Monday, March 03, 2008

மனஓசை (Cover Front)

மனஓசை (பக்கம்:01)

மனஓசை



நூறாய் ஆயிரமாய் தூரம் எமைப் பிரித்தாலும்
மாறா அன்பு நூல் மனங்களைத் தொடுக்குமே

சந்திரவதனா

மனஓசை (பக்கம்:02)

மனஓசை
சிறுகதைகள்
ஆசிரியர் - சந்திரவதனா செல்வகுமாரன்


முதற்பதிப்பு – ஆவணி 2007
பதிப்புரிமை © – சந்திரவதனா

ஓவியம் - மூனா
புத்தக வடிவமைப்பு - மூனா

MANAOSAI
A Collection of Shortstories
Author – Chandravathanaa Selvakumaran
(Chandra Selvakumaran)


First Edition – August 2007
© – Chandravathanaa

Illustration - Muunaa
Cover Design – Muunaa


Chandravathanaa Selvakumaran
Schweickerweg 29
74523 Schwaebisch Hall
Germany
email - chandra1200@gmail.com


Printed by
Kumaran Printers (Pvt) Ltd
e-mail : kumbh@sltnet.lk

Price : Rs 300.00 (Sri Lanka)

மனஓசை (பக்கம்:03)

சில வார்த்தைகள்

என் பெற்றோர்கள் மு.ச.தியாகராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகள் கற்றுத் தந்த வாசிப்பு எனக்கு மிகவும் பிடிக்கிறது. மற்றவர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ எனக்கு எழுதவும் பிடிக்கிறது. நான் எப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறேன். அவற்றில் சில துளிகளையே உங்களிடம் தருகிறேன்.

எந்த வார்த்தைகளாலும் ஆற்ற முடியாத ஆற்றாமைப் பொழுதுகளை எனது எழுத்துக்களாற்றான் நான் தேற்றியிருக்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே என்றிருக்கும் போது, என் வசப்பட்ட எனதான வாழ்வை நான் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, சில இழப்புகள் என்னை நிலைகுலைய வைத்தன. அந்தப் பொழுதுகளில் என் துயரங்களின் வடிகால்களாயும்,

என்னால் தாங்க முடியாத, அல்லது நம்ப முடியாத சில விடயங்களைக் கண்டு நான் வெகுண்டெழுந்த போது என் கோபத்தின் தெறிப்புகளாயும்,

எனது சமூகத்தின் போட்டிகளும், பொறாமைகளும், நான், நீ.. என்ற அகம்பாவங்களும், ஆண், பெண் என்ற பேதங்களும் அதனாலான ஏற்றத் தாழ்வுகளும் என் கண்களில் பட்ட போதும், என் மேல் படர்ந்த போதும், அவைகளைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாத என் எதிர்ப்புக்களாயும், மறுப்புக்களாயும், சுட்டல்களாயும்,

சமயத்தில், இயலாமையின் சொரிவுகளாயும்,

வாழ்வின் ஒவ்வொரு படியிலுமான சந்தோசத்தின் பொழிவுகளாயும் வெளிப்பட்ட உணர்வுகளின் கோலங்களே இவை.

இவைகள் வெறும் கதைகள் அல்ல. என்னைச் சுற்றியுள்ள எதார்த்தங்கள்.

நட்புடன்
சந்திரவதனா.

மனஓசை - 15 (பக்கம்:04)

உள்ளடக்கம்

1. பொட்டுகிளாஸ் 5
2. குண்டுமணிமாலை 11
3. சொல்லிச் சென்றவள் 21
4. நாகரிகம் 30
5. கணேஸ்மாமா 33
6. வேசங்கள் 40
7. பயணம் 47
8. பாதை எங்கே? 53
9. அக்கரைப் பச்சைகள் 58
10. அந்த மௌன நிமிடங்களில்… 61
11. தீர்க்கதரிசனம் 69
12. கல்லட்டியல் 75
13. உபதேசம் 81
14. விழிப்பு 85
15. மேடைப்பேச்சு 94
16. எதனால்? 96
17. என்னப்பா இன்னும் வெளிக்கிடேல்லையோ? 103
18. அம்மாவுக்குத் தெரிந்தது 107
19. விலங்குடைப்போம் 113
20. சங்கிலித் துண்டங்கள் 123
21. ஏன்தான் பெண்ணாய்? 130
22. வசந்தம் காணா வாலிபங்கள் 135
23. கனவான இனிமைகள் 141
24. இளங்கன்று 147
25. முரண்களும் முடிவுகளும் 153
26. இவர்களென்ன மார்க்கண்டேயர்களா? 161
27. மரணங்கள் முடிவல்ல 167
28. விவாகரத்து 175
29. சுமைதாளாத சோகங்கள் 179
30. பதியப்படாத பதிவுகள் 188

மனஓசை - 1(பக்கம்:05-10)

டொமினிக் ஜீவா அவர்களின் ´எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்´ என்ற புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியதில் இருந்து மனதின் அடிநாதத்திலிருந்து ஏதேதோ நினைவுகள் எழுந்து வந்து அலை மோதிக் கொண்டிருக்கின்றன. கட்டியக்காரனாக நின்று அவர் எழுதிய வரிகளைத் தாண்டி என்னால் மேலே செல்ல முடியாமல் உள்ளது. மீண்டும் மீண்டும் சில வரிகளை வாசிப்பதுவும் அப்படியே மாண்டு போகாது என் மனசுக்குள்ளே பதிந்து போயிருக்கும் சிறுவயது நினைவுகள் மீட்டப்பட்டு அந்த சம்பவங்களுடன் நான் சங்கமித்துப் போவதும் சில வாரங்களாகவே நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நானும் பார்வையால், பேச்சால், செயலால் பஞ்சமரை வதை செய்த கர்வம் பிடித்த சமூகத்தில் இருந்து வந்தவள்தான்.

இன்றும் அவரது அந்தப் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். என் மனசு ஓடிப் போய் என் வீட்டு ஒட்டிலும், பொட்டுக் கிளாஸிலும் அமர்ந்து கொண்டு விட்டது. தாய்க்காரி எவ்வளவுதான் சொல்லி விட்டாலும் வெள்ளத்தைக் கண்டதும் நின்று விடும் பள்ளிப் பிள்ளை போல மனசு தொடர்ந்து வாசிக்க மறுத்தது. வெள்ளத்தைக் கண்ட பிள்ளையின் மனதிலாவது வெள்ளத்துடனான லயிப்பிலும், தப்பலிலும் ஒரு வித சந்தோசம் இருக்கும். என்னுள்ளே இனம் புரியாத அசௌகரியமான ஸ்தம்பிதம்.

துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு போகும் பாட்டாவை நேர் எதிரே கண்டதும், தனது துண்டை இழுத்து கக்கத்துள் வைத்துக் கொண்டு “உடையார்" என்று குழைந்து கூழைக் கும்பிடு போடும், எங்கள் ஊர் சாவுச் சடங்குகளுக்குப் பறையடிக்கும் மாணிக்கம்...

எங்கள் அழுக்குத் தலைமயிரைப் பிடித்து அழகாகக் கத்தரித்து விட்டு, எங்கள் வீட்டு ஒட்டில் மட்டும் அமர அனுமதிக்கப் படும் நாவிதன் கதிரமலை...

எங்கள் தென்னையில் ஏறி, கள்ளுச் சீவும் கந்தசாமி...

எங்கள் அழுக்குத் துணிகளையெல்லாம் மூட்டையாகக் கட்டி, தோளிலே சுமந்து சென்று தோய்த்துக் கொண்டு வந்து தரும் வயதான கோபால்... இப்படி ஒவ்வொருவராக என் முன்னே தோன்றிக் கொண்டிருந்தார்கள்.

இவர்களில் நாங்கள் ´கட்டாடி´ என்று சொல்லும் கோபால் சில சமயங்களில் எங்கள் வீட்டுச் சடங்குகளுக்காக வீட்டுக்குள்ளே வர அனுமதிக்கப் படுவான். ஆனாலும் மூத்தவர்களை ´வாங்கோ, போங்கோ´ என்று கதைக்க வேண்டும் என்று சொல்லித் தந்த அம்மாதான் அவனை ´அவன், இவன்´ என்று நான் அழைக்க அனுமதித்தா.

அப்பாவின் வயதை ஒத்த அவனை “கோபாலு.." என்று கூப்பிட்டு “எனக்கு திங்கட்கிழமை வெள்ளைச் சட்டை கட்டாயம் வேணும். கொண்டு வந்து தந்திடு" என்று சொல்வேன்.

அவன் சின்னப் பெண்ணான என்னைப் பார்த்து “ஓமுங்கோ..! நான் கொண்டு வந்து தாறன்.” என்று பணிவோடு சொல்வான். திங்கட்கிழமை விடிய கொண்டு வந்தும் விடுவான். ஊத்தை உடுப்புகளைத் தனது பின் முதுகில் சுமந்துதான் அவன் முதுகில் அப்படியொரு கூனல் விழுந்ததோ?

கள்ளுச் சீவும் கந்தசாமி தென்னையில் ஏறும் லாவகமே ஒரு தனி அழகுதான். ஆனால் அவன் எங்கள் வீட்டு ஒட்டில் கால் வைத்து நான் கண்டதில்லை. ஒட்டுக் கரையோடு முற்றத்தில் நின்றுதான் அம்மாவோடும், அப்பாவோடும் கதைப்பான்.

பறையடிக்கும் மாணிக்கம் ஒட்டிலிருந்து எட்டடி தள்ளி நின்றே கதைப்பான். கிட்ட வந்தாலே ஏதாவது ஒட்டி விடும் என்று நினைத்து அவனை அப்படித் தள்ளி வைத்தார்களோ?

கதிரமலை எங்கள் வீட்டில் குழந்தைகளுக்குத் தலைமயிர் வெட்ட வேண்டுமென்றால் மட்டும் ஒட்டில் வந்து இருந்து வெட்டுவான். மற்றும் படி எட்டத்தான் இருப்பான்.

´ஒட்டு´ என்றால் என்ன என்ற யோசனை உங்களுக்கு வரலாம். எனக்குக் கூட ஆரம்பத்தில் ஏன் அந்த ஒட்டு என்று விளங்கவில்லை. வழுவழுப்பான எங்கள் வீட்டுப் பெரிய விறாந்தையுடன் சேர்த்து ஒரு சொருசொருப்பான விறாந்தை கட்டப் பட்டிருந்தது. ஆனால் அது எங்கள் பெரிய விறாந்தையிலிருந்து அரை அடி பதிவாகவே இருந்தது. மிகச் சின்ன வயதில் அது எனக்கு தொங்கி விளையாட நல்ல சாதகமான சாதனமாய் இருந்தது.

எனக்குள் சிந்தனைகள் விரியத் தொடங்கிய, ஒவ்வொரு விடயத்திலும் பூராயம் தேடத் தொடங்கிய, “ஏன்..?" என்ற கேள்விகளை மற்றவர்களிடம் அடுக்கத் தொடங்கிய ஒரு காலகட்டத்தில்தான் நான் எனது அம்மம்மாவிடம் அந்த ஒட்டு பற்றி விசாரித்தேன்.

“அம்மம்மா, ஏன் அதுக்கு ஒட்டு எண்டு பெயர்? அதேன் பெரிய விறாந்தையை விடப் பதிஞ்சிருக்கோணும்?"

அதற்கு அம்மம்மா சொன்ன பதில்தான் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. நம்ப முடியாதிருந்தது. அவ பஞ்சமர்களின் பெயர்களை அநாயசமாக அடுக்கி “அவையள் வந்தால் இருக்கிறதுக்குத்தான்" என்று சொன்னா.

உண்மையிலேயே நான் ஆச்சரியப் பட்டுப் போனேன். அதற்காக என்றே ஒரு விறாந்தையை எமது விறாந்தையுடன் ஒட்டி விட்டுள்ளார்களா! என்ன மனிதர்கள் இவர்கள்!

“ஏன் அம்மம்மா! அவையள் இந்த மேல் விறாந்தையிலை இருந்தால் என்ன?"

“சீ... மொக்குப் பிள்ளை மாதிரிக் கதைக்காதை. நாங்கள் இந்த விறாந்தையிலை இருந்து கதைக்கிற பொழுது அவையளும் இதிலை இருந்தால் என்ன மாதிரி? அவையள் எங்களுக்குக் கீழைதான் இருக்கோணும்."

அம்மம்மாவின் பதில் எனக்குள் ஒருவித அதிருப்தியான உணர்வையே தோற்றுவித்தது. எமது வீட்டின் ஒவ்வொரு காரியத்திலும் பங்கு கொள்ளும் அவர்களை(பஞ்சமர்)த் தாழ்த்தி வைத்துப் பார்க்கும் இந்தக் குரோதம் இவர்களுக்குள் எப்படி வந்தது? ஏன் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்? எனக்குள் பலவிதமான சிந்தனைகள் எழுந்தன.

அதன் பின்தான் நான் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். எனக்கு எதுவுமே பிடிக்கவில்லை. ஆனாலும் என் வீட்டுப் பெரியோரைச் சீர்திருத்தும் அளவுக்கு எனக்கு வயது போதவில்லை. என் சொற்களோ, செயல்களோ அங்கு எடுபடவில்லை. என்ன கதைத்தாலும் “மொக்குப் பிள்ளை..! ஆள்தான் வளர்ந்திருக்கிறாளே தவிர இவளுக்கு அறிவு வளரேல்லை.." போன்ற ஆலாபனைகள்தான் எனக்குக் கிடைத்தன.

அதனால், எனக்குள் எழுந்த சிந்தனைகள் அறுபடவில்லை. அவை இன்னும் இன்னும் பெரிதாக விரிந்தன. கதிரமலையோ, கோபாலுவோ வீட்டுக்கு வந்தால் அவர்களும் மனிதர்கள்தான் என்ற நினைப்போடு அவர்களோடு நானும் போய் ஒட்டில் இருந்து கதைக்கத் தொடங்கினேன். இவைகளைப் பார்த்து அம்மா என்ன நினைத்தாவோ தெரியாது. ஆனால் ஒன்றுமே சொல்லவில்லை.

அவ சொந்தமான எந்த சிந்தனையையும் வெளிப்படுத்தும் தைரியம் இன்றி அவவின் பெற்றோரான எனது பாட்டாவும், அம்மம்மாவும் வகுத்த படி சமூகக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு வளர்ந்திருக்கிறா. ´இது தப்பு, இது சரி´ என்று பகுத்தாயும் தன்மையும், திறனும் அவவுக்குள் இருந்தாலும், ´இவைதான் நியதி´ என்று எண்ணி அதன் படி வாழும் மனப்பக்குவமும் அவவுக்குள் தாரளமாக இருந்தது. மற்றும் படி அவவிடம் சாதித் தீயோ, மனிதர்களை மண்டியிட வைக்கும் மனிதமல்லாத குணமோ இல்லை. அதனால்தான் அவ எதுவும் சொல்லவில்லையோ!

ஆனால் நான் அப்படி சமமாக இருந்து கதைப்பதை பாட்டாவோ, அம்மம்மாவோ கண்டு விட்டால் போதும். நான் அவர்களின் கடுமையான கோபத்துக்கு ஆளாகி வசைமாரிகளை வாங்கிக் கட்டிக் கொள்வேன். எனக்கு அது பற்றிக் கவலையில்லை. அம்மா பேசினால் மட்டுந்தான் எனக்கு அழுகை வரும். மற்றவர்கள் பேசினால், என்னில் பிழை இல்லை என்று தெரிந்தால், மனம் கொண்ட மட்டும் என் மனசுக்குள்ளேயே அவர்களைத் திட்டி விட்டு இருந்து விடுவேன்.

அன்று சனிக்கிழமை. இற்றைக்கு 30 வருடங்களுக்கு (1972) முந்தைய காலகட்டம். கதிரமலை வந்திருந்தான். எனது தம்பிமார், சித்தப்பாமார்.. என்று ஒவ்வொருவராக முற்றத்தில் கதிரை போட்டு அமர, கதிரமலை நின்ற படி அவர்களுக்குத் தலைமயிர் வெட்டி விட்டான். கனபேருக்கு வெட்டியதால் களைத்தும் விட்டான்.

அம்மா, அன்று இரண்டாவது தேநீர் அவனுக்காகப் போட்டு விட்டு, வழமை போல, அவனுக்கென வைத்த தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றி, என்னைக் கூப்பிட்டுத் தந்தா. எனக்கு என்னவோ போல இருந்தது. அம்மாவோடு இது பற்றி ஏற்கெனவே கதைத்திருந்தும், அம்மா யோசிப்பதாகச் சொன்னாவே தவிர செயற் படுத்துவதாய்த் தெரியவில்லை. எனக்கு கோபமும் இல்லை, கவலையும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட ஏதோ ஒரு உணர்வு.

“அம்மா, இண்டைக்கு நான் அவனுக்குக் கிளாசிலைதான் ´ரீ´ குடுக்கப் போறன்." எனது அந்தத் தீர்க்கமான பேச்சு அம்மாவைச் சங்கடப் படுத்தியிருக்க வேண்டும். ஆனாலும் அம்மாவிடம், தான் நினைப்பதைத்தான் தனது பிள்ளைகள் செய்ய வேண்டுமென்ற திணிப்புத் தன்மையோ, கண்டதையும் எதிர்க்கும் தன்மையோ இல்லாததால் என்னை மௌனமாகப் பார்த்த படி நின்றா. அவவையும் பஞ்சமரைத் தாழ்த்தும் இந்தப் பண்பற்ற செயல்கள் புண் படுத்தியிருந்தனவோ..? எனக்குத் தெரியவில்லை.

நான் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த பொட்டுக் கிளாஸை எடுத்து, அதனுள் அந்தத் தேநீரை ஊற்றிக் கொண்டு போய் களைத்துப் போயிருந்த கதிரமலையிடம் “இந்தா கதிரமலை, தேத்தண்ணியைக் குடி.." என்று நீட்டினேன்.

அவன் தீப்பட்டவன் போலத் துடித்துப் பதைத்து எழுந்து, அந்தப் பொட்டுக் கிளாஸையும், என்னையும் கண்கள் அகல விரிய ஆச்சரியமாகப் பார்த்தான். எனக்கு சந்தோசமாய் இருந்தது. ஒரு ஜீவனை அசைத்திருக்கிறேன். அதுவும் சந்தோசமாக அசைத்திருக்கிறேன் என்ற சந்தோசம்.

“பிடி கதிரமலை, உனக்குத்தான்."

அவன் கண்களுக்குள் என்ன உணர்வோ! நிட்சயமாய் நன்றி கலந்த உணர்வு! அதற்கு மேலும் ஏதோ சொல்ல விளையும் தவிப்பு.
“இருந்து குடி கதிரமலை"

ஏதோ ஒரு சந்தோசம் அவன் முகத்தில் தவழ கிளாஸை பக்குவமாகப் பிடித்துக் குடிக்கத் தொடங்கினான். எனக்கு அன்று மனசு நிறைந்திருந்தது. அம்மாதான் “இக்கணம், பாட்டா கண்டால் பேசப் போறார்" என்று பயந்து கொண்டிருந்தா.

“ஏதும் ஒட்டிக் கொண்டு வந்திடும் எண்டு பயமெண்டால் நல்லாச் சாம்பல் போட்டு மினுக்குங்கோ. அல்லது ´விம்´ போட்டுக் கழுவித் துடைச்சு வையுங்கோ." தொண்டை வரை வந்த வார்த்தைகளை வெளியே சிந்த முன் அப்படியே முழுங்கிக் கொண்டேன்.

அன்றைய பொழுது எனக்கு அர்த்தமுள்ளதாய், ஆனந்தமானதாய் இருந்தது. சிட்டுக் குருவியின் சிறகசைப்பு எனக்குள். அடுத்த நாள் விடிய எழும்பி பல்லு மினுக்கும் போது குசினிக்குள் அம்மா ஆட்டுப் பால் தேநீரை ஆத்தும் வாசம் கிணற்றடி வரை வந்து மூக்கைத் தொட்டது.

ஆசையோடு தேநீருக்காய் குசினிக்குள் நுழைந்த போது “பொட்டுக் கிளாசுக்குள்ளைதான் எனக்குத் தேத்தண்ணி வேணும்" என்று தம்பி அடம் பிடித்துக் கொண்டிருந்தான். அம்மா ஒன்றும் பேசாமல் தேநீரை கிளாசுகளுக்குள் ஊற்றிக் கொண்டிருந்தா. அவைகளுக்குள் பொட்டுக் கிளாசைக் காணவில்லை.

அது குசினிக்குப் பின்னால் வெளியில் உள்ள, விறகு வைப்பதற்கென இறக்கப் பட்ட பத்தி மூலைக்குள் பத்திரமாகக் கழுவிக் கவிழ்க்கப் பட்டிருந்தது.

19.11.2002

மனஓசை - 2 (பக்கம்:11-20)



அந்த இருளிலும் வடிவாகத் தெரிந்தது. மரங்கள், வீடுகள், லைற்கம்பங்கள் என்று வெளியில் எல்லாமே ஓடிக் கொண்டிருந்தன. இல்லையில்லை, ரெயின் ஓடிக் கொண்டிருந்தது.

ரெயினின் அந்தச் சத்தம் கூட இசை போல எனக்குப் பிடித்தது. பயம் என்னை அப்பியிருந்த போதும் அந்தச் சத்தத்தை நான் ரசித்தேன். அதுவே பாடலாக என்னைத் தழுவியது. தாலாட்டியது.

நான் இப்படித்தான். ஜேர்மனியிலும் ஒவ்வொரு காலையிலும் வேலைக்குப் போகும் போது அந்த ஸ்வெபிஸ்ஹால் நகர ரெயில்வே ஸ்ரேசனைத் தாண்டும் போது ஏதேதோ நினைவுகள் என்னை ஆக்கிரமிக்க என்னையே மறந்து போய்க் கொண்டிருப்பேன்.

எனது அப்பா ஸ்ரேசன் மாஸ்டராக இருந்ததாலோ என்னவோ ரெயினும், ரெயில்வே ஸ்ரேசனும் என் வாழ்க்கையில் எப்போதும் சுகந்தம் தருபவையாகவே இருக்கின்றன. ஒவ்வொரு பாடசாலை விடுமுறைக்கும் குடும்பமாக, குதூகலமாக ரெயினில் பயணித்ததை என்னால் மறக்க முடிவதில்லை. நினைக்கும் போதெல்லாம் குப்பென்று என்னில் சந்தோச வாசனை வீசும்.

ரெயினுக்குள் என்னைத் தவிர எல்லோருமே தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் யாரும் ஆழ்ந்து தூங்குவதாகத் தெரியவில்லை. பயம்..! பயம்..! கொழும்பு(கோட்டை) ரெயில்வே ஸ்ரேசனில் பார்த்த போதே உணர்ந்து கொண்டேன், யாருமே இயல்பாக இல்லை என்பதை. என்னைப் போல அதீத பயம் அவர்களுக்கு இல்லாவிட்டாலும் யார் கண்களிலும் துறுதுறுப்பு இருக்கவில்லை.

பொட்டு வைக்கவே துணிவில்லாத பாழடைந்த நெற்றிகள். குலுங்கிச் சிரிப்பதை மறந்தே போய் விட்ட குமருகள். உறவுகளைத் தொலைத்து விட்டு சோகங்களை மட்டும் துணையாக்கிக் கொண்ட சொந்தங்கள் என்று அங்கு நின்ற தமிழர்கள் எல்லோருமே முகமிழந்து நின்றார்கள். அவர்கள் எல்லோருமே வவுனியாவை நோக்கித்தான்.

ரெயின் வந்ததும் எல்லோரும் ஏதோ அவசரத்துடன் விரைந்து ஓடி ஏறினார்கள். ஓரளவு வசதி படைத்தவர்கள் மட்டும் சிலிப்பரேட்ஸ் கதவுகள் திறக்கும் வரை காத்திருந்து, திறந்ததும் ஏறி, தாம் ஏற்கெனவே பணம் கொடுத்துப் பதிவு செய்து வைத்த இலக்க இருக்கைகளைத் தேடி அமர்ந்தார்கள்.

சிலிப்பரேட்ஸ் கொம்பார்ட்மெண்ட் கதவுகளை வெளியில் இருந்து யாராலும் திறக்க முடியாது என்பதால் கொழும்பிலிருந்து வவுனியா போவதற்கிடையில் காடையர்களால் தமக்கு எந்த வித ஆபத்தும் நேராதென அவர்கள் நம்பினார்கள்.

அந்தக் கொம்பார்ட்மெண்டில் ஏறியவர்களில் அனேகமானோர் வவுனியாவில் ஆசிரியர்களாகவோ அல்லது வேறு நல்ல பதவிகளிலோ இருப்பவர்கள் என்பதை அதற்குள் ஏறிய பின்தான் அறிந்து கொண்டேன். அவர்கள் எல்லோருமே அனேகமான வெள்ளிகளில் கொழும்பு வந்து ஞாயிறு இரவு ரெயினில் வவுனியா திரும்புவது வழக்கமாம்.

எனக்குப் பகல் ரெயினில் வவுனியாவுக்குப் பயணம் செய்யத்தான் விருப்பமாக இருந்தது. ஆனால் நான் எனது தாய்நாட்டில் நடமாட எனக்குப் ´பொலிஸ் ரிப்போர்ட்´ வேண்டுமாம். விமான நிலையத்தில் வைத்தே மாமா சொன்னார்.

“ஏன் அப்பிடி? என்னட்டை ஜேர்மனியப் பாஸ்போர்ட் இருக்குது. ஐசி இருக்குது. இது போதாதோ என்னை அடையாளம் காட்ட..!" சற்று எரிச்சலுடன் கேட்டேன்.

“இதுக்கே எரிச்சல் பட்டால்..! இன்னும் எத்தினை அலங்கோலங்களை எல்லாம் நாங்கள் இங்கை காணுறம். தமிழராய் பிறந்திட்டம். தாங்க வேணுமெண்ட விதி." சலிப்பும் கோபமும் இழைந்தோட மாமா சொன்னார்.

என் எரிச்சல் யாரை என்ன செய்தது? பொலிஸ் ரிப்போர்ட் எடுக்கத்தான் வேண்டும். வேறு வழியிருக்கவில்லை.

இரண்டு தரமாகப் பொலிஸ் ஸ்ரேசன் வரை போய் பொலிஸ் ரிப்போர்ட் எடுக்கையில் ஒரு நாளைத் தொலைத்திருந்தேன். இன்னுமொரு நாளைத் தொலைக்க விரும்பாத நான் இரவு ரெயினிலேயே மாமாவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன்.

ஓடிக் கொண்டிருக்கும் ரெயினின் யன்னலினூடாக இருளில் ஒளிந்திருக்கும் என் தாயகத்தின் அழகைத் தேடித் தேடிப் பார்த்தேன்.

அடிக்கடி விழித்துக் கொண்ட மாமா கேட்டார் “என்ன சந்தியா, நீ நித்திரையே கொள்ளேல்லையோ? நேற்றிரவும் செக்கிங், அது இதெண்டு நித்திரையே இல்லை. இனி வவுனியா போய்ச் சேர்ந்தால் பன்னிரண்டு வருஷக் கதையளை அம்மா, அப்பாவோடை கதைக்கோணுமெல்லோ..!" நான் மாமாவைப் பார்த்து முறுவலித்தேன்.

பன்னிரண்டு வருடங்களில் மாமாவில் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. தளர்ந்து போயிருந்தார். கொழும்பு வாழ்க்கை என்றாலும் கொடுமைகளில் மனம் குமுறிப் போயிருந்தார்.

மாமா மீண்டும் தூங்கிப் போய் விட்டார். சிங்களக் குடில்களும், வீடுகளும் இருளில் ஓடிக் கொண்டிருந்தன. எனக்குக் குருநாகல் ரெயில்வே ஸ்ரேசனையும் பார்த்த பின் கொஞ்ச நஞ்சம் இருந்த பஞ்சியும் பஞ்சாய்ப் பறந்து விட்டது.

குருநாகல் ரோட்டில் நாங்கள் அப்பாவுடன் கைகோர்த்து நடந்ததை விட, அடுத்து வரப் போகும் நாகொல்லகமவில், ரெயில்வே குவார்ட்டர்ஸில் நாங்கள் எல்லோரும் விடுமுறையில் வந்து நிற்கும் போது குருநாகல் வரை அப்பா போய் தேங்காய்ப் பூரான் எங்களுக்கு வாங்கி வந்த நாட்கள்தான் அதிகம்.

நாகொல்லகம ரெயில்வே ஸ்ரேசன் ஒரு சின்ன அடக்கமான ரெயில்வே ஸ்ரேசன். சின்னனென்று புகையிரதப் பெட்டியிலேயே அமைக்கப் பட்ட ரெயில்வே ஸ்ரேசன் அல்ல. அழகாகக் கட்டப்பட்ட பெரிய கட்டடம். அழகான பெரிய பிளாற்ஃபோம்(Platform). Platform இற்கு நேர் எதிரே தண்டவாளங்களுக்கு மற்றைய பக்கத்தில் ஒரு புல்வெளி.

அங்குதான் அப்பா தன் சக வேலையாட்களுடன் வொலிபோல்(Volleyball) விளையாடுவார். அந்த இடத்திலிருந்து இருநூறு மீற்றர் நடந்து போனால், பெரிய தாமரைக்குளம். தாமரையும், அல்லியுமாகப் படர்ந்திருக்க அழகிய சிங்களப் பெண்கள் நீண்ட கூந்தலுடன் முங்கி முங்கி எழுந்து மீன் போல நீந்தும் காட்சியால் குளம் அழகின் உச்சத்தில் நிற்கும்.

அந்தக் குளத்தில்தான் அப்பா எனக்கு நீச்சல் கற்றுத் தந்தார். “நான் மாட்டேன். எனக்குப் பயமா இருக்கு..!" தயங்கிய என்னைத் தன் கைகளில் ஏந்தி இரண்டு நாட்களில் பயம் தெளிய வைத்து…

ரெயினின் ஓட்டத்துக்கு எதிர்ப் பக்கமாக ஓடிக் கொண்டிருக்கும் மரங்கள், வீடுகள், லைற்கம்பங்கள் எல்லாவற்றையும் விட வேகமாக என் நினைவுகள் ஓடிக் கொண்டிருந்தன.

நாகொல்லகமவுக்கு அப்பா மாற்றலாகிய இரண்டு கிழமைகளில் எங்களுக்குப் பாடசாலை விடுமுறை. அப்பா பருத்தித்துறைக்கு வந்து எங்களையும் கூட்டிக் கொண்டு எல்லோருமாக நாகொல்லகமவுக்கு வந்து சேர்ந்தோம்.

ரெயினால் இறங்கும் போதே போர்ட்டர் மார்ட்டின் வந்து “மாத்தயா..! மாத்தயா..!" என்று குழைந்து கொண்டு நின்றான். எங்கள் சூட்கேஸ்களில் இரண்டைத் தூக்கிக் கொண்டு எங்களுடன் நடந்தான்.

சண்டிங் ரூமிலிருந்து வெளியே வந்த சில்வாவிடம் பணம் கொடுத்து “நல்ல ரோஸ் பாணும், கோழிக்கூடு(கப்பல்) வாழைப்பழமும் வாங்கி வா" என்று அப்பா சிங்களத்தில் சொன்னார். அண்ணன் எங்கள் வீட்டுக் கோழிக்கூட்டை நினைத்துக் கொண்டு சிரிசிரியென்று சிரித்தான். நானும் அவனோடு சேர்ந்து சிரித்தேன்.

சிலிப்பர் கட்டைகளால் எல்லை போடப்பட்ட அந்த வீட்டின் சிலிப்பர் கட்டை கேற்றைத் திறக்கும் போதே பொன்னாங்கண்ணிச் செடிகள் இரண்டு பக்கமும் பரந்திருக்க பாதை மிகவும் சுத்தமாக வீட்டு முகப்பு வரை நீண்டிருப்பது தெரிந்தது. வீட்டின் இடது பக்க முற்றம் வாழைகளால் நிறைந்து வாழைப் பொத்திகளும், வாழைக் குலைகளுமாய் எம்மை வரவேற்றது. வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மாவுக்கு அந்த வீடு நன்றாகப் பிடித்து விட்டது என்பது அம்மாவின் பிரகாசித்த முகத்தில் தெரிந்தது.

முன்னுக்குத் தனியாக இருக்கும் அறையில் அப்பாவின் அஸிஸ்டென்ட் ´டிக்சன்´ இருக்கிறார் என அப்பா சொன்னார். டிக்சன் அங்கிளின் அறைக்கு முன்னால் கதவுக்கு மேலே குருவிக்கூடு இருந்தது. குருவிகள் வந்து கீச்சிட்டு, சண்டை பிடித்துச் சென்றன. தம்பி ஆர்வமாய் அவைகளைப் பார்த்தான்.

அப்பா சூட்கேஸ் தூக்கிய மார்ட்டினின் கையில் சில்லறையைத் திணிக்க, அம்மா தேநீர் தயாரிக்க, நானும், அண்ணனும் குசினியின் பின் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தோம்.

பின் முற்றத்தில் பெரிய பெரிய பப்பாளிப் பழங்களுடன் பப்பாளி மரங்களும், மரவெள்ளி மரங்களும் நிறைந்து நின்றன. அங்காலை ஒரு கிணறு. ஆழம் பார்க்கும் ஆர்வம் எங்களுக்கு. ஓடிப்போய் எட்டிப் பார்த்தோம். அண்ணன் ஒரு சின்னக் கல்லை எடுத்துப் போட்டு விட்டு, கல் விழுந்ததால் அழகாகக் கலங்கிய கிணற்று நீரைப் பார்த்து ரசித்தான்.

“அது சரியான ஆழம். இங்காலை வாங்கோ." அறைக்குள் உடை மாற்றுகையில் யன்னலால் எம்மைக் கண்டு விட்ட அப்பா சத்தம் போட்டார்.

அப்போதுதான் கண்டேன் அந்த மரத்தை. அது பெரிய மரமில்லை. செடி போன்ற சிறிய மரம். அதன் கீழே குண்டுமணிகள். ஒரு பக்கம் சிவப்பும், மறுபக்கம் கறுப்புமான குண்டுமணிகள்.

´வாவ்..! குண்டுமணி மரம்.´ வாழ்க்கையில் முதன் முதலாகக் குண்டுமணி மரத்தைக் கண்டதில் என் எட்டு வயது மனம் துள்ளிக் குதிக்க, நான் துள்ளினேன்.

பயித்தங்காய் போல. ஆனால் பயித்தங்காய் போல நீளம் நீளமாய் இல்லாமல் சின்னச் சின்னக் காய்கள் அந்த மரத்தில். ஒரு காயைப் பிய்த்துப் பார்த்தேன். உள்ளே குண்டுமணிகள். ஆனால் காயாமல். அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸின் சந்தோசம் எனக்கு.

அன்று மாலையே நிறையக் குண்டுமணிகள் பிடுங்கிச் சேர்த்து மாலை கோர்க்க ஆரம்பித்தேன். தம்பி பார்த்திபன் குண்டுமணிகள் சேர்க்க எனக்கு உதவி செய்தான்.

குண்டுமணிகள் காயாமல் ஈரத்தன்மையுடன் பச்சையாக இருந்ததால் ஊசி சுலபமாக ஏறியது. மாலை கோர்த்த பின் தும்புத் தடியில் கொழுவி ஓட்டில் காய வைத்தேன். எனக்குப் பெருமையோ பெருமை. ஊரில் பருத்தித்துறையில் நான் ஒருநாளும் குண்டுமணி மரம் பார்க்கவில்லை. விடுமுறை முடிந்து போகும் போது குண்டுமணி மாலையுடன் போய் எனது சினேகிதிகளைப் பொறாமைப் பட வைக்கலாம்.

அன்றிரவு குண்டுமணி மாலைக் கனவுகளுடனேயே தூங்கிப் போனேன். அடுத்த நாள் விடிந்ததும் விடியாததுமாய் ஓடிப் போய் காய வைத்த குண்டுமணி மாலையைப் பார்த்தேன். காணவில்லை. சோகமாகிப் போனேன்.

“குருவி தூக்கிக் கொண்டு போயிருக்கும்." அப்பா சொன்னார்.

குருவிக் கூட்டில் கீச்சிட்ட குருவிகளைக் கலைத்தேன்.

“நங்கி..! நங்கி..!"

குரல் வந்த திசையைப் பார்த்தேன். டிக்சன் அங்கிள் சற்றுக் கோபமாக.. “துரத்தாதை குருவிகளை..! வீட்டிலை உள்ள செல்வமெல்லாம் போயிடும்." சிங்களத்தில் தடுத்தார்.

இப்போது அவரது நீண்ட மூக்கு எனக்கு விகாரமாகத் தெரிந்தது. “கிளி மூக்கு" மனதுக்குள் திட்டிக் கொண்டேன். வெளியில் அசடு வழிந்த படி “சொறி அங்கிள்" என்றேன்.

எனக்குக் கவலை, எப்படி ஒரு குண்டுமணி மாலை கோர்த்துக் காய வைத்து ஊருக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று. வீட்டுக்குள்ளே காய வைத்தால் குண்டுமணி சுருங்கிப் போகிறது. வெளியிலே காய வைத்து, பலதடவைகள் கோர்த்த குண்டுமணி மாலைகளைக் குருவிக்குக் கொடுத்து விட்டேன். எப்படித்தான் ஒளித்துக் காய வைத்தாலும் கண்டு பிடித்து விடுகின்றனவே இந்தக் குருவிகள். விடுமுறையும் முடிகிறது. மரத்திலும் முற்றிய குண்டுமணிகள் முடிந்து பிஞ்சுகள்தான் எஞ்சியிருக்கின்றன. தம்பி பார்த்திபனும் என் கவலையில் கொஞ்சம் பங்கு எடுத்துக் கொண்டு தேடித் தேடிக் கொஞ்சம் குண்டுமணிகள் பொறுக்கித் தந்தான்.

இரண்டு நாட்களில் ஊர் திரும்பப் போகிறோம். முற்றத்தில் ஒரு பேப்பர் போட்டு, நான் கோர்த்த மாலையை அதன் மேல் வைத்து வெயிலில் காய விட்டேன். நானும் பக்கத்தில் இருந்து காய்ந்தேன்.

தங்கையை இடுப்பில் தூக்கிய படியே “உச்சி மண்டையிலை வெய்யில் சுடுது. உள்ளை வா!" அம்மா சத்தம் போட்டா. “எள்ளேன் காயுது எண்ணெய்க்காக. எலிப்புழுக்கை ஏன் காயுது கூடக் கிடந்த குற்றத்துக்காக." என்றும் ஏதேதோ புறுபுறுத்தா. ஆனாலும் குண்டுமணிகளை மாலையாக்க நான் படும் பாடு தெரிந்ததாலோ என்னவோ என்னை வலுக் கட்டாயமாக உள்ளே அழைக்கவில்லை.

ஊர் திரும்புகையில் ஒரு குண்டுமணி மாலை என்னிடம் பத்திரமாக இருந்தது. எனக்குப் பெருமையோ பெருமை.

“நானே கோர்த்தேன்." என்று பெருமையாகச் சொல்ல, ஊரில் என் நண்பிகள் நம்பாது வியந்து வியந்து பார்த்தார்கள்.

ரெயின் ஒரு தரம் குலுங்கி ஓடியது.

ஏன் எல்லாவற்றையும் விட்டிட்டு ஓடிப் போனேன். பதினெட்டு வருடங்களாகப் பொத்தி வைத்திருந்த குண்டுமணி மாலையை மட்டுமா..? எல்லாவற்றையும் விட்டிட்டு ஏன் ஜேர்மனிக்கு ஓடிப் போனேன்!

ஏன்..? ஏன்..?

பருத்தித்துறைக் கடலில் இருந்து காலம் நேரம் பாராது எம்மை நோக்கி வந்த ஷெல்களாலா? ஹெலியில் இருந்து நீண்ட துப்பாக்கிகளில் இருந்து எங்கள் வீட்டிலும் சன்னங்கள் சிதறியதாலா? வீடு வீடாகச் சென்ற சிங்கள இராணுவம் ஆண்களைச் சுட்டு வீழ்த்தி, பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக எண்ணி தம் இச்சை தீர்த்துக் கொண்டதாலா? குறுக்கே கட்டியபடி, குளித்த குறையில் துலாக் கயிற்றை இழுத்துத் தண்ணி வாளியைப் பிடித்துக் கொண்டு நேரம் போவதே தெரியாமல் தங்கையுடன் கதையளந்த காலம், எங்கே ஷெல் வந்து எம் தலையில் விழுந்து விடுமோ, எந்தப் பக்கத்தால் ஆமி எங்கள் வீட்டுக்குள் குதிப்பானோ என்ற அச்சத்தில் காக்காக் குளிப்புக் குளிக்கும் காலமாக மாறியதாலா? என் பிள்ளைகளும் இயக்கத்தில் சேர்ந்து விடுவார்களோ என்ற சுயநலம் கலந்த பயத்தாலா?

ஏன் ஓடிப் போனேன்?
போய்... என்ன கண்டேன், ஜேர்மனியில்..!

வெறுமை, தனிமை, குளிரின் கொடுமை, பாஷை தெரியாத பரிதவிப்பு, “தொங்கிக் குதிக்கக் கூடத் தடையா இங்கே..?" என்ற வினா முகங்களில் தொக்கி நிற்க மனம் வாடி நின்ற என் பிள்ளைகள். எதையோ பறிகொடுத்து விட்ட வேதனையை முகத்தில் தெரிய விடாமல் மறைக்கப் பிரயத்தனப்படும் எனது கணவர். இவை தவிர வேறு என்ன கண்டேன்! தமிழ் முகங்களையே காண முடியாத ஒரு நகரம்.

பல்லைத் தீட்டி, துலாவில் தண்ணீரை இழுத்து வாய் கொப்பளித்து, முகம் கழுவி வர சுடச்சுட ஆட்டுப்பால் தேநீர் தரும் அம்மா இல்லை. களைத்துப் போய் வந்தால், “அக்கா, நல்லாக் களைச்சுப் போட்டியள் போலை இருக்கு. முதல்ல இதைக் குடியுங்கோ." அன்போடு கோப்பையை நீட்டும் தங்கைமார் இல்லை. “அக்கா, நல்ல கிளிச்சொண்டு மாங்காய் கொண்டு வந்திருக்கிறன். நைஸா, அம்மாக்குத் தெரியாமல் உப்பும், தூளும் கொண்டு வாங்கோ." என்கிற தம்பிமார் இல்லை. என் பிள்ளைகளை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு தோட்டத்து மாதுளம் பழத்தைப் பிரித்து, மணிமணியாக எடுத்து பிள்ளைகளின் வாய்க்குள் நசித்து சாறைச் சுவைக்க விட்ட படியே காகமும் வடையும், குரங்கும் அப்பமும்... கதைகள் சொல்லும் அப்பா இல்லை.

இன்னும் எத்தனை இல்லைகள்!

இருந்தும் ஏன் போனேன், ஜேர்மனிக்கு?

..? ...?

போகாமல் இருந்திருந்தாலும் எப்படி அல்லல் பட்டிருப்பேன். 1987-1989 காலப் பகுதியில், தம்பியைத் தேடி வந்த இந்திய இராணுவம் எங்கள் குடும்பத்தைப் படுத்தின பாட்டை தங்கை பக்கம் பக்கமாக எழுதியிருந்தாள். நின்றிருந்தால் நானும் பட்டிருப்பேன். அவள் அந்தக் கொடுமைகளைக் கூட கதை போல நேர்த்தியாக எழுதி அனுப்பிக் கொண்டே இருப்பாள்.

ஒரு கடிதத்தில் “அக்கா, அந்தச் சண்டாளர் ஒவ்வொரு முறை வாற பொழுதும் உங்கடை அலுமாரியளைக் குடைஞ்சு, குடைஞ்சு கொஞ்சம், கொஞ்சமா எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு போறாங்கள். சாறியள், எவர்சில்வர் சாமான்கள்... எண்டு ஒண்டையும் விடவில்லை” என்றாள்.

“அதையிட்டு ஒண்டும் கவலைப் படாதைங்கோ. உங்களுக்கு ஒண்டும் நடக்காதது தெய்வச் செயலே..!" ஆறுதல் கூறும் கடிதங்களாகவே எனது கடிதங்கள் பறந்தன.

என்ன கஷ்டத்திலும் “அக்கா..!" என்று அன்பைத் தோய்த்து எழுதும் அவளின் கடிதங்கள் நாளுக்கு நாள் சோகத்தால் நிறைந்து கனத்தன.

அப்படி வந்ததில், எந்தப் பேரலையிலும் தொலைந்து போய் விடாமல் நான் இறுகப் பற்றியிருந்த நம்பிக்கை என்னும் நூலை அறுத்து, உலகப் பெருவெளியில் ´நான்´ என்ற என்னை மல்லாக்காக வீழ்த்திப் புரண்டு புலம்ப வைத்த.. “எங்கள் தம்பியை, இந்தியப் படையினர் 500 பேர் ஒன்றாகச் சுற்றி வளைத்து, அவனுடன் நேர் நின்று போராட முடியாத கட்டத்தில் ´பசூக்கா ஷெல்´ லால் அடித்து வீழ்த்தி விட்டார்கள். கடைசி மூச்சு வரை போராடி எங்கள் தம்பி வீரமரணமடைந்து விட்டான்..!” என்ற வாக்கியங்களுடன், வந்த கடிதத்துக்கு முந்தைய கடிதத்தில் வந்த செய்தி...

“அக்கா, இம்முறை அவர்கள்(இந்திய இராணுவத்தினர்) ஐந்து பேர்களாக வந்தார்கள். ஒருவன் என்னை இழுத்து வீழ்த்தி என் நெஞ்சின் மேல் காலை வைத்துக் கொண்டு, தம்பி “மொறிஸ் எங்கே?" என்று கேட்டு உறுமினான். இன்னொருவன் எங்கள் குட்டித் தங்கையின் அழகிய பின்னல்களைப் பிடித்து இழுத்து, நெஞ்சிலே துவக்கின் பின் பக்கத்தால் இடித்து, “எங்கே மொறிஸ்? சொல்லு..!" என்று அதட்டினான். அவள் வலி தாங்காமல், வார்த்தைகள் வராமல் புரண்ட போது கூட அவன் இரக்கப் படவில்லை. மற்றவன் அப்பாச்சிக்கு உலக்கையால் அடித்தான். அப்பாச்சியின் அலறல் நெஞ்சைப் பிளந்தது. நல்ல வேளையாக அம்மா நிற்கவில்லை. அப்பாவிடம் யாழ் சென்றிருந்தா.

மற்றவன், மைத்துனர் ராகுலனைப் பிடித்து முகத்தில் துவக்கால் அடித்து, இரத்தம் பீறிட்டுப் பாய இழுத்துக் கொண்டு போனான். ஐந்தாவது ஆமி வழமை போல் உங்கடை அலுமாரியளைக் குடைஞ்சு எதையெல்லாமோ இழுத்துக் கொண்டு போனான். அந்த நேரம் வெளியிலிருந்து வந்த ஒரு தமிழ் ஆமியால்தான் எங்கள் கற்பும், உயிரும் காப்பாற்றப் பட்டன. எல்லாரும் போய் நாங்கள் ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்தான் பார்த்தேன். உங்கடை குண்டுமணிமாலை அறுந்து, ராகுலன் சிந்திய இரத்தத்தில் சிதறிப் போயிருந்ததை..!"

ரெயின் விசுக்கென்று நாகொல்லகம ரெயில்வே ஸ்ரேசனைத் தாண்டிச் சென்றது. அங்கே ரெயின் நிற்கவில்லை. ஆனாலும் நான் அவசரமாகப் பார்த்ததில் அந்த நீலவீடு இப்போ மஞ்சளாகி இருப்பது மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது. வெள்ளை சேர்ட், வெள்ளை ரவுசர், வெள்ளைத் தொப்பி போட்ட ஸ்ரேசன் மாஸ்டர் ரபிளெற்(Tablet) உடன் ஸ்ரேசனில் நிற்பதும் தெரிந்தது. ஆனால் அது என்ரை அப்பா இல்லை.

அப்பா..! உயிரோடு போராடும் அந்தக் கனமான வேளையிலும் என் முகம் பார்க்க ஏங்கி வழி மேல் விழி வைத்து என் வரவுக்காய் வவுனியாவில் காத்திருக்கிறார்.

ரெயின் இப்போ மாகோவை நோக்கித் தன்பாட்டில் ஓடிக் கொண்டிருக்கிறது. எனக்கு ஏனோ நெஞ்சு கொள்ளாமல் கண்களால் வழிந்தது. மாமா பார்த்து விடக் கூடாதே என்று துடைக்கத் துடைக்க வழிந்தது.

12.12.1997

மனஓசை - 3 (பக்கம்:21-29)



பிள்ளைகள் மூன்று பேரையும் இழுத்துக் கொண்டு விமானத்திலிருந்து குதித்து விடுவோமா! என்ற எண்ணம் எனக்குள் தோன்றியிருந்தது. வாழ்க்கை ஆசை அப்படியே அற்றுப் போய் தற்கொலை எண்ணம் என்னை ஆக்கிரமித்திருந்தது.

விமானத்திலிருந்து குதிக்க முடியுமா? என்ன ஒரு மக்குத் தனமான எண்ணம் என்னுள்!

விமானம் ஏதாவதொரு நாட்டில் தரையிறங்கும் போது பிள்ளைகளுடன் ஓடி விடுவோமா? மனசு நிலை கொள்ளாமல் தவித்துத் தத்தளித்துக் கொண்டே இருந்தது. பேதைத் தனமாக எதையெதை எல்லாமோ எண்ணிக் குழம்பியது.

எப்படிப் போய் யார் முகத்தில் முழிப்பது? பணம் போய் விட்டது. ஜேர்மனி ஆசை மண்ணாகி விட்டது. அவரைக் காணும் களிப்பும் கனவாகி விட்டது.

எல்லோருக்கும் பயணம் சொல்லி ஊரிலிருந்து புறப்பட்டு, அகதிகளாய் வவுனியா கொறவப்பத்தானை ரோட் தேவாலயத்தில் அவதிப் பட்டு, கொழும்பிலும் பயணம் சொல்லி, விமானம் ஏறிய பின் மொஸ்கோவில் விசா சதி செய்யும் என்று யார் கண்டது!

அப்பவே பக்கத்து வீட்டு மகேசக்கா சொன்னவ, “நீ... சரியான துணிச்சல்காரிதான். மூண்டு பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு தனிய பிளேன் ஏறப் போறியே! அதுவும் களவா.. ஏஜென்சிக் காரனுக்கு இவ்வளவு காசைக் கொட்டி... காசைக் கரியாக்கிற வேலையள்தான் இதுகள்!"

வார்த்தைகளை அவ கொட்டிய விதத்திலேயே நான் ஜேர்மனிக்குப் போவதில் அவவுக்கு உள்ள அதிருப்தி அப்பட்டமாகத் தெரிந்தது. நான் எனது கணவரிடம் போவது அவவுக்குப் பிடிக்கவில்லை.

இப்போ நான் திரும்பி வந்து விட்டேன் என்ற உடனே “நான் சொன்னன் கேட்டியோ!" என்று நாடியைத் தோள்ப்பட்டையில் இடிக்கத்தான் போறா. அவவாவது எனக்கு முன்னால் இடிப்பா. எனக்குப் பின்னால் இடிக்கப் போகிறவர்கள் எத்தனை பேர்?

மனசு இந்த அவமானங்களைத் தாங்கும் துணிவின்றி அல்லாடிக் கொண்டிருந்தது.

“அக்கா, எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை. செத்திடலாம் போலை இருக்கு." எனக்கு நான்கு சீற் தள்ளியிருந்த சாந்தி அரை குறை அழுகையுடன் சொன்னாள்.

என்னையும், எனது பிள்ளைகளையும் சேர்த்து எல்லாமாக 32 இலங்கையர் மனசுக்குள் அழுத படி இந்த விமானத்துள். ஐந்து நாட்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் எயர்லங்காவில் ஏறிய போது இப்படி எல்லாம் நடக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நான் கூட ஏஜென்சி மகாதேவனுக்கு சுளையாக 75,000 ரூபா கொடுத்தேன். ஜேர்மனிய மார்க் எட்டு ரூபா பெறுமதியாக இருந்த 1986ம் ஆண்டில் இந்த 75,000 ரூபா கொஞ்சக் காசில்லை.

எல்லாம் ஏஜென்சிமாரின் பிழைதானாம். சரியாக விசாரிக்காமல் மூன்று ஏஜென்சிமார் 32 பேரிடமும் காசை மட்டும் சுளையாக வாங்கிக் கொண்டு விமானத்தில் ஏற்றி விட்டு, ஹாயாக இருந்து விட்டார்கள். மொஸ்கோ வரை ஒரு பிரச்சனையுமில்லை.

“அக்கா, உங்கடை அவர் ஜேர்மனியிலை எங்கை இருக்கிறார்?" முதலில் வெறுமனே சிரித்த சாந்தி இப்படித்தான் என்னுடன் விமானத்துள் கதைக்கத் தொடங்கினாள். எத்தனை தரம் கடிதம் எழுதி, கடித உறையில் அவரின் விலாசம் எழுதி அஞ்சல் செய்திருப்பேன். ஆனாலும் அந்தப் பெயர் வாயில் நுழையவோ, நினைவில் நிற்கவோ மறுத்தது.

எந்தச் செக்கிங்கிலும் யார் கண்ணிலும் பட்டு விடாதபடி விலாசத்தைச் சுருட்டி எனது சட்டை மடிப்புக்குள் சொருகியிருந்தேன். நான் ஜேர்மனிக்குத்தான் போகிறேன் என்பது யாருக்கும் தெரியக் கூடாது. பெய்ரூட்(Beirut) போவது போலத்தான் எல்லாம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஜேர்மனியில் ஃபிராங்போர்ட்(Frankfurt) விமான நிலையத்தில் விமானம் தரிக்கும் போது இறங்கி அகதி விண்ணப்பம் கோர வேண்டும்.

விமானத்துள் வந்த ஒவ்வொரு தமிழரும் போக எண்ணிய இடங்கள் சுவிஸ், பாரிஸ், ஹொலண்ட், இத்தாலி... என்று வேறு பட்டிருந்தாலும் எல்லோரும் பெய்ரூட் போவது போலத்தான் பாசாங்கு பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

ஃபிராங்போர்ட்(Frankfurt) இல் எப்படிக் கதைக்க வேண்டுமென வெளிக்கிடுவதற்கு முதல் நாள் இரவே எனது கணவர் தொலைபேசியில் அழைத்துச் சொல்லியிருந்தார்.

கட்டுநாயக்க விமானநிலையத்தில் செக்கிங்கின் போது எனது சிறிய புகைப்பட அல்பத்தில் இருந்த எனது கணவரைப் பார்த்து அவர் இருக்கும் இடம், வளம்... என்று கேள்விகளை அடுக்கினார்கள். வாய் கூசாமல் “பெய்ரூட்" என்று பொய் சொல்லி வைத்தேன்.

“திரும்பி வருவாய் தானே..?"

அதற்கும் “ஓம்" என்று பொய்தான் சொன்னேன்.

விமானம் மேலெழும்பிய போது ஊரை, உறவுகளை விட்டுப் பிரியும் துயரில் மனதின் ஒரு பக்கம் கனமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் கனவுகள், கற்பனைகள் என்று இறக்கை கட்டிப் பறக்கத் தொடங்கியது. ஜேர்மனிக்குப் போய்ச் சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது.

கோழிக்குருமா சுவைத்தது. மூன்று சின்னப் பிள்ளைகளுடன் பறக்கிறேன் என்பதால் அக்கறையாகக் கவனிக்கப் பட்டேன். பிள்ளைகள் அந்த உணவுகளின் சுவைகளை ருசிக்க முடியாதவர்களாக இருந்ததால் அடிக்கடி பழங்கள் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

நான்கு இருக்கைகள் தள்ளியிருந்த சாந்தி ஆரம்பத்தில் சிரித்து, பின் கொஞ்சமாய்க் கதைக்கத் தொடங்கி… மொஸ்கோவைச் சென்றடைவதற்குள் கிறீம் தந்து “கையுக்குப் பூசுங்கோ அக்கா" என்று சொல்லுமளவுக்கு நட்பாகி விட்டாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள். கனவுகளையும், ஆசைகளையும் கண்களுக்குள் நிறையவே தேக்கி வைத்திருந்தாள். கணவனை இரண்டு வருடங்களின் பின் சந்திக்கப் போவதில் என்னைப் போலவே ஆவலாய் இருந்தாள்.

மொஸ்கோவில் விமானம் தரையிறங்கும் போது காது விண்ணென்று வலித்தது. பிள்ளைகள் வாந்தி எடுத்தார்கள். எமக்கு அங்கே ரான்ஸ்சிட்(வசயளெவை). நாம், அங்கு ஒழுங்கு செய்யப்பட்ட விடுதி ஒன்றில் ஒரு நாள் தங்கி அடுத்த நாள் மதியம் லுஃப்தான்சாவில்(Lufthansa) ஜேர்மனி புறப்படுவதாய்த்தான் ஏற்பாடு.

விமான நிலையத்திலிருந்து எம்மை பேரூந்தில் விடுதிக்கு அழைத்துச் சென்றார்கள். மொஸ்கோ குளிரில் உறைந்து ஒரு வரண்ட பிரதேசம் போல் காட்சி அளித்தது. பேரூந்தில் இருந்து இறங்கி, விடுதியினுள் நுழையும் போது குளிர் அறைந்தது. காது மடல்கள் விறைத்தன. ஆனாலும் அவை என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை.

மூன்று பிள்ளைகளுடன் உள்ளே சமாளிப்பேன் என்ற நம்பிக்கை இருந்தது. எனக்கு 19வது மாடியில் இரட்டை அறை ஒன்று தந்திருந்தார்கள். ஓரளவு வசதியான அறை. யன்னலால் வெளியில் பார்க்கப் பயமாக இருந்தது.

அதே மாடியில் இன்னும் சில தமிழருக்கு அறைகள் கொடுக்கப் பட்டிருந்தன. மிக அமைதியாக இருந்த மாடி எம்மவரின் வருகையில் சற்று அல்லோல கல்லோலப் பட்டிருப்பது போலத் தெரிந்தது.

எவ்வளவுதான் வசதியாக அந்த அறை இருந்தாலும் ஏதோ வசதிக் குறைவு போலவே மனசு சங்கடப் பட்டது. பிள்ளைகளைக் குளிக்க வைத்து சாப்பிடுவதற்காக வெளியில் கீழே கன்ரீனுக்கு அழைத்துப் போன போதுதான் 32 தமிழர்களையும் ஒன்றாகக் கண்டேன்.

பரிச்சயமில்லாத உணவுகளைச் சாப்பிட முடியாமல் சங்கடப் பட்டோம். இரண்டு மேசை தள்ளியிருந்த நான்கு இளைஞர்களில் ஒருவனான ராஜன் சீனியென நினைத்து தேநீருக்கு உப்பைப் போட்டு விட்டு சத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டிருந்தான். பார்ப்பதற்குக் கொஞ்சம் ரவுடித் தனமாய்த் தெரிந்தான்.

இரவானதும், சாந்தி பிள்ளைகளுடன் என் அறைக்கு வந்தாள். முகம் தெரியாதவனை மணம் செய்து கொள்ளச் செல்லும் சில பெண் பிள்ளைகளும், வெளிநாடு எப்படியெல்லாம் வாழ்க்கையை மாற்றப் போகிறது என்று தெரியாத பதினெட்டு, பத்தொன்பது வயது நிரம்பிய அப்பாவித்தனம் கலையாத ஆண் பிள்ளைகளும் வந்தார்கள்.

எங்கள் கதைகள், ஊரில் விட்டு வந்த உறவுகளைப் பற்றியும், புகலிடத்தில் சந்திக்கப் போகும் உறவுகளைப் பற்றியுமே சுற்றிச் சுற்றி வந்தன. சிலருக்கு கண்கள் கலங்கி கன்னங்களில் வழிந்தன. நடு இரவில், நினைத்த இடங்களுக்குப் போய்ச் சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொருவரும் தத்தமது அறைகளுக்குப் போனார்கள்.

அடுத்த நாள் மதியம் எமக்கான பேரூந்தில் ஏறி விமான நிலையத்துக்குச் சென்று ரிக்கெற்றை ஓகே பண்ணுவதற்காக வரிசையில் நின்ற போதுதான் விதி சதி செய்திருப்பதை அறிந்து கொண்டோம். ஒவ்வொருவராக விமானம் ஏறுவதற்கான அனுமதி மறுக்கப் பட்டோம். நானும், சாந்தியும் குழந்தைகளுடன் இருப்பதால் எங்களுக்கு மற்றவர்களை விடக் கூடிய சலுகை வழங்கப் படுமென எதிர்பார்த்து ஏமாந்தோம். ரான்ஸ்சிற் விசா இல்லாமல் லுஃப்தான்சா விமானம் எங்களை ஏற்க மறுத்து விட்டது.

எத்தனையோ விதமாகக் கதைத்துப் பார்த்தோம். கெஞ்சிப் பார்த்தோம். ம்..கும்.. எங்கள் விமானம் எங்களை மொஸ்கோ விமான நிலையத்தில் விட்டு விட்டு தன்பாட்டில் பறந்த போது அழுகை வந்தது. ஆனாலும் கெஞ்சிக் கூத்தாடி வென்று விடமாட்டோமா, என்ற நப்பாசையோடு போராடினோம்.

திரும்ப அந்த விடுதிக்கே அனுப்பப் பட்டோம். விடுதியில் ஆங்கிலம் தெரிந்தவர்களே இல்லை என்று சொல்லலாம். அவர்களுடன் எங்கள் பிரச்சனைகளைப் பேசுவதே பெரும் பிரச்சனையாக இருந்தது. கன்ரீனில் அவர்கள் சாப்பாடுகளைப் பரிமாறும் போது முதல் நாள் இருந்த மரியாதை குறைந்து போனது போலத் தெரிந்தது.

காவலுக்கு நின்ற பொலீசிடம் போய் எங்கள் நாட்டுப் பிரச்சனைகளைச் சொல்லி எங்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கேட்டுப் பார்த்தோம். அவர் உரியவர்களோடு ரஷ்ய மொழியில் பேசி விட்டு “அவர்கள் உங்களை என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அது வரை
பொறுத்திருங்கள்." என்று சொன்னார். நம்பிக்கையுடன் நல்ல முடிவுக்காய் காத்திருந்தோம்.

அடுத்த நாள் ராஜனையும், இன்னொருவனையும் தவிர மற்றவர்கள் எல்லோரும் எனது அறைக்குள் வந்து கூடத் தொடங்கினார்கள். என்ன செய்யலாம், என்பதே எல்லோரது கேள்வியும். இப்போது எல்லோரும் தத்தமது நிலைப்பாடுகளை ஆற்றாமையோடு வெளியே சொல்லத் தொடங்கினார்கள்.

பதினெட்டு வயது நிரம்பிய சேகரை அவனது அம்மா வீட்டை ஈடு வைத்துத்தான் அனுப்பியிருந்தா. இருபது வயது லோகனுக்கு அவனது அக்கா தாலிக்கொடியை அடகு வைத்துப் பணம் கொடுத்திருந்தாள். இப்படியே ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கதை. வீணாய்ப் போன பணத்தையும், தடைப்பட்டு விட்ட பயணத்தையும் நினைத்து நினைத்து எல்லோரும் மிகவும் வேதனைப் பட்டுக் கொண்டே இருந்தோம்.

விமானநிலையத்தில் இருந்து ஒவ்வொரு விமானமும் மேலெழுந்து பறக்கும் போது அந்தச் சத்தம் மனதை என்னவோ செய்தது. யன்னலால் வெளியில் பார்த்த போது மொஸ்கோ குளிர் நிறைந்த பாலைவனம் போலவே காட்சியளித்தது. மெது மெதுவாக மனசுக்குள் வெறுமை சூழத் தொடங்கியது.

ஒவ்வொரு அறையிலிருந்தும் வேறு நாட்டவர்கள் ஃபிளைற்றுக்காக(flight) உடமைகளுடன் வெளியேறும் போது ஆதங்கம் தலை தூக்கியது.

எனது கணவருக்கு எப்படியாவது விடயத்தைத் தெரிவிக்க வேண்டும் என்பதால் ஒரு கடிதம் எழுதி விட்டு அஞ்சல் செய்ய இடம் தேடிய போது ஒரு பின்லாந்து வயோதிபரைச் சந்தித்தேன். அவரிடம் எங்கள் 32பேரது நிலைமைகளையும்

சொன்ன போது, அவர் மிகவும் இரக்கப் பட்டு, கடிதத்தை தானே அஞ்சல் செய்வதாகச் சொல்லி வாங்கிச் சென்றார்.

போகப் போக ராஜனின் கதைகள் ஏடாகூடமாக இருந்தன. அவன் நீர் கொழும்பைச் சேர்ந்தவனாம். அவனது தமிழே ஒரு மாதிரியாக இருந்தது. கடைசியாக அவன் ஒரு குரூரமான யுக்தி சொன்னான். “ஒரு குழந்தையை யன்னலால் தூக்கிப் போட்டு விட்டால் எங்களைத் திருப்பி அனுப்ப மாட்டார்கள்." என்றான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஒரு தரம் நெஞ்சு துடிக்க மறந்து பின் படபடத்தது. அவன் குறிப்பிட்டது எனது மூன்று பிள்ளைகளில் ஒருவரையோ அல்லது சாந்தியின் இரண்டு பிள்ளைகளில் ஒருவரையோதான்.

அதன் பின் எனக்கும் சாந்திக்கும் கொஞ்ச நஞ்சம் இருந்த நிம்மதியும் பஞ்சாய் பறந்து விட்டது. சாந்தி ஒரேயடியாக பிள்ளைகளுடன் எனது அறையில் வந்து இருந்து விட்டாள். “அவன் செய்தாலும் செய்வான் அக்கா. எனக்கு அவனைப் பார்க்கவே பயமாக இருக்கு" என்றாள்.

எங்கு சென்றாலும் நானும், சாந்தியும் பிள்ளைகளுடன் ஒன்றாகவே சென்றோம். விடுதியை விட்டு வெளியில் எங்காவது ஓடி விடுவோமா, என்று மனசு அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தது. எப்படி? அது சாத்தியமாகுமா! விடுதியை விட்டு வெளியில் காலடி வைக்கவே எங்களுக்கு அனுமதி இருக்கவில்லை.

விடுதியினுள் எங்கு பார்த்தாலும் ரஷ்ய மொழியிலேயே எல்லாம் எழுதப் பட்டிருந்தன. ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்களைக் கண்டு பிடிப்பதே பெரும்பாடாக இருந்தது.

நான்காம் நாள், எம்மைத் திருப்பி அனுப்புவதாக முடிவெடுத்து விட்டதாக அறிவித்தார்கள். இரண்டு பொலீஸ்காரர்கள் ஒவ்வொரு அறையாக வந்து “நாளை விடிய மூன்று மணிக்கு ரெடியாக நில்லுங்கள்." என்று சொல்லிச் சென்றார்கள்.

அந்த இரவு, ராஜனைத் தவிர மற்றைய எல்லோரும் எனது அறைக்குள் வந்து கூடி விட்டார்கள். ராஜன் வந்து பார்த்து விட்டு, ஒரு பிள்ளையின் உயிரைத் தியாகம் பண்ண மறுத்து விட்டேன், அதனால்தான் எல்லாம் என்பது போல என்னில் கோபப் பார்வை ஒன்றை வீசி விட்டுச் சென்றான்.

அன்று எங்களில் யாருமே நித்திரை கொள்ளவில்லை. பெண்பிள்ளைகளில் சிலர் என்னோடு ஒட்டிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் யாரும் அவரவர்க்குரிய அறைகளில் இல்லை என்பதை எப்படியோ அறிந்து கொண்ட பொலீஸ் கூட்டம் இரண்டரை மணியளவில் என் அறையை வந்து மொய்த்து விட்டது.

உடைகளை மாற்றி வெளிக்கிடும் படி கட்டாயப் படுத்தப் பட்டோம். நாங்களும் முடிந்தவரை மறுத்துப் பார்த்தோம். எதுவும் பயன் அளிக்கவில்லை. திருப்பி அனுப்புவதற்காக எங்களை இழுக்காத குறையாக அழைத்துச் சென்றார்கள். “போனால் செத்து விடுவோம்" என்றும் சொல்லிப் பார்த்தோம். அவர்கள் மசியவில்லை.

காலை ஏழு மணிக்குப் பறக்கப் போகும் விமானத்துக்காக எம்மை மூன்று மணிக்கே கூட்டிச் சென்று ஒரு குளிரான இடத்தில் நிற்பாட்டி வைத்தார்கள்.

விமானத்துக்கான பேரூந்தின் வரவுக்கான காத்திருப்பு நீண்டதாக, தண்டனை தருவது போல அமைந்திருந்தது. குறிப்பிட்ட நேரத்தின் பின் பிள்ளைகள் சுருண்டு விழத் தொடங்கினார்கள். குளிரில் அவர்களின் கால்களில் வெடிப்புகள் ஏற்பட்டு இரத்தம் கசியத் தொடங்கியது. மனசு துடித்தது.

´இனி முடியாது´ என பெரியவர்கள் நாங்களும் ஓய்ந்து போய் நிலத்தில் சாய்ந்த ஒரு கட்டத்தில் பேரூந்து வந்து கட்டாயப் பயணம் ஆரம்பித்தது. ஒவ்வொருவர் மனதிலும் போராட்டம். எல்லோர் வாயிலும் அவர்களை அறியாமல் வந்த வார்த்தைகள் “செத்து விடுவோமா!" என்பதுதான்.

விமானம் பாகிஸ்தானில் தரையிறங்கிய போது எல்லாம் பச்சையாகத் தெரிந்தது. இறங்கி ஓடி விடுவோமா, என மனசு அந்தரித்தது. எதுவும் என் கையில் இருக்கவில்லை.

கட்டுநாயக்காவில் வந்திறங்கிய போது வார்த்தைகளில் வடிக்க முடியாத ஏமாற்றம். எதிர் கொள்ளப் போகும் உறவினர்களிடம் எப்படி முகம் கொடுப்பது என்ற மனப் போராட்டம்.

வெள்ளவத்தையில் இருக்கும் மாமாவைத் தொலைபேசியில் அழைத்து விடயத்தைச் சொல்லி விட்டு ரக்சியில் ஏறினேன்.

சாந்தி கலங்கிய கண்களுடன் ஓடி வந்து என் கைகளை அழுத்திக் கொண்டு “அக்கா, நான் எப்பிடியக்கா ஊருக்குப் போறது? செத்திடலாம் போலை இருக்கக்கா!" என்று சொல்லி விட்டு இன்னொரு ரக்சியில் பிள்ளைகளுடன் ஏறினாள்.

அவளுக்கு கொழும்பில் யாரும் இல்லையாம். லொட்ஜ் இல் தங்கி விட்டு விடிய யாழ் புறப்படுகிறாளாம்.

மாமா வீட்டில் இரவுச்சாப்பாடு இடியப்பமும், உருளைக்கிழங்குக் கறியும். எதுவும் ருசிக்கவில்லை.

விடயமறிந்து ஜேர்மனியிலிருந்து கணவர் தொலைபேசியில் அழைத்து “அவசரப்பட்டு ஊருக்குப் போக வேண்டாம். வேறை ஏதாவது வழி இருக்கோ எண்டு பார்ப்பம்." என்று சொன்னது சற்று ஆறுதலாக இருந்தது.

அடுத்தநாள் மதியம் இன்னொரு ஏஜென்சியிடம் போவதற்கு நானும் மாமாவும் ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரம், ´யாழ்
நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று மாகோவுக்கும், அனுராதபுரத்துக்கும் இடையில் பயணிகளுடன் சேர்த்து எரிக்கப் பட்டு விட்டது´ என்ற செய்தி வந்தது.

அவசரமாய் சாந்தி இருந்த லொட்ஜ்க்குத் தொலைபேசி அழைப்பை மேற் கொண்டேன். “அவள் அறையைக் கான்சல் பண்ணிக் கொண்டு காலை பஸ்சில் புறப்பட்டு விட்டாள்" என்றார்கள்.

29.11.2002

மனஓசை - 4 (பக்கம்:30-32)



“என்ன தாலிக்கொடியைப் போடாமல் வந்தனீரே..?"

“ஓம், நான் போடுறேல்லை."

“என்ன நீர்..! அவை இதெல்லாம் கவனமாப் பார்ப்பினம். தாலியில்லாட்டில் என்ன நினைப்பினம்! சீ.. எவ்வளவு மரியாதை இல்லைத் தெரியுமே!"

அவள் தனது மொத்தத் தாலிக்கொடியில் கொழுவியிருந்த காசுப் பென்ரனை விரல்களால் அளாவியபடி என்னுடன் அலுத்துக் கொண்டாள்.

நான் உடுத்திய ஜோர்ஜெட் சேலை கூட அவளுக்குப் பிடிக்கவில்லை. தன்னைப் போல சருகைக் கரை போட்ட சேலையுடன்தான் அங்கு எல்லாப் பெண்களும் வருவார்களாம். கழுத்தோடு ஒட்டியபடி கல்லுப் பதித்த அட்டியலும் அணிந்திருந்தாள்.

நான் மேகவண்ண நீல ஜோர்ஜெட் சேலை உடுத்தி, ஒரு தும்புச் சங்கிலியைக் கழுத்தில் தொங்க விட்டிருந்தேன்.

இது அவளுக்குப் பெரிய அவமானமாம். என்னைத் தனது சொந்தம் என்று சொல்லவே வெட்கமாம். அதுதான் இந்தத் தொணதொணப்பு. பிறந்தநாள் கொண்டாடும் வீட்டுக்குள் நுழையும் வரை அவளின் தொணதொணப்பு ஓயவில்லை. ஏன்தான் இவளைச் சந்திக்க என்று ஜேர்மனியிலிருந்து லண்டன் வந்தேனோ, என்றிருந்தது.

பிறந்தநாள் கொண்டாடும் வீட்டில் எல்லோரும் கலகலப்பாக இருந்தார்கள். தாலி சேலைக்குள் சாடையாக மறைந்தாலும் எடுத்தெடுத்து வெளியே விடுவதும், தாலிச் சரட்டைப் பிசைவதுமாய் சில பெண்களும், பஞ்சாபிகளுடன் இன்னும் சில பெண்களும் ஒரு புறம் இருக்க, ஆண்கள் அடிக்கடி பல்கணியில் போய்ப் புகைப்பதுவும், பெரிய பெரிய போத்தல்களிலிருந்து வார்த்து வார்த்துக் குடிப்பதுமாய் இருந்தார்கள்.

அவள் சற்று சங்கடத்துடன் “இவ ஜேர்மனியிலையிருந்து வந்திருக்கிறா" என என்னை மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்தினாள். அங்குள்ள மற்றவர்களும் நகைகளையும், சேலையையும் வைத்துத்தான் என்னை அளந்தார்களோ தெரியாது. எனக்கு அது பற்றிக் கவலையில்லை. அவள்தான் இதை மறந்து போகாதவளாய் “பஞ்சப் பிரதேசத்திலை இருந்து வந்த ஆள் மாதிரி வந்திருக்கிறீர்." என்று எனது காதுக்குள் முணுமுணுத்தாள்.

பிறந்தநாள் பிள்ளையை மட்டும் காணவில்லை. ´உள்ளை எங்கையோ விளையாடுதாம். வந்திடுமாம்.´ இதனிடையே கோழிக்கால்கள், கட்லட்டுகள் என்று பரிமாறப் பட்டுக் கொண்டிருந்தன. திடீரென்று ஒரு பெண் ஒரு தட்டில் ஏதோ குடிக்கக் கொண்டு வந்தாள்.

“ம்... வைன் போலை இருக்கு." என்னை அறியாமலேயே முகத்தைச் சுளித்து விட்டேன்.

“ஓம் வைன்தான். இது பொம்பிளையளுக்கு." சொன்ன படி அந்தப் பெண் என்னிடம் வைன் கிளாஸை நீட்டினாள்.

“சீ.. எனக்கு வேண்டாம். நான் உதுகள் குடிக்கிறேல்லை."

அந்தப் பெண்ணுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. கொஞ்சம் அவமானப் பட்டது போன்றதான பின் வாங்கல்.

நிலைமை புரிந்தது. அவளைப் சங்கடப் படுத்தி விட்டேனோ!

“சொறி. குறை நினைக்காதைங்கோ. எனக்கு ஒறேஞ்யூஸ் இருந்தால் தாங்கோ. நான் அற்ககோல் குடிக்கிறேல்லை." சமாளித்தேன்.

“இஞ்சை லண்டனிலை இது கட்டாயம் குடிக்கோணும். இல்லாட்டி மரியாதையில்லை. உம்மைச் சரியான பட்டிக்காடு எண்டுதான் எல்லாரும் நினைப்பினம்." அவள் நியமான எரிச்சலுடன் என்னைக் கடிந்து கொண்டாள்.

ஓ.. வைன் குடிக்காத பெண்கள் பட்டிக்காடுகளோ..? இது லண்டன் நாகரிகமோ..? நினைத்தபடி நான் யூஸைக் குடிக்கத் தொடங்கினேன்.

12..3.2003

மனஓசை - 5 (பக்கம்:33-39)



பிச்சிப்பூ மரத்திலிருந்து ஒரு காகம் வாய் ஓயாது கத்திக் கொண்டே இருந்தது. “அப்பாச்சி.., இது அண்டங்காகமோ.., அரிசிக்காகமோ..?" தவிடு பறக்க அரிசி பிடைத்துக் கொண்டிருந்த அப்பாச்சியைப் பார்த்துக் கேட்டேன்.

பிடைப்பதை நிறுக்திய அப்பாச்சி காகத்தைக் கூர்ந்து நோக்கி மீண்டும் சுளகு அரிசிக்குள் கவனத்தைச் செலுத்தி, அரிசிக்குள் நெல் ஒன்றைக் கண்டு அதை அவசரமாக எடுத்து எறிந்த படியே.. “சொல்லேலுதில்லை மேனை, பார்த்தால் அரிசிக்காகம் போலை இருக்கு. ஆனால் தொண்டையை விரிச்சுக் கத்துறதைப் பார்த்தால் ஏதோ ஒரு மாதிரி இருக்கு" என்றா.

எனக்கு ஆசை. அது அரிசிக்காகமாக இருக்கோணும். ஜேர்மனியில் இருந்து என் கணவரின் கடிதம் வரோணும் என்பதுதான். அதே நேரம் அது அண்டங்காகமாக இருந்து அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக் கூடாதென்ற அங்கலாய்ப்பும் என்னுள் இருந்தது.

நேற்றும் இப்படித்தான் காகம் கத்திக் கொண்டே இருந்தது. ஆனால் அப்பாச்சி அடித்து வைத்துச் சொல்லி விட்டா. அது அரிசிக்காகம் என்றும், யாரோ வரப் போகிறார்கள் என்றும்.

அப்பாச்சி சொன்னது போலவே நேற்று கணேஸ்மாமா வந்தார். கணேஸ்மாமா எனக்கொன்றும் உறவு முறை மாமா இல்லை. ஊரே அவரைக் கூப்பிடுவது கணேஸ்மாமா என்றுதான். அவருக்கும் எங்களுக்கும் நட்பு வந்த கதையே சுவையானது.

வீட்டில் அவரது மனைவி எப்படித்தான் சுவை வகையாகச் சமைத்துப் போட்டாலும் பருத்தித்துறைத் தோசையைச் சுவைக்காமல் அவரால் இருக்க முடிவதில்லையாம். பருத்தித்துறைத் தோசைக்காகவே பொலிகண்டியிலிருந்து சைக்கிளை உழக்கிக் கொண்டு தினமும் பருத்தித்துறை ரவுண் வரை வந்து விடுவாராம்.

என் கணவரும் பருத்தித்துறைத் தோசைக்கு அடிமைதான். பல தடவைகள் நான் சமைத்து வைத்து விட்டுக் காத்திருக்க தோசை சாப்பிட்டு விட்டு வந்து என் கோபத்தைக் கிளறியிருக்கிறார்.

தோசை சுவைத்தவர்களுக்கு இடையிலான பேச்சும் சுவைத்ததோ என்னவோ! ஓடக்கரைத் தோசைக்கும், லாலாக்கடைக் கொத்துரொட்டிக்கும் கூட்டாகவே போகுமளவுக்கு இருவரும் நண்பர்களாகி விட்டார்கள்.

நட்பு வீடு வரை வந்த போதுதான் தேநீர் கிளாசுடன் கணேஸ்மாமாவை முதன்முதலாகச் சந்தித்தேன். படங்களில் வரும் வில்லன் போல் ஒரு மல்லன் தோற்றம். பேச நா எழவில்லை. சிரிப்புக் கூட யதார்த்தமாக வரவில்லை. ஒப்புக்குச் சிரித்து விட்டு உள்ளே ஓடி விட்டேன். பின்னர் “நட்புக்கு வேறு யாரும் கிடைக்கவில்லையா?" என கணவரைக் கடிந்தேன்.

“பொலிகண்டியார் அப்பிடித்தான். அவன் பார்க்கிறதுக்குத்தான் மல்லன். பழகிறதுக்கு நல்லவன்." என்றார் என் கணவர்.

அடுத்த முறை கணேஸ்மாமா வீட்டுக்கு வரும் போது எட்டு எவர்சில்வர் ரம்ளர்களும், ஒரு எவர்சில்வர் றேயும் கொண்டு வந்தார். பொலிகண்டியார் கிளாசில் தேநீர் அருந்துவதில்லையாம். ரம்ளரில்தான் அருந்துவார்களாம்.

நாங்கள் வெள்ளிக்கிழமைகளிலும், விரத நாட்களிலுந்தான் சில்வர் பாத்திரங்களைப் பாவிப்போம் என்பதைச் சொல்ல நினைத்தும் சொல்லாது தவிர்த்தேன்.

கால ஓட்டத்தில் உயர்ந்த, பருத்த, முரட்டுத்தனமான அந்த உருவத்துள் ஒளிந்திருக்கும் நல்ல மனதைக் கண்டு நானும் நட்பாகி விட்டேன்.

தேநீருடன் எமது வீட்டுக்குள் ஆரம்பித்த அந்த நட்பு குடும்ப நட்பானது. கணேஸ்மாமாவின் மனைவி ராணிஅக்காவும் குழந்தை மனம் கொண்டவதான். ´எண்ணெய் பூசி வாரி இழுத்துப் போட்ட பெரிய கொண்டையும், பளபளக்கும் முகமும், பெரிய குங்குமப் பொட்டும், கழுத்து நிறைய நகைகளும் பொலிகண்டியாருக்கே உரிய தனிக்களையாம்´ அம்மா சொன்னா.

ராணிஅக்கா முதன் முதல் எங்கள் வீட்டுக்கு வந்த போது கணேஸ்மாமாவுடன் ஒட்டி ஒட்டிக் கொண்டே நடந்தபடி கள்ளமற்ற சிரிப்புடன் என்னைக் கவர்ந்தா. கையிலுள்ள பெரிய பார்சலை என்னிடம் தந்து “இதுக்குள்ளை புண்ணாக்கு இருக்கு. எல்லாருமாச் சாப்பிடுங்கோ." என்றா.

எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது. நாங்கள் பிண்ணாக்கை ஆட்டுக்குத்தான் வைப்போம். இவ எங்களைச் சாப்பிடச் சொல்கிறா. யோசனையுடன் அம்மாவிடம் கொண்டு போய்க் கொடுத்து “அம்மா, புண்ணாக்காம், கொண்டு வந்திருக்கினம், சாப்பிடட்டாம்." முகத்தையும், வாயையும் சுளித்த படியேதான் சொன்னேன்.

அம்மா சிரித்த படியே “பொலிகண்டியார் எள்ளுப்பாவைத்தான் புண்ணாக்கு எண்டு சொல்லுறவை. சாப்பிட்டுப் பார். அவையளின்ரை எள்ளுப்பாகுவுக்குத் தனி ருசி." என்றா.

பொலிகண்டியும், பருத்தித்துறையிலுள்ள எனது ஆத்தியடியும் கூப்பிடு தூரத்தில்தான் இருக்கின்றன. ஆனால் பேச்சு வழக்கிலும், பழக்க வழக்கங்களிலும் இத்தனை வித்தியாசங்கள் எப்படி வந்தன? மனசு வினாவியது.

அன்று அவர்களுக்கு எங்கள் வீட்டில் மதியச் சாப்பாடு. பின் றப்பில் இரண்டு சேவல்களைக் கட்டித் தூக்கி, துடிப்பதை பெண்கள் யாரும் பார்க்காமல்... மணக்க மணக்க கோழி இறைச்சி. உறைப்பில் மூக்கு நுனி வேர்க்க ஒரு பிடி பிடித்தோம். மச்சம் என்பதால் எங்கள் வழக்கப்படி சில்வர் பாத்திரங்களைத் தவிர்த்து பீங்கான் கோப்பைகளில் சாப்பிட்டு, கிளாசில் தண்ணீர் குடித்தோம்.

அடுத்த முறை கணேஸ்மாமா எங்கள் வீட்டுக்கு வந்த போது, எங்களிடம் சில்வர் கோப்பைகளே இல்லையென நினைத்து பத்து சில்வர் கோப்பைகளும், ஒரு சில்வர் செம்பும் கொண்டு வந்து தந்தார்.

“பொலிகண்டியார் சொம்பிiலைதான் தண்ணி குடிப்பினம்." அப்பாச்சி சொன்னா. பொலிகண்டியாருடனான இந்த அனுபவம் எனக்கு சற்று வித்தியாசமாக ஆனால் சந்தோசமாக இருந்தது.

இந்த சந்தோசங்களில் யார் கண் பட்டதோ? நாமுண்டு, நம் சொந்தமுண்டு, கூடிக் குதூகலிக்க நட்பு உண்டு என்று சந்தோசித்து வாழ்ந்திருந்த எமக்கும், எம் மண்ணுக்கும் வந்ததே கேடு.

ஆர்ப்பரித்த பருத்தித்துறைக் கடலின் அலை ஓசை, சீறி வந்த பீரங்கிக் குண்டுகளுக்குள் அமிழ்ந்து போகத் தொடங்கியது. நெடிதுயர்ந்த பனை உதிர்த்த பனம்பூவை நுகர்ந்தபடி நாம் நடந்த பனங்கூடல் பாதைகளும், அரசு உதிர்த்த இலைகள் சரசரக்க நாம் நடந்த வீதிகளும் சிங்கள இராணுவங்களின் பூட்ஸ் கால்களுக்குள் மிதிபடத் தொடங்கின.

கூடி வாழ்ந்த நாமெல்லாம் கல்லெறி பட்ட பறவைக் கூட்டங்களாய் சிதறத் தொடங்கினோம். பயமும், ஓட்டமும் வாழ்வாகிப் போக சிறகிழந்த பறவைகளின் சோகம் எங்கள் சொந்தமாகத் தொடங்கியது.

திக்கம், பொலிகண்டி மக்கள் எல்லோரும் அகதிகளாயினர். ஓடிய கணேஸ்மாமாவும், ராணிஅக்காவும், பிள்ளைகளும் எம் வீட்டில் அடைக்கலமாயினர். அதுவும் எத்தனை காலம். எம் வீடும் இராணுவத்தின் கண்களுக்குள் வீழ்ந்த போது அவர்கள் இடம்மாறி இடம்மாறி ஓடிக் கொண்டிருந்தார்கள். என் கணவரும் தன்னைக் காக்க வழி தெரியாது நாட்டை விட்டே ஓடி விட்டார்.

அதன் பின் கணேஸ்மாமா, ராணிஅக்கா அவர்களுடனான தொடர்பும் எனக்கு இல்லாது போனது. மீண்டும் கணேஸ்மாமா எமது வீட்டுக்கு வந்த போது, கிரனைட் நிறைந்த துணிப்பையை தோளில் கொழுவியிருந்தார். இடுப்பிலே கைக்கிளிப் சொருகியிருந்தார். தான் பெடியளின் படகோட்டியாகி விட்டதாகச் சொன்னார். ராணி அக்காவும், பிள்ளைகளும் “ஏதோ வாழ்கிறார்கள்" என்றார்.

நேற்றும் துணிப்பையுடன்தான் வந்தார். சைக்கிளை கேற் வாசலில் சாத்தும் போது தபால்காரன் என்றுதான் நினைத்தேன். கேற்றைத் திறந்து படிகளில் ஏறி அவர் வரும் போதுதான் கணேஸ்மாமா என்று கண்டேன். நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையுமாகப் புன்னகையுடன் வந்தார்.

“வாங்கோ கணேஸ்மாமா" வரவேற்றேன்.

“தங்கைச்சி, எப்பிடி இருக்கிறீங்கள்?" என்று தொடங்கியவர், நிறையக் கதைத்தார்.

இடையிலே “புட்டு இருக்கு. சாப்பிடுங்கோவன்." என்றேன்.

“வேண்டாம் தங்கைச்சி. இண்டைக்கு இரவு நான் அங்காலை போறன். அதுதான் சொல்லிப் போட்டுப் போவமெண்டு வந்தனான்." என்றார்.

அதற்கு அர்த்தம், பெடியளை பயிற்சிக்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ படகில் இந்தியாவுக்குக் கூட்டிப் போகப் போகிறார் என்பதுதான்.

“திரும்பி வந்து ராணி, பிள்ளையளையும் அங்காலை கொண்டு போய் விடப் போறன்" என்றார். எனக்கு ஏனோ கவலையாக இருந்தது. குசினிக்கு ஓடிப்போய் அம்மாவிடம் விடயத்தைச் சொன்னேன். அவர் பசியோடு இருக்கிறார் போலவே எனக்குத் தெரிந்தது.

வளவுத் தென்னையில் பிடுங்கிய இளவல் தேங்காய் போட்டு அவித்த பிட்டும், முதல் நாள் பொன்னாத்தையிடம் வாங்கிய தம்பசிட்டித் தோட்டத்துக் கத்தரிக்காயில் வைத்த பிரட்டல் கறியும் காலையில் நாம் சாப்பிட்டது போக எஞ்சி இருந்தன. அம்மா அவசரமாய் முட்டையும் பொரித்துத் தரக் கொடுத்தேன். சுவைத்துச் சாப்பிட்டார்.

தான் காலையில் வேளைக்கே வெளிக்கிட்டு விட்டதால் ஒன்றுமே இன்னும் சாப்பிடவில்லை என்று சாப்பிடும் போதுதான் சொன்னார்.

சாப்பிட்டு முடித்ததும் நினைவாக அவர் தந்த செம்பிலேயே தண்ணீரைக் கொடுத்தேன். விறாந்தையில் நின்ற படியே கையை நீட்டி பிச்சிமரப் பாத்திக்குள் செம்பைச் சரித்து கையைக் கழுவியவர், நிமிர்ந்து அண்ணாந்து செம்புத் தண்ணீரைக் குடிக்கத் தொடங்கினார். ஒரு மிடறு தண்ணீர்தான் உள்ளே போயிருக்கும்.

கேற் திறந்த சத்தத்தைத் தொடர்ந்து தம்பி அவசரமாக ஓடி வந்தான். பாடசாலை போனவன் அரைகுறையில் பதட்டமாக ஓடி வருவது இப்போது சில நாட்களாகவே நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கணேஸ்மாமாவைக் கண்ட அவன் முகத்தில் மெல்லிய சந்தோசம் மலர்ந்து உடனே கலக்கமாகி “கணேஸ்மாமா, சந்தியெல்லாம் ஆமி. வீடு வீடாய்ப் பூந்து பயங்கர செக்கிங் நடக்குது. எங்களையும் ஸ்கூலிலை இருந்து அனுப்பீட்டினம்." என்றான்.

எனக்கு நெஞ்சு திக்கென்றது. கணேஸ்மாமா அப்படியே செம்பை என் கையில் தொப்பென்று போட்டு விட்டு ஓடினார். எங்கள் கேற்றிலிருந்து ஐந்து யார் தூரத்தில் சந்தி. கேற்றோடு ஒட்டியபடி இறங்கி, சைக்கிளில் ஏறி மறுபக்கத்தில் பறந்தார்.

எனக்கு வேர்த்துக் கொட்டியது. அம்மா, அப்பாச்சி எல்லோரும் பதறிப்போய் செய்வதறியாது நின்றார்கள். இதற்குள் கச்சேரியில் வேலை செய்யும் தங்கையும் திரும்பி விட எங்கள் கவலை சென்றிக்கு நிற்கும் மற்றத் தம்பியிடமும் திரும்பியது.

அன்றைய பொழுது எங்களுக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. சென்றிக்கு நின்ற தம்பி மொறிஸ் பற்றியோ, கணேஸ்மாமா பற்றியோ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இரவெல்லாம் பருத்தித்துறைக் கடலில் ஒரே சத்தம். நித்திரையைத் தொலைத்த நிம்மதியற்ற நடு இரவில் கிரனைட் பையுடன் தம்பி வந்து போனான். தம்பிக்கு எதுவும் ஆகவில்லை என்ற நிம்மதியுடன் நடு இரவுக்குப் பின் தூங்கி… எழுந்து விட்டேன்.

வழமை போல் சூரியன் உதிக்க, எல்லாமே நடந்து கொண்டிருந்தன. காகம் விடாது கத்திக் கொண்டே இருந்தது. கலைத்தும் பார்த்தேன். கொப்புக்குக் கொப்பு தாவியதே தவிர, பிச்சிப்பூ மரத்தை விட்டுப் போக மனமின்றி கத்திக் கொண்டு நின்றது.

அம்மா சோறும் வடித்து விட்டா. கறிகளும் ஓரளவு முடிந்து விட்டன. தபாற்காரன் இன்னுமா வரவில்லை என்று நான் கேற்றைப் பார்த்த போது யாரோ வருவது தெரிந்தது.

அட தேவியக்கா! கணேஸ்மாமாவின் உறவுக்காரப் பெண். அவர் வீட்டுக்குப் பக்கத்து வீடுதான் அவவின் வீடு.

“வாங்கோ தேவியக்கா!" வரவேற்ற போதுதான் பார்த்தேன்.

என்ன கோலம் அது! பொட்டு இல்லாமல், நகைகள் இல்லாமல், எண்ணெய் பூசி வாரி இழுத்துப் போட்ட கொண்டை இல்லாமல், பறந்த தலையுடன் மூளியாகத் தேவி அக்கா.

“தேவிஅக்கா, என்ன..! என்ன இது கோலம்?" வினாவினேன்.

“எல்லாம் முடிஞ்சிட்டுது தங்கைச்சி" என்றா, பதறியபடி. எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

தேவிஅக்கா திடீரென்று அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறியழத் தொடங்கி விட்டா.

அழுகையினூடே... “கணேஸ்மாமா நேற்றுப் போன படகு, சிறீலங்கா கடற்படையின்ரை தாக்குதலுக்கு உள்ளாகி, கணேஸ்மாமாவும் அவரோடை போன பதினேழு பேரும் வீரச்சாவு அடைஞ்சிட்டினம்" என்றா.

உடலங்கள் கரையில் ஒதுங்கியதைச் சொல்லும் போது அவவிடம் இருந்து அழுகை பீறிட்டது.

காலம் - 14.4.1985

12.4.2000

மனஓசை - 6 (பக்கம்:40-46)



காலைப் பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய் ஜேர்மனி அழகாகத்தான் இருந்தது. சிக்னலுக்காக காரில் காத்துக் கொண்டிருந்த உமாவின் மனது மட்டும் அந்தக் காலைக்குச் சிறிதும் பொருந்தாது புழுங்கிக் கொண்டிருந்தது. கோபத்தில் தகித்தது என்று கூடச் சொல்லலாம்.

எப்படி அவனால் முடிந்தது! எப்படித் துணிந்து சொன்னான்? காலையில் சந்துரு சொன்ன செய்தியில் கொதிப்படைந்த அவள் கோபத்தை அக்சிலேட்டரில் காட்டினாள்.

சந்துரு வேறு யாருமல்ல. அவள் கணவன்தான். 15வருட தாம்பத்திய வாழ்க்கை. அன்புக்குச் சின்னமாக நிலாவினி, அவர்களின் செல்ல மகள்.

நேற்று இரவுவரை அன்பாகத்தானே இருந்தான்! நடித்தானா..? காலையில் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுவான் என அவள் கனவில் கூட நினைக்கவில்லை.

“உமா, உம்மோடை நான் கொஞ்சம் கதைக்கோணும்." காலையில் தேநீருடன் சென்ற உமா, படுக்கையிலிருந்த அவனை எழுப்பிய போது குழைந்தான்.
அவனது வார்த்தையின் பரிவில் நெகிழ்ந்து, அப்படியே அவனருகில் கட்டில் நுனியில் அமர்ந்து, அவன் மார்பின் சுருண்ட கேசங்களைக் கோதிய படி “சொல்லுங்கோ" என்றாள் மிக அன்பாக.

“நீர், அழக் கூடாது."

“சும்மா சொல்லுங்கோ."

சில கணங்கள் நிதானித்து “உமா, நான் இண்டையிலையிருந்து முன்சனில் தங்கப் போறன்."

“ஏன்..?" மிகவும் திடுக்கிட்டவளாய்.

“ஒவ்வொரு நாளும் பயணம் செய்யிறது சரியான கஸ்டமாயிருக்கு."

“இவ்வளவு நாளும் செய்தனிங்கள்தானே! இப்ப மட்டும் என்ன வந்தது?"

“பார்த்தீரே! இப்பவே ரென்சன் ஆகிறீர். நான் இன்னும் விசயத்துக்கே வரேல்லை."

“......." சந்துருவின் புதிருக்கு மௌனமாக தனக்குள் விடை தேடினாள்.

“உமா, உமக்குத் தெரியுந்தானே என்னோடை அந்தச் சக்கி எண்ட செக்கொஸ்லாவியப் பொம்பிளை வேலை செய்யிறது?"

“ஓமோம். புருசன்காரன் விட்டிட்டுப் போயிட்டான் எண்டு சொன்னனிங்கள். அவள்தானே, பாவம்... அவளின்ரை மகன் எப்பிடி இருக்கிறான்?"

“அது வந்து... உமா, அவளின்ரை மகன் சரியான சுகமில்லாமல் இருக்கிறான். அவளுக்கு என்ரை உதவி தேவைப் படுது. அதுதான் என்னை வந்து..."

“வந்து..."

“தன்னோடை இருக்கச் சொல்லிக் கேட்கிறாள்."
“அதுக்கு..!"

“அதுதான் அவளோடை போய் கொஞ்ச நாளைக்கு இருப்பமெண்டு தீர்மானிச்சிருக்கிறன்."

விக்கித்துப் போன உமா விருட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து விட்டாள். ஒரு கணம் துடிக்க மறந்த அவளது இதயம் மீண்டும் அவசரமாகத் துடிக்கத் தொடங்கியது. வார்த்தைகள் வெளி வர மறுத்தன.

“யோசிக்காதையும். நான் உம்மட்டையும் வந்து வந்து போவன். உமக்கென்ன குறை இஞ்சை இருக்கு. ஊரிலை போலை அடுப்பை ஊதி... உடுப்பைக் கல்லிலை அடிச்சுத் தோய்ச்சு... இப்பிடி ஒரு கஸ்டமும் இல்லைத்தானே... எல்லா வசதியளும் இருக்குத்தானே."

“இதெல்லாம் நீங்களாகுமோ? நீங்கள் அவளை விரும்பிறிங்களோ?"

“இல்லை... இல்லை... அவள்தான் என்னை உயிருக்குயிராய் விரும்புறாள். நான் இல்லையெண்டால் அவளுக்கு ஒரு துணையும் இல்லை."

“நானும் அம்மா, அப்பா, சகோதரங்களையெல்லாம் விட்டிட்டு வந்திருக்கிறன். இந்தப் பெரிய ஜேர்மனியிலை உங்களையும், நிலாவினியையும் விட்டால் எனக்கும் வேறை ஆர் இருக்கினம்?" இப்போது அவளிடம் அழுகை பொங்கியது.

“ஏன் இப்ப அழூறீர்? நான் உம்மட்டையும் வருவன்தானே. நீர் படிச்ச பொம்பிளை, இதை அனுசரிச்சுப் போகோணும். ஊருலகத்திலை நடக்காத விசயமே இது!"

“நோ... என்னாலை ஒரு நாளும் இதுக்கு ஒப்புக் கொள்ளேலாது."

உமா கோபமாக முன்னேறி மூர்க்கத்தனமாக அவனது மார்பில் குத்தினாள். நுள்ளினாள். முகமெல்லாம் பிறாண்டினாள். அவன் அவளைத் தள்ளி விட்டு “பொம்பிளை மாதிரி நடந்து
கொள்ளும்." என்று கத்தினான்.

அவனது இடது கன்னத்தில் இவளது நகம் பட்டு இரத்தம் துளிர்த்து நின்றது. வலியோடு அதைத் தடவியவன் கையில் பட்ட இரத்தத்தை அவளிடம் காட்டி, “இங்கை பாரும் எனக்கு இரத்தக் காயம் வர்ற அளவுக்கு பிறாண்டியிருக்கிறீர். இதுக்கு மேலை என்னைத் தொட்டீரோ… நடக்கிறது வேறை. நானும் சும்மா இருக்க மாட்டன். என்ரை முடிவு முடிவாகீட்டுது. ஒத்துப் போனீர் எண்டால் உமக்கும் நல்லது. எனக்கும் நல்லது. நிலாவினிக்கும் நல்லது. இல்லாட்டி நீர்தான் கஸ்டப் படுவீர். நிலாவினிக்கு இதொண்டும் தெரியத் தேவையில்லை."

உமாவுக்கு மலைப்பாக இருந்தது. தனது மூர்க்கத் தனமான செய்கையில் எரிச்சலாகவும், வெட்கமாகவும் இருந்தது. என்னவெல்லாம் இவன் சொல்கிறான் என்று கலக்கமாகவும் இருந்தது. சக்கியைப் பற்றி சந்துரு ஏற்கெனவே சொல்லியிருக்கிறான். அவளுக்காக உமாவும் பரிதாபப் பட்டிருக்கிறாள். அதுக்காக சந்துருவே போய் சக்கிக்கு வாழ்க்கை கொடுப்பதென்பது எந்த வகையில் நியாயமானது? இவன் சொல்வதெல்லாம் உண்மைதானா அல்லது தன்னைச் சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறானா, என்று குழம்பினாள்.

நிலாவினியும் வீட்டில் இல்லை. பாடசாலையோடு ´ரூர்´ என்று போய் விட்டாள். திரும்பி வர இன்னும் எட்டு நாட்களாகும்.

“நீங்கள், சும்மா பகிடிக்குத்தானே சொல்லுறிங்கள்..?" ஒரு நப்பாசையோடு கேட்டாள்.

“இல்லை உமா. சீரியஸாத்தான் சொல்லுறன். எனக்கு உம்மையும் விருப்பந்தான். ஆனால் இப்ப சக்கிக்கு என்ரை உதவி தேவை."

இயலாமை என்ற ஒன்று இப்போ உமாவை ஆக்கிரமித்தது. “ஓ..." வென்று குழறினாள்.

“ஏனப்பா, இப்பிடிக் குழறுறீர்? பக்கத்து வீட்டுச் சனத்துக்கெல்லாம் கேட்கப் போகுது. என்ன நினைக்குங்குள். ஊரெண்டு நினைச்சீரே. ஏதோ மூண்டாந்தரக் குடும்பங்கள் மாதிரிக் கத்திறீர்!"

“ஆர் என்ன நினைச்சாலும் எனக்குப் பரவாயில்லை. நீங்கள் செய்யத் துணிஞ்சது மட்டும் முதலாந்தரமா இருக்கோ?"

வார்த்தைகள் மிகச் சூடாக, அநாகரிகமாக நீண்டு... ஒன்றோடொன்று மோதி.. உமாவுக்கு, சந்துரு முரட்டுத்தனமாக அடிக்க, உமா தன்னைக் காத்துக் கொள்ள எண்ணி, இழுத்துப் பறித்து கதவில் இருந்த திறப்பையும் இழுத்து எடுத்துக் கொண்டு வெளியில் ஓடினாள்.

கொஞ்ச நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றவள், காரையும் எடுத்துக் கொண்டு இலக்குத் தெரியாமல் ஓடி.. சிவப்பு லைற்றில் தரித்து நின்றாள். சிக்னல் பச்சையாக, பின்னிருந்த காரோட்டி கோன் அடித்து “தூங்குகிறாயா?" என்று சைகை காட்டிச் சினக்க, சிந்தனையிலிருந்து தற்காலிகமாக விடுபட்டு, மீண்டும் பலம் கொண்ட மட்டும் அக்சிலேட்டரை அழுத்தி, சீறிக் கொண்டு பறந்தாள்.

ஒரு பாடசாலையின் முன் ஒரு குழந்தை வீதியைக் கடப்பதைக் கடைசி செக்கனில் கண்டு அவசரமாக பிறேக்கை அழுத்தினாள். ´கடவுளே..! நான் என்ன செய்கிறேன். அந்தப் பிள்ளை அடிபட்டிருந்தால்..!´ முனகினாள். அப்படியே போனவள் வழியில் உள்ள மைக்கல் தேவாலயத்தின் அருகில், காரை நிறுத்தி விட்டு தேவாலயத்துக்கான படிகளில் ஏறி ஓரிடத்தில் அமர்ந்தாள். அடக்க முடியாமல் அழுதாள். திடீரென்று நிர்க்கதியாகப் போய் விட்டது போல உணர்ந்தாள். பைத்தியம் பிடித்தவள் போல அரற்றினாள். யோசிக்க முடியாமல் மூளைப்பகுதி நொந்தது. கண்களின் முன்னே மெல்லிய புகைமண்டலம் போல எதுவோ மறைத்தது. எதையும் சரியாகச் சிந்திக்க முடியாமல் திண்டாடினாள்.

சந்துருவுக்கும், அவளுக்கும் இடையில் அடிக்கடி சின்னச் சின்னச் சண்டைகள், சச்சரவுகள் என்று வரத் தவறுவதில்லைத்தான். சண்டைகள், கருத்து வேறுபாடுகள் இல்லாத குடும்பங்களா? சில சமயங்களில் சந்துருவின் மேல் சந்தேகங்களும் வந்து பொங்கியிருக்கிறாள்தான். அவையும் சந்துரு கூறும் பொய்ச் சமாதானங்களில் பொங்கிய வேகத்தில் அடங்கியும் போயிருக்கின்றன. ஆனால் இந்தளவுக்கு தன்னை அப்படியே விட்டு விட்டுப் போய் இன்னொருத்தியுடன் வாழத் துணிந்த அவன் துணிவும், அதை மிகச் சாதாரண விடயம் போல அவள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவன் வேண்டுகோளும், அவளை நிலைகுலைத்து விட்டன. தன்னவன் இன்னொருத்திக்குச் சொந்தம் என்று தெரிந்தால் எந்தப் பெண்ணால்தான் நிலைகுலையாமல் இருக்க முடியும்.

தேவாலயம் உயர்ந்து கம்பீரமாக நின்றது. உல்லாசப் பிரயாணிகள் உள்ளே சென்று அதன் உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தார்கள். சிலர் உச்சியில் நின்று நகரின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். இவளுக்கும் ஒரு விபரீத ஆசை வந்தது. தானும் போய் ஏறினாள். அதிக எண்ணிக்கையான வளைந்து வளைந்து செல்லும் படிகளில், ஒவ்வொன்றாக ஏறும் போது மனச்சோர்வுடன் உடற் சோர்வும் சேர்ந்து கால்கள் தடுமாறின. தலை சுற்றியது. ஆனாலும் ஏறி விட்டாள். மூச்சு வாங்கியது. மேலே நின்று பார்த்தாள். எதுவும் தெளிவில்லாமல் ஏதோ ஒரு மெல்லிய புகைமண்டலம் முன்னே தெரிந்தது. பச்சை மரங்கள் கூட புகை போர்த்தி வெண்மை பேர்ந்த பச்சைகளாகத் தெரிந்தன. யாரும் எதிர் பார்க்காத ஒரு கணத்தில் எம்பிக் குதித்தாள்.

அங்கு நின்ற எல்லோருமே அதிர்ச்சியில் அவலக்குரல் எழுப்ப, அவள் இரத்தமும், சதையுமாய் தேவாலயத்தின் படிகளில் சிதறினாள். ஒரு கணம் ஸ்தம்பித்து நின்ற அந்த இடத்தை பொலிஸ் வாகனங்களும், அம்புலன்ஸ் வண்டியும் அல்லோல கல்லோலப் படுத்தின. சிவப்பும், வெள்ளையும் கலந்த தடுப்பு நாடாக்கள் கட்டப்பட்டு அந்த வீதியிலான போக்குவரத்துக்களும், மக்கள் நடமாட்டமும் தடைப்படுத்தப் பட்டது.

இது மூன்றாவது சாவு. முதலில் 14வயது நிரம்பிய ஒரு ஜேர்மனிய மாணவி. அடுத்து ஒரு இந்தியத் தமிழ்ப்பெண். இப்போ இலங்கைத் தமிழ்ப்பெண். ´தேவாலய உச்சிக்கு இனி யாருமே ஏற முடியாது´ என்ற அறிவித்தலோடு தேவாலயத்தினுள்ளே இருந்த உச்சிக்கு ஏறும் படிகளை மறித்து கேற் போட்டு, பெரிய மாங்காய்ப்பூட்டு போடப் பட்டது.

விசாரணைகள் தொடர்ந்து... சாக்கில் கட்டப் பட்ட உமாவின் உடல் என்று சொல்லப் பட்ட சதைப்பிண்டம் அடக்கம் செய்யப்பட்டு இரண்டு கிழமைகள் ஓடி விட்டன. சந்துருவைத் துக்கம் விசாரிக்க உறவினர்கள் என்ற பெயரில் சிலரும், நண்பர்களும் வந்து வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

சந்துரு சோகமாய், தாடியை மழிக்காமல் தேவதாஸ் வேடம் போட்டிருந்தான். யார் வீட்டுக்கு வந்தாலும் ஒரு சோகப் பாட்டுள்ள இசைத்தட்டைச் சுழல விட்டு தன் சோகத்தை இன்னும் பலமாக மற்றவர்களுக்குக் காட்டினான்.

அழுவாரைப் போல இருந்து “அவ பாருங்கோ சரியான நல்லவ. ஆனால் ஜேர்மனியிலை இருக்கிற எல்லாப் பொம்பிளையளுக்கும் உள்ள அதே பிரச்சனைதான் அவவுக்கும். தனிமைதான் எல்லாத்துக்கும் காரணம். தாய் தகப்பன் ஊரிலை. சொந்தம் எண்டு சொல்லிக் கொள்ள ஒருவரும் பக்கத்திலை இல்லை. நானும் வேலையோடை. மகள் நிலாவினி பள்ளிக்கூடம், ரூர் எண்டு திரிவாள். இவ நாள் முழுக்க வீட்டிலை தனியத்தானே. அதுதான் அவவுக்கு சரியான மனஅழுத்தம். எப்பவும் சும்மா இருந்து அழுறதும்..." அலுக்காமல் சலிக்காமல் சொல்லிக் கொண்டே இருந்தான்.

7.3.2005

மனஓசை - 7 (பக்கம்:47-52)



இன்று புகையிரதத்தில்தான் பயணிக்க வேண்டுமென நேற்றிரவு முடிவான பொழுதே எனக்குள் மெல்லிய சந்தோச அலை அடிக்கத் தொடங்கி விட்டது.
எனது கணவர் நிகழ்ச்சி நடை பெறும் மண்டபத்துக்கு வேளைக்கே போய் முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கிறதாம். அதனால் அதிகாலையிலேயே தான் காரில் போய் விடுவதாயும் என்னை பின்னர் புகையிரதத்தில் வரும் படியும் கேட்டுக் கொண்டார்.

எப்போதும் இந்தக் காரில்தானே..! அதுவும் அதிவேக வீதியில் அவசரமாய் பயணிப்பது. நீண்ட பொழுதுகளின் பின் புகையிரதத்தில் போக இப்படியொரு வாய்ப்பு என்றதும் உண்மையிலேயே எனக்கு சந்தோசந்தான்.

எனக்குத் தேவையான எல்லாவற்றையும் காருக்குள்ளேயே அடைத்து அனுப்பி விட்டேன். சிறிய கைப்பையுடன் ஒரு கொப்பியும், பேனையுமாக ஏறிய போது புகையிரதத்தினுள் யன்னலோரமாக இருக்கை கிடைத்தது. மனசுக்குள் சந்தோசம் துள்ளியது.

வெயிலின் முறைப்பும் இல்லாமல், குளிரின் குத்தலும் இல்லாமல் காலைச் சிலிர்ப்போடு இயற்கை கண்களை இதமாக வருடியது. காற்று யன்னல் வழி மேனியைத் தழுவியது. இயற்கையை ரசித்த படி மனசு ஏகாந்தத்தில் சுகிக்கத் தொடங்கியது. புகையிரதம் தாலாட்டியது.

வெளி அழகாய்... மரங்கள் எல்லாம் அவசரமாய் நகர்ந்து கொண்டிருந்தன. குருவிகள் கெந்துவதும், ஏதோ நினைத்து விட்டு மீண்டும் பறந்து மரங்களில் குந்துவதுமாய் இருந்தன. கவிஞர் சோலைக்கிளி இதைக் கண்டால் கட்டாயம் ஒரு குருவிக் கவிதை புனைந்திருப்பார். எனக்கும் ஏதேதோ மனசுக்குள் பூத்தன. கவிதையாய் வடிக்க வார்த்தைகள்தான் வர மறுத்தன. ´இனிது இனிது ஏகாந்தம் இனிது´ ஒளவைப் பாட்டியின் வரிகளின் அர்த்தம் புரிந்தது.

திடீரென்று, புரியாத ஏதோ ஒரு பாசையில் யாரோ கதைக்கும் பெரிய சத்தம் கேட்டது. ம்... புகையிரதம் நின்றது கூடத் தெரியாமல்... நான். அதற்கிடையில் அடுத்த தரிப்பு நிலையம் வந்து விட்டது. ஏறுவோரும், இறங்கியோரும் தத்தமது திசைகளில் வெளியில் விரைய.. ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த சில பெண்களும், ஒரு ஆடவனும் தமது உயர்ந்த குரல்கள் மற்றவர்களைத் தொந்தரவு செய்யுமே என்ற எந்த வித பிரக்ஞையுமின்றி அடிக்குரலில் உரத்துப் பேசிய படி நானிருந்த பெட்டியினுள் ஏறினார்கள்.

நான் மீண்டும் யன்னல் வழி பார்வையைச் செலுத்தி இயற்கையுடன் ஐக்கியமாகினேன். மனசுக்குள் இனிமையான கவிதையொன்று பிரசவமாவது போன்றதொரு மகிழ்வான உணர்வு. சோதியா, சோலைக்கிளி..., போன்றோரின் கவிதைகள் இப்படியான சந்தர்ப்பங்களில்தான் பிரசவித்தனவோ!

விஜயராகவனின் நுங்குக் கவிதை அடிக்கடி மனசுக்குள் எட்டிப் பார்த்தது. அவருக்குக் கவிதையை அழகாக வாசிக்கவும் தெரியும். ஒரு தரம் அவரது நுங்குக் கவிதையை ஐபிசி-தமிழ் வானொலியில் கேட்டு விட்டு இரவெல்லாம் ஒரே நுங்குக் கனவு. பாட்டா சீக்காய்களை எல்லாம் ஒரு பக்கமாய் ஒதுக்கி விட்டு, தன் வீட்டு முன்றலில் நின்ற ஒற்றைப் பனையிலிருந்து கந்தசாமியைக் கொண்டு இறக்குவித்த பருவ நுங்கைப் பக்குவமாய் சீவி பெருவிரலால் குத்தி இழுத்து பனைமுகிழில் விட்டு... ம்...ம்... நாக்கில் சுவை நரம்புகள் சுரந்து...

பக்கத்தில் அடிடாஸ் ஆஃப்ரர்சேவின் வாசனை கமகமக்க “ஹலோ" என்றது ஒரு குரல். நுங்கை அப்படியே அந்தரத்தில் விட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தேன். சற்று முன்னர் வந்த ஆபிரிக்கப் பிரஜைகளில் ஒருவனான அந்த ஆடவன்தான் என் அருகில் அமர்ந்தான். இவனோடு கூட வந்த பெண்களுக்கருகில் இவனுக்கு இடம் கிடைக்கவில்லைப் போலும். பதிலுக்கு
“ஹலோ" சொல்லி விட்டு மீண்டும் யன்னலினூடு நான் இயற்கையிடம் சென்றேன்.

“மன்னிக்கோணும், உனக்கு என்ன பெயர் என்று சொல்லுவியோ..?" ஆபிரிக்கன் ஜேர்மனிய மொழியில் வினவினான்.

திரும்பி “கோகிலா" என்றேன்.

“ம்... கோ..லா.. நல்ல பெயர்."

எனது பெயரை அவன் அப்படித்தான் உச்சரித்தான்.

“நன்றி" சொல்லி விட்டு அவனது பெயரைக் கேட்காமலே மீண்டும் யன்னல் வழி வெளியோடு ஐக்கியமானேன்.

“கோ...லா...! எங்கை போறாய், ஸ்ருட்கார்ட்டுக்கோ?"

“ம்... "

“அங்கை வேலை செய்யிறியோ? "

“இல்லை. எங்கடை நாட்டுக் கலைநிகழ்ச்சி ஒன்றுக்குப் போறன்."

“உன்னை எனக்குத் தெரியும். நீ உன்ரை தங்கைச்சியை சங்கீத வகுப்புக்குக் கூட்டிக் கொண்டு வாற பொழுது நான் காணுறனான்."

“அப்பிடியோ..! எனக்கு உன்னைத் தெரியாது. நான் உன்னை ஒரு நாளும் கண்டதில்லை. அதுபோக அது என்ரை தங்கைச்சி இல்லை… மகள்."

“நான் நம்ப மாட்டன். நீ இவ்வளவு இளமையா இருக்கிறாய். ஆசியப் பொம்பிளையள் எல்லாரும் இப்பிடித்தான் அழகாக இருப்பினையோ?"

ம்... தொடங்கி விட்டான். ´இந்த ஆண்களே இப்படித்தானோ! தமது மனைவியரல்லாத வேறு எந்தப் பெண்ணைக் கண்டாலும்… நீ அழகு.., நீ இளமை… என்று´ சின்னதான எரிச்சல் மனசுக்குள் தோன்றியது.

மீண்டும் யன்னல் வழி வெளியே லயிக்க முனைந்த போதெல்லாம்.. “கோ..லா..! கோ..லா..!" என்று அழைத்து எனக்குக் கோபமூட்டினான். ஒவ்வொரு தரிப்பிலும் இறங்குவோரும், ஏறுவோருமாகப் பயணிகள் மாறிக் கொண்டிருக்க இவன் மட்டும் என்னருகில் என் தனிமையைக் குலைக்க என்றே இருந்தான். என் சந்தோசத்தை மெதுமெதுவாகச் சூறையாடினான்.

“கோ...லா, என்னோடை ஒரு நாளைக்கு கோப்பி குடிக்க வருவியோ..?"

ம்.. ஜேர்மனியில் ஒருவன் ஒரு பெண்ணை இப்படிக் கேட்கிறான் என்றால், அதன் அர்த்தம் வெறுமனே கோப்பி குடிப்பதற்கான அழைப்பல்ல. அதற்கும் மேலான சம்மதம் தேடல் அது. அருகமர்ந்து அரை மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்கிடையில் அவன் தேடல்.. அவனைச் சொல்லிக் குற்றமில்லை. இது ஜேர்மனிய நாகரிகங்களில் ஒன்று.

“இல்லை. எனக்கு நேரமில்லை." வார்த்தைகளோடு எரிச்சலும் ஒட்டியபடி வெளியில் கொட்டியது.

“பிளீஸ்... ஒரு நாளைக்கு. ஒரே ஒரு நாளைக்கு..."

“இல்லை, எனக்கு இவைகளுக்கு நேரமுமில்லை. இவைகளில் ஆர்வமுமில்லை. நான் திருமணமானவள். எனக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள்."

“அதனால் என்ன..? நானும் திருமணமானவன்தான்."

“அப்பிடியெண்டால், உன்ரை மனைவியோடை போய், கோப்பியைக் குடியன்." சொல்ல வந்த வார்த்தைகளைச் சொல்லாமல் விழுங்கிக் கொண்டேன்.

அவனது கரைச்சல் தொடர்ந்தது. கெஞ்சிக் கேட்டான். பொதுவாக ஜேர்மனியர்கள் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள். ´எனக்கு நேரமில்லை´ என்று ஒரு தரம் சொன்னால் போதும். அப்படியே ஒதுங்கி விடுவார்கள். நாளாந்தம் சந்திப்பவர்களாக இருந்தால் அந்த எண்ணத்தை அப்படியே விட்டு விட்டு மீண்டும் நட்பாகப் பழகத் தொடங்கி விடுவார்கள்.

இவன் ஆபிரிக்க நாட்டவன் என்பதாலோ என்னவோ எனக்கு விருப்பமில்லையென்று சொன்ன பின்னும் “தொலைபேசி இலக்கத்தைத் தாறியோ..? முகவரியைத் தாறியோ.." என்று கரைச்சல் படுத்திக் கொண்டே இருந்தான்.

இயற்கையோடு நான் ஒன்றும் போதெல்லாம் என்னைக் குழப்புவதிலேயே குறியாக இருந்தான். அவனைத் திசை திருப்ப எண்ணி, வெளியிலே தாயின் கையைப் பிடித்த படி செல்ல நடை போடும் ஒரு குழந்தையைக் காட்டி “அந்தக் குழந்தையைப் பார்த்தியா? எவ்வளவு அழகாக இருக்கிறாள்?" என்றேன். உண்மையிலேயே அந்தக் குழந்தை துறுதுறுத்த கண்களுடன் துடிப்பாய் தெரிந்தாள். கன்னத்தைக் கிள்ளிப் பார்க்க வேண்டும் போல ஆசை வந்தது. ஆனால் அவனால் அக் குழந்தையிடம் லயிக்க முடியவில்லை. என்னைச் சம்மதிக்க வைப்பதிலேயே மும்முரமாக இருந்தான்.

எனது இன்றைய தனித்த ரெயில் பயணத்தில், ஏகாந்தமாய் இருக்கலாம் என்ற என் இனிமையான நினைப்பு தொலைந்து வெகு நேரமாகியிருந்தது. ´இதற்கு மேலும் தாங்காது வேறு எங்காவது போய் இரு.´ என்று மனசு சொல்லியது. எரிச்சலோடு எழுந்து பார்த்தேன். எல்லா இருக்கைகளுமே நிரம்பி வழிந்தன. பரவாயில்லை, ஏதாவதொரு மூலையில் போய் நிற்பது உத்தமமெனத் தீர்மானித்த படி எனது கைப்பையையும், கொப்பியையும், பேனையையும் எடுத்துக் கொண்டு அவனைத் தாண்டி நடந்தேன்.

“கோ..லா, எங்கை போறாய்..?"

“அங்காலை போய் இருக்கப் போறன்."

“ஏன்..?"

நான் பதில் சொல்லவில்லை. விரைந்து நடந்தேன்.

இருப்பதற்கு இடம் கிடைக்கவில்லை. வெளிச் செல்வதற்கான கதவோடு அண்டிய ஒரு மூலையில் போய் நின்று எனது கொப்பியைப் பார்த்தேன். அது எதுவுமே எழுதப் படாமல் வெறுமையாக இருந்தது.

நேரத்தைப் பார்த்தேன். ம்.. இன்னும் சில நிமிடங்களில் ஸ்ருட்கார்ட் வந்து விடும். ஏமாற்றத்தின் நடுவே ஒரு நிம்மதிப் பெருமூச்சு.

10.6.2003

மனஓசை - 8 (பக்கம்:53-57)



அவளை சோகம் பிடுங்கித் தின்றது. அழவேண்டும் போல இருந்தது. சின்னச் சீரகத்தைப் பலகையில் போட்டு அரைக்கும் போது இரண்டு சொட்டுக் கண்ணீர்த்துளிகள் சின்னச் சீரகத்துள் விழுந்தன. அவள் குலுங்கி அழவில்லை. கண்ணீர் தரைதாரையாக ஓடவில்லை. இரண்டே இரண்டு சொட்டுக் கண்ணீர்தான். அந்தக் கண்ணீரில் ஒரு கடலளவு சோகம் நிறைந்திருந்தது.

அவளுக்கு அவள் மேலேயே பச்சாத்தாபம் ஏற்பட்டது. கண்ணுக்குத் தெரியாத விலங்கொன்று தன்னை இறுக்குவதை உணர்ந்தாள். கண்ணுக்குத் தெரியும் விலங்கென்றாலும் உடைந்தெறிந்து விட்டு ஓடிவிடலாம். எங்கே உடைப்பது, எங்கே ஓடுவது, என்று தெரியாத பயமும் குழப்பமும் அவளுள்.

ஜேர்மனிக்கு வந்து மூன்று மாதங்களாகியும் இந்த வீட்டை விட்டு அவள் எங்கும் செல்லவில்லை. அவள் சென்றிருப்பாள். மரியதாஸ்தான் அவளை எங்குமே அழைத்துச் செல்லவில்லை.

குசினி யன்னலினூடே வெளியிலே தெரிந்த எல்லா மனிதர்களுமே சந்தோசமாகத் திரிவது போலவும், தான் மட்டும் துன்ப வெள்ளத்துள் அமிழ்ந்து போனது போலவும் அவளுக்கு இருந்தது.

இப்படியெல்லாhம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் அவள் தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த, ஊரான தெல்லிப்பளையை விட்டு இங்கு ஜேர்மனி வரை வந்திருக்கவே மாட்டாள்.

வெளிநாட்டு மாப்பிள்ளை என்று மணம் பேசி வந்த போது அவளை விட அவள் அப்பா அரிநாயகம்தான் பெரிதும் சந்தோசப் பட்டார். ஆமி, ஷெல் என்ற பயங்கர நிலையிலிருந்து மகளுக்காவது ஒரு விடுதலையும், அதே நேரம் ஒரு நல்ல வாழ்க்கையும் அமையப் போகிறதென்ற நம்பிக்கையும், சந்தோசமும் அவரை உசார் படுத்த காலங்காலமாய் அவர்களுக்கு என்றிருந்த அந்த நிலத்தையும், அந்தக் குடிலையும் விற்று அவளை வெளிநாட்டுக்கு அனுப்பவும் துணிந்தார்.

“வேண்டாம் அப்பா, எங்கடை வீடு ஒரு குடில் எண்டாலும் அம்மா வளைய வந்த குடில். இதை வித்துத்தான் எனக்கு ஒரு வாழ்க்கை அமையோணும் எண்டால், எனக்கு அப்பிடியொரு வாழ்க்கை வேண்டாம் அப்பா" கலங்கித் தடுத்தாள் அவள்.

ஒரு கணம் நோய்வாய்ப் பட்டு இறந்து போய் விட்ட மனைவியையும், அவளின்றித் தனித்த வாழ்வையும் நினைத்துக் கலங்கிய அரியநாயகம் “இஞ்சை பார் பிள்ளை. அம்மாவும் இல்லாமல் உன்னையும், தம்பியையும் இந்த நாட்டிலை வைச்சு வளர்க்கிறதுக்கு நான் படுற பாடு கொஞ்சமில்லை. எப்ப ஆமி வருவானோ, எப்ப ஷெல் வந்து விழுமோ, எப்ப புக்காரா குண்டு பொழியுமோ, எண்டு எந்த நேரமும் என்ரை நெஞ்சு பதைச்ச படியேதான் கிடக்குது. வந்த வரனை வேண்டாமெண்டு சொல்லாமல் நீ போயிடு பிள்ளை. உனக்கொரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிட்டுது எண்டால், நீ பிறகு உன்ரை தம்பியையும் அங்கை கூப்பிட்டு வாழ வைக்க மாட்டியே? உங்கள் இரண்டு பேரையும் ஒரு பாதுகாப்பான இடத்திலை விட்டிட்டன் எண்டால், நான் பிறகு அம்மா போன இடத்துக்கே நிம்மதியாப் போய்ச் சேர்ந்திடுவன்" என்றார்.

அப்பா அரியநாயகத்தின் யதார்த்தமான பேச்சு அவளை மேற்கொண்டு எதுவும் பேச முடியாமற் தடுத்து விட்டது. மௌனம் சம்மதமாக, வாழ்ந்த குடிலும் விற்கப் பட்டு திருமணம் நிட்சயமானது. மனம், குணம்… என்று எதுவுமே தெரியாமல், வெறுமனே புகைப்படத்தைப் பார்த்து விட்டு ஜேர்மனியில் வாழும் மரியதாசுக்கு மனைவியாக அவள் தயாரானாள்.

விசாவுக்காகத் தாண்டிக்குளம் தாண்டி கொழும்பு வந்தவள் மீண்டும் தெல்லிப்பளை போவதில் உள்ள சிரமத்தை நினைத்து கொழும்பிலேயே தங்கி விட்டாள். கொழும்பில் இருந்த அந்த ஏழு மாதங்களும் மரியதாஸ் அவளைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவதும், இவள் கடிதங்கள் போடுவதும் என்று ஒரு இனிமையான தொடர்பு அவர்களைக் காதலர்கள் ஆக்கியது. எட்டாம் மாதம் ஸ்பொன்சர் எல்லாம் சரி வந்து மரியதாசின் சொற்படி அவள் தன் சொந்தச் செலவிலேயே ரிக்கற் எடுத்து விமானம் ஏறினாள்.

அப்பா, தம்பி இருவரையும் பிரிந்த சோகம் அவளை வாட்டினாலும், காதல் சிறகை விரித்தபடிதான் வானில் பறந்து ஜேர்மனி வந்து சேர்ந்தாள்.

ஃபிராங்போர்ட் விமான நிலையத்தில் அவளுக்காக நண்பர்களுடன் காத்திருந்த மரியதாஸ் அவளையும், அவள் மரியதாஸையும் இனம் கண்ட போது புகைப்படத்தில் பார்த்த மரியதாசுக்;கும், நேரே பார்க்கும் மரியதாசுக்கும் இடையே நிறம், அழகு, வயசுத் தோற்றம் எல்லாவற்றிலுமே சற்று வித்தியாசம் இருந்ததால் சட்டென்று மனசுக்குள் ஏமாந்து மீண்டும் சமாளித்துக் காரில் ஏறினாள்.

வழியில் காருக்குள்ளேயே மரியதாஸ் “என்ன நீங்கள் ஃபோட்டோவிலை பார்க்க வடிவா இருந்தீங்கள். இப்ப பார்த்தால் காகக்குஞ்சு மாதிரி இருக்கிறீங்கள்?" என்று நக்கலும், சிரிப்புமாய் அவளைக் கேட்டான். அவளுக்குத் தன் மனசை யாரோ சாட்டையால் அடிப்பது போன்ற வலி ஏற்பட்டது. ஆனாலும் ´சும்மா பகிடிக்குத்தான் சொல்கிறான்´ என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லி, அசடு வழியச் சிரித்து, கலங்கிய கண்களை மறைத்து மௌனமாகி விட்டாள்.

அவள் மனசு போலவே அடுப்பிலும் கறி கொதித்துக் கொண்டிருந்தது. அரைத்த சின்னச் சீரகப் பொடியைக் கறிக்குள் போட்டுக் கறியை இறக்கியவள் ஓடிப்போய் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். ஊரில் இருந்ததை விட முகம் வாடிக் கறுத்துப் போயிருந்தது.

இவ்வளவு நாளும் அவள் தன் வாழ்க்கை பற்றி எதுவுமே தன் அப்பா அரியநாயகத்துக்கோ, தம்பிக்கோ எழுதவில்லை.

தன் கண் முன்னாலேயே மரியதாஸ் ஒரு இத்தாலி நண்பியுடன் சல்லாபிப்பதை எப்படி அவள் எழுதுவாள். வாய்க்குவாய் “நீங்கள் வடிவில்லை. நாட்டுக்குத் திரும்பிப் போயிடுங்கோ" என்று அவன் சொல்வதை எப்படி எழுதுவாள். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு ஜடமாக வாழ்ந்தாள்.

ஆனால் அந்த ஜடத்தனத்தைக் கூடச் சீண்டிப் பார்ப்பது போன்ற விடயம் நேற்று நடந்தது. இருட்டு வெளிச்சத்தை விழுங்கி விட்டது போன்று, தொலைதூரத்தில் அவளுக்குத் தெரிந்த சின்னஞ் சிறு நம்பிக்கை நட்சத்திரத்தையும் விழுங்கி விட்டது அந்த விமானச்சீட்டு.

அதை, வேலையால் வரும் போது மரியதாஸ்தான் கொண்டு வந்தான்.

“நீங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போயிடுங்கோ. வடிவா இருக்கிறியள் எண்டு நினைச்சுத்தான் கூப்பிட்டனான். நீங்களென்ன காகக்குஞ்சு மாதிரி இருக்கிறிங்கள். இன்னும் மூண்டு நாளைக்குத்தான் உங்களுக்கு விசா இருக்கு. அதுதான் ரிக்கற் எடுத்திட்டன்." விமானச்சீட்டுடன் வந்த மரியதாஸ் இப்படித்தான் அவளை வார்த்தைகளால் தேளாகக் கொட்டினான்.

துணுக்குற்றவள் “உங்களோடை மூண்டு மாசங்கள் வாழ்ந்திட்டன். இனி நான் அங்கை போய் என்ன செய்யிறது? நான் இங்கை சந்தோசமா வாழுறன் எண்டு நினைச்சுத்தான், அப்பா அங்கை சந்தோசமா வாழுறார். நான் இப்பத் திரும்பிப் போனால் அவர் செத்திடுவார். என்னை அனுப்பின காசுக்குத் தம்பியை அனுப்பியிருந்தாலும் உழைச்சுக் குடுத்திருப்பான்." சொல்லிக் கதறினாள்.

“நீங்கள், இப்ப போங்கோ. நான் உங்களைத் திரும்பக் கூப்பிடுறன்." என்றான். பொய் சொல்கிறான் என்று அவளுக்குத் தெரிந்தது.

“நீங்கள், இப்ப என்னைச் சட்டப்படி கலியாணம் செய்தால், எனக்கு இங்கை தொடர்ந்து இருக்க விசா கிடைக்குந்தானே! நான் திரும்பிப் போக மாட்டன். நீங்கள் என்னைக் கலியாணம் செய்யாட்டி நான் தற்கொலை செய்திடுவன்." என்றாள்.

“இஞ்சை பார், நான் இங்கை மரியாதையா வாழுறன். இங்கை செத்து என்ரை மானத்தை வாங்கிப் போடாதை. சாகிறதெண்டால் அங்கை ஊரிலை போய்ச் சா." இரக்கமின்றிக் கத்தினான்.

மரியதாஸ் ஜேர்மனிக்கு வந்து பதினாறு வருடங்கள். வேறு நகரத்திலிருந்து ஏதோ திருகுதாளம் செய்து விட்டு, இப்போ இந்த நகரத்துக்கும் வந்திருந்து இங்கும் வேலை செய்கிற இடங்களில் கள்ள வேலைகள் செய்து, பிடிபட்டு தமிழரின் மானத்தையே கப்பல் ஏற்றிக் கொண்டிருக்கிறான்.
இவனுக்கு, என்ன மரியாதை இங்கிருக்கிறது என்று அவளுக்குத் தெரியாது. ஆனாலும் தன்னை ஏமாற்றித் திருப்பி அனுப்பப் போகிறான் என்பது மட்டும் தெரிந்தது.

இப்ப நாட்டுக்குத் திரும்பினால் என்ன நடக்கும் என்றும் அவளுக்குத் தெரியும். அப்பா எப்படி உடைந்து போவார் என்ற நினைப்பே அவளை உடைத்தது. ஊரார் முகத்தில் எப்படி முழிப்பேன் என்ற நினைப்பு அவளைக் கலங்கடித்தது.

எங்காவது ஓடி விடலாமா, என்று யோசித்தாள். எங்கு ஓடுவது? ஸ்பொன்சரில் வந்ததால், அகதி விண்ணப்பமும் கோர முடியாத நிலை. தெரியாத நாடு. தெரியாத வீதி. ஆங்கிலம் தெரியாது. டொச்சில் ஒரு வார்த்தை தெரியாது. என்ன செய்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை.

´இவன் திட்டமிட்டுத்தான் என் வாழ்க்கையோடு விளையாடியிருக்கிறானா? வேணும் என்றுதான் யாரையும் என் கண்களில் காட்டாது இந்த வீட்டுக்குள் சிறை வைத்தானா?´ குழப்பமும் சந்தேகமும் நிறைந்த கேள்விகள் அவளுள் எழுந்தன.

தமிழர்கள் கூட அதிகம் இல்லாத இந்த நகரில் யாரிடம் போவது? என்ன கேட்பது? யோசித்து யோசித்தே மூளை குழம்பி விடும் போலிருந்தது. நேரத்தைப் பார்த்தாள். மரியதாஸ் வேலையால் வர இன்னும் சிலமணி நேரங்கள்தான் இருந்தன. அதற்கிடையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

உடைகளை மாற்றிக் கொண்டு எங்கே போவது, என்று கூடத் தெரியாமல் வெளியில் இறங்கினாள். அந்தப் பாதை எங்கே வளைகிறது, என்பதும் அவளுக்குச் சரியாகத் தெரியாது. ஆனாலும் மரியதாஸின் கேவலமான செயல்களுக்கு ஒரு நிரந்தர முடிவினைக் காணும் நோக்கோடு நிதானமாக நடக்கத் தொடங்கினாள்.

10.2.2000

மனஓசை - 9 (பக்கம்:58-60)



என் சின்னவன் எனது மடிக்குள் கிடந்து பாலைக் குடித்துக் கொண்டிருக்கும் போதுதான் அவள் வந்தாள். எப்போதும் அவள் இப்படித்தான் பல்கலைக்கழகத்தில் இருந்து விடுமுறையில் வரும் போதெல்லாம் என் வீட்டை எட்டிப் பாராது தன் வீட்டுக்குப் போக மாட்டாள்.

சொந்தம் என்பதையும் விட ஒன்றாகப் படித்து, ஒன்றாக இலந்தைப் பழம் பொறுக்கி, ஒன்றாக மாங்கொட்டை போட்டு, ஒன்றாகக் கிளித்தட்டு விளையாடி... என்று அரிவரியில் இருந்து ஒன்றாகவே என்னோடு உயர்தரம் வரை பயணித்தவள். எப்போதும் ஒன்றியிருக்கும் எமக்குள் பரீட்சைப் புள்ளிகளில் மட்டும் தவிர்க்க முடியாமல் போட்டி வரும். ஒரு தரம் government test இல் கணிதத்துக்கு பாடசாலையே வியக்கும் படியாக அவளுக்கும் எனக்கும் ஒரே புள்ளிகள்.

இப்படியெல்லாம் படித்து விட்டு நான் ஒரு அவசரக் குடுக்கை. அவசரப் பட்டு கல்யாணம் செய்து, மூன்று குழந்தைகளையும் பெற்று, குடும்ப சாகரத்தில் விழுந்து விட்டேன். கண்டறியாத காதல் எனக்கு.

அவள் trousers ம் போட்டுக் கொண்டு வந்து “ஹாய்" என்ற படி என் வீட்டு விறாந்தை நுனியில் அமர்ந்தாள். சின்ன வயசிலிருந்தே அவளும் நானும் அமர்ந்திருந்து கதைக்கும் இடம் அதுதான்.

பிச்சிப்பூ வாசத்தை நுகர்ந்த படி, கப்போடு சாய்ந்து கொண்டு படிக்கும் போது கதையளந்ததுக்கும் இப்போதுக்கும் கனக்க வித்தியாசம். சுவாரஸ்யமான கதைகளில் முன்னர் போல மூழ்க முடியாமல் என் கவனம் பிள்ளைகளின் பக்கம் சிதறிக் கொண்டே இருந்தது.

அவள் பல்கலைக்கழகப் புதினங்களை அளந்து கொண்டே இருந்தாள். எனக்கு என் மேலேயே கோபமாய் வந்தது. நானும் போயிருக்கலாந்தானே. எத்தனை தரமாய் எல்லோரும் சொன்னார்கள். பெரிய ரோமியோ, யூலியட் காதல் என்பது போல ஒரே பிடியாய் நின்று... இப்போ அவள் ஒரு சுதந்திரப் பறவை. நான் பிள்ளைகளோடு மாரடிக்கிறேன்.

அம்மா ஆடிப்பிறப்புக்கு கொழுக்கட்டை அவிக்க என்று முதல் நாட்தான் பயறு வறுத்து, உடைத்து, கொழித்தவ. கொழித்து வந்த பயத்தம் மூக்கை எப்பவும் போல ஹொர்லிக்ஸ் போத்தலுக்குள் போட்டு வைத்தவ. அதில் ஒரு பிடி எடுத்து சர்க்கரையும், தேங்காய்ப்பூவும் போட்டுப் பிசைந்து இரண்டு சிறிய கோப்பைகளில் போட்டுக் கொண்டு வந்து தந்தா. அவளுக்கு அது நல்லாகப் பிடிக்கும் என்று அம்மாவுக்குத் தெரியும். அவள் அதை ரசித்துச் சாப்பிடத் தொடங்கினாள்.

நான் ஒரு கரண்டியை வாயில் போட்டு விட்டுப் பக்கத்தில் வைத்தேன். மூத்தவன் வந்து “அம்மா, ஆ... ஆ..." என்று வாயைத் திறந்தான். ஒரு கரண்டியை அவனுக்கு ஊட்டி விட்டேன். இரண்டாமவன் வந்து “தம்பியைத் தொட்டிலிலை போடுங்கோ. நான் மடியிலை படுக்கப் போறன்" என்று மழலை பொழிந்தான்.

பல்கலைக்கழகப் புதினங்களை அவள் நிறுத்தி நிறுத்திச் சொல்லிக் கொண்டேயிருந்தாள். சின்ன வகுப்பில் எங்களோடு படித்த தேவநாயகத்துக்கும், சுகுணாவுக்கும் காதலாம். எனக்கு நம்ப இயலாமல் இருந்தது. எங்களோடு படிக்கிற பொழுது தேவநாயகம் நெற்றியில் வடியத் தக்கதாக தலையில் எண்ணெய் தப்பிக் கொண்டு, கன்ன உச்சியும் பிறிச்சுக் கொண்டு...

“சுகுணா அவனைக் காதலிக்கிறாளோ..?"
சுகுணா எங்களுக்கு அடுத்த batch.

“உனக்கு இளப்பமா இருக்கே? அவன் இப்ப எஞ்சினியர் தெரியுமே! இப்ப அவனைப் பாத்தாய் எண்டால், நீயே லொள்ளு விடுவாய்."

எனக்கு அவளின் கதைகளைக் கேட்கக் கேட்க ஆச்சரியமாகவே இருந்தது. ´காதல்´ என்ற சொல்லைச் சொல்வதே பாவம் என்பது போல இருந்தவள், பல்கலைக்கழகம் போகத் தொடங்கிய பின் இப்படித்தான் லொள்ளு.., அது இது என்று புதுப் புதுச் சொற்களாய் உதிர்க்கிறாள். கூச்சம் என்பதே இல்லாமல் பட் பட்டென்று மனதில் தோன்றுவதை எல்லாம் வெளியில் கொட்டுகிறாள். பொறாமையோடு அவளைப் பார்த்தேன். இத்தனையையும் இழந்து விட்டேனே என்ற ஆதங்கத்தில் எனக்குள் வெம்பினேன்.

அந்த நேரம் பார்த்து அவளிடம் இருந்து ஒரு பெருமூச்சு. “உனக்கென்ன..? நீ கலியாணம் கட்டிப் போட்டு குழந்தைகள், குட்டிகள் எண்டு எவ்வளவு சந்தோசமா இருக்கிறாய். எனக்கு எரிச்சல்தான் வருது. இன்னும் படிப்பு, பரீட்சை எண்டு புத்தகங்களையும் காவிக் கொண்டு..."

மனசுக்குள் சில்லென்ற ஒரு உணர்வு.

மூத்தவன் மீண்டும் வந்து என் முதுகுப் பக்கமாக வளைந்து என்னைக் கட்டிப் பிடித்தான். அந்த ஸ்பரிசம் வழமையையும் விட அதீத சுகமாய்...

நான் அவனை அப்படியே இழுத்து, இறுக அணைத்துக் கொண்டேன்.

காலம் - 1982

27.5.2004

மனஓசை - 10 (பக்கம்:61-68)



நூற்றுக் கணக்கான கிலோமீற்றர்களைக் கடந்து வந்த களைப்பையும் மீறிய சோகம் மாவீரர் குடும்பங்களுக்கென மண்டபத்தின் முன் வரிசையில் ஒதுக்கப் பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்களின் முகங்களில் அப்பியிருந்தது.

தமிழர்களின் பழங்காலக் கோட்டை வடிவில் அமைக்கப் பட்டிருந்த மேடையும், மேடைக்கு இடது புறமாக அமைக்கப் பட்டிருந்த துயிலும் இல்லமும், அதைச் சுற்றி வைக்கப் பட்டிருந்த மலர்களும், ஒலித்துக் கொண்டிருந்த மாவீரர் கானமும்... ஜேர்மனியின் வர்த்தக நகரான டோர்ட்மூண்ட் நகரின் மத்தியில் அமைந்துள்ள அந்த மண்டபத்தின் உள்ளே நுழைந்த போதே எனக்குள்ளே ஒரு பயபக்தியை ஏற்படுத்தி விட்டது. நான் வேறொரு உலகத்தினுள் வந்து நிற்பது போலவே உணர்ந்தேன். ஜேர்மனியின் நெரிசல் நிறைந்த சாலைகளும், அழுத்தம் நிறைந்த வாழ்வும் எனக்கு மறந்து விட்டது.

பண்போடும், மரியாதையோடும் எம்மை வரவேற்ற சகோதர அன்பர்கள் தமது வேலைகளை ஒழுங்காகவும், நேர்த்தியாகவும் கவனிப்பது மட்டுமல்லாது அவ்வப்போது வந்து எமக்கு ரோஜாப் பூக்களையும் தந்து சென்றார்கள்.

புனிதமான உலகத்தினுள் இருப்பது போன்ற உணர்வில் என் மனது நெகிழ்ந்து போயிருந்தது.

திடீரென்று, “தாயகத்தை உயிரிலும் மேலாக நேசித்து, அந்த உன்னத இலட்சியத்துக்காக மடிந்த எமது தேசத்தின் வீரர்களை நெஞ்சங்களிலே சுமந்து, அந்த உத்தமர்களுக்கு வணக்கம் செலுத்த நாம் இங்கு ஒன்று கூடியுள்ளோம். விலைமதிக்க முடியாத அவர்களுக்காக எழுந்து நின்று அகவணக்கம் செய்வோம்." ஒலிபெருக்கி முழங்கியது.

பேரிரைச்சலாக ஒலித்துக் கொண்டிருந்த கிசுகிசுச் சத்தம் அப்படியே அடங்கிப் போக மண்டபத்தினுள் அமர்ந்திருந்த அத்தனை நெஞ்சங்களும் அந்த ஒரு நிமிட அஞ்சலிக்காய் எழுந்து, மனதுக்குள் பேசிய படி மௌனம் காத்தன.

இரண்டு நிமிடங்களில் மௌனம் கலைந்து, கொடியேற்றலும், வணக்கமும். தாய்நாட்டைக் காக்க தன்னை ஈந்த ஒரு வீரனின் தாய் ´ஈன்ற பொழுதில் நெஞ்சு பெரிதுவக்க´ கொடியை ஏற்றினார். ஏறுகையில் நெஞ்செல்லாம் புல்லரித்தது. நான்கு நிமிடங்களில் கொடி பறக்க மனசு பரபரத்தது. கண்கள் பனித்தன.

அடுத்து, தாய் நாட்டில் ஒளி வீசுவதற்காய் தம்மை அணைத்துக் கொண்ட இரு வீரர்களின் தாயார் ஈகைச்சுடரை ஏற்றினார்.

திரையிலே ஈழத்தில் நடைபெற்ற உணர்வு பொங்கும் ஈகைச் சுடரேற்றல் ஓடிக் கொண்டிருந்தது. ஒலிபெருக்கியில் என்னை நிலைகுலைய வைத்த அந்தப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது.

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே, இங்கு கூவிடும் எங்கள் குரல்மொழி கேட்குதா ஒளியினில் வாழ்பவரே... என் மனதும் பாடலுடன் சேர்ந்து கூவத் தொடங்கியது.

...உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம். அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம் எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்...

மனசு ஓலமிட, கண்களில் நீர் திரையிட்டது. மண்டபத்தினுள் எதுவுமே எனக்குத் தெரியவில்லை.

மனத்திரை விசாலமாக விரிய அங்கு எத்தனை முகங்கள். மண்ணுக்கு வித்தான பல முகங்கள். அக்கா, அக்கா..! என்று என் முன்னே சிரித்து விட்டு அடுத்த கணமே காவியமாகி கல்லறையில் துயில் கொள்ளும் உயிர்ப்பூக்கள்.

அங்கு அவனும் வந்தான்.

அன்று தம்பி வந்து நின்றதில் எங்களுக்கெல்லாம் சந்தோஷமாய் இருந்தது. நானும் தங்கைமாருமாக அவனுடன் கதை கதையென்று கதைத்துச் சிரித்துக் கொண்டிருந்தோம். எங்கள் சந்தோஷத்தைப் பார்த்து அம்மாவும் சந்தோஷத்தோடு, தனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தா.

தம்பி அப்போது அனேகமான பொழுதுகளில் சென்றிக்கு நின்று ஆமியை உள்ளே வராமல் பார்த்துக் கொள்ளும்; பணியில் இருந்தான். அத்தோடு பெடியளின் நியாய விலைக் கடையையும் பொறுப்பாக நின்று நடாத்திக் கொண்டிருந்தான்.

அவன் வீட்டில் இருக்கும் போது படுக்க ஒரு தலையணி காணாதென்று சண்டை பிடித்து, காலுக்கு, கையுக்கு, தலைக்கு என்றெல்லாம் தலையணி வைத்துப் படுப்பான். கிணற்றில் தண்ணீர் அள்ளும் வேலையைத் தவிர வேறொரு வேலையும் செய்ய மாட்டான். பெரிய ஸ்ரைல் பார்ப்பான். கண்ணாடிக்கு முன்னால் மணிக்கணக்காய் நின்று தலைமயிரை அழகு படுத்துவான். நல்ல உடுப்புகள் மட்டுந்தான் போடுவான்.

இப்போ அவன் சைக்கிளில் பின்னுக்குக் கரியர் பூட்டி, கரியரில் ஒரு பக்கீஸ் பெட்டி கட்டி, அதனுள் நியாய விலைக்கடைச் சாமான்களைக் கொண்டு போவதைப் பார்த்து எங்களுக்கு ஒரு புறம் சிரிப்பும் மறுபுறம் கவலையும் வரும்.

இப்போதும் அதையெல்லாம் சொல்லி அவனைப் பகிடி பண்ணிக் கொண்டிருந்தோம். அவன் அதற்கு மேலால் வேறு பகிடிகள் சொல்லி எங்களைச் சீண்டிக் கொண்டிருந்தான்.

எங்கள் கதைகள் திசைமாறித் திசைமாறி எங்கெங்கோ சென்று திரும்பின. “டேய்... நீ, தோளிலை கொழுவியிருக்கிற உந்த கிரனைட் பையையெல்லாம் கொண்டு போய் அவையளிட்டைக் குடுத்திட்டு வந்து போசாமல் படி." நான் சொன்னேன்.

தங்கையும் என் ஆலோசனை நல்லதென்பது போலப் பக்கப் பாட்டுப் பாடினாள்.

“பேசாமல் வாறதோ..! என்ன சொல்லுறிங்கள்..?" சற்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

“ஓமடா, எத்தினை பெடியள் இருக்கிறாங்கள். நீ உதெல்லாத்தையும் விட்டிட்டு வந்து முதல்லை படிச்சு முடி. அம்மா உன்னை நினைச்சு எவ்வளவு அழுறவ தெரியுமே!"

இப்போ அவன் சற்று ஆக்ரோசத்துடன் “அக்கா, நீங்கள் படிச்சனிங்கள்தானே. நீங்களே இப்பிடிச் சொன்னால்..! உங்கடை தம்பி மட்டும் படிக்கோணும். மற்றவங்கள் படிக்கத் தேவையில்லையோ? அவங்களுக்கும் அக்காமாரும், அம்மாமாரும் இருக்கினந்தானே! ஒவ்வொரு அம்மாமாரும் அழுது தடுத்தால் ஆர் வருவினம்?"

“.................."

“அக்கா, நீங்கள் என்னை மனசோடை, துணிவோடை அனுப்போணும்."

“.................."

அதுக்கு மேல் என்னால் பேச முடியவில்லை. மீண்டும் எங்கள் பேச்சு இயல்புக்கு மாறி நாங்கள் சிரித்துக் கொண்டிருக்கும் போது “அக்கா, என்ரை கறுத்த ரவுசரை அயர்ண் பண்ணி வையுங்கோ. நாளைக்கு போட்டோ (புகைப்படம்) எடுக்கிறதாம்." என்றான்.

“ஏன் போட்டோ?" நானும் தங்கைமாரும் கோரஸாகக் கேட்டோம்.

“நான் செத்தால் நோட்டீசிலை போடுறதுக்குத்தான்." அவன் மிகவும் சாதாரணமாகச் சொன்னான். அப்படியே எங்கள் சிரிப்பு அடங்க, நாங்கள் மௌனமாகி விட்டோம். மனசு மட்டும் திக்கிட்டது. ஏதோ ஒரு பயப் பந்து நெஞ்சுக்குள் உருள்வது போலிருந்தது.

அன்று அவன் அப்போது போய் விட்டான். இரவு வந்து நியாயவிலைக்கடைக் காசை எண்ணி என்னிடம் தந்தான்.

“ஏன் எண்ணித் தாறாய்? என்னிலை உனக்கு நம்பிக்கை இல்லையோ?” செல்லமாகக் கேட்டேன்.

“அக்கா, எனக்கும் உங்களுக்கும் இடையிலை அன்பைத் தவிர வேறை ஒண்டுமே இல்லை. அது எனக்குத் தெரியும். ஆனால் இந்தக் காசிருக்கே. இது என்ரையில்லை. இது எங்கடை நாட்டின்ரை காசு. அதை நான் உங்களிட்டைத் தரக்கிளையும் சரி, வாங்கக்கிளையும் சரி எண்ணிறதுதான் நல்லது." மூச்சு விடாமல் சொன்னான்.

என்னை விடப் பத்து வயது குறைந்தவனின் பொறுப்பான பேச்சில் ஆச்சரியமும், பெருமையும் என்னை ஆட்கொள்ள, எண்ணிய காசைப் பையில் போட்டு எனது அறையினுள் வைத்து விட்டு “சாப்பிடன்" என்றேன்.

“குளிச்சிட்டு வாறன்" என்றான்.

குசினிக்குள் போனேன். அடுப்பில் தணல் இருந்தது. குழம்புச் சட்டியை அடுப்பில் வைத்து விட்டு, பிரட்டலை குக்கரில் வைத்து, குக்கரைப் பற்ற வைத்தேன். மண்(ணெண்)ணெய் மணம் ´பக்´ கென்று வந்து போனது.

“அக்கா..!" கூப்பிட்டான்.

“என்னடா?"

“என்ரை முதுகைத் தேய்ச்சு விடுங்கோ."

“சாமம் பன்ரெண்டு மணிக்கு கிணத்தடியிலை நிண்டு உனக்கு முதுகு தேய்க்கோணுமோ?!"

“என்ரை அக்கா இல்லே..!"

லக்ஸ் சோப்பைப் போட்டுத் தேய்த்து விட்டேன். கிணற்றில் அள்ளி அள்ளி ஊற்றி ஊற்றிக் குளித்தான்.

“இஞ்சை பார்! கெதிலை குளிச்சு முடி. ´ஷெல்´ வந்து கிணத்தடியிலை விழுந்தால் எல்லாம் சரியாப் போடும்." பருத்தித்துறைக் கடலில் இருந்து ஓயாது பறந்து கொண்டிருந்த ´ஷெல்´ தந்த பயத்தில் நான் அவனை அவசரப் படுத்தினேன்.

சாப்பாட்டைக் கொடுக்க அவன் ஆசை ஆசையாக அள்ளிச் சாப்பிட்ட போது எனது கண்கள் பனித்தன.

போகும் போது “படுத்து நல்ல நித்திரை கொள்ளோணும் போலை இருக்குதக்கா." என்றான்.

“அப்ப, கொஞ்சம் படன்."

“இல்லை நான் போய் சென்றிக்கு நிண்டு கொண்டு வெள்ளையை விடோணும்."

“நித்திரை தூங்கிப் போடுவாய்..!"

“படுத்தாத்தானே நித்திரை கொள்ளுறது..!"

“இண்டைக்கு எந்தப் பக்கம்..?"

“ஆலடிப் பிள்ளையார் கோயிலுக்கு அங்காலை இருக்கிற பனங்காணிக்குள்ளை பனைக்குப் பின்னாலை நிற்பன்." அதை மட்டும் மிகவும் குசுகுசுப்பாக என் காதுக்குள் சொன்னான்.

தொடர்ந்து “நித்திரை வராது... பகலெண்டால் ஆராவது தேத்தண்ணி கொண்டு வந்து தருவினம்." என்றான்.

“கால் நோகாதே..?" அக்கறையோடு கேட்டேன்.

“கால் நோகுமெண்டு சொல்லி நாங்கள் நிக்காட்டி ஆமி உள்ளை பூந்திடுவான் இல்லே. உங்களைப் போல எத்தினை அக்காமார் எங்களை நம்பி வீடுகளுக்குள்ளை இருக்கினம்" என்றான். சில மாதங்களின் முன் ஆலடி வீடுகளுக்குள் புகுந்த சிங்கள இராணுவத்தினர் ஒரே நாளில் எழுபது பெண்களை மானபங்கப் படுத்திய வெறித்தனம் என் நினைவில் வந்து என் உடல் ஒரு தரம் நடுங்கியது.

“அக்கா, என்ன யோசிக்கிறீங்கள்? நான் வெளிக்கிடப் போறன். நாளைக்கு வருவன். அந்தக் கறுத்த ரவுசரை எடுத்து ரெடியா வையுங்கோ. நல்ல சேர்ட்டும் வையுங்கோ. நோட்டீசிலை படம் வடிவா வரோணும்." என் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தபடி சொன்னான்.

பிறகு என்னைக் கனிவாகப் பார்த்தபடி “அக்கா, நான் ஏன் இப்பிடிச் சொல்லுறன் தெரியுமே! ஒண்டும் சொல்லாமல் நான் செத்துப் போட்டன் எண்டால் உங்களாலை தாங்கேலாது.

சாவு என்னை எந்தக் கணத்திலும் தழுவலாம். அதைத் தாங்க நீங்கள் இப்ப இருந்தே உங்களைத் தயார் படுத்தி வைச்சிருக்கோணும். அம்மாவையும் நீங்கள்தான் தயார் படுத்தோணும். என்ரை சாவு உங்களை வருத்தக் கூடாது. அக்கா, உங்கடை கண்ணிலை இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வரக் கூடாது. அதுதான் என்ரை ஆசை." சொல்லிக் கொண்டே சைக்கிளில் ஏறிப் பறந்து விட்டான்.

அடுத்த நாள் காலை வந்து அழகாக வெளிக்கிட்டுக் கொண்டு, நியாயவிலைக் கடைக் காசுடன் புறப்பட்டான். போகும் போது “ரவியையும் இண்டைக்கு போட்டோ எடுக்கினம். போட்டோ எடுத்து முடிய அவனோடை வருவன். ரவிக்கு வடை விருப்பம். ஏலுமெண்டால் சுட்டு வையுங்கோ" என்று சொல்லிக் கொண்டே போனான்.

அவன் போய் சில மணி நேரங்களில் கிரனைட்டுகளும், ஷெல்களும், துப்பாக்கி வேட்டுக்களுமாய் ஒரே சத்தம்.

“அந்தக் குறுக்கால போவார் வெளிக்கிட்டிட்டாங்கள் போலை கிடக்கு." அப்பாச்சி தன் எரிச்சலை வார்த்தைகளில் காட்டினா.

பருத்தித்துறையே அல்லோலகல்லோலப் பட்டது. சென்றிக்கு நிற்கும் பிள்ளைகளின் வீடுகளிலெல்லாம் அன்று உலை கொதிக்கவில்லை. மனம் பதைக்க பெற்றவரும், உற்றவரும் பிள்ளைகளின் வரவுகளுக்காய் வாசல்களில் காத்திருந்தார்கள்.

நீண்ட காத்திருப்பின் பின் எம் நெஞ்சம் குளிர தம்பி வந்தான். மீண்டும் உயிர் வந்தது போல் நாம் பெருமூச்சு விட்டோம். ஆனால் அவன் சோர்ந்து போயிருந்தான். எதையோ பறி கொடுத்தவன் போல் வெறித்துப் பார்த்தான்.

“என்னடா..!" தங்கைதான் கேட்டாள்.

“ரவி போயிட்டான்..!" வார்த்தைகளோடு உணர்வும் வெடித்துச் சிதற குலுங்கி அழுதான். களத்தில்; பாய்பவனின் இளகிய மனம் கண்டு நாமும் அழுதோம்.

திடீரென்று ஒளிப்பிரவாகம். ஒலி பெருக்கி முழங்கியது. “தொடர்ந்து... மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஈகைச்சுடரேற்றி மாவீரருக்கு அஞ்சலி செய்வார்கள்."

“அக்கா உங்கடை கண்ணிலை இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வரக் கூடாது." என் பிரிய தம்பியின் வார்த்தைகளையும் மீறி என் கண்கள் சொரிந்தன.

நான் 1985 இலிருந்து 2000 இற்கு மீண்டு ஈகைச்சுடரேற்றும் வரிசையில் ரோஜா மலருடன் நகர்ந்தேன்.

மாவீரர்களின் வரிசையில் என் தம்பியும் அழகாக…

அவன் கண்கள் என்னையே ஊடுருவிப் பார்த்து “அக்கா, அழாதையுங்கோ" என்று சொல்வது போல்..!

30.11.2000

மனஓசை - 11 (பக்கம்:69-74)



பன்னிரண்டாவது மாடியின் பல்கணியில் நின்று பார்த்த போது பகலை விட மின்விளக்குகள் கீழேயும், நட்சத்திரங்கள் மேலேயுமாய் மின்னிக் கொண்டிருக்கும் இரவு அழகாயிருந்தது.

பகல் பார்த்த போது கனடா ஒன்ராறியோவின் எக்லிங்ரன் அவெனியூவின் நீண்டு விரிந்து தெரியும் விளையாட்டு மைதானம் ஆங்காங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த கால்பந்து, கைப்பந்து போன்ற ஆட்டங்களால் ஆர்ப்பாட்டமாகத் தெரிந்தது. பல்கணிக்கு நேரே கீழே உள்ள சிறிய நீச்சல் தடாகம் நீச்சலடிக்கும் சிறிசுகளின் சண்டையும், சந்தோசமும் கலந்த கூக்குரல்களில் கலகலத்துக் கொண்டிருந்தது.

இப்போது அவைகள் ஓரளவு ஓய்ந்திருந்தாலும் நிசப்தத்தைக் குலைக்கும் சத்தங்கள் கேட்டுக் கொண்டுதான் இருந்தன. காற்று எங்கிருந்தோ அழகிய தமிழ்ப்பாடலை அள்ளி வந்து கொண்டிருந்தது.

´இந்த நேரத்தில் இத்தனை சத்தமாகப் பாடலா!´ பல்கணியில் நின்ற படியே காற்று வந்த திசையைக் கூர்ந்து பார்த்தேன். மைதானத்தின் ஓரமாக அடுத்த வீட்டு பல்கணிக்கு எதிரே கீழே ஒரு கார் நிற்பாட்டப் பட்டு கதவு திறந்திருந்தது. ஒரு இளைஞன் எதிர் வீட்டு பல்கணியையே அண்ணாந்து பார்த்தபடி நின்றான்.

பாடல் வரிகள் தெளிவாக காதில் விழுந்தன. “காதலா.. காதலா.. காதலால் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்…”

´ஏன் இப்பிடிச் சத்தமாய்..!´

“இந்த இரவு நேரத்திலை.. இப்பிடிச் சத்தமாப் பாட்டுப் போடலாமே?” மைத்துனரின் மகனை வியப்போடு கேட்டேன்.

“சித்தி, இது ஒவ்வொரு நாளும் நடக்கிற விசயந்தான். அந்த வீட்டு எட்டாவது மாடியிலை ஒரு வடிவான தமிழ்ப்பிள்ளை இருக்கு. அதுதான்.. இவன்…"

ம்... எனக்கு விளங்கி விட்டது. இது கனடா ஸ்ரைலில் ஒன்றாக இருக்க வேண்டும்.

“ஜேர்மனியிலை எண்டால் உந்தச் சேட்டையள் சரிவராது. பத்துமணிக்குப் பிறகு வீட்டுக்குள்ளையே சத்தமாப் பாட்டுப் போடக் கூடாது. இப்பிடி ரோட்டிலை நிண்டு அதுவும் இவ்வளவு சத்தமாப் பாட்டுப் போட்டால்.. பொலிஸ் பிடிச்சுக் கொண்டு போயிடும்."

“சித்தி, இண்டைக்குத்தானே கனடாவுக்கு வந்தனிங்கள். போறதுக்கிடையிலை இன்னும் கனக்க விசயங்கள் பார்ப்பிங்கள்"

அவன் சொன்னது போலவே எனக்காகக் கனக்கக் காத்திருந்தன. அடுத்த நாள் காலையில் லிப்ற்றில் நுழைந்த போது ஒரு மாநிறமான பெண் நின்றாள். தமிழ்ப்பெண் போலத் தெரிந்தாள்.

“வணக்கம்" என்றேன்.

அவள் மௌனம்.

“சித்தி, அது தமிழ் இல்லை. அவை பிஜி தீவிலையிருந்து வந்தாக்கள்."

“பார்க்க தமிழ் மாதிரி இருக்கு."

“இல்லை, அவையளுக்குத் தமிழ் தெரியாது. இந்த பில்டிங்கிலை இப்பிடி நிறையப் பேர் இருக்கினம். "

´புலம் பெயர்ந்த எமது ஐரோப்பியத் தமிழர்களின் சந்ததியினரும் ஒரு காலத்தில் இப்படித்தான் தமிழ் தெரியாத தமிழர்களாய் இருப்பார்களோ?´ மனதுக்குள் ஒரு சிறிய அச்சம் தோன்றியது.

வாசலில் செக்கியூரிட்டியைத் தாண்டி வெளியில் போனபோது சில்லென்ற காற்று வேகமாக வந்து முகத்தில் மோதி, தலையின் முன் முடிகளைக் கலைத்தது. கோடைகாலம் என்றாலும் இரவின் சில்லிப்பு இன்னும் விலகாமலே இருந்தது. அந்தச் சில்லிப்பையும் பொருட்படுத்தாது ஒரு வயதானவர் வீதியோரமாக இருந்த பெரிய கற்களில் ஒன்றின் மேல் அமர்ந்திருந்தார். அவருக்கு எனது பாட்டாவின் வயதுதான் இருக்கும் போல் தெரிந்தது.

எனது பாட்டா இப்பவும் ஊரில்தான் இருக்கிறார். அவரும், கனடாவுக்கு வராவிட்டாலும் அமெரிக்காவுக்குப் போயிருக்கலாம். இப்படி கல்லிலிருந்து காற்று வாங்கியிருக்கலாம். ம்.. ஏனோ மறுத்து விட்டார். அவருக்கு ஊரில் கோர்ட்டில் உறுதி எழுதும் வேலை. அதை விட்டிட்டுப் போக விருப்பமில்லையோ என்னவோ!

பாட்டாவின் தம்பி அவரது பிள்ளைகளோடு அமெரிக்காவில்தான். அவ்வப்போது அவரின் கடிதங்கள் பாட்டாவுக்கு வரும். இடைக்கிடை சிறிது டொலர்களும் கடிதத்துக்குள் வைக்கப் பட்டிருக்கும். நான் அந்தக் கடிதங்களில் ஒட்டி வரும் அமெரிக்கா முத்திரைகளை ஆசையோடு எடுத்து எனது அல்பத்தில் ஒட்டி வைப்பேன்.

அப்படித்தான் ஒரு முறை கடிதம் வந்தது. பாட்டா வாசித்துக் கொண்டிருக்கும் போதே நான் கடித உறையை கேத்தில் ஆவியில் பிடித்து முத்திரையைக் கழற்றி எடுத்து விட்டேன். பாட்டா கடிதத்தை வாசித்து முடித்ததும் என்னிடம் தந்து விட்டு கோர்ட்டுக்குப் போய் விட்டார். அதில் எழுதியிருந்த வரிகளைப் பார்க்கப் பார்க்க எனக்குப் புல்லரித்தது. பாட்டாவை அமெரிக்காவுக்கு வந்து விடும்படி பாட்டாவின் தம்பி எழுதியிருந்தார். எல்லாச் செலவையும் அவரே பார்க்கிறாராம். ரிக்கெற்றையும் அனுப்புகிறாராம்.

பாட்டியும் இறந்த பின் மனதாலும், உடலாலும் வாடித் தளர்ந்து போயிருக்கும் பாட்டா அமெரிக்காவுக்குப் போனார் என்றால் எவ்வளவு சந்தோசமாக இருப்பார். இவ்வளவு நல்ல விடயத்தைப் பற்றி என்னோடு ஒன்றுமே கதைக்காமல் போயிட்டாரே! எனக்கு மத்தியானம் பாட்டா வீட்டுக்கு வரும் வரை இருப்புக் கொள்ளவில்லை. கடிதத்தை இரண்டு மூன்று முறையாக வாசித்துப் பார்த்தேன்.

பாட்டா அமெரிக்காவுக்குப் போனால்… என்ன, எங்கடை வீட்டுத் தென்னம் பாத்திகளுக்கு நாங்கள் குளிக்கும் போது வாய்க்கால் வழி ஓடும் சவர்க்காரம் கலந்த தண்ணீரை மாத்தி, மாத்தி விடவும், தென்னம் பாத்திகள் சிதைந்து போகாமல் சுற்றிவர பொச்சு மட்டைகளை அழகாக அடுக்கி பாதுகாக்கவும் ஆளில்லாமல் போகும். வேலிச் சிதம்பரத்தம் பூக்கள் தீண்டுவாரின்றி வாடி வீழும். பாட்டாவின் சுவாமியறை பூவின்றி, சாம்பிராணிப் புகையின்றி நாஸ்திகக் கோலம் கொள்ளும்…

நினைவுகள் பாட்டாவை அமெரிக்காவுக்கு அனுப்பிப் பார்த்து அதன் நன்மை, தீமைகளை ஆராய்ந்து கொண்டிருக்க ஒருவாறு மதியம் வந்து விட்டது. பாட்டாவும் வெள்ளை வேட்டி கசங்காமல் நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையுமாக வந்தார். உறுதி எழுதி வந்த காசில் ஒரு பகுதியையும், சந்தையில் வேண்டிக் கொண்டு வந்த நாவற்பழப் பையையும் அம்மாவிடம் கொடுத்து விட்டு, வெள்ளை சேர்ட்டுக்கு மேல் போட்டிருக்கும் சால்வையைக் கூட எடுத்துக் கீழே வைக்காமல் அம்மா சமைத்த கும்பிளா மீன் குழம்பையும், செம்பாரைக் குஞ்சுப் பொரியலையும் சேர்த்து மதிய உணவைச் சுவைத்துச் சாப்பிடத் தொடங்கினார்.

நான் பக்கத்துச் சுவரில் சாய்ந்து கொண்டு பாட்டா சாப்பிடும் அழகை ரசித்த படியே “பாட்டா நீங்கள் அமெரிக்கா போறதை நினைக்க எனக்குச் சந்தோசமாயிருக்கு. எவ்வளவு நல்ல சான்ஸ்." என்றேன்.

“சும்மாயிரு மேனை. நான் போக மாட்டன்."

“ஏன் பாட்டா? "

“இங்கை என்ரை பேரப்பிள்ளையள் நீங்கள் எல்லாரும் இருக்க, உங்களை விட்டிட்டு நான் அங்கை போய்... எனக்கு அது சரிவராது."

“அவர் உங்கடை தம்பிதானே பாட்டா..!"

“அவன் அங்கையிருந்து என்ன கஸ்டப் படுறானோ ஆருக்குத் தெரியும்? மகளும், மருமகனும் அங்கை டொக்டர் எண்டாப்போலை அமெரிக்கா எங்கடை மண்ணாகிடுமோ? இல்லை அவன்ரை பேரப்பிள்ளையளும், பிள்ளையளும் என்ரை ஆகிடுமோ? நான் போக மாட்டன்." பாட்டாவின் குரல் தழுதழுத்தது.

´பாட்டா பிழை விட்டிட்டார், நல்ல ஒரு எதிர்காலத்தை காலுக்குள்ளை போட்டு மிதிச்சிட்டார்.´ என்று அப்போது நினைத்துக் கொண்டேன்.

அப்போது மட்டுமல்ல யாரும் எதிர் பார்க்காத விதமாக நாமெல்லோரும் கட்டாயமாக எமது நாட்டை விட்டு வெளிநாட்டை ஏகிய பின்னும், அந்த நினைவு வரும் போதெல்லாம் ´பாட்டா அமெரிக்காவுக்குப்
போயிருக்கலாமே´ என்று மனசுக்குள் ஒரு குறுகுறுப்பு ஏற்படும். இப்போதும் கல்லில் இருந்த பெரியவரைப் பார்த்ததும் மனசு குறுகுறுத்தது.

அருகே செல்லும் போது ஆவலுடன் அவர் முகத்தைப் பார்த்து “வணக்கம்" சொன்னேன். அவருக்கு சற்று அதிர்ச்சி கலந்த சந்தோசம். கனடாவில் அந்த 1996 காலப்பகுதியில் ´வணக்கம்´ சொல்லும் வழக்கம் இல்லையாம். கூனிக் குறுகி அமர்ந்திருந்த அவர் கண்களுக்குள் எதையோ பறி கொடுத்த சோகம். கஸ்டப் பட்டுச் சிரித்த சிரிப்பில் உயிர்ப்பு வாடி இருந்தது. அவரைத் தாண்டிச் சென்ற பின்னும் ´ஏன்?´ என்ற கேள்வி என்னைக் குடைந்தது. அதிக நேரம் குடைச்சலைத் தாங்க முடியாததால் மைத்துனரின் மகனிடம் கேட்டும் விட்டேன்.

அவன் சொன்னான். “சித்தி, அவர் இங்கை தன்ரை மகனோடையும், மருமகளோடையுந்தான் இருக்கிறார். அவையள் காலைமை வேலைக்குப் போற பொழுது இவரையும் வெளியிலை விட்டுக் கதவைப் பூட்டிப் போட்டுப் போயிடுவினம்.

பின்னேரம் வேலையாலை வந்தாப்போலைதான் இவரும் உள்ளை போகலாம். "

“அப்ப, அவர் மத்தியானம் சாப்பிடுறது. ரொயிலற்றுக் போறது எல்லாம்... "

“எல்லாம் அவையள் வந்தாப் போலைதான்"

“அப்ப ஏன் அவர் இங்கை இருக்கிறார். நாட்டுக்குத் திரும்பிப் போகலாந்தானே!"

“அவையள் விட மாட்டினம். அவற்றை பெயரிலை வெல்ஃபெயர் வருகுதில்லோ."

சத்தமில்லாமல் ஒரு கொடுமை நடந்து கொண்டிருப்பது புரிந்தது. அதற்கு மேல் பேச மனம் வரவில்லை.

ரவுணுக்குள் வேலைகளை முடித்து விட்டுத் திரும்பும் போது மதியமாகியிருந்தது. அப்போது அங்குள்ள கற்களில் இன்னும் சில வயதானவர்கள் சேர்ந்து, சோகத்தைச் சுமந்தபடி கூட்டமாக இருந்தார்கள்.

அவர்களில் சிலருக்கு அவர்கள் பிள்ளைகளுக்கு எத்தனை மணிக்கு வேலை முடிகிறதோ அப்போதுதான் மதியச் சாப்பாடு என்று தெரிந்த போது மனசு கனத்தது.

நாடு விட்டு நாடு வந்து, வீடிருந்தும் ஆறி அமர இருக்கைகளோ, நிழலுக்குக் கூரைகளோ இல்லாதவர்கள் போல்... இத்தனை காலம் கழிந்து ஏதோ ஒன்று புரிந்தது.

23.5.2003