

எனக்கென்னவோ ஜேர்மனிக்கு வந்து மூண்டு வருசமாகியும் ஒண்டிலையும் மனசு ஒட்ட மாட்டனெண்டுது. நான் 10.5.1986 இலை ஜேர்மனிக்கு வந்தனான். இண்டைக்கு கலண்டர் 2.5.1989 எண்டு காட்டுது. இந்த மூண்டு வருசத்திலையும் இந்த மனசு எப்பிடி எப்பிடியெல்லாம் கிடந்து தவிக்குது. என்ரை மூண்டு பிள்ளையளையும், என்ரை கணவரையும் விட்டால் வேறை ஒண்டையுமே எனக்கிங்கை பிடிக்கேல்லை.

எப்பவும் ஊரிலை விட்டிட்டு வந்த தம்பிமாரையும், தங்கச்சிமாரையும், அண்ணனையும், அப்பா அம்மாவையுந்தான் மனசு நினைச்சுக் கொண்டு இருக்குது. எப்பிடிச் சொன்னாலும் நான் ஒரு சுயநலக்காரிதான். எனக்கு மனசு வந்ததுதானே, அதுகளை அங்கை விட்டிட்டு இங்கை மட்டும் ஓடி வர. இப்ப இருந்து புலம்பிறன். என்ன பிரயோசனம்..!

எனக்கு அங்கை போகோணும். அம்மான்ரை முகத்தைப் பார்க்கோணும். தங்கைச்சிமாரோடை சினிமாப் பாட்டிலை இருந்து அரசியல் வரை எல்லாத்தைப் பற்றியும் அரட்டை அடிக்கோணும். முக்கியமா தம்பியைப் பிடிச்சு, கட்டிப் பிடிச்சுக் கொஞ்சோணும்.

அவனை இந்தியன் ஆமியள் தேடுறாங்களாம். “அவன் எங்கை, அவன் எங்கை..?" எண்டு கேட்டுக் கேட்டு என்ரை சகோதரங்களை மட்டுமில்லை, ஊர்ச்சனங்களையும் சித்திரவதைப் படுத்திறாங்களாம். தங்கைச்சிதான் இதெல்லாம் எனக்கு எழுதிறவள்.

நேற்றும் சாமத்திலை கனவிலை தம்பிதான். அவன் சாப்பிடுறதுக்கெண்டு மேசையிலை இருக்க, அம்மா சோறு போட்டுக் கொண்டிருக்க, ஆமி வந்திட்டான் போலையும், தம்பி சாப்பிடாமலே ஓடுற மாதிரியும் கனவு. நான் முழிச்சிட்டன். எனக்கு ஒரே அழுகையா வந்திட்டுது.

எத்தினை நாளைக்கெண்டுதான் என்ரை தம்பிமார் சாப்பிடாமல், குடியாமல், நித்திரை கொள்ளாமல் ஓடித் திரியப் போறாங்கள். கடவுளே..! எல்லாத்தையும் நிற்பாட்டு. என்ரை தம்பிமார் மட்டுமில்லை. எல்லாப் பிள்ளையளும் வீட்டுக்குப் போயிடோணும்.

தலைக்கு மட்டும் தலேணி(தலையணி) இருந்தால் போதாதெண்டு காலுக்கொரு தலேணி, கையுக்கொரு தலேணி எண்டு வைச்சுப் படுக்கிறவங்கள் என்ரை தம்பிமார். இப்ப எங்கை, எந்தக் கல்லிலையும், முள்ளிலையும் படுக்கிறாங்களோ!

நான் போகோணும். அவங்களோடை வாழோணும். எனக்கு அடக்கேலாமல் அழுகை வந்திட்டுது. விக்கி விக்கி அழத் தொடங்கீட்டன். சத்தத்துக்கு இவர் எழும்பீட்டார்.

“என்ன இப்ப நடந்திட்டுதெண்டு இப்பிடி அழுறாய்?" ஆதரவாய்த்தான் கேட்டார்.
“நான் போப்போறன், ஊருக்கு. எனக்கு அம்மாவைப் பார்க்கோணும். பரதனைப் பிடிச்சுக் கொஞ்சோணும் போலை இருக்கு."

“என்ன, இப்பிடிப் பைத்தியக் கதை கதைக்கிறாய். இப்ப அங்கை போயென்ன சாகப் போறியே? நீயாவது இங்கை இருக்கிறாயெண்டு கொம்மாவும், கொப்பரும் எவ்வளவு நிம்மதியா இருப்பினம்."

“..................."

“இன்னும் ஒரு வருசத்திலை பிரச்சனை எல்லாம் முடிஞ்சிடும். அதுக்குப் பிறகு நாங்களேன் இங்கை இருக்கப் போறம். அஞ்சு பேருமாப் போவம். இப்பப் படு. நாளைக்கு நேரத்துக்கு எழும்போணுமெல்லோ!"

“ஓம்" எண்டு சொல்லிப் படுத்திட்டன். ஆனால் நித்திரையே வரேல்லை. கண்ணை மட்டும் மூடிக் கொண்டு படுத்திருந்தன். மனசு மட்டும் அப்பிடியே கொட்டக் கொட்ட விழிச்சுக் கொண்டு இருந்திச்சு.

´என்ரை தம்பிமாரைக் காப்பாற்று. அம்மா, அப்பா, தங்கைச்சிமாருக்கு ஒண்டும் நடந்திடக் கூடாது. எல்லாரையும் காப்பாற்று.´ எண்டு மனசு எல்லாத் தெய்வங்களையும் மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்திச்சு. பிறகு எப்பிடியோ நித்திரையாகீட்டன்.

காலைமை எழும்பி இவரையும் வேலைக்கு அனுப்பி, பிள்ளையளையும் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பிப் போட்டன். எனக்கு வேலை செய்ய அனுமதி இல்லை. இந்த நகரத்தையும் விட்டு ஒரு இடமும் போகக் கூடாது. எனக்கு அதிலை எல்லாம் கவலை இல்லை. கவலை எல்லாம் ஊரிலை இருக்கிற என்ரை உறவுகளைப் பற்றித்தான். எண்டாலும் களவா ஒரு ஸ்ரூடியோவிலை இரண்டு, மூண்டு மணித்தியாலங்கள் வேலை செய்யிறன். Workpermit இல்லாமல் வேலை தர அந்த லேடி பஞ்சிப் பட்டவதான். பிறகு ஏதோ ஓமெண்டு தந்திட்டா. நல்லவ. பிள்ளையள் பள்ளிக்கூடத்தாலை வரமுன்னம் வேலையை முடிச்சிட்டு ஓடி வந்து சமைச்சுப் போடுவன்.

என்னை அறியாமலே என்ரை கண்கள் அவர் வாறாரோ எண்டு யன்னலுக்காலை பார்த்துக் கொண்டுதான் இருந்தன. பார்த்துக் கொண்டிருக்கவே அவர் வாறார்.

என்ன..! ஒரு மாதிரி தளர்ந்து போய் வாறார். பாவம், நல்லா வேலை வாங்கிப் போட்டாங்களோ! ஊரிலை எத்தினை பேரைத் தனக்குக் கீழை வைச்சு வேலை வாங்கினவர். இங்கை வந்து இவங்களுக்குக் கீழை..!

ஏன் இப்பிடியெல்லாம் நடந்தது? ஏன் இந்த ஜேர்மனிக்குத் தனியாக வந்து சேர்ந்தம். எல்லாம் ஏதோ பிரமையாய்... நம்ப முடியாததாய்...

எனக்கு ஓடிப் போய் அம்மான்ரை மடியிலை முகத்தை வைச்சு அழோணும் போலை இருக்கு. அம்மா முதுகைத் தடவி, தலையைக் கோதி விடுவா. அப்பான்ரை கையைப் பிடிச்ச படி கதைச்சுக் கொண்டு ஊரெல்லாம் சுத்தோணும் போலை ஆசை ஆசையா வருது. எங்கையாலும் போட்டு வந்தால் “அக்கா, களைச்சுப் போட்டியள். இந்தாங்கோ இதைக் குடியுங்கோ." எண்டு தங்கைச்சிமார் ஏதாவது குடிக்கத் தருவினம். அந்த அன்பு வேணும் எனக்கு. அதிலை நான் குளிக்கோணும்.

மனசு சொல்லுக் கேளாமல் அடம் பிடிச்சுக் கொண்டு ஊரையும், உடன் பிறப்புக்களையும் சுத்திச் சுத்திக் கொண்டே நிக்குது.

இப்பிடியே நான் மனசை அலைய விட்டுக் கொண்டிருக்க இவர் வீட்டுக்குள்ளை வந்திட்டார். நான் என்ரை கவலையொண்டையும் இவருக்குக் காட்டக் கூடாதெண்டு, டக்கெண்டு சிரிச்சுக் கொண்டு “என்ன, வேலை கூடவே! லேற்றா வாறிங்கள்?" எண்டு கேட்டுக் கொண்டே குசினிக்குள்ளை போய் தேத்தண்ணியைப் போட்டன்.

தேத்தண்ணியோடை வெளியிலை வந்து பார்த்தாலும் இவர் ஒரு மாதிரித்தான் இருக்கிறார். வழக்கம் போலை முஸ்பாத்தியும் விடேல்லை. சிரிக்கவும் இல்லை. இவர் இப்பிடி இருக்க மாட்டார். முஸ்பாத்தி விடுவார். இல்லாட்டி கோபப் படுவார். கவலைப் படுற மாதிரி எல்லாம் காட்ட மாட்டார். இண்டைக்கென்ன நடந்திட்டு! ஏன் இப்பிடி இருக்கிறார்! சரியாக் கதைக்கவும் மாட்டாராம்.

நான் இவற்றை ´மூட்´ ஐ நல்லதாக்க பிள்ளையளின்ரை பகிடியளைச் சொல்லிப் பார்த்தன். கிண்டர்கார்டன் ரீச்சர் சொன்ன கதையளையும் சொல்லிப் பார்த்தன். ஒண்டுக்கும் மாற மாட்டாராம். அப்பிடியே இருக்கிறார்.

இப்ப ஏதோ சொல்ல வாறார் போலை இருக்கு. நான் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தன்.

“பரதன் போயிட்டான்" எண்டார். எனக்கொண்டுமே புரியேல்லை.

“பரதன் எங்களையெல்லாம் விட்டிட்டுப் போயிட்டான்" எண்டார் மீண்டும். இப்ப எனக்கு எதுவோ உறைச்சது. சடாரென்று ஆரோ என்ரை நெஞ்சிலை சுத்தியலாலை ஓங்கி அடிச்சது போலை இருந்திச்சு. அப்படியே நெஞ்சைப் பிடிச்சுக் கொண்டு நான் இருந்திட்டன்.

“என்ரை தம்பி..! பரதா..! போயிட்டியோ..!" இப்ப அழத் தொடங்கீட்டன்.

இருக்காது. அவன் செத்திருக்க மாட்டான். அவனை நான் பார்க்கோணும். ஏதோ ஒரு நப்பாசையோடை இவரைப் பார்த்தன். என்ன செய்யிறதெண்டு தெரியாமல் அப்பிடியே இருக்கிறார்.

“உண்மையான நியூஸ்தானோ அது?" இவரைக் கேட்டன்.

´இல்லை´ எண்டு சொல்ல மாட்டாரோ எண்ட எதிர்பார்ப்பும், ஏக்கமும் நிறைஞ்ச அவா எனக்குள்ளை.

“தகவல் நடுவச் செய்தியளிலை அப்பிடித்தான் சொல்லுறாங்கள். பிழையான செய்தியாயும் இருக்கலாம்." இவர் இப்ப என்னை ஆறுதல் படுத்தச் சும்மா சொன்னார்.

எனக்கு அவன் செத்திட்டான் எண்டு நம்பவே ஏலாதாம். நானும் தகவல் நடுவங்களுக்கு அடிச்சுப் பார்த்தன். புனைபெயர், அப்பான்ரை பெயர், வயசு எல்லாம் சரியாச் சொல்லுறாங்கள். ´மே முதலாந்திகதி பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர் மொறிஸ் இந்திய இராணுவத்துடன் நேரடியாக மோதி வீரமரணமடைந்து விட்டார்.´ எண்டு சொல்லுறாங்கள். பருத்தித்துறையெல்லாம் கர்த்தாலாம். கதவடைப்பாம். கறுப்புக் கொடியாம்.

கடவுளே..! இந்தச் செய்தியெல்லாம் பொய்யா இருக்கோணும். நான் பள்ளிக்கூடத்தாலை வீட்டை மத்தியானம் சாப்பிடப் போற பொழுது அப்பிடியே தவண்டு வந்து “மூ..மூ...த்தக்கா" எண்டு கொண்டு ஐஞ்சு விரலையும் என்ரை வெள்ளைச் சட்டையிலை பதிச்சிடுவான். நான் அவனைத் தூக்கி, கட்டிப் பிடிச்சுக் கொஞ்சுவன். அம்மாதான் “வெள்ளைச்சட்டை ஊத்தையாகுது." எண்டு கத்துவா.

எனக்குப் பத்து வயசாயிருக்கிற பொழுதுதான் பிறந்தவன். அவன் பிறந்த உடனை அப்பாவோடை மந்திகை ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பார்த்தனான். பஞ்சு மாதிரி இருந்தவன். என்ரை விரலைக் குடுக்க அப்பிடியே இறுக்கிப் பொத்தி வைச்சிருந்தவன். அப்பா, அம்மாவோடை கதைச்சுக் கொண்டிருக்க நான் அவனைத்தான் பார்த்துக் கொண்டும், தொட்டுக் கொண்டும் இருந்தனான். எனக்கு அவனை விட்டிட்டுப் போகவே மனம் வரேல்லை.

வோச்சர் வந்து “ஆறு மணியாச்சு. எல்லாரும் போங்கோ." எண்டிட்டான். அப்பா அவன்ரை கையுக்குள்ளை இரண்டு ரூபாவைத் திணிச்சு விட்டார். இன்னும் கொஞ்ச நேரம் நிற்க விட்டான்.

எனக்கு அப்பாவோடை வீட்டை திரும்பிப் போற பொழுதும் அவன்ரை மெத்தென்ற பாதம்தான் நினைவுக்குள்ளை இருந்திச்சு. சுருட்டை மயிரோடை எவ்வளவு வடிவாயிருந்தவன்.

இப்ப அவன் இந்த உலகத்திலையே இல்லையோ..! நெஞ்சு கரைஞ்சு, கண்ணீராய் ஓடிக் கொண்டே இருந்திச்சு.

முதன் முதலா அவன் நடக்கத் தொடங்கின பொழுது எவ்வளவு சந்தோசமாய் இருந்திச்சு. கொஞ்சம் வளர்ந்தாப் போலை, இரவு படுக்க வைக்கிற நேரத்திலை “மூத்தக்கா, கதை சொல்லுங்கோ." எண்டு அடம் பிடிப்பான். ஒவ்வொரு நாளும் சொல்லிச் சொல்லி எனக்குத் தெரிஞ்ச கதையெல்லாம் முடிஞ்சிடும். “மூத்தக்கா, கதை சொல்லுங்கோ. இல்லாட்டிப் படுக்க மாட்டன்." என்பான்.

பிறகு, நானே இயற்றி இயற்றிக் கதையெல்லாம் சொல்லுவன். அப்பிடியே என்னை இறுக்கிக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு நித்திரையாப் போடுவான்.

இப்ப எனக்கு அவனைக் கட்டிப் பிடிக்கோணும் போலை ஒரே அந்தரமா இருக்குது. நெஞ்செல்லாம் ஏக்கமா இருக்குது. அவனைப் பார்க்கோணும். நிறையக் கதைக்கோணும். ´மூத்தக்கா´ எண்டு கூப்பிடுறதைக் கேக்கோணும். அப்பிடியே பல்லெல்லாம் காட்டிக் குழந்தையா சிரிப்பானே. அதைப் பார்க்கோணும்.

கடவுளே..! இனி இதெல்லாம் ஏலாதே!

உலகத்துச் சோகமெல்லாம் என்னை அழுத்த எனக்கு அழுகை அழுகையாக வந்து கொண்டே இருக்குது.

இன்னும் வளர்ந்தாப் போலை எப்பிடியெல்லாம் முஸ்பாத்தி விடுவான். நான் அவனுக்குச் சொன்ன கதையளை எல்லாம், அவன் என்ரை பிள்ளையளுக்குச் சொல்லுவான். அவசரத்துக்கு என்னைச் சைக்கிளிலை கூட ஏத்திக் கொண்டு போவான். என்ரை பிள்ளையளோடை எப்பிடியெல்லாம் செல்லங் கொஞ்சுவான்.

தம்பி..! அவன் செத்திருக்க மாட்டான். நான் எத்தினை கடவுள்களை எல்லாம் மன்றாடினனான். அப்பிடி நடந்திருக்காது.

அவனையே நினைச்சு நினைச்சு, அழுது அழுது கண்ணீர் ஆற்று நீரின்ரை கணக்கிலை ஓடிக் கொண்டே இருக்குது. வத்தவேயில்லை.

எனக்கு இப்ப அப்பா, அம்மா, தங்கைச்சிமார் எல்லாரையும் கட்டிப் பிடிச்சு அழோணும் போலை இருக்கு. ரெலிபோன் கூட பருத்தித்துறைக்கு அடிக்கேலாது.

தம்பியின்ரை மறைவிலை அப்பா, அம்மா, தங்கைச்சிமார் எல்லாரும் எப்பிடி அழுவினை எண்டு நினைக்க எனக்கு இன்னும் அழுகை கூடவாய் வருது. எனக்கு ஒண்டையும் தாங்கேலாதாம். “பரதா..! என்னட்டை ஒருக்கால் வாடா!" மனசுக்குள்ளை அவனைக் கூவி அழைச்சேன்.

படுக்கையறைக்குள்ளை ஏதோ சரசரத்துக் கேட்டிச்சு. ஆவியோ..! மனசு பரபரக்க ஓடிப்போய் படுக்கையறையைப் பார்த்தன். இரண்டு நாளைக்கு முன்னம் சின்னவன் கிண்டர்கார்டினிலை இருந்து ஈயப் பேப்பரிலை வெட்டின ஒரு படம் கொண்டு வந்து தந்தவன். அதை லைற்றிலை கொழுவி விட்டனான். அதுதான் யன்னலாலை வந்த காத்துக்கு ஆடிக் கொண்டிருந்திச்சு. எனக்கு ஒரே ஏமாற்றமாப் போட்டுது.

அடுத்த நாள் இவர் வேலைக்குப் போகாமல் நிண்டு மத்தியானம் சமைச்சுப் போட்டு, சாப்பிடச் சொல்லி கோப்பையிலை போட்டும் தந்தார். எனக்கு ஒரு வாய் வைக்கவே தம்பி இந்த உலகத்திலையே இல்லை எண்ட நினைவிலை அழுகை வந்திட்டுது. உப்புக் கரிச்சுது.

“இங்கை பார். அவன் மாவீரனாப் போயிருக்கிறான். நீ அழக் கூடாது. நீ இப்பிடியே அழுது கொண்டிருந்தால் நானும் வேலைக்குப் போக, பிள்ளையளை ஆர் பார்க்கிறது?" இவர் என்னைப் பேசினார்.

அவர் சொல்லுறது சரிதான். அதுக்காண்டி அழுகை நிண்டிடுமோ! இல்லை என்ரை சோகந்தான் வடிஞ்சிடுமோ!

சும்மா சும்மா சின்னச் சின்ன விசயத்துக்கெல்லாம் எத்தினை தரம் கவலைப் பட்டிருப்பன். அழுதிருப்பன். இப்பதான் தெரியுது அதெல்லாம் ஒண்டுமே இல்லையெண்டு. சாவைப் போல சோகம் வேறையொண்டும் இல்லை. ஆராவது தெரியாதவையள் செத்தாலே கவலைப் படுறம். இளம் பிள்ளையள் செத்ததைக் கேட்டால் வயிறு கொதிக்குது. மனசு பதைக்குது. இந்தக் கவலையளும், சோகங்களும் எல்லாருக்கும் தெரியும். ஏன் எல்லாரும் அனுபவிச்சும் இருப்பினம். நானும் அனுபவிச்சிருக்கிறன்.

மில்லர் போலை ஒவ்வொரு பெடியளும் மரணத்தைக் குண்டுகளாய் உடம்பிலை கட்டிக் கொண்டு சிரிச்சுக் கொண்டு கை காட்டிப் போட்டுப் போறதை, அவையள் வெடிச்ச பிறகு வீடியோவிலை பார்க்கிற பொழுது அப்பிடியே மனசைப் பிய்ச்சுக் கொண்டு சோகம் கண்ணீராய்க் கொட்டும். இந்த அனுபவமெல்லாம் எனக்கு மட்டுமில்லை, எல்லாருக்கும் இருக்கும்.

ஆனால் இந்த சோகங்களையெல்லாம் அப்பிடியே முழுங்கி விடுற அளவு சோகமும் உலகத்திலை இருக்குதெண்டு எல்லாருக்கும் தெரியாது. அதை அனுபவிச்சவைக்கு மட்டுந்தான் தெரியும்.

உங்களுக்குப் பிரியமானவை ஆராவது செத்தவையோ? பிரியமானவை எண்டு மிகமிகப் பிரியமான ஆராவது. அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, தம்பி, தங்கை... இப்பிடி ஆராவது..?

அப்பிடியெண்டால் உங்களுக்கும் புரியும், என்ரை அந்த சோகத்திலை ஒரு இத்தனூண்டு சோகத்தைத்தான் நான் சொல்லியிருக்கிறன் எண்டு. மிச்சம் சொல்லேலாது. உணரத்தான் முடியும்.

மரணத்துக்கு முன்னாலை மற்றதெல்லாம் பூச்சியந்தான். அதை நான் என்ரை தம்பி என்னை விட்டுப் போன பொழுதுதான் முழுமையா உணர்ந்தன்.

இத்தினை தூரம் மனசு அழுது அழுது அவலப் பட்டுக் கொண்டிருக்கிற பொழுதும் நூலிழையிலை ஒரு நம்பிக்கை தொங்கிக் கொண்டிருந்திச்சு. ´தம்பி சாகேல்லை´ எண்டு தங்கைச்சி எழுதின கடிதமொண்டு ஊரிலை இருந்து வருமெண்டு.

அந்த நம்பிக்கை நூலைப் பிடிச்சுக் கொண்டு நடக்கையில், இருக்கையில், படுக்கையில், பயணிக்கையில்... எண்டு எந்தநேரமும் நினைவுகளுக்குள்ளையே மூழ்கி, அழுத விழிகளைத் துடைக்க மறந்து, ஏதோ ஒரு உலகத்திலை நான் வாழ்ந்து கொண்டிருக்கிற பொழுதுதான், சரியா 21 ம் நாள் அந்தக் கடிதம் என்னை வந்தடைஞ்சிச்சு.

´கூட வந்த தோழர்களிற்கு ஓட வழி செய்து விட்டு, தனித்திரண்டு பெடியளுடன் களத்தினிலே சமர் செய்து பாரதத்துப் படைகளது பாவரத்தம் களம் சிதற கோரமுடன் படை சரித்து எங்கள் தம்பி வீரமுடன் மண் சாய்ந்து விட்டான்´ எண்டு என்ரை தங்கைச்சிதான் அதை எழுதியிருந்தாள்.

அது இன்னுமொரு சுமை தாளாத சோகம் நிறைந்த நாள்.

1.5.1999

மனஓசை - 30 (பக்கம்:188-195)



´சோ´ வென்று கொட்டி விட்ட மழையில் மரங்களும், செடிகளும் சிலிர்த்து நின்றன. பீலியால் இன்னும் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. வேலிக்கு மேலால் தெரிந்த இராணுவத் தலைகளும், கண்களும் காணாமல் போயிருந்தன.

சற்று நேரத்துக்கு முன் இராணுவக் கண்களைக் கண்டு மருண்டு, முகம் இருண்டு போயிருந்த சங்கவி இப்போது தன்னை மறந்து இலைகளில் இருந்து சொட்டும் மழை நீரைப் பார்த்து ரசித்த படி விறாந்தை நுனியில் நிற்பதைப் பார்த்த கதிரேசருக்குச் சந்தோஷமாக இருந்தது.

கதிரேசர் இன்று என்றுமில்லாத சந்தோஷத்தில் குளித்துக் கொண்டிருந்தார். பின்னே என்ன இருக்காதா? மகள் சங்கவி ஜேர்மனியில் இருந்து வந்திருக்கிறாள். அதுவும் பன்னிரண்டு வருடங்களின் பின்.

கதிரேசர் இப்படிக் கதிரைக்குள்ளும் கட்டிலிலுமாய் முடங்கிப் போய் இருக்கக் கூடிய ஆள் அல்ல. மீசையையும் முறுக்கி விட்டுக் கொண்டு, வாட்ட சாட்டமான கட்டுடலுடன் அவர் ராஜநடை போடும் அழகே தனி அழகுதான். எப்போதும் சந்தோசமாக இருக்க விரும்பும் அவர் விடுமுறையிலே வீட்டுக்கு வந்தாலே வீடு அசாதாரண கலகலப்பில் மிதந்து, அவர் அன்பில் திளைத்திருக்கும். மனைவி செல்லமும் பெரிய குங்குமப் பொட்டுடன், வளையல்கள் குலுங்க வீட்டுக்குள் வளைய வரும் காட்சி மங்களகரமாகவே இருக்கும்.

பின்னேரம் என்றாலே கதிரேசர் வீட்டுக்குள்ளே இருக்க மாட்டார். பிள்ளைகளையும், செல்லத்தையும் அழைத்துக் கொண்டு கடற்கரை, பூங்காவனம், படம்… என்று சுற்றித் திரிவார்.

பருத்தித்துறைத் தோசை என்றாலே அவருக்குக் கொள்ளை பிரியம். அதற்காகவே மகள் சங்கவியையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஓடக்கரைக்குப் போவார். பகலில் எந்த வித அசுமாத்தமும் இல்லாமல் வேலியோடு வேலியாக மூடப் பட்டிருக்கும் சின்னச் சின்னச் சதுரத் தட்டிகள் மாலையானதும் திறக்கப் பட்டிருக்கும். உள்ளேயிருந்து ´கள்´ விட்டுப் புளிக்க விடப்பட்ட தோசைமாவில் சுடப்படும் தோசையின் வாசம் மூக்கைத் துளைக்கும்.

கதிரேசர் சைக்கிளையும் உருட்டிக் கொண்டு ஒவ்வொரு தட்டியாகத் தாண்டும் போது சங்கவி “ஏனப்பா போறிங்கள்? இங்கையே வேண்டுங்கோவன்." பொறுமை இழந்து கேட்பாள்.

கதிரேசர் “இவளட்டைத் தோசை சரியில்லை. இவளின்ரை பச்சைச் சம்பல் சரியில்லை." என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொன்றாகத் தாண்டி, குறிப்பிட்ட தட்டியடியில் குனிந்து மூடுபெட்டியைக் கொடுத்து “முப்பது தோசை சுட்டு வையணை." என்கிற போது “என்ரை ராசா வந்திட்டியே." என்பாள் தோசை சுடும் பெண்.

ஏதோ அவளும், கதிரேசரும் நெருங்கிய உறவினர்கள் போல இருக்கும் அவளின் கதை. தோசை வாங்கி வாங்கியே பரிச்சயமான உறவு. “நல்லா நிறையச் சம்பல் போட்டு வையணை. பத்துப் பாலப்பமும் புறிம்பாச் சுட்டு வையணை." கதிரேசர் சொல்லி விட்டு, சங்கவியையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு, ரவுணுக்குள் போய் இன்னும் தேவையான வீட்டுச் சாமான்களையும் வாங்கிக் கொண்டு, திரும்பி வந்து தோசை, பாலப்பத்தையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்புவார்.

வவுனியாவில் நிற்கும் சங்கவியின் நினைவலைகள் பருத்தித்துறையை வலம் வந்தன. பிறந்த மண்ணையும் அம்மா, அப்பா, சகோதரர்களுடனான அந்த வாழ்க்கையையும் நினைக்கும் போதெல்லாம் வீணையின் நரம்பை மீட்டும் போதெழுகின்ற மெல்லிய நாதத்தின் இனிமை தரும் சிலிர்ப்பு அவளுள் ஏற்படும்.

“என்ன சங்கவி, ஆமியைக் கண்டு பயந்து போட்டியே? இஞ்ச வா. வந்து பக்கத்திலை இரு." மிகவும் ஆதரவாகவும், ஆசையாகவும் கதிரேசர் சங்கவியை அழைத்தார். நினைவுகள் தந்த சிலிர்ப்புடன் சங்கவி வந்து அவர் பக்கத்தில் இருந்த

கதிரையில் அமர்ந்து இடது கையால் அவர் முதுகைத் தடவி அணைத்துக் கொண்டு வீதியை நோக்கினாள்.

சற்று நேரத்துக்கு முன் சிங்கள இராணுவத்தின் பூட்ஸ் கால்களுக்குள் மிதிபட்டுக் கிடந்த வவுனியாவின் வைரவர் புளியங்குள ஸ்ரேசன்ரோட், சைக்கிள்களும், ஓட்டோக்களும், மனிதர்களுமாய் மீண்டும் உயிர்ப்புடன் தெரிந்தது.

பக்கத்தில் அமர்ந்திருந்த அப்பா கதிரேசரைப் பார்க்கப் பார்க்க சங்கவிக்கு ஒரே கவலையாக இருந்தது. அவரது அகன்ற தோள்கள் ஒடுங்கி, மார்பகங்கள் வலுவிழந்து, கைகளும் கால்களும் சோர்ந்து... உடலுக்குள் நெளிந்து திரியும் நோயின் கொடிய வேதனையைக் கொன்று விடும் அளவு கொடிய வேதனை பிள்ளைகள் நாடு நாடாகச் சிதறியதால் ஏற்பட்ட தனிமையில் கண்ணுக்குள் தெரிய துவண்டு போயிருந்தார்.

அவர் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையாகிப் போனதை ´மேற்கொண்டு வைத்தியம் செய்ய முடியாது. எல்லாம் கை நழுவி விட்டது.´ என்று டொக்டரே கை விரித்த பின்தான் செல்லம் ஜேர்மனிக்கு ரெலிபோன் பண்ணி சங்கவியிடம் சொன்னாள். சங்கவியை ஒரு தரமாவது பார்த்து விடவேண்டும் என்ற ஆசைத் துடிப்பிலேயே அவர் இன்னும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறார் என்றும் சொன்னாள்.

உயிருக்கு உத்தரவாதமில்லாத தாயகத்தில் தனக்கொன்று ஆகி விட்டால் ஜேர்மனியில் விட்டு வரும் குழந்தைகள் சிறகிழந்து போவார்களே என்ற பயம் சங்கவியின் மனதைக் குழம்ப வைத்தாலும் அப்பாவின் பாசம் வலிந்திழுக்க போராடும் மனதுடன்தான் புறப்பட்டாள்.

தாயகத்தில் கால் வைத்த போது மனதுக்குள் ஏற்பட்ட இனம் புரியாத சந்தோசத்தையும், துள்ளலையும் முண்டித் தள்ளிக் கொண்டு முன்னுக்கு வந்து நின்றது பய உணர்ச்சிதான்.

“பொட்டை அழித்து விடு." பின்னுக்கு நின்ற சிங்களப் பெண் ஆங்கிலத்தில் கிசுகிசுத்த போது, பன்னிரண்டு வருடங்களாக ஜேர்மனியிலேயே தவிர்க்காத பொட்டைத் தவிர்த்து, பாழடைந்த நெற்றியுடன், கால்கள் பின்னித் தடுமாற, படபடக்கும் நெஞ்சுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்ததை நினைக்க சங்கவிக்கு மனசு கூசியது. ´ஏன் இப்படி முகம் இழக்கப் பண்ணப் படுகிறோம்?´ என்று குமுறலாகக் கூட இருந்தது.

விமான நிலையத்தில் மாமாவை இனம் கண்டு, செக்கிங் பொயின்ற்ஸ் தாண்டி, வெள்ளவத்தை வரை போய் பொலிஸ் ரிப்போர்ட் எடுத்து, வவுனியா புறப்படுவதற்கு இடையில் சங்கவி நிறையத் தரம் எரிச்சல் பட்டு விட்டாள். “அந்நிய நாட்டில் எமக்கிருக்கும் சுதந்திரம் கூட எமது நாட்டில் எமக்கு இல்லையே" என்று மாமாவிடம் குமுறினாள்.

“வவுனியாவிலை ரெயின் நிண்டதும் ஓடிப் போய் லைன்ல நில். இல்லாட்டி பாஸ் எடுத்து வீட்டை போய்ச் சேர மத்தியானம் ஆகீடும்." மாமா ஏற்கெனவே சொல்லி இருந்தாலும் சங்கவி ஓடவில்லை.

அதன் பலனாக வவுனியா புகையிரத நிலையத்தை நிறைத்து நின்ற சிங்கள இராணுவப் படைகளுக்கு நடுவில் நீண்டு, வளைந்து, நெளிந்து நின்ற மூன்று மனித வரிசைகளின் மிக நீண்ட வரிசையில் இறுதி ஆளாக அவள் நின்றாள். இறுதிக்கு முதல் ஆளாக அவளது மாமா நின்றார்.

அலுப்பு, களைப்பு, பயம், சலிப்பு எல்லாவற்றையும் மீறிய ஆர்வத்துடன் அவள் முன்னுக்கு எட்டிப் பார்த்தாள். மூன்று வரிசைகளும் ஆரம்பிக்கும் இடங்களில் ஐந்து ஐந்து பேராகச் சிங்களப் பெண்கள் சீருடையுடன் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். மேசைகளில் பெரிய பெரிய கொப்பிகள் இருந்தன. வரிசையில் முன்னுக்கு நிற்பவரை ஒரு பெண் எதுவோ கேட்டு எழுத, அடுத்த பெண் ஒரு கொப்பியைப் புரட்டி எதுவோ தேட, மற்றைய இரு பெண்களும் எழுதுவதும் பொலிஸ் ரிப்போர்ட்டையோ அல்லது வேறு எதையோ அக்கு வேறு ஆணி வேறாய் அலசிப் பார்த்து முடிப்பதுமாய் தொடர இறுதிப் பெண் ஒரு சின்ன ரோஸ் கலர் துண்டைக் கொடுக்க மனித வரிசை ஒவ்வொருவராக ஆறுதலாகக் கலைந்து கொண்டிருந்தது.

6.30 க்கு ரெயினால் இறங்கிய சங்கவியும் மாமாவும் சிங்களப் பெண்கள் இருந்த மேசையடிக்கு வரும் போது நேரம் எட்டு மணியைத் தாண்டியிருந்தது. மற்றைய இரண்டு வரிசைகளும் ஏற்கெனவே முடிந்து, அந்த வரிசைகளுக்குப் பொறுப்பாக இருந்த சிங்களப் பெண்கள் எழுந்து நின்று கைகளை மேலே உயர்த்தி உளைவு எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு வரிசைகளும் ஏற்கெனவே வவுனியாவில் இருந்து கொழும்பு வரை போய் வருபவர்களுக்காம். இந்த வரிசை சங்கவி போல் புதியவர்களுக்காம்.

அப்பா கதிரேசர் வவுனியாவில் புகையிரத நிலைய அதிபராகப் பணி புரிந்த காலங்களில் அவரோடு கைகோர்த்துக் கொண்டு துள்ளித் திரிந்த பிளாட்ஃபோம்(platform) இன்று சிங்கள இராணுவங்களால் நிறைந்திருக்கும் காட்சியை சீரணிக்க முடியாமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த சங்கவியை அந்தச் சிங்களப் பெண்கள் கேள்விகளாய்க் கேட்டு கோபப் படுத்தினார்கள்.

சங்கவிக்கு சிங்களம் விளங்குகிறதோ, இல்லையோ என்பது பற்றியே அக்கறைப் படாத சிங்களப் பெண்கள் அவளின் கோபத்தை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அவர்கள் கேள்விகளால் குடைந்து ஜேர்மனியப் பாஸ்போர்ட், ஐசி பார்த்து, பொலிஸ் ரிப்போர்ட்டை ஆராய்ந்து, பாடசாலை வரவுப் பதிவேடு போன்ற கொப்பியில் பெயர் விலாசம் எல்லாம் பதிந்து, கடைசியாக முத்திரை போன்ற சைஸில் ஒரு ரோஸ் கலர் துண்டை நீட்டிய போது ´அப்பாடா´ என்ற உணர்வுடன் அதை வாங்கிப் பார்த்தாள்.

எல்லாம் சிங்களத்தில் எழுதப் பட்டிருந்தன. ஒன்றுமே புரியவில்லை. சிங்கள இராணுவத்தின் விறைப்புகளையும், முறைப்புகளையும் தாண்டி செக்கிங்கில் கிளறப்பட்ட சூட்கேஸை அமத்திப் பூட்டிக் கொண்டு, வெளியில் வந்த போது நேரம் ஒன்பது மணியை நெருங்கியிருந்தது.

“மாமா, என்ன இது? எல்லாம் சிங்களத்திலை எழுதியிருக்கு. ஒண்டுமே விளங்கேல்லை. இதுதான் பாஸோ..?" ரோஸ் துண்டை நீட்டிய படி சங்கவி மாமாவை நோக்கினாள்.

“ஓமோம். இதுதான் பாஸ். கவனமா வைச்சிரு. துலைச்சியோ..! உன்ரை சரித்திரம் அவ்வளவுதான். இது ஒரு நாள் பாஸ்தான். நாளைக்குக் காலைமை வந்துதான் ஒரு கிழமைப் பாஸ் எடுக்கோணும்."

மாமா சொன்ன பின் சங்கவிக்கு அந்த மெல்லிய ரோஸ் கலர் பேப்பர் துண்டு மகா கனமாக இருந்தது. கைப்பைக்குள் வைத்து விட்டு அடிக்கடி திறந்து, திறந்து அது பத்திரமாக இருக்கிறதா, எனப் பார்த்துக் கொண்டாள்.

“ஏன் ஒருநாள் பாஸ்தான் தந்தவையள்? ஒரேயடியா ஒரு கிழமைக்குத் தந்தால் என்ன?" திருப்தியின்மையுடன் கேட்டாள்.

“உடனை அப்பிடித் தரமாட்டினம்."

“அப்ப, நாளைக்கு இன்னொரு தரம் இங்கை வந்து தூங்கிக் கொண்டு நிக்கோணுமோ? ஏன் இந்தளவு கெடுபிடி? இதிலை இவையளுக்கு என்ன லாபமிருக்கு?"

“எல்லாம் தங்கடை கட்டுப் பாட்டுக்கை வைச்சிருக்கத்தான். பெடியளை உள்ளை நுழைய விடாமலிருக்கத்தான்."

“அப்ப இங்கை பெடியளே இல்லையோ..?"

“இருக்கிறதுக்கான சந்தர்ப்பம் இல்லை. இது ஆமியின்ரை கட்டுப்பாட்டுக்குள்ளை இருக்கிற இடம்."

சங்கவிக்கு எல்லாமே விசித்திரமாக இருந்தது.

“என்ன பிள்ளை.., ஒரே யோசிச்சுக் கொண்டு இருக்கிறாய். பிள்ளையளை நினைச்சுக் கவலைப் படுறியோ?" கதிரேசர் கேட்டதும்தான் சங்கவி மீண்டும் நிகழ்காலத்துக்கு வந்தாள்.

“இல்லையப்பா.., இவங்கள் காலைமை ரெயில்வே ஸ்ரேசனிலை மணித்தியாலக் கணக்கிலை என்னையும், மாமாவையும் மறிச்சு வைச்சு கணக்கெடுப்பும், பதிவும் செய்ததை நினைக்க, நினைக்க எனக்குக் கோபம் கோபமாய் வருது. அப்பிடியெண்டால்... இந்தப் பெடியள் இதுக்குள்ளை வரேலாதோ..?"

இப்போது கதிரேசர் குனிந்து இரகசியமாக, அவள் காதுக்குள்.. “எங்கடை பெடியளை இவங்களாலை என்ன செய்யேலும்?" என்றார். சொல்லும் போதே நோயில் வாடிப் போயிருந்த அவர் கண்கள் பிரகாசித்ததை சங்கவி கவனிக்கத் தவறவில்லை. இரண்டு மாவீரர்களைப் பெற்றெடுத்த கதிரேசரிடம் தேசப்பற்றும், தமிழ்த்தாகமும் மரணத்தின் வாசலில் நிற்கும் அந்த வேளையிலும் குறையாமல் இருந்தன.

சங்கவி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கதிரேசர் “என்ன பிள்ளை, அப்பிடிப் பார்க்கிறாய்? உன்னைப் பார்த்திட்டன். இனி நான் நிம்மதியாக் கண்ணை மூடுவன்." என்றார்.

“இல்லையப்பா, அப்பிடியொண்டும் நடக்காது..." சொல்லிக் கொண்டிருக்கும் போதே சைக்கிள் ஒன்று வந்து கேற் வாசலில் நிற்க, அழகிய இளைஞன் ஒருவன் இறங்கி உள்ளே வந்தான்.

பக்கத்து அறைகளில் குடியிருப்பவர்களிடம்தான் அவன் வருகிறான் என சங்கவி நினைத்த போது “வா விமலன், வா." கதிரேசரும், செல்லமும் அவனைக் கோரசாக வரவேற்றார்கள்.

மாவீரனான தம்பி மொறிஸ் இப்போது உயிரோடு இருந்தால் இவன் வயதில்தான் இருப்பான். சங்கவி தனக்குள் நினைத்துக் கொண்டே அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

நடக்கவே கஸ்டப் படுகிற கதிரேசர் முக்கித்தக்கி கதிரைக்குள்ளால் எழுந்து, சுவரைப் பிடித்துக் கொண்டு மெதுமெதுவாய் நடந்து, அவரது அந்தக் குச்சி அறைக்குள் நுழைய விமலன் அவர் பின்னால் அறைக்குள் நுழைந்தான். செல்லமும் பின் தொடர சங்கவியும் உள்ளே போனாள்.

யார் வந்தாலும் வெளிவிறாந்தையில் இருத்திக் கதைக்கும் அம்மாவும், அப்பாவும் நடந்து கொண்ட விதம் அவளுக்குச் சற்று ஆச்சரியத்தைக் கொடுத்தது. கதிரேசர் கட்டிலில் அமர்வதற்கு உதவி செய்த விமலன் தானும் அவர் அருகில் அமர்ந்து கொண்டான். “எப்பிடியப்பு இருக்கிறாய்?" செல்லம் ஆதரவாய்க் கேட்டாள்.

´யார் இவன்..?´ சங்கவிக்குள் ஆர்வம் கேள்வியாய் எழுந்தது.

“நீங்கள்..?" சங்கவி அவனை நோக்கினாள்.

“அக்கா, நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தனனான். உங்கடை தம்பி மொறிசின்ரை நண்பன்தான் நான்."

தம்பி மாவீரனாகி வருடங்கள் பல ஓடிய பின் தம்பியின் நண்பனாக வந்தவனை வியப்புடன் பார்த்து “நான் வந்தது எப்பிடித் தெரியும்?" என்றாள்.

“எல்லாம் தெரியும்." என்றான் அர்த்தத்துடன்.

இப்போது செல்லம் கிசுகிசுத்தாள். “விமல் வெளியாக்களுக்குத்தான் எங்கடை மருமகன். ஆனால் உள்ளுக்கு..."

செல்லம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விமலன் சேர்ட்டை மேலே உயர்த்தி, இடுப்பிலே சொருகியிருந்த கடிதமொன்றை எடுத்து செல்லத்திடம் கொடுத்தான்.

அப்போதுதான் சங்கவி அதிர்ந்தாள். தலைக்குள் குருதி வேகமாகப் பாய்ந்ததை உணர்ந்தாள். விமலனின் இடுப்பின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பிஸ்ரோல் (pistole)கள்.

´எப்படி..! எப்படி இது சாத்தியம்! இத்தனை தடைகளை மீறி..!´

´இத்தனை தடைகளை மீறி எப்படி இவன் வைரவர் புளியங்குளத்துக்குள் நுழைந்தான்! குருமன் காட்டுச் சந்தியில் நிற்கும் சிங்கள இராணுவத்தின் கண்களுக்குள் நிற்கும் இந்த வீட்டுக்குள் எப்படி நுழைந்தான்..!`

"எப்பிடி விமலன்..? எப்பிடி இதெல்லாம் சாத்தியமாயிற்று? உங்களட்டைப் பாஸ் இருக்கோ?" கேள்விகளை அடுக்கினாள்.

“இல்லை அக்கா. என்னட்டைப் பாஸ் இல்லை."

“அப்ப... பிடிபட்டால்..?" சங்கவி நியமான பயத்துடன் கேட்டாள்.

விமலன் கழுத்து மாலையை இழுத்துக் காட்டினான். குப்பி தொங்கியது. வாயைக் கூட்டி உமிழ்வது போலச் செய்தான். இரண்டு குப்பிகள் கடைவாயின் இரண்டு பக்கங்களிலும் வந்து நின்றன. மீண்டும் அவைகளை உள்ளிழுத்து கொடுப்புக்குள் அடக்கி விட்டு இயல்பாகச் சிரித்தான். செல்லம் கொடுத்த தேநீரைக் குடித்தான். சங்கவிக்கு வியப்பும், படபடப்பும் அடங்க முன்னமே சைக்கிளில் ஏறிப் போய் விட்டான்.

காலையில் ரெயில்வே ஸ்டேசனில் பார்த்த பதிவுக் கொப்பிகள் சங்கவியின் நினைவில் வர, அவள் தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.

21.12.1997

மனஓசை - Cover back