Tuesday, March 27, 2007

மீட்டாத வீணை - 4

4

பக்கம்-28

பட்டப் பகலென எறித்தது வெயில். இளங்கோ இன்னும் இருளில்தான் இருந்தான். ஆதவனின் ஒளி அகிலத்தின் இருளை அகற்றுகிறது. பேரறிஞர் அள்ளித் தந்த அரும் பெருங் கருத்துக்களெல்லாம் அவ்விளைஞனின் இதய இருளை அகற்றவில்லையே! ஒருவன் சிந்தனை தெளிந்தென்ன? உலகில், மனித உணர்வுகளை உணராத ஒரு மனிதன் இருந்தாலும், இங்கு கண்ணீர் பெருகத்தான் செய்யும்! உள்ளங்கள் உருகத்தான் செய்யும்! தன் தந்தை யாரென்று அறிந்து விட்டால் இளங்கோவின் சிந்தை சாந்தி பெறுமா? உண்மையை அறிய வேண்டுமென்ற உணர்வை விட, உலகத்தில் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமென்ற வேதனைதான் அவனைக் கொன்றது. இகழ்ச்சியை, அதுவும் குறுகிய நோக்குடையோரின் நச்சு நாவில் தோன்றும் இகழ்ச்சியை, தாங்கிக் கொள்ளும் இதயம் எங்கே இருக்கிறது? இகழ்ந்தவர்கள் இளங்கோவை இன்னும் மறந்து விடவில்லை. அவனோடு மோதிய வேலுப்பிள்ளையும், அவர் மகனும் இன்னமும் வஞ்சந் தீர்க்கக் காத்திருந்தனர்.

கன்னத்தில் ஊன்றிய இரு கரங்கள், வெறித்த பார்வை... ஆண்டிகளுக்குத் தேவையான அந்த அமைப்பு அவனுக்கு ஏன்?

"டேய், இளங்கோ என்னடா யோசிக்கிறாய்? உரிமையோடு அழைக்கும் இப்படியான உறவுக்காக எத்தனை உள்ளங்கள் ஏங்குகின்றன.


பக்கம்-29

"கோபால் எப்படா வந்தனீ?"

"அப்பப்பா என்னடா வெயில்? உன்ரை உடம்பிலை அடிச்ச வெயில் முடிஞ்சுதே மச்சான்? என்னடா ஒரு கிழமையா படுத்திட்டாய். தியேட்டரிலை இரண்டு படம் வந்து போயிட்டிது."

இளங்கோ, புன்னகை புரிந்தான்.

"நீ போக இல்லையேடா?"

கோபால் கல கலவெனச் சிரித்தான். இளங்கோவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் கேள்வியில் என்ன தப்பு?

"டேய் எல்லாருந்தான் பகிடி விடுவினம். எண்டாலும் நீதான் ஒருத்தன் சுத்தி வளைச்சு விடுவாய்"

"என்னடா இப்ப பெரிய பகிடி விட்டிட்டன்?"

"´நொண்டி, நானில்லாமல் எப்பிடியடா படத்துக்கு போவாய்´ எண்டதை என்ன மாதிரி கேட்டிட்டாய்?" கோபால் விழுந்து விழுந்து சிரித்தான். அவன் கை வாடிப் போன தனது வலது காலைத் தடவியது. இளம் வயதில் வந்த ´போலியோ´ அவன் வலது காலில் தனது ஞாபகச் சின்னத்தை விட்டுப் போயிற்று.

இளங்கோ தன்னை நொந்து கொண்டான். உடலின் ஊனம் உள்ளத்திலும் ஒரு வடுவை ஏற்படுத்தும். மற்றவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அதைச் சுற்றித்தான் இருக்குமோவென பேதையுள்ளம் எண்ணமிடும். இவ்வாறெல்லாம் இளங்கோ நினைக்கவில்லையே. வேதனையை வேடிக்கையாக்கும் கோபால் ஒரு விசித்திரப் பிறவிதான்.

"கோபால், இப்பிடிப் பேய்ப்பகிடி உன்னோடை விடுவனே? மச்சான், டேய் எப்ப படத்துக்குப் போவம்?"

பக்கம்-30

" படம் இருக்கட்டும். உன்ரை உடம்பு எப்பிடி? டேய் இந்தாடா, உனக்கு தோடம்பழமும், முட்டையும் வாங்கிக் கொண்டு வந்தனான்."

படலையைத் திறந்த தங்கம் தன் கையிலெடுத்த இரண்டு ரூபாயைக் கசக்கியபடி நின்றாள்.

"டேய் கோபால், உனக்கேனடா இந்த வேலை? கொக்கா அங்க பாவம், டியூசன் சொல்லிக் கொடுத்து ஏதோ இரண்டு, மூண்டு ரூபாயை உழைக்குது. அதையும் நீ..." இளங்கோ கேட்டான். கோபால் சிரித்தான்.

"மடையா, உனக்குக் காய்ச்சல் எண்டால் மெத்தை வீட்டுக் காரரும், காரிலை போறவையுமே முட்டை வாங்கித் தரப்போகினம்? வெயிற் சூடு அதிலை வந்தவனுக்குத்தான் தெரியும். கொம்மா நிற்கிறா கேள். அவவுக்கு விளங்கும். வெயிலிலை வராத உனக்கு விளங்குமே?"

தங்கத்தின் கையிலிருந்த காசு கனலெனச் சுட்டது. தனக்கு வெயில் சுடுவதை மட்டுந்தான் அவள் நினைத்தாள். அது தேவிக்கும் சுடும் என்பதை ஏன் நினைக்கவில்லை.?

"உங்கடை வீட்டைதான் தம்பி போயிட்டு வாறன்." தங்கம் சொல்லியவாறு அவர்களைக் கடந்து உள்ளே சென்றாள். கால்கள் சிறிது தடுமாறின.

"தங்கமக்கை, இந்த முட்டையைத் தோடம்பழத்திலை கரைச்சுக் கொடுங்கோ. இவனுக்கு நல்லது."

உள்ளே சென்ற தங்கம் ஓடி வந்தாள். "தம்பி, மேனை ஒரு பிழையில்லோ நடந்து போச்சு. உங்கடை வீட்டு முத்தத்திலை ஒரு இரண்டு ரூபாய் விழுந்து கிடந்திது. என்ரை மடியாலைதான் விழுந்தது எண்டு நான் எடுத்துக் கொண்டு வந்திட்டன். இஞ்ச வந்த பார்த்தால் என்ரை காசில்லோ கைப்பெட்டிக்க கிடக்குது. மோனை,


பக்கம்-31

உதைக் கொக்காட்டைக் குடுத்து விடுறியே?" தங்கத்தின் இதய பாரம் சிறிது குறைந்தது.

"அடி சக்கை, டேய் படத்துக்குக் காசு வந்திட்டுது" கோபால் இளங்கோவின் முதுகில் மகிழ்ச்சியுடன் அடித்தான்.

"மோனை, மெதுவா அடியன். அவன் சுகமில்லாதவனில்லே. படங்கிடம் பாராமல் அதைக் கொக்காட்டைக் குடுத்துப் போடு நான் சொல்லிப் போட்டன்" தங்கம் சொன்னாள்.

"அம்மா, கருப்பணி இருக்குதே? இவனுக்குக் கொஞ்சம் குடன்" இளங்கோ தாயிடம் சொன்னான்.

"தம்பி, உந்த மாங்கயை வெட்டு, கருப்பணி கொண்டு வாறன்." தங்கமக்கை ஒரு மாங்காயையும், சத்தகக் கத்தியையும் கோபாலிடம் கொடுத்து உள்ளே சென்றாள். கோபால் மாங்காயை வெட்ட ஆரம்பித்தான்.

"டேய், எத்தனை நாளைக்கடா நாங்கள் மற்றவையின்ரை உழைப்பிலை சீவிக்கிறது. எஸ். எஸ். சி. பாஸ் பண்ணி மூன்று வருசமாப் போச்சு. ஒரு வேலை, வெட்டி செய்யிறமே? பார். கொக்கான்ரை காசிலை படத்துக்குப் போறம.;" இளங்கோ சொன்னான்.

"அதிலை என்னடா பிழை? மண்ணை நம்பித்தானேடா மரமிருக்கு எண்டாலும், இந்த மரஞ்செடி ஒண்டுமே இல்லையெண்டால் இந்த மண்ணுக்கு என்னடா மதிப்பு?

"கோபால், இப்பிடிச் சொல்றதாலை உன்ரை மனச்சாட்சியை உன்னாலை ஏமாத்த முடியுமோ? வேலையில்லாமல் இருக்கிறம் எண்ட கவலை உனக்கில்லையோ?"

"இரண்டு கால் மனுசருக்கே இஞ்ச வேலையில்லையாம். நானென்னடா ஒரு காலிலை நிற்கிறவன்தானே எனக்கார் வேலை தருவினம்?"


பக்கம்-32


"இந்தா தம்பி, கருப்பணியைக் குடிச்சுக் குடிச்சுக் கதையுங்கோ." தங்கம் கருப்பநீரைக் கோபாலிடம் கொடுத்தாள். அவன் வாங்கிப் பருக ஆரம்பித்தான்.

"தம்பியவையள், நானும் உந்த வேi விசயமாக கொஞ்சம் கதைக்க வேணும். உவர், கணவதிப்பிள்ளை யண்ணன் இருக்கிறாரில்லோ, என்ன சொன்னாலும், மனுசன் எங்களுக்குப் பெரிய உதவி. அவரின்ரை தியேட்டரிலை.... என்ன தம்பி அதுக்குப் பேர்?"

"மகாலட்சுமி தியேட்டர்" கோபால், தங்கத்துக்கு உதவினான்.

"ஓம்... அதுதான். அங்க ஒரு சின்ன வேலை கேட்டால் தர மாட்டாரே? இளங்கோ, மோனை உனக்கு விருப்பமெண்டால் நான் கேட்டுப் பாக்கிறன்"

"அடி சக்கையெண்டானாம். அப்ப, ஓசிப் படமெல்லே. உடன போய்க் கேளுங்கோவன்." கோபால், இளங்கோவின் முதுகில் இன்னுமோர் அடி கொடுத்திருப்பான். தங்கத்தைப் பார்த்து விட்டு கையை மடக்கிக் கொண்டான்.

"போய்க் கேட்டுப் பாரம்மா. ஏதாவது வேலை தந்தால் பெரிய காரியம்" இளங்கோ சொன்னான்.

"இளங்கோ.. இளங்கோ.."

"படலேக்க ஆரோ கூப்பிடினம். ஆரது? உள்ள வாங்கோவன்" தங்கம் அழைத்தாள்.

"அது நான்தான் மாமி. எப்பிடி மோனுக்கு?"

"அட மகாதேவனே வா மோனை வா" தங்கம் வாயார வரவேற்றாள். "கொம்மா, அண்டைக்குப் பேசின பேச்சிலை, எங்களைத் திரும்பியும் பார்க்க மாட்டியள் எண்டில்லே நினைச்சனான். பாவம் அந்தப் பெட்டை வேற வீணாக..."


பக்கம்-33

"அவள் தங்கைச்சி, விசயத்தைப் பிறகுதானே சொன்னவள். எண்டாலும் பாருங்கோ, அவளுக்கும் அது வேணும். பொம்பிளைப் பிள்ளையள் கொஞ்சம் புத்தியா நடக்க வேண்டாமே? அட, கோபால் நீயும் நிற்கிறியே?"

"வா மச்சான், நல்ல நேரம். கருப்பணி நேரம். இரன்." கோபால், மகாதேவனின் கரத்தைப் பிடித்து நிலத்தில் அமர்த்தினான்.

"அம்மா, மககாதேவனுக்கும் கருப்பணி கொண்டு வாவன்" இளங்கோ தாயை வேண்டினான். தங்களம் உள்ளே சென்றாள். "மகாதேவா, தோட்டமெல்லாம் எப்பிடி?"

"இப்பத்தானடா தண்ணி இறைச்சிட்டு வாறன்" மகாதேவனின் மேனியில் ஓடிய வியர்வை அதைத் தெளிவாகச் சொல்லிற்று. ஒரு பெரிய பானையில் தங்கம் கருப்ப நீரைக் கொண்டு வந்து வைத்தாள். கோபால் இன்னொரு மாங்காயை வெட்டிக் கிண்ணத்துள் போட்டான். இருவரும் கருப்ப நீரைக் குடிக்க ஆரம்பித்தனர்.

"திருவிழாச் சண்டையைப் பற்றி பெடியள் என்ன கதைக்கிதுகள்?" இளங்கோ கேட்டான்.

"வேலுப்பிள்ளை மாமா, உன்னை ஒரு கை பார்க்கிறனெண்டுதான் நிக்கிறார். மணியனும் முறுகிக் கொண்டுதான் நிக்கிறான். நீ அதைப் பற்றிக் கவலைப் படாதை."

"நானொண்டும் சண்டித்தனத்துக்குப் பயந்தவனில்லை." இளங்கோ ரோசத்தோடு சொன்னான்.

"மச்சான் நான் நிக்கிறன். நீ விடாதை" கோபால் தோள் கொடுத்தான்.

"ஏனடா, நானொருத்தன் இல்லையே? நாங்கள் படிச்ச பெடியள். அவர் அந்தக் காலத்து ஆள். கொஞ்சம்


பக்கம்-34

நாங்கள்தானே பணிஞ்சு போக வேணும்" மகாதேவன் கூறினான்.

"தம்பி மகாதேவன், உண்மையிலே மோனை. நாவூறு படக் கூடாது, நீ ஒரு விசயம் தெரிஞ்ச பிள்ளை. ஊரோட ஒத்தோடத் தெரிஞ்ச நல்ல பிள்ளை." தங்கத்தின் குரல் உள்ளேயிருந்து கேட்டது.

"அம்மா, உந்த விசயத்திலை நீ தலைப்போட்டால், வீண் தொந்தரவுதான் வரும்" இளங்கோ எச்சரித்தான்.

"கேட்டியே தம்பி?" மகாதேவனைப் பார்த்துச் சொன்ன தங்கம் முணுமுணுத்தாள். ஏதோ நல்லதுக்குச் சொன்னால்..."

"மகாதேவா, வேலுப்பிள்ளையர் உனக்கு மாமாவா இருக்கலாம். அவர் என்ரை பொறுமையைச் சோதிக்க நான் இடங் குடுக்க மாட்டன்." இளங்கோவின் அந்த வார்த்தைகளால் மகாதேவனின் முகம் வாடியது.

";ஆறிற நெருப்பை ஏன் வீணாகக் கிளறுறாய்? இளங்கோ, ஒண்டு சொல்லுறன், மாமாவோ, மச்சானோ... ஆராயிருந்தாலும், எங்கடை அடுப்பு எரிஞ்சால்தான் எங்களைச் சுத்தி ஆக்கள் வருவினம். பசியாலை வயிறு எரிகிற நேரத்திலை ஆர் வருகினம்? நாங்களும் கஷ்டப் பட்ட நாங்கள்தான். எங்கடை கையை நம்பி வாழுற நாங்கள், இஞ்ச வந்து மாமாக்கு அப்புக்காத்து வேலை, நான் பார்க்கத் தேவையில்லை."

"நீ வீணாகக் கோவிக்கிறாய் மச்சான். இளங்கோ மனமுடைஞ்சு போயிருக்கிறான். நாங்கள்தானே..." கோபால் முடிக்கு முன்னர் மகாதேவன் குறுக்கிட்டான்.
"அதுக்குத் தானேடா நான் வந்தனான். உந்த விசயத்தை என்னோடை விடுங்கோவன். அவையா ஏதும் கிளறினால் நாங்களும் பார்ப்பம். இல்லையெண்டால்,


பக்கம்-35

ஏன் வீண் மனக்கசப்பு? இளங்கோ நீ சிநேகிதன். மணியனோ மச்சான். மாமா, மாமி வேறை."

"உனக்கும் ஒரு தங்கைச்சி அங்க வயசு வந்து நிக்குது" கோபால் குறுக்கிட்டான்.

"உந்தக் கதையை விடு தம்பி. உவன் குடிகாரனுக்கு என்ரை செல்லத்தைக் குடுப்பனே? அதுக்கில்லை மச்சான். ஒரு நல்லது கெட்டதுக்கு, நாலு பேர் வீடு தேடி வர வேணுமே. தனிச்சு வாழுற காலம் போயிட்டுது. இது சமுதாயம். பல இனம், பல மொழி பேசிற மக்களே ஒருவரை ஒருவர் நம்பி வாழ வேண்டிய காலம். நீ செத்தாக் கூட, உன்னைத் தாக்க நாலு பேர் வேணுமோ, இல்லையோ?"

"மகாதேவா, நீயேன் கவலைப் படுறாய்? இந்த விசயம் என்னைப் பொறுத்தவரை முடிஞ்சு போனதுதான். கோயில் கூடாதென்றால் அதை இடிக்கச் சொல்லி பக்தர்களுக்குத்தான் சொல்ல வேணும். ஆனால் அதை அவர்கள் பக்தியிலே இருக்கைக்க சொன்னால், இடி எங்க விழும்? நாங்கள் இளம் பெடியள்தான். இடத்தைக் காலத்தைப் பார்த்துக் கதைக்கத் தெரியல்லை" இளங்கோ சொன்னான்.

இவர்கள் பேச்சைக் கேளாதவள் போல் தங்கம், குடத்திலிருந்த தண்ணீரை எடுப்பதற்கு வெளியே வந்தாள். ஆனால் தண்ணீரை எடுக்காமலே பதறியபடி ஓடி வந்தாள்.

"ஐயோ பெடியள் அங்கேயல்லோ வேலுப்பிள்ளையரும் மோனும் வருகினம். ஐயோ பிள்ளையாரே! கம்பு தடியோடை நாலைஞ்சு பேருமில்லோ வருகினம்" மகாதேவன் துள்ளியெழுந்தான். கோபால் தடுமாறியவாறு எழுந்தான். இளங்கோ அசையவில்லை.

"ஓடுங்கோடா, பெடியள் நான் அவையோடை கதைக்கிறன்" தங்கம் பதறினாள்.


பக்கம்-36

"பார்த்தியேடா எங்கடை வீரத்தாயை" கோபால் அந்தச் சமயத்திலும் சிரித்தான். மகாதேவனின் முகம் மிகவும் கடுமையாக இருந்தது.

"மாமி உள்ளை போங்கோ. இஞ்ச கொலை நடந்தாலும் நீங்கள் வெளியிலை வரக் கூடாது."

"கும்பிட்டன் பெடியள், உங்க உங்க பாட்டிலை போங்கோடா" தங்கம் அவசரப் படுத்தினாள்.

"அம்மா, உள்ளை போ" இளங்கோவின் குரலில் ஒரு தலைவனின் உரம் இருந்தது. தங்கம் "என்ரை பிள்ளையாரே!" என்ற படி உள்ளே போனாள்.

"டேய், கோபால் நீ இளங்கோவோடை நிண்டு கொள். நான் போய் அவையைச் சந்திக்கிறன். ஒரு தம்பி இஞ்ச கதைக்கக் கூடாது. உங்க பாட்டிலை இருக்க வேணும்."

"மகாதேவா, நீ போ. என்ரை விசயத்தை நான் பார்க்கிறன்" இளங்கோ சொல்லுமுன் படலையருகில் சத்தம் கேட்டது.

"ஒரு தம்பி இஞ்சை கதைக்கக் கூடாது எண்டில்லே சொன்னனான். இளங்கோ நான் சொல்லுறதை நீ கேள்." சத்தம் போட்ட மகாதேவன் படலையை நோக்கினான்.

"யாரடா அங்கை, உள்ள இருக்கிறவன், சண்டியனென்றால் வெளியிலை வாடா" வேலுப்பிள்ளையரின் குரல் கர்ச்சித்தது.

கோபால் இளங்கோவை அசையாமல் பிடித்துக் கொண்டான். தங்கம் அங்குமிங்குமாகப் பதறியபடி நின்றாள். மகாதேவன் படலையை நோக்கி நடந்தான். நிமிர்ந்த அவனது நெஞ்சும் நேரான அவனது நடையும் ஒரு மல்யுத்த வீரனை நினைவுட்டின.


பக்கம்-37

"டேய் வெக்கம் கெட்டவனே, வீரமிருந்தால் வெளியிலை வாடா."

"எடியே தங்கம் உன்ரை மோனை வரச் சொல்லு பார்ப்பம்."

"இண்டைக்கு இரண்டிலை ஒண்டு, உவன் நேற்றுப் பிறந்தவன். எங்கடை வேலுப்பிள்ளையருக்கு கை வைக்கவோ?"

பல குரல்கள் மாறி மாறிக் கேட்டன. மகாதேவன் படலையைத் திறந்தான். கம்பும் கையுமாக ஐந்தாறு மனிதர்கள் அங்கு நின்றார்கள். அவனைக் கண்டதும் அவர்களிடையே ஒரு சலசலப்பு ஏற்பட்டது. வேலுப்பிள்ளை முன்னால் வந்தார்.

"மகாதேவா, உனக்கு இஞ்ச என்னடா வேலை?" அவர் கேட்டார்.

"மாமா, ஒருத்தனுக்கு அடிக்கிறதுக்கு இவ்வளவு பேர் என்னத்துக்கு?" மகாதேவன் நிதானமாகக் கேட்டான். வேலுப்பிள்ளையின் கரம் அவனது தோளில் விழுந்தது.

"நீ உதுக்குள்ளை தலையைப் போட்டால் சொல்லிப் போட்டன், கிள்ளி எறிஞ்சு போடுவன். பிறகு கோவிக்காதை"

"மாமா, நீங்கள் பெரிய மனுசர். இது என்ன சின்னத்தனமான வேலை? அவன் இளம் பெடியன் ஏதோ சொன்னான். அதுக்குள்ள நீங்களேன் தலையைப் போட்டியள்? பெடியள் விசயத்தை பெடியளோட விடுங்கோவன்" மகாதேவன் அமைதியாகச் சொன்னான்.

"மடையா, எனக்குப் புத்தி சொல்ல வாறியே? விட்டனெண்டால் பல்லுப் பறக்க" வேலுப்பிள்ளையர் கையை ஓங்கினார். யாரோ ஒருவன் அதைப் பிடித்துக் கொண்டான்.


பக்கம்-38


அயலிலுள்ள வேலிகளினூடே பல தலைகள் எட்டிப் பார்க்க ஆரம்பித்தன. மீனாட்சி சேலைத் தலைப்பை மடியில் செருகிய படி ஓடி வந்தாள். செல்லம் படலை வாசலில் நின்று ஒழுங்கையில் நடப்பதைப் பார்த்தாள். தேவியும் அருகில் நின்றாள்.

தகப்பனை விலக்கிக் கொண்டு முன்னால் வந்தான், மணியன்.

"மகாதேவா, உன்னோடை எங்களுக்குக் கதையில்லை. எங்கேயடா அவன்?"

"அண்ணே, அண்ணே என்ன அண்ணே இது? என்ரை மோனோட என்ன செய்யிறியள்? டேய் மணியா, போடா அங்கலை." மீனாட்சி மணியனை அப்பால் தள்ளினாள்.

"தங்கைச்சி, நீ வீட்டை போ. இது ஆம்பிளையள் விசயம்." வேலுப்பிள்ளை கட்டளையிட்டார்.

"வெக்கங்கெட்ட வேலையில்லே செய்யிறியள். மாமனும், மருமோனும் சண்டையே? அண்ணே, அவன் சின்னப் பெடியன். உனக்குப் புத்தி எங்க போச்சு?" மீனாட்சி சத்தமிட்டாள். வேலுப்பிள்ளையின் மடியில் பிடித்துத் தள்ளிக் கொண்டு போனாள். வேலுப்பிள்ளையர் தனித்ததும் மெதுவாக, ஆனால் கோபத்தோடு பேசினாள்.

"உனக்கு மூளையிருக்கே அண்ணே, இளங்கோவோடை சண்டை போட இப்பவோ வரவேணும்? என்ரை மகனிலை ஆராவது தொட்டியளோ சொல்லிப் போட்டன். உன்ரை செத்தவீட்டுக்கும் நானில்லை. உங்கடை கலியாணத்துக்குமில்லை"

வேலுப்பிள்ளை குறி தவறுவதை உணர்ந்தார். இளங்கோவோ வெளியே வரவில்லை. மகாதேவனோ உறுதியாக அங்கு நின்றான். யாருமற்ற இளங்கோவோடு மோதலாம். ஆனால் மகாதேவனோடு மோதினால் விளைவு நல்லதாக இருக்காதே.


பக்கம்-39

இச் சமயத்தில் எங்கிருந்தோ வந்த தேவியின் பாட்டி, தன் பொல்லையும் ஓங்கியவாறு ஓடி வந்தாள்.

"டேய் வேலுப்பிள்ளை, என்னடா செய்றாய், உவன் தங்கத்தின்ரை வளவுக்க? வேலை மினைக்கெட்டதுகள். போங்கோடா, எல்லாரும் அவ, அவயின்ரை வீட்டுக்கு... அங்க பெண்டுகள் பிள்ளையளைப் பற்றிக் கவலையில்லை. அவேக்குச் சண்டித்தனமும், சண்டையும், டேய் வேலுப்பிள்ளை கூட்டிக் கொண்டு போடா உவங்களை. உங்கடை கதையெல்லாம் கிழிச்சனெண்டால்.... சந்தி சிரிக்கும். அவையும், அவையின்ரை சண்டித்தனமும்."

கிழவிதான் அவள். ஆனால் அவள் வார்த்தைக்கு ஒரு சக்தியிருந்தது. நாலு விசயந் தெரிஞ்சவள் அவள். சாதாரணமான விசயங்கள் மட்டுமல்ல, பலரது வாழ்க்கை இரகசியங்களையே அவள் அறிந்திருந்தாள்.

"படலையைக் கட்டடி தங்கம். உன்ரை பெடியனைக் கொஞ்சம் அடக்கி வையன். போங்கோடா எல்லாரும்"

முதலில் நடந்தவர் வேலுப்பிள்ளைதான். மற்றவர்கள் பின் தொடர்ந்தார்கள். மணியன் ஏதேதோ முணுமுணுத்தவாறு நடந்தான். தேவி, தன் பாட்டியை ஆச்சரியத்தோடு பார்த்தாள். அந்தக் கிழவிக்குப் பிறகு பிறந்தவர்கள்தானே, அந்த மனிதர்கள் எல்லோரும்.

No comments: