Wednesday, October 12, 2016

ஏழாவது சொர்க்கம் - 10

நெற்றிப்பொட்டில் துளையிட்டு நுழைந்து பிடரிக்கு ஊர்கிறது நாக்குளிப்புழு. அதன் அசிங்கமான வளவள உடல் மூளைதோறும் நெளிந்து புரண்டு பிடரிக்குச் செல்லும் பயணத்து¡ரம் பூராவும் அடக்கமுடியாத ஆவேசமும் மனஉதறலும் மாறி மாறித் தாக்குகிறது ராஐ¡வுக்கு.

ஒருவிநாடி நேரம்கூட இருக்கமுடியவில்லை. அந்த எட்டுக்குப் பத்துச் சதுரம் முழுவதும் நடை.. நடை.. ஓயாதநடை. தேகம் அயர்ச்சியில் ஒத்துழைக்க மறுக்கும் ஒவ்வொருகணமும்இ நாக்குளிப்புழு புரண்டு நெளிந்து அவனை நடக்க வைத்துவிடுகிறது.

வயலில் விழுந்த படைக்குருவிகள் வெருளியைக் கண்டு விர்ரென எழும்பி பறந்து மறைவது போல மூளையிலிருந்த அத்தனை நினைவுகள் முகங்கள் எல்லாம் பறந்து மூளை வெறுமையாகிவிட நாக்குளிப்புழு மட்டும் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு ஆட்சி செய்கிறது.

அவனால் உறங்கவோ உட்காரவோ முடியாது. ஓயாது நடக்கவேண்டும். நாள் பூராக நடந்தபடி இருந்தால் சின்னச் சதுர அறை எந்தமட்டுக்குக் காணும்..? ஆகவே அவனுக்கு இந்தச்சிறையை விட்டு வெளியேறி நடந்து விடவேண்டும். ஆதியிலிருந்து அந்தம் வரை இந்தப்பூமியின் விசாலம் கண்டு அதுவும் போதாமல் போக வானத்தின் மேலே எங்கோ ஒரு தொலைவில் வல்லு¡றும் தகைவிலான்குருவியும் புலியும் முயலும் சிங்கமும் மனிதனும் ஒன்று சேர்ந்து உணவுண்டு உறவாடி மகிழும் தேவலோகமான ஏழாவது சொர்க்கம் நோக்கிச் செல்ல வேண்டும். பின்னர் அதுவும் அவனது நடைக்குப் போதாமல் போகும்போது வேறொரு இடம் நோக்கி யாத்திரை செல்ல வேண்டும். யாத்திரைக்கு இறுதி இல்லை.

நடைச்சுவடுகளை காற்றும் மழையும் அழித்துவிட அவன் பிறந்து தவழ்ந்து வளர்ந்து மண்ணைவிட்டு போராளியாக வெளியேறி பின்னர் அகதியாக கரைசேர்ந்து உழைத்து ஏமாற்றி வளமாகி இழந்து வெறுமையாகிய வரலாறு நாளைக்கு இதேமாதிரி நடப்பவனுக்குத் தெரியக்கூடாது.

தெரியாதது இருக்கும் வரைக்கும் பின்னால் வருபவன் சுயமான பாதையை தெரிந்து கொள்வான். யாரும் யாரையும் பின்பற்றி நடக்க இந்த ஐன்மத்தில் ராஐ¡விடமிருந்து சுவடுகள் அறிவித்தல்கள் தத்துவங்கள் கிடையாது. அவன் நேற்றும் நடந்தான். இன்றும் நடக்கிறான். நாளைக்கும் இந்தச் சிறைச்சதுரமும் நடக்கக் கூடியமாதிரி கால்களும் ஒத்துழைத்தால் நடந்து முன்னேறுவான். எங்கே எப்போது எப்படிப் போகவேண்டும் என்ற தீர்மானங்கள் கிடையாது.  என்றாவது ஒரு நாள் மூளைக்குள்ளிருந்து ஓயாது உபத்திரவப் படுத்தும் நாக்குளிப்புழு தனது கடைசி நெளிதலை முடிக்கும். பிடரியில் துளையிட்டு வெளியேறியதும் வெளிக்காற்றின் விசம் தாக்கி இறந்து போய் அவனது முதுகில் பொத்தென்று விழும்.

அதை அடக்கம் பண்ணவும் அவனை வெளியேற்றி விடவும் சிறைக்கதவுகள் ஒரு நாள் திறக்கும்.

அன்று சிறையை விட்டு வெளியேறி அவன் கால் பதிக்கும்  போது மண்ணில் பசும் புல் படர்ந்திருக்கலாம். புல்லுக்கு அடியில் மேலும் கூரான கற்கள் நெரிபடலாம். ஆனால் வெளியில் இருப்பவனுக்கு உலகம் விசாலமானது. எங்கும் திசைகள் அற்று அது பரந்து விரிந்திருக்கிறது.

- ஜெயரூபன் (மைக்கேல்)

(முடிந்தது)

Quelle - பதிவுகள் அக்டோபர் 2001, இதழ் 22

No comments: