Tuesday, March 27, 2007

மீட்டாத வீணை - 10

10
பக்கம் 100

இருள் சூழும் நேரம். அமைதி, பயங்கரமான அமைதி. கிழவியின் இருமல் ஒலியோ, முனகல் ஒலியோ, முணுமுணுப்போ இப்பொழுது இல்லையே. இனந்தெரியாத பயம் தேவியின் இதயத்தில் பரவுகிறது. தனிமை, மிக மிகப் பயங்கரமானது. பள்ளிக்கூட விடுமுறை. பிள்ளைகள் கூட படிக்க வருவதில்லை. செல்லம், தேவியோடு பேசுவதும் தடை செய்யப் பட்டது. ஊரெல்லாம் அவளைப் பார்க்கும் பார்வை, பார்த்த பின் தமக்குள் அவர்கள் பேசும் பேச்சு - செய்யாத தவறுக்கு அவள் தண்டனை அனுபவித்தாள். வீட்டுக்குள் அவளால் இருக்க முடியவில்லை. கோபால், இரண்டு நாட்களாக வீட்டுக்கு வரவேயில்லை. படலையருகில் அவள் நின்றாள். வேலை முடிந்து, கோயிற் கிணற்றில் குளித்து விட்டு இளங்கோ ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு வந்தான்.

"தம்பி, இளங்கோ இஞ்ச ஒரு விசயம், வந்திட்டுப் போறியே!" தேவி அவனை அழைத்தாள்.

"தம்பி, இவன் கோபால் தியேட்டருக்குப் போனவன். இரண்டு நாளாக வரவில்லை."

அவள் குரலில் பயம் தொனித்தது. இளங்கோவின் முகம் மாறியது.

"அவனோட நான் கதைக்கிற இல்லை."

"எனக்குத் தெரியும் தம்பி. எனக்காக, அவனை ஒருக்காப் போய் பார்க்க மாட்டியே?"



பக்கம் 101

அவள் ஏக்கத்தோட கேட்டாள். அவன் பேசவில்லை. அவள் கண்களில் கண்ணீர் நிரம்பியது. வேறு யாரோ தெருவோரம் போனார்கள். அவள் கூப்பிட்டாள்.

"கந்தசாமி அண்ணையே, இஞ்ச ஒருக்கால் வந்திட்டுப் போங்கோ"

"என்ன பிள்ளை?" அவர் கேட்டார்.

"அண்ணே எங்கடை கோபாலைக் கண்டனீங்களே?"

"இல்லை பிள்ளை" அவர் வேகமாக நடந்தார். அவளோடு பேசவே ஆண்கள் பயந்தார்கள். காரணம் பெண்கள்தான். இளங்கோ இன்னும் நின்றான்.

"தம்பி, தனிய இரவிலே எப்பிடி... அவன்... அவன் கொஞ்சம் கூட யோசனையில்லை."

அவள் விசித்து, விசித்து அழுதவாறே உள்ளே போனாள். இளங்கோவின் மனதை ஏதோ அரித்தது. கோபாலைத் தேடி அவன் போவதா? அதுவும் கணபதிப்பிள்ளையர் வீட்டிற்கா? அவன் தன்மானம் மனிதத் தன்மையை மறைத்தது.

கப்போடு சாய்ந்தவாறே அவள் நிலத்திலிருந்தாள். கன்னத்தில் அவள் கைகளிரண்டும் பதிந்திருந்தன. விரல்களினிடையே அவள் விழி, நீர் ஓடியோடி இப்பொழுது காய்ந்து விட்டது. எரியாத அடுப்பொன்று அருகே. எரிகின்ற உள்ளமோ அவளிடத்தே இருட்டு. இதுதான் அவளுக்குப் பழக்கமானது. கண்களை மூடினாள். அப்பொழுதும் இருட்டுத்தான். மூடிய கண்கள் மூடியே இருந்து விட்டால்...?

குளமோ, குட்டையோ ஒரு முழக் கயிறோ...? சே... அவளுக்கென்று யாரும் வேண்டாம். அவளுக்காக பேசக் கூட ஒருவரும் இல்லையா?பனையோலைகள் பயங்கரமாக ஓர் ஓசையை ஏற்படுத்தின. காற்றினால் புழுதி அவள்




பக்கம் 102


உடலெங்கும் வாரி இறைக்கப் பட்டது. அவள் அந்த அரசடியைப் பொறுத்த வரையில் புழுதியில் விழுந்த பூமாலைதானே.

சே... என்ன வாழ்க்கை? என்ன மனிதர்கள்? என்ன செய்ய முடியும்? விரக்தியும், வெறுப்பும் சேரும் போது ஒருவித வெறி ஏற்படுகிறது. ஏன் நான் அழ வேணும்? என்னைப் பற்றி இல்லாத பொல்லாததைக் கதைக்கிற இந்த மனிதர்களை பழி வாங்க வேணும். அழ வைக்க வேணும். அவள் போராடினாள். ´சொந்தத் தம்பியே வர இல்லையே! இனி எனக்கு ஆர்? என்ரை வாழ்க்கை என்ன மாதிரி இருக்கப் போகுது?´ அவள் முன்னால் இருட்டுத்தான் இருந்தது.

"தேவி, தேவி" மெல்லிய அந்தக் குரல் மெதுவாக அவளை அழைத்தது. தேவியின் உள்ளத்தில் ஒரு புத்துணர்ச்சி. உடலிலே ஒரு படபடப்பு. அவள் எழுந்தாள்.

"விளக்கைக் கொளுத்த நெருப்புப் பெட்டியும் இல்லை" அவள் சொன்னாள்.

"விளக்கு வேண்டாம்"

"தேவா"

"தேவி, அம்மாக்குத் தெரியாமல் வந்தனான். பலத்துக் கதைக்காதே." அவன் அவளுக்கு மிக அருகில் நின்றான்.

"தேவா, ஏன் அப்பிடி வந்தனீ?"

"தேவி, இன்று முழுக்க நீ தண்ணி அள்ள இல்லை. அடுப்படியாலே புகையே வர இல்லை. விளக்கு எரிய இல்லை. நீ இருக்கிறீயோ இல்லை செத்துப் போனீயோ என்று பார்க்க வந்தனான்." அவன் குரல் தழுதழுத்தது.

"தேவா, நீ ஒருத்தனாவது என் நினைவோடை இருக்கிறியே" அவள் அழுதாள்.


பக்கம் 103


"சும்மா அழாதே தேவி. எவ்வளவு நாளைக்கு இப்பிடி அழுகுறது? அடுப்படிக்க போ சொல்லுறன்."

இருவரும் அடுக்களைக்குள் நுழைந்தார்கள்.

"தேவி, உனக்கு இடியப்பம் கொண்டு வந்தனான். சாப்பிடு." தேவியின் உடல் சிலிர்த்தது. அவளுக்கா அன்பு காட்ட யாருமில்லை? உலகத்திலுள்ள உள்ளங்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தால் கூட அவனுடைய அன்பைச் செலுத்த முடியாதே. ஆயிரம் உறவுகள் இருந்தென்ன! உண்மை அன்பிலே உருவாகும் ஒர் உறவுக்கு அவை ஈடாகுமா?

"தேவா, தேவா" நன்றிப் பெருக்காலும் கண்ணீர் பெருகலாம். அவன் அவள் கண்ணீரைத் துடைத்தான். அவள் தடுக்கவில்லை. அது அவளுக்குத் தேவைப் பட்டது. கண்ணீரைத் துடைக்க கரமிருந்தால் அது பெருகினாலும் இன்பமே.

"சாப்பிடு தேவி" அவன் உரிமையோடு சொன்னான். இருட்டில், அவள் இடியப்பத்தையும் கறியையும் கலந்தாள். ஒன்றோடு ஒன்று இணையும் போது சுவைதான்.

"நீயும் சாப்பிடு"

அவன் மறுக்கவில்லை. அவள் குழைத்துக் கொடுத்தாள். இருவரும் சுவைத்து உண்டனர்.

"தேவி, இன்றைக்கு உன் கண்ணீரை நான் துடைக்கிறேன். எப்பவுமே கண்ணீர் வராமல் பார்க்க..."

"எனக்கு ஆர் இருக்கினம்" தேவா, இது கிடைச்சதே நான் செய்த புண்ணியம்"

"தேவி, ஊரெல்லாம் உன்னைப் பற்றி ஏனிப்பிடிக் கதைக்கிறது?"

"அதைத் தட்டிக் கேட்க யாராவது தாலி கட்டியிருக்க வேணுமே!"


பக்கம் 104

"தேவி, கோபால் எங்கே?"

“எனக்குத்தான் நிம்மதியில்லை. என்னாலே அவன் ஏன் கஷ்டப் பட வேண்டும்?”

"தேவி, அப்பிடிச் சொல்லாதே. உன்னோடு பேசுற ஒவ்வொரு நேரமும் எனக்கு இன்பமாக இருக்கு. இந்த இன்பம் நிலைக்காதா என்று ஏக்கமாகவும் இருக்கு."

"தேவா"

"தேவி, எங்களிருவருக்கம் இடையிலே ஒரு அன்புப் பாலத்தை நாங்கள் எப்பவோ அமைச்சிட்டம். அது நிரந்தரமானது. தேவி, என்னை மன்னிச்சிடு. களங்கம் இல்லாமல் ஆரம்பிச்ச இந்த அன்பு இப்ப..."

அவன் அவள் கரங்களைப் பற்றினான். அவனையறியாது கரங்கள் நகர்ந்தன. அவள் தோள்களைப் பற்றி மார்போடு அணைத்துக் கொண்டன. அவள் நடுங்கினாள். வார்த்தைகள் வரவில்லை. நாக்கு அசைய மறுத்தது. உதடுகளோ துடித்தன. அவன் அவள் காதோடு சொன்னான். இல்லை நெஞ்சோடு பேசினான்.

"தேவி, நானுன்னைக் காதலிக்கிறேன். அப்படித்தான் சொல்ல வேணும்." அவளுடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது. இதமான அவன் அணைப்பை இழக்க அவளால் முடியவில்லை. ஆனால் இதயமோ ´தவறு தவறு´ என்று அவைளக் குத்தியது.

"தேவா, தேவா... நான்... நான...ன் ..." அவள் நடுங்கினாள். அவன் மேலும் அணைத்துக் கொண்டான்.

"தேவி, நீ சொல்லத் துடிக்கிறது எனக்குத் தெரியும். என்னை விட வயசில் கூடின உன்னை நான் எப்படி மனைவியாக்க முடியும், என்று நீ ஏங்குகிறாய். தேவி, உன்னை விட இளையவனை உன்னாலே ஏற்றுக் கொள்ள முடியுமென்றால்...


பக்கம் 105

"முடியாது தேவா முடியாது"

அவள் தன்னை விலக்கிக் கொண்டாள்.

"தேவா, குழந்தையாக நீ இருக்கைக்க கன்னமெல்லாம் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்திருக்கிறனடா. உன்னைக் கணவனாக நான் கனவு கூடக் கண்டதில்லையே. டேய், நீ குழந்தையடா, இன்னும் என் குழந்தையடா."

"தேவி... தேவி..." அவன் அழுதான்.

"டேய், என்னிடம் பாசமுள்ளவங்கள் இல்லையடா. இருக்கிற நீயும், பாசம் வைச்ச ஒரே காரணத்தாலே வாழ்நாள் முழுக்க என்னோடு கஷ்டப் பட வேணுமே?"

"தேவி, என்னோடு வாழுறது கஷ்டமென்று நினைக்கிறியா?"

"டேய் தேவா, என்னை விட இளமையான எத்தனையே அழகான பெண்கள் உனக்காகக் காத்திருக்குதுகள்."

"நீ யாருக்காகக் காத்திருக்கிறாய்?"

"காலனுக்காகத் தேவா. அன்புக்காக நான் ஏங்கினனான். அதை உன் ஒவ்வொரு சொல்லிலேயும், செயலிலேயும் அள்ளி அள்ளித் தந்திட்டாய். அது போதுமடா. அதை விட அதிகமாக எதிர்பார்த்தால் நான் அன்பில்லாதவள் ஆயிடுவேன்."

"தேவி, நான் உனக்குத் தகுதியில்லையா?"

"வயசிலே, வசதியிலே நான்தான் உனக்குத் தகுதியில்லை."

"நானே விரும்பேக்க...?"

"குழந்தை விரும்புறதெல்லாம் கொடுத்தால்...?"

"நான் இன்னும் குழந்தையே...?"


பக்கம் 106

"எனக்கு எப்பவுமே நீ குழந்தைதானடா"

"உன்ரை மனசை மாத்த மாட்டியே"

"என்ர வயசு மாற வேணுமே"

"தேவி, நான் ஏமாந்திட்டன்."

"இல்லை. என்னை ஏமாத்திடாதே. இது ஒரு சபலமடா. தேவா, உன் மேலே எனக்கு இருக்கிற அன்போ, மதிப்போ அணுவளவு கூடக் குறையவில்லை."

"தேவி, எனக்கோ அது ஆயிரம் மடங்கு கூடியிருக்கு. நான் தவறாகக் கேட்டிருந்தால் என்னை மன்னிச்சிடு."

"அப்பிடிச் சொல்லாதே."
அவள் அவன் தோளில் தட்டினாள். அவன் தலையைக் கோதி விட்டாள்.

"தேவி, ஆனால் என்ன உருவத்திலே உனக்கு வேணுமோ, அந்த உருவிலேயே உன் பின்னாலே வர நான் எப்பவும் தயாராக இருக்கிறேன்."

"தேவா" என்றுமில்லாத ஓர் ஆறுதல் அந்த வினாடி அவளிதயத்திற்கு ஏற்பட்டது.

ஆறுதல், அமைதி இவையெல்லாம் அவள் வாழ்வில் மின்னலெனத் தோன்றி மறைவன. வறுமையும், வற்றாத கண்ணீரும்தான் அவள் வாழ்வில் நிலையானவை. பிரகாசமான ´டார்ச்சின் ஒளி´ அவர்கள் மீது விழுந்த போது அவள் நிலைகுலைந்தாள். தேவன் தலை குனிந்தான். அவர்கள் இருவரையும் விட இதயம் ஒடிந்தவள் கையில் ´டார்ச்சுடன்´ நின்ற மீனாட்சிதான். இவ்வளவு தூரம் இரவு நேரத்தில் இருவரும் தனித்து நிற்கும் அளவிற்கு போய் விட்டதே! வழக்கமாக அவள் வாயாடிதான். ஆனால் அன்றோ வார்த்தைகள் வர மறுத்தன.



பக்கம் 107

"டேய்.... ...டேய்... பெடியன் நீயும்... கடவுளே..." தான் கட்டிய கோட்டைகள் தரைமட்டமாகும் போது ஒரு தாய் மனம் தவிக்குந்தானே!

"அடப்பாவி, இன்னும் நிற்கிறியோடா, போடா வீட்டே." அவள் கத்தினாள்.

மகாதேவன் நடந்தான். கண்களைக் கூசவைக்கும் ஒளியை அவள் முகத்தில் பாய்ச்சியவாறே மீனாட்சி தேவியை நெருங்கினாள். கண்களைக் கூசச் செய்தது, டார்ச்சின் ஒளி மட்டுமல்ல. கோபக்கனல் வீசும் மீனாட்சியின் கண்களும்தான். பற்களைக் கடித்தவாறே பயங்கரமான பெண் வேங்கையென அவள் தேவி மீது பாய்ந்தாள். ஒரு கரம் அவள் கூந்தலைப் பற்றியிழுத்தது.

"நாயே, பேயே" என பல்லோடு பல்லைக் கடித்தவாறே மீனாட்சியின் வாயிலிருந்து வந்த நெருப்புத் துண்டுகள் மறக்க முடியாதவை. திருப்பிச் சொல்ல முடியாதவை. தன் மகன் சம்பந்தப் பட்டட விடயமாதலால் அவள் பலத்த சத்தமிடவில்லை. ஆனால் அவை தேவியின் நெஞ்சைப் பலம் கொண்ட மட்டும் தாக்கத் தவறவில்லை. ´டார்ச்´விளக்கு தேவியின் முகத்தோடு ஒரு முறை மோதியது. அடுத்து கீழே விழுந்ததும் பளார், பளாரென கன்னமிரண்டிலும் இரக்கமின்றி மீனாட்சி அடித்தாள். தேவியின் கண்கள் இருண்டன. அவளைப் பிடித்துத் தள்ளி விட்டாள் மீனாட்சி. அடுக்களையின் ஒரு மூலையில் போய் அவள் விழுந்தாள். அணைக்கத் தெரியாத கரங்களுக்கு அவளை அடிக்க உரிமை இருந்தன. மீனாட்சி போய் விட்டாள். ஆனால் தேவியின் உயிர் போகவில்லையே. அவள் இன்னும் அந்த மூலையில்தான் கிடந்தாள். இன்னும் இருளில்தான் இருந்தாள். இரவும், பகலும் மாறி மாறித்தான் வரும். அவள் வாழ்வில் பகல் வரவில்லையே!


பக்கம் 108

பாவம் தேவியக்கா. மற்றவன் எப்படி நடந்தாலென்ன, நான் மனிசத் தன்மையோட நடக்க வேணும். இளங்கோ மகாலட்சுமி தியேட்டர் வாசலில் எண்ணமிட்டவாறு நின்றான். படம் ஓடிக் கொண்டிருந்தது. அவன் கண்கள் கோபாலைத் தேடிக் கொண்டிருந்தன. கோபால் வெளியே வந்தான். இளங்கோவைப் பார்த்தான். அங்குமிங்கும் பார்த்தான். ஒரு ஒதுக்குப் புறத்தை நோக்கி நடந்தான். அங்கிருந்து இளங்கோவை வருமாறு சைகை செய்தான். இளங்கோவுக்கு எரிச்சலாக இருந்தது. ஒருவனோட கதைக்கக் கூடப் பயமா? ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு கோபாலை நோக்கி நடந்தான்.

"இளங்கோ, ஆராவது வர மாட்டினமே என்று ஏங்கிக் கொண்டிருந்தனான். அக்கா எப்பிடி இருக்கிறாள்?" கோபால் முற்றாக மாறி விட்டான். சிரிப்பு, வேடிக்கை எதுவுமே இல்லை. கவலை அவன் கண்களில் குடிகொண்டிருந்தது.

"அந்த நினைவு உனக்கு இருக்குதே?" இளங்கோ கேட்டான்.

"இளங்கோ... என்னிலே உனக்கு சரியான கோவம்" இளங்கோ முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

"உன்னோடு உறவு கொண்டாட வரயில்லை. கொக்கா அங்க அழுது கொண்டிருக்கிறாள்."

கோபால் இளங்கோவின் தோள்களைப் பிடித்தான். அவன் கண்கள் கலங்கின.

"இளங்கோ, உன்னை வேண்டாமென்ற இடத்திலே நான் ஒட்டிக் கொண்டிருக்கிறேன் என்று உனக்குக் கோவம். டேய், இளங்கோ என்னைப் பாரடா" இளங்கோ பார்க்கவில்லை.

"இளங்கோ, என்னைப் பாரடா மச்சான்." கோபாலின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவன் பார்க்கவேயில்லை.




பக்கம் 109

"இளங்கோ, உனக்குத் தெரியாதடா எங்கள் நிலை"

"என்னடா தெரியாது? தொண்டை கத்திக் கத்தி உன்ரை கொக்கா படிப்பிக்கிறது தெரியாதே? தையல் மெசினைச் சுத்திச் சுத்தி அவள் சாகிறது தெரியாதே? அவள் அப்பிடிக் கஸ்டப்பட, நானும், நீயும் அந்தக் காசிலே படம் பார்த்தது தெரியாதே? டேய், உனக்கு வேலை கிடைச்சதாலே நீ என்னை மறக்கலாமடா. என்னாலேயே முடிய இல்லையேடா. கூடப் பிறந்த அவளை உன்னாலே எப்பிடி மறக்க முடிஞ்சது?"

"இவ்வளவுதானடா உனக்குத் தெரியும். இவ்வளவுதானடா எனக்குத் தெரிஞ்சிருந்தது. டேய், இது மாத்திரமில்லையடா. நானும், நீயும் தண்ணி வார்க்கிற தோட்டத்திலேயே அவள் கள்ளக் களவாகக் காய்கறி பிடுங்கிறது, உனக்குத் தெரியாதடா. அப்பிடிப் பிடுங்கப் போய் மகாதேவனிட்டை அடி வாங்கினது உனக்குத் தெரியாதடா. அவள் இரத்தஞ் சிந்தச் சிந்த நான் கண்ணீர் சிந்தினது உனக்குத் தெரியாதடா."

"கோபால்" இளங்கோ நண்பனைப் பார்த்தான்.

"டேய், அந்தக் காட்சியைப் பார்த்த பிறகுதான் உன்னை அப்பிடிப் பேசினவங்களின்ரை காலைப் பிடிச்சுக் கொண்டு வேலை செய்யிறன். டேய், அது மட்டுமில்லையடா, என் அக்கா மேலே தவறான ஆசையோட என் முதலாளி இருக்கிறான் என்று தெரிஞ்சும் கை நீட்டி நான் அவனிட்டை காசு வாங்கிறன். என்னடா பார்க்கிறாய்? ´மானம் கெட்டவனே´ என்று பேசப் போறியா? ஏழைக்கு எதுக்கடா மானம்? எழுத்திலே வைச்சுக் கொள்ளடா அதை. உடலை மறைக்கவே ஒரு துணியில்லை. மானமா? இருட்டிலே வாழ்கிற நமக்கு நேர்மையா?"

"கோபால், கவலைப் படாதேயடா. அமைதியாயிரு."

அடக்கி வைத்த துயரமெல்லாம் அணை கடந்தது. கோபால் பொருமினான்.


பக்கம் 110

"டேய், வறுமை என் அக்காவைக் கன்னியாகத்தான் காலத்தைக் கழிக்க விட்டிது. கால் வயிற்றைத்தான் நிரப்ப விட்டிது. போகட்டும்... அவளை களவெடுக்கிற அளவுக்கு விரட்டிச்சிதேடா... டேய்... டேய்... என்ன கொடுமையடா" கோபாலின் உடல் குலுங்கியது. இளங்கோ வார்த்தைகள் வராது தவித்தான்.

"டேய், உன் உடம்பிலே உரம் இருக்கடா. உன் கையிலே வலுவிருக்கடா. உனக்கு இரண்டு காலிருக்கடா. நீ உழைக்கலாம். உன் காலிலே நிற்கலாம். நான்... நான்... காலில்லாதவனடா. மற்றவன் காலைப் பிடிச்சுத்தானடா வாழவேணும்.

"கோபால், கோபால்... சிரிக்க மாந்திரந்தானாடா சிநேகிதம்? அழுகிற நேரத்தில் என்னை ஏனடா மறந்தாய்? உனக்கு வேலையும் வேண்டாம்: ஒன்றும் வேண்டாம். நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருப்பமடா. ஒன்றாகச் சாப்பிடுவமடா."

"இளங்கோ... டேய்... டேய்... அவனால் பேச முடியவில்லை. கண்களைத் துடைத்துக் கொண்டான். சில வினாடிகள் இருவரும் எதுவுமே பேசவில்லை. இளங்கோவின் கை நண்பனின் தோள் மீது இருந்தது. "வாடா வீட்டை போவம்" இளங்கோதான் கேட்டான்.

"நான் வரயில்லை. இந்தக் கிழட்டு முதலாளி என்னை என்ன கேட்டான் தெரியுமே? அக்காவைத் தனக்குக் கட்டித் தரட்டுமாம். எனக்கு ஐயாயிரம் தாரானாம். அடிச்சுக் கொன்றிருப்பேன். வீட்டுக்கு வந்த உனக்கு அன்றைக்கு என்ன சொன்னவன்? டேய், உயிர் போனாலும் இவனுக்கு ஒரு பாடம் படிப்பிக்கிறதுதான். இஞ்சதான் நான் வேலை செய்யப் போறன்." இளங்கோ எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். கோபால் வர மறுத்து விட்டான்.


பக்கம் 111

"இளங்கோ கோவிக்காதே. இந்தக் காசை அக்காட்டைக் குடு. கொம்மாவைக் கொஞ்ச நாளைக்கு அவளோட இருக்கச் சொல்லடா. என்னை இஞ்சயே இருக்கச் சொல்லி முதலாளியின்ரை ´ஓடர்´. நீ கவலைப் படாதை. இந்தப் பக்கம் வந்தால் என்னைச் சந்தியாமல் போகாதை. அக்காவைப் பார்த்துக் கொள்ளடா, பாவம் அது."

இளங்கோ விடை பெற்றான். கோபால் அவன் சென்ற பாதையையே பார்த்துக் கொண்டு நின்றான். கைகள் கண்களைத் துடைத்துக் கொண்டன.

No comments: