Monday, March 03, 2008

மனஓசை (பக்கம்:03)

சில வார்த்தைகள்

என் பெற்றோர்கள் மு.ச.தியாகராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகள் கற்றுத் தந்த வாசிப்பு எனக்கு மிகவும் பிடிக்கிறது. மற்றவர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ எனக்கு எழுதவும் பிடிக்கிறது. நான் எப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறேன். அவற்றில் சில துளிகளையே உங்களிடம் தருகிறேன்.

எந்த வார்த்தைகளாலும் ஆற்ற முடியாத ஆற்றாமைப் பொழுதுகளை எனது எழுத்துக்களாற்றான் நான் தேற்றியிருக்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே என்றிருக்கும் போது, என் வசப்பட்ட எனதான வாழ்வை நான் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, சில இழப்புகள் என்னை நிலைகுலைய வைத்தன. அந்தப் பொழுதுகளில் என் துயரங்களின் வடிகால்களாயும்,

என்னால் தாங்க முடியாத, அல்லது நம்ப முடியாத சில விடயங்களைக் கண்டு நான் வெகுண்டெழுந்த போது என் கோபத்தின் தெறிப்புகளாயும்,

எனது சமூகத்தின் போட்டிகளும், பொறாமைகளும், நான், நீ.. என்ற அகம்பாவங்களும், ஆண், பெண் என்ற பேதங்களும் அதனாலான ஏற்றத் தாழ்வுகளும் என் கண்களில் பட்ட போதும், என் மேல் படர்ந்த போதும், அவைகளைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாத என் எதிர்ப்புக்களாயும், மறுப்புக்களாயும், சுட்டல்களாயும்,

சமயத்தில், இயலாமையின் சொரிவுகளாயும்,

வாழ்வின் ஒவ்வொரு படியிலுமான சந்தோசத்தின் பொழிவுகளாயும் வெளிப்பட்ட உணர்வுகளின் கோலங்களே இவை.

இவைகள் வெறும் கதைகள் அல்ல. என்னைச் சுற்றியுள்ள எதார்த்தங்கள்.

நட்புடன்
சந்திரவதனா.

No comments: