Tuesday, March 27, 2007

மீட்டாத வீணை - 6

6

பக்கம் 53

மையிருட்டு எங்கும் பரவியிருந்த வேளை மகாதேவனின் மனமோ இருட்டில் இல்லை. உலகம் இருளில் இருந்தாலும் அவனிதயத்தில் ஒளியிருந்தது. தன்னம்பிக்கை, தளராத உழைப்பு இவையிரண்டும் அவனிதயத்தை என்றுமே இருளில் விடவில்லை. ´மிளகாய்க்கு´ நாளை மருந்தடிக்க வேண்டுமென்று எண்ணியவாறு மெதுவாக அங்கும் இங்கும் உலாவினான். "சர சர" வென ஒரு சத்தம் கேட்டது. அவன் காதுகள் கூர்மையாகின. யாரோ வேலியைப் பிரிப்பது போன்ற ஓசை. மகாதேவன் கூரையில் செருகியிருந்த ´டார்ச்சைக்´ கையிலெடுத்தான். மறு கையில் நீண்ட கம்பொன்றை எடுத்தான். மெதுவாகத் தோட்டத்தை நோக்கி நடந்தான். அந்த இருட்டிலும் வெகுவேகமாக ஓர் உருவம் தோட்டத்தில் நடப்பது அவனுக்குத் தெரிந்தது. அவனும் பதுங்கிப் பதுங்கி அதை நெருங்கினான்.

"யாரது?" கையிலிருந்த டார்ச்சை அழுத்தினான்.

ஆனால் என்ன கோளாறோ அது ஒளி தரவில்லை. அதற்குள் உருவம் ஓட ஆரம்பித்தது. மகாதேவன் பின்னால் துரத்தினான். சில வினாடிகள் இருவரும் ஓடினர். ஆனால் இருவருக்கும் இடைவெளி குறுகியது. மகாதேவன் எட்டிப் பிடித்திருப்பான். அதற்குள் வாழைக்கு வெட்டி வைத்திருந்த குழியொன்றில் உருவம் விழுந்தது. மகாதேவன் தன் கையிலிருந்த கம்பத்தால் ஓங்கியடித்தான். "ஆ... அம்மா" என்று உருவம் முனகியது.


பக்கம் 54

மகாதேவனின் உடல் புல்லரித்தது. காரணம் அது ஒரு பெண்குரல். மகாதேவன் செய்வதறியாது ஒரு கணம் திகைத்தான். அவன் பலமாக அடித்திருந்தான். தன்னை ஒருவாறு சமாதானப் படுத்திக் கொண்டு அவன் "யாரது?" என்று அதட்டினான்.

பேச்சு வரவில்லை. கருமுகில்கள் மெல்ல, மெல்ல விலகின. பிறைநிலா சிறிது ஒளி கொடுத்தது. மகாதேவன் குழியருகில் குனிந்து பார்த்தான். ´அடி எக்கச் சக்கமாக எங்கேயும் பட்டிட்டுதோ?´ அவன் மனது பதை பதைத்தது.

"அடிச்சுக் கொன்று போடுவன். ஆரது?"

அவன் மீண்டும் கேட்டான், பதிலில்லை. அவன் சந்தேகம் வலுத்தது. அவன் கையால் குழியைத் தடவினான். அவன் கையில் நடுங்கும் ஒரு கரம் சிக்கியது. ஆ... அம்மா, அவள் அழ ஆரம்பித்தாள். நிலவின் ஒளியில் அவளை அவன் பார்த்தான். அவனால் அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. கையிலிருந்த டார்ச்சும், தடியும் கீழே விழுந்தன. பாம்பைத் தொட்டது போல் அவளைப் பற்றியிருந்த தன் கரத்தை இழுத்துக் கொண்டான். "சீ... இப்படிக் களவெடுக்க உனக்கு வெட்கமாக இல்லையே" வெறுப்போடு அவன் கேட்டான். அவள் விம்பினாள். "தேவி, நீ கோபாலிட்டைச் சொல்லியிருந்தான் உனக்குத் தேவையான அளவு தந்திருப்பனே!"

"அம்மா" அவள் அழுதாள். விக்கி, விக்கி அழுதாள். இருகரங்களாலும் முகத்தை மூடியவாறு அழுதாள். அவனுள்ளத்தை ஏதோ அரித்தது.

"இதுக்குள்ளேயே இருக்கப் போறியே, வெளியிலை ஏறி வா" அவன் குழியைக் காட்டிச் சொன்னான்.

அவள் நிலத்தில் கையை அழுத்தி எற முயன்றாள். இருட்டில் தெரியாது அவன் கால்களை அவள் கை அழுத்தியது. அவன்



பக்கம் 55

கால்களில் ´பிசு பிசு´ வென ஏதோ ஒட்டியது. "கையிலே என்ன? ...ஆ ...இரத்தம். அவள் நெற்றியிலிருந்து இரத்தம் வடிந்தது. அவள் கண்களை மறைத்தது. அவள் தள்ளாடித் தள்ளாடி நடந்தாள்.

"தேவி"

அவள் நின்றாள். "டேய், ஒருத்தருக்கும் சொல்லாதேடா. கோபாலுக்குத் தெரிஞ்சால் என்னைக் கொன்று போடுவான்"

"தேவி" அவன் ஏதோ சொல்லத் துடித்தான்.

"உன்னைக் கேட்டால் நீ தருவாய்தானடா... எப்பவுமே கைநீட்டி வாங்கிறதை விட களவெடுக்கிறது கொஞ்சம் மானத்தைக் காக்குமென்று நினைச்சிட்டேனடா" அவள் விம்மினாள்.

"தேவி" அவனுள்ளம் ஏனோ வருந்தியது. "சரியாக இரத்தம் வருகுது"

இதயம் சிந்துகிற இரத்தம் யாருக்கும் தெரிய இல்லையே.

"மகாதேவா, டீச்சர் வேலைக்கு ஒரு சோதனையிருக்காம். அதுக்குக் கொஞ்சக் காசு கட்ட வேணும். சேர்த்த காசு போதாது. அதுதான்... உன்ரை உழைப்பைக் களவாடி அதை வித்து எனக்கொரு உழைப்பைத் தேடப் பார்த்தேன்."

"தேவி, கேட்டால் நாங்கள் தர மாட்டமே"

"எத்தனை தடவையடா கேட்கிறது? எந்த முகத்தோட கேட்கிறது. கொம்மாக்கு முப்பத்தாறு ரூபா இருபத்தெட்டுச் சதம் இன்னும் கடனாக இருக்கு. டேய், உன்னைக் கும்பிட்டன். ஆருக்கும் சொல்லிப் போடாதே"


பக்கம் 56

அவள் போய் விட்டாள். வேலிக்கு மறுபுறத்தில் இன்னொரு உருவமும் அசைந்தது.

அவன் தனியே நின்றான். எங்கும் இரவின் அமைதி. ஆழ்ந்த உறக்கத்தில் எல்லோரும் வீழ்ந்திருக்கும் நேரம். எத்தனை உள்ளங்கள் தூங்கும்? எத்தனை உள்ளங்கள் ஏங்கும்? அவனைத் தோளில் தூக்கி விளையாடிய தேவி! அவன் காதுகளைத் திருகி கணக்குச் சொல்லிக் கொடுத்த தேவி! அவனைக் குளிப்பாட்டியவள். பள்ளிக்கூடம் கூட்டிச் சென்றவள். அவளுக்குத் தோள் கொடுக்க யாருமில்லை.
அவள் கணக்கைச் செய்வதற்கு வழி கிடைக்கவில்லை. இன்று அவள் கண்ணீரில் குளிக்கிறாள். அவளுக்குப் பாதை காட்ட யாருமே இன்றி பரிதவிக்கிறாள். வயதில் அவர்களிடையே எட்டு ஆண்டுகள் பேதமிருந்தது. வாழ்வில்... மகாதேவன் இடிந்தவன் போலானான். அவன் கண்கள் என்றுமே இல்லாமல் ஏனோ அன்று கலங்கின. அவளோ என்றும் போல் அன்றும் அழுதாள். இல்லை, அன்று அதிகமாகவே அழுதாள்.

--------------------------------------


"இந்தச் சேர்ட்டையில்லே தைச்சு வைக்கச் சொன்னனான். அம்மா, உவள் செல்லம் எங்கே? அவளுக்கு வர வர விளையாட்டுக் கூடிப் போச்சு. சேர்ட்டு கிழிஞ்சு ஒரு கிழமையாகுது. அதைத் தைச்சு வைக்க அவவுக்கு நேரமில்லை" மகாதேவன் அடுத்தநாள் மாலை கோபத்தோடு சத்தமிட்டான். மா அரித்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி. செல்லம் மா இடித்துக் கொண்டிருந்தாள்.

"என்னடி, கொண்ணன் இன்றைக்கு ஒரு மாதிரி நிற்கிறான்?" மெதுவாக செல்லத்திடம் தாய் கேட்டாள்.

"ஓமம்மா, படம் பார்த்திட்டு வரேக்க நல்லா இருந்தவர், காலையிலே இருந்து ஒரு மாதிரித்தான்" செல்லம் நெற்றியின் முன்னே விழுந்த தலைமயிரை விலக்கி விட்டு, தொடர்ந்து மா இடித்தாள்.



பக்கம் 57

"நான் கேட்கிறது ஒருத்தருக்கும் கேட்க இல்லையோ?" அவன் மீண்டும் கத்தினான்.

"ஏனடா சத்தம் போடுகிறாய்? அவளில்லே மா இடிக்கிறாள்." தாய் சொன்னாள். அவன் சேர்ட்டையும் தூக்கிக் கொண்டு அவர்கள் முன்னே வந்தான்.

"நீங்களும் இப்ப பெரிய உத்தியோகம். இதெல்லாம் தைக்க உங்களுக்கு நேரமிருக்காது" அவன் பெரிதாகச் சத்தமிட்டான்.

"நூல் வாங்கித் தரச் சொல்லி எப்ப சொன்னனான்? நீ வாங்கித் தந்தால்தானே தைக்கிறதுக்கு" செல்லம் சொல்லியவாறே தொடர்ந்து இடித்தாள். மாவைத்தான் அவன் மனதையல்ல.

"பொத்தடி வாய் ஒருக்கால் சொன்னால் போதுமே, நீ சொன்ன உடனே நாங்கள் போய் வாங்கி வரவேணும்."

"அவர் சொன்ன உடனே நாங்கள் தைக்க வேணும்" அவள் முணுமுணுத்தாள்.

"என்னடியங்க முணுமுணுக்கிறாய்?"

சேர்ட் அவள் முகத்தில் வந்து விழுந்தது. செல்லம் சிணுங்க ஆரம்பித்தாள்.

"எனக்குத் தெரியாது நீ மாவை இடி." அவள் சேர்ட்டையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் போனாள்.

"ஐயோ மோனை, மோனை பார்த்தியேடா உன்ரை வேலையை. அவள் போய்ப் படுத்தாளோ...? அட சண்டை பிடிக்கிற நீ, மா இடிச்சாப் போல போடக் கூடாதோ?"

மீனாட்சி அங்கலாய்த்தாள். தங்கையின் வேலை நிறுத்தத்தின் விளைவு அவனுக்குப் புரிந்தது. தானே மா இடிக்க வேண்டி வரும் என்பதை நினைத்ததும் தலையை என்னமோ செய்தது.

"அம்மா, நூலை வாங்கித் தரச் சொல்லு"


பக்கம் 58

அண்ணனின் நேரடித் தொடர்பு துண்டிக்கப் பட்டது.

"சேர்ட் இப்ப தேவையில்லை வந்து மா இடிக்கச் சொல்லு" மகாதேவனும் தாயிடந்தான் சொன்னான்.

"சேர்ட் தைச்சாப் போலதான் மா இடிப்பேனென்று சொல்லு" அவள் பதில் கொடுத்தாள்.

"அட உங்கடை சண்டையைக் குப்பையிலே போடுங்கோடா. எனக்கில்லே கோயிலுக்கு நேரமாச்சு. எடி செல்லம், கொண்ணனுக்கு தேத்தண்ணி குடுத்தனீயே?"

"அதெல்லாம் குடிச்சுப் போட்டுத்தானே கத்திது."

"எப்பயடி தேத்தண்ணி தந்தனீ?"

அவன் கேட்டான். அவள் சேர்ட்டோடு ´விடு விடு´ என வெளியே வந்தாள்.

"இரண்டு கோப்பை தேத்தண்ணியும், இரண்டு எள்ளுருண்டையும் சாப்பிட்டுப் போட்டு இப்ப சொல்லுற பொய்யைப் பார்."

"உங்களை யாரடி எள்ளுருண்டை எடுக்கச் சொன்னது?" செல்லம் விரலைக் கடித்தாள். மகாதேவன் "மோடு மோடு" என்று முணுமுணுத்தான்.

"காலையிலை இல்லே ஒவ்வொண்டு தந்தனான். எல்லாத்தையும் ஒரே நாளிலை முடிச்சுப் போட வேணும்"

தாய் தன் பல்லவியைத் தொடங்கினாள்.

"இவளும் சாப்பிட்டவள்"

தாயின் தண்டனையிலும் தங்கைக்குப் பங்கு கொடுக்க அவன் நினைத்தான்.

"நீதானே கூடச் சாப்பிடனீ"


பக்கம் 59


கூடிய பங்கை அவனுக்குக் கொடுக்க அவள் முயன்றாள்.

"வாடி நீ வந்து மாவை இடி. போடா தேவியிட்ட கொடுத்து சேர்ட்டை தை. போவனடா."

தாய் சீறினாள். தங்கை சேர்ட்டை அவனிடம் கொடுத்து ஓடி வந்து உலக்கையை எடுத்தாள். அவன் தேவி வீடு நோக்கி நடந்தான். பக்கத்து வீடுதானே.

"அன்பின் வழியது உயிர் நிலை அஃதிலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு"

"அதாவது அன்பின் வழியில் இயங்கும் உடம்புதான் உயிருள்ள உடம்பு. அன்பில்லாதவர்களுக்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெறும் உடலே."

மகாதேவன் தேவியின் வீட்டை நெருங்கிய பொழுது அவளஇ பிள்ளைகளுக்கு அன்புடைமை படிப்பித்துக் கொண்டு இருந்தாள். அவன் சிறிது நின்று கவனித்தான். அவனும் படிக்க வேண்டிய பாடந்தான். தேவி தலையில் பெரிய கட்டொன்று போட்டிருந்தாள். அவள் முகம் வெளிறி, வாடிப் போய் இருந்தது.

"தேவி" அவன் அழைத்தான். மின்சாரத் தடையால் திடீரென வானொலி நிற்குமே, அது போல் அவள் குரல் நின்றது. அவளள் அவனைப் பார்க்க முடியாது தலை குனிந்தாள்: அவள் மீண்டும் நிமிர்ந்த போது அவள் விழியோரங்கள் நீரால் நிறைந்திருந்தன. மகாதேவன் கண்களைத் தாழ்த்திக் கொண்டான்.

"சேர்ட் தைக்க..."

அவன் குரல் அடைத்தது. இதற்குள் வானொலியில் பல நிலையங்கள் ஓரே நேரத்தில் வேலை செய்வது போல படிக்க வந்த பிள்ளைகள் சத்தமிட ஆரம்பித்தார்கள்.


பக்கம் 60

"பிள்ளைகளே, திருக்குறளைப் பாடமாக்குங்கோ. இந்த மாமாக்கு இதைத் தைச்சுக் குடுத்திட்டு வாறன்."

தேவி வீட்டின் மறுபுறம் போனாள். மகாதேவன் பின் தொடர்ந்தான். அவள் எதுவும் பேசவில்லை. அவனால் எதுவும் பேச முடியவில்லை. அவள் தனது கை மெசினால் சேர்ட்டைத் தைக்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு முறையும் தையல் ஊசி சேர்ட்டைத் தொடும் போது அது அவனிதயத்தைத் துளைப்பது போலிருந்தது. அவள் சேர்ட்டைத் தைத்து அவனிடம் நீட்டினாள்.

"தேவி"

அவள் தலை குனிந்தே இருந்தது.

"காயம் பலமா?" பதிலில்லை.

"நீயென்று தெரிஞ்சிருந்தால் அடிச்சிருக்க மாட்டன்."

அவள் பேசவில்லை.

"தேவி, என்னோட பேச மாட்டியா?"

அவன் கண்கள் கலங்கியவாறே கேட்டான்.

"தேவா" மடைதிறந்த வெள்ளம் போல் அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. மகாதேவனின் கண்களும் நீரைக் கொட்டின. ஏன்? வெளியே பிள்ளைகள் சத்தமிட்டுப் படித்தனர்.

"அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்"

சில கணங்கள் கண்ணீரில் மறைந்தன. அவன் சேர்ட்டால் தன் கண்ணீரைத் துடைத்தான்.

"தேவி, அழாதே. டீச்சர் வேலைக்கு அப்ளை பண்ணினனியே?" அவன் கேட்டான். அவள் இல்லையெனத் தலையசைத்தாள்.


பக்கம் 61

"இன்னும் எவ்வளவு காசு வேணும்?"

அவள் பேசவில்லை. அவனிரண்டு பத்து ரூபாய் நோட்டுக்களை நீட்டினான்.

"இது போதுமா?"

"தேவா" அவள் விம்மினாள். "வேண்டாமடா"

"ஆராவது பார்த்தால்..."

"தேவி இது போதுமோ?" அவன் கேட்டான்.

"தேவா..." அவள் கரங்கள் நடுங்கின. அவன் அக்கரங்களைப் பற்றி, காசைத் திணித்தான். அவளுடலே இப்பொழுது நடுங்கியது. அவன் அவள் கரத்தை இறுகப் பற்றினான். அவன் கண்கள் அவளை அன்போடு பார்த்தன. அவள் அவன் விழிகளைப் பார்த்தாள். ஆயிரம் ஆடவர்கள் ஆசையோடு அவளைப் பார்த்திருக்கிறார்கள். அன்போடு பார்த்த முதல் ஆடவன் அவன்தான். தன் பெற்றோர்களை இழந்த பின்னர் முதலாவது முறையாகக் கருணை பொங்கும் அக் கண்களை அவள் கண்டாள். அந்த உணர்ச்சிப் பெருக்கு அவளை மெய் மறக்கச் செய்தது. மொழிப் பிரச்சனை அங்கு எழவில்லை. அவர்கள் வார்த்தைகளை அள்ளிக் கொட்டவில்லை. அவர்கள் கண்கள் பேசிய மொழி, இணைந்த கரங்கள், பேசிய மொழி அவை அவர்கள் இதயங்கள் பேசிய மொழி!

"தேவி அழாதே"

"இல்லைத் தேவா, ஒரு நெஞ்சின் வேதனையை இன்னொரு நெஞ்சு அறியும் போது, ஆறுதல் தரும் போது வரும் உணர்ச்சிப் பெருக்கு இது"

அவள் முந்தானையால் விழிகளைத் துடைத்தாள்.

"தேவா, தெய்வம் கூட...."



பக்கம் 62

"தேவி, சே.... இதென்ன பேச்சு. போ. பிள்ளைகள் காத்திருக்குதுகள். முகத்தைத் துடைச்சுக் கொண்டு போ.

"தேவா" அவளால் தன்னைக் கட்டுப் படுத்த முடியவில்லை. அவள் மீண்டும் விம்மினாள். அவள் இரு கரங்களையும் கூப்பி அவனை வணங்கினாள். அவன் நடந்தான். திரும்பிப் பார்த்தான். அவள் சிலையென அப்படியே நின்றாள். அவள், அவன் சேர்ட்டிலிருந்த கிழிசலைத் தைத்து விட்டாள். அவன், அவனிதயத்திலிருந்த....

------------------------------------------------


"டேய் இளங்கோ இவ்வளவு புத்தகம் படிக்கிறாயடா. இந்தக் கேள்விக்கு மறுமொழி சொல்லனடா"

"என்ன மகாதேவா, கேளன் பார்ப்பம்"

"உன் கையிலே காயம் பட்டால் உனக்கெப்படியடா தெரியும்?"

"கண்ணால் பார்த்தால் தெரியும்"

"முதுகிலே பட்டால்....?"

"என்ரை உடலிலே எங்கே பட்டாலும் என்னால் உணர முடியும் தானேடா?"

"வெளியிலே உள்ள காயத்தை எங்களால் பார்க்கவோ, உணரவோ முடியுது. பயங்கரமான மிகவும் சின்னக் கிருமிகளாலே ஏற்படுகிற நோய்களை எப்படியடா அறிகிறது? அதுக்கு விசேடமாகப் படிக்க வேணும். அந்த நோய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து கண்டு பிடிக்கப் பட்ட உண்மைகளை நாம் அறிய வேணும். அதுக்குத்தானே டொக்டர்மார் இருக்கினம்."

"உடலுக்கு மட்டுந்தான் நோய் வருகுதா?"

"இல்லை உள்ளங்களைப் பீடிக்கிற நோய்தான் பயங்கரமானது. உடல் நோய்களுக்குக் கூட உள நோயே பல சமயங்களில் காரணமாக இருக்கிறது"

"அதை எப்படியடா கண்டு பிடிக்கிறது?"


பக்கம் 63


இளங்கோ நண்பனை வியப்போடு பார்த்தான். அவனுக்கு ஒரு சந்தேகம். தனது காதல் நோய் மகாதேவனுக்குத் தெரிந்து விட்டதோ என்று.

"என்னடா அப்பிடிப் பார்க்கிறாய்? மகாதேவன் கேட்டான்.

"ஓர் உள்ளத்தில் உள்ளதை எப்படி அறிந்து கொள்வது?" மகாதேவன் கேள்வியைக் கேட்டான். இளங்கோ சிரித்தான்.

"இந்தக் கேள்விக்குச் சரியான பதில் கிடைச்சால் பல பிரச்சினைகளைத் தீர்க்கலாம். எனக்குத் தெரிந்த வழி ஒன்றே ஒன்றுதான் மகாதேவா. இரண்டு இதயங்கள் பேசுகிற மொழி அன்புதான். அந்த மொழியால்தான் உள்ளங்கள் உறவாட முடியும்."

"இளங்கோ, உதடுகள் சிரிக்கும் போது எத்தனை உள்ளங்கள் அழுகுதடா. ஏன் இந்தக் கொடுமை?"

"தனித்தனி உள்ளங்களை எடுத்துப் பார்த்தால் அதற்குப் பல காரணம் இருக்கும். ஆனால், பொதுப்படையாக நோக்கினால் பெரிய உண்மை விளங்கும். நாம் வாழுகிற - இல்லை இருக்கின்ற இந்த சமுதாயத்திலே உண்ண உணவோ, இருக்க இடமோ எல்லாருக்கும் கிடைப்பதில்லை. ஆனால் உள்ளத்தில் அமைதியோ ஒருவருக்கும் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் இயற்கையின் படைப்பிலே இரு மனிதர்களுக்கு இடையே இருக்கும் பேதம். இதே மனிதர்கள் உருவாக்கிய சமுதாயத்தில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகள். இந்த சமுதாயம் மனிதனை மதிப்பிடும் முறை அதன் கண்களில் உயர்ந்ததாக, சிறந்ததாக, மதிப்பிடப் படுபவை. இவைகளால் உந்தப் பட்ட ஒரு மனிதன் இயற்கையாக அவனுக்குள்ள தேவைகள், ஆசைகள் எண்ணங்களோடு மோதுகிறான். அந்த மோதலின் விளைவுதான் அவன் கண்களில் வடியும் கண்ணீர்"

"இளங்கோ, பெரிய லெக்சரே அடிச்சிட்டாய். ஆயிரமாயிரம் அறிஞரெல்லாம் எவ்வளவோ சொன்னார்கள். ஆனாலும் வாழ்க்கை வர வர வறண்டுதான் தெரியிதே"

இளங்கோ ஒரு பெரிய புத்தகத்தை எடுத்துப் பக்கங்களைப் புரட்டினான். ஒரு பெரியவர் சொல்லியிருக்கிறார்.


பக்கம் 64

இதைக் கேள் மகாதேவா. எவ்வளவுதான் மழை பெய்தாலும் அது கடலிலே பெய்தால் பயனென்ன? கண்களை மூடியிருக்கிறோம் நாம். முன்னால் அழகோவியம் இருந்தாலென்ன? அலங்கோலம் இருந்தால் என்ன? ஏட்டில் எழுதியென்ன? மேடைகளில் பேசியென்ன? நாட்டில் நடக்க வேண்டும் மாற்றம். சமுதாயம் என்பது எது? நாங்கள்தான். திடமான உனது தோள், இச் சமுதாயத்தின் ஒரு பகுதியெனத் துணிவு கொள்! காளையரும், கன்னியரும் கட்டியெழுப்ப வேண்டியதுதான், எங்கள் புதிய வாழ்க்கையென நிமிர்ந்து சொல்! பகுத்தறிவற்ற பழைய நம்பிக்கைகளைத் தகர்த்தெறி! சாதி, மதம் வேண்டாம்! பேசும் மொழியில் பேதம் காண வேண்டாம். பாடுபடுவோம்! பகிர்ந்து உண்போம்! ஏங்கும் எழையில்லை! ஏப்பமிடப் பணக்காரர் இல்லை! சீதனம், சீர்வரிசை வேண்டாம். சிங்காரக் கன்னியர் வாழ்க்கை சிதைவுற வேண்டாம்!

இளங்கோ உணர்ச்சி வசப்பட்டு வாக்கியங்களை உரக்கப் படித்துக் கொண்டிருந்தான். அவர்கள் வீட்டு வாசலில் கார் ஒன்று வந்து நின்றது. தங்கம் சேலைத் தலைப்பை இழுத்துச் செருகிக் கொண்டு வாசலுக்கு ஓடினாள். இங்கோவும், மகாதேவனும் ஆச்சரியத்துடன் அவளைத் தொடர்ந்தனர். கணபதிப்பிள்ளையர் காரில் இருந்தார். அவர் கண்கள் கோபத்தாலோ, மது வெறியாலோ சிவந்திருந்தன.

"எடியே தங்கம், உன்ரை மோன் கோயில் விசயத்திலேயெல்லாம் தலைப் போடுகிறானாம். அவனுக்கு வேலையும் கிடையாது, ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது, கவனமாக இருக்கச் சொல்."

அவள் விறைத்துப் போய் நின்றாள். கார் ´விர்´ ரென்று புறப்பட்டுச் சென்றது. இளங்கோவின் காதுகளில் கணபதிப்பிள்ளையரின் வார்த்தைகள் கேட்கவில்லை. காரில், அவருக்கு அருகிலிருந்த வேலுப்பிள்ளையரின் வெற்றிப் புன்னகைதான் அவன் கண்களில் தெரிந்தது. திருவிழாவோடு அவன் வாழ்க்கையின் போர் விழாவும் ஆரம்பமாகி விட்டதை அப்பொழுதுதான் உணர்ந்தான்.

No comments: