Tuesday, March 27, 2007

மீட்டாத வீணை - 7

7
பக்கம் 65


உணர்வுகளின் வேகத்தோடு உடல் இயங்குவதில்லை. தன்னால் முடிந்தவரை வேகமாக அவன் சைக்கிளைச் செலுத்தினான்.அவனது ஒரேயொரு தவிட்டு நிறச் சேர்ட் காற்றில் பறந்து கொண்டிருந்தது. வியர்வை சிந்தும் அவன் மார்பைக் காற்று துடைத்துக் கொண்டிருந்தது. நெற்றியில் பெருகிய வியர்வை முத்து முத்தாக நிலத்தில் விழுந்தது. எட்டி எட்டி அவன் சைக்கிளை உதைத்தான். எண்ணங்களோ கணபதிப்பிள்ளையரைச் சுற்றியிருந்தன. மகாலட்சுமி தியேட்டர் நெருங்கியது. அடுத்ததுதான் ´மகாலட்சுமி பவனம்´. கணபதிப்பிள்ளையரின் மாடிவீடு. அவன் சைக்கிளைச் சுவரோடு சாத்தினான். கார் போகக் கூடிய பெரிய வாசற் கதவுகள் ஆவெனத் திறந்திருந்தன. அவன் உள்ளே நுழைந்தான். அவன் வாசற்படியிற் காலெடுத்து வைத்ததும் உள்ளேயிருந்து கொடுரமான வார்த்ததைகள் வெளி வந்தன.

"எடடா காலை, என்ன துணிச்சலோடயடா நீ என்ரை வீட்டு வாசலை மிதிப்பாய்? நீ எந்தச் சாதியென்று தெரியுமோடா? எந்தச் சாதிக்காரனுக்குப் பிறந்தது என்று தெரியுமோடா?" வாசற்படி நெருப்புக் கண்டங்களால் கட்டப்பட்டது போல் அவன் கால்களை இழுத்துக் கொண்டான்.

"ஐயா ஒரு மனுசனுடைய வார்த்தையைக் கேட்டு என்னை ஏன் வேலைக்குச் சேர்த்துக் கொள்ள மறுத்தனீங்


பக்கம் 66

கள்? வறுமையோட நாள்தோறும் போராடுற ஒரு தாயின் பசியைத் தீர்க்க நீங்கள் உதவக் கூடாதா? நாலுநாள் என்ரை வேலையைப் பார்த்திட்டு வேண்டாமென்றால் நிற்பாட்டுங்கோ."இதைக் கேட்கத்தானே அவன் வந்தான். அவன் காதுகள் இப்பொழுது கேட்பதென்ன? அவன் காதுகளில் விழுந்த அவ்வார்த்தைகளை விட அவன் கண்களில் விரிந்த காட்சி அவனிதயத்தைச் சுக்குநூறாக உடைத்தது. அவன் உற்ற நண்பன் கோபால், உணர்ச்சியற்ற விழிகளால் இளங்கோவைப் பார்த்தான். ஏளனப் புன்னகையுடன் அவனை எச்சலிலை நாயைப் பார்ப்பது போல் பார்க்கும் வேலுப்பிள்ளையரின் கண்கள் அவனைக் கொல்லவில்லை. ஆணவத்தோடு ஆலகால விசத்தைக் கலந்து வரும் கணபதிப்பிள்ளையரின் வார்த்தைகள் அவனை அசைக்கவில்லை. ஆனால் அங்கு அசையாமல் நிற்கும் கோபால், ஆருயிர் நண்பனுக்குக் கிடைத்த அலங்கோல வரவேற்பைக் கண்டு கலங்காமல் நிற்கும் கோபால் இளங்கோவைத் தடுமாற வைத்தான்.

"கோபால், கோபால்" அவன் குரல் தழதழத்தது. "நீ... நீ... கோபால் நீயடா?"

பெரியவர் சொன்னது கேட்க இல்லையே? போடா வெளியிலே" அவன் வெளியிலேதான் நின்றான். ஆனாலும் வேலுப்பிள்ளையர் தன்ரை செல்வாக்கைக் காட்டினார்.

துடிக்கும் நண்பனின் துயரம் கலந்த குரல் கோபாலின் காதுகளில் விழவில்லையா? துன்பம் வரும் போதெல்லாம் துணை நிற்கும் நண்பன்! தன் மகிழ்வை அவனுடன் பரிமாறிக் கொள்ளும் நண்பன்! அவன்தானா அது?

"டேய் யாரடா உள்ளேயிருக்கிறது. வாசலிலே நிற்கிற நாயைப் பிடிச்சு வெளியிலை தள்ளு" கணபதிப்பிள்ளையர் வேலையாளுக்குக் கட்டளையிட்டார்.

"இளங்கோ, ஏன் நிற்கிறாய்? போ, போடா" கோபால்தான் பேசினான்.


பக்கம் 67

"கோபால்..." ஏதோ கேட்க முயன்ற இளங்கோ வார்த்தைகள் வராது தவித்தான். சைக்கிளை நோக்கிக் கால்கள் சென்றன. அதை உருட்டிக் கொண்டு அவன் நடந்தான். தளர்ந்த நடை, தொங்கும் தலை, இளங்கோவின் இதயம் இரும்பெனக் கனத்தது. இதுதான் வாழ்வா? இரக்கமின்றி அவனிதயத்தில் ஈட்டியைப் பாய்ச்சும் இவர்கள்தான் மனிதர்களா? இணைந்தவன் இதயம் உடையும் போது, தன் வழி செல்பவன்தான் இவ்வுலகில் நண்பனா? இளங்கோ இனியதொரு சமுதாயத்தை உருவாக்க இளைஞரையும் இள நங்கையரையும் தேடினாயே. உன் இனிய நண்பனே உன்னுடன் இன்று இல்லையே! மழைத்துளி விழுவதால் கடலின்; உவர்ப்பு மாறி விடாது! கடலோடு நீயும் கலந்து விடு! கண்மூடிக் கொள்கைக்குக் கை தட்டு! பணத்தைக் கட்டி வைத்துக் காப்போருக்கு வாழ்த்துப் பாடு! நீ வாழலாம்!

"சே... எது சமுதாயம்? இரண்டு மனிதர்கள்தான் சமுதாயமா? வசதியுள்ளோர் சொல்வதுதான் அதன் சட்ட திட்டமா? நாங்கள்தான் சமுதாயம்! நாம் வாழத்தான் இங்கு சட்டமோ, சம்பிரதாயமோ! நம்மை வாழ விடாமல் தடுக்கவல்ல! ஒரு சிலர் தம் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளவல்ல! போராடு! இதயமற்றோர் செய்கையால் வேரோடு சாய்ந்த குடும்பங்களோடு சேர்ந்து போராடு! ஏழைகள் தோழனாய், எத்தர்களின் காலனாய் தோளோடு தோள் சேர்த்துப் போராடு!

இளங்கோவின் இதயம் போராடுகிறது. என்ன தவறு அவன் செய்தான்? தந்தையை அறியாதது அவன் தறல்லவே! தவறு அவனுடையது அல்ல. தண்டனை அவனுக்கா? தவறாக இருந்தாலும் தண்டனை கொடுக்க அவர்கள் யார்? வசதியுள்ளவர்கள். தங்கள் வாயசைவால் ஒருவன் வாழ்வை அழிக்கவோ, அளிக்கவோ வல்லவர்கள் ஒரு சிலர்தான். பலரை விலைக்கு வாங்கக் கூடியவர்கள் சட்டங்கள், சம்பிரதாயங்களைத் தங்கள் வசதிக்கேற்றவாறு வளைத்துக் கொள்ளக் கூடியவர்கள். இல்லாதவர்


பக்கம் 68

களை இணைய விடாது தங்கள் பொல்லாத ஆட்சியை நடத்துபவர்கள். பணத்தைப் பாதுகாக்கக் குலம், கோத்திரம் என்பார். இனம், மொழியென்பார். இன்னும் ஆயிரம் பேதம் சொல்வார். சமுதாயம் இவர்களின் கைப்பொம்மையா? இல்லாதவர்கள் இவர்களுக்கு அடிமைகளா? இல்லை, இல்லை இரு கரமிருக்கு. இதயத்தில் உரமிருக்கு. உழைத்து வாழ என்னால் முடியும். நிலம் இருக்குதா? அதில் போட உன்னிடம் முதல் இருக்குதா? உழைப்புதான் எனது முதல். உள் உணர்ச்சி பேசுகிறது. அறிவு தூங்குகிறது.

"என்ன தம்பி இளங்கோ, சைக்கிளுக்குக் காத்துப் போட்டுதோ? ஏன் உருட்டிறாய்?" மேசன் கோவிந்தர் கேட்டார். அவர் வாயில் கள்ளின் மணம் வீசியது.

"இல்லையண்ணை. சும்மா தெரியாதே"

"இஞ்சனைக்க நல்ல சாமான் தம்பி. இவன் இரத்தினத்தின்ரை ஒன்றுதான் போட்டன், வலு கலாதி. ஒன்றைப் போட்டிட்டு வாவன். இரண்டு பேருமாய் போவம்"

"இல்லையண்ணை நான் உது பாவிக்கிறதில்லை"

"என்ன தம்பி இன்னும் தொடங்க இல்லையே? இப்பத்தைப் பெடியள் பத்து பன்னிரண்டு வயசிலே தொடங்கிறாங்கள்"

"எனக்குப் பழக்கமில்லை"

இளங்கோ குடிக்க மாட்டான் என்பது தெளிவாகத் தெரிந்ததும் கோவிந்தர் துணிந்து கேட்டார்
"தம்பி, என்ரை கணக்கிலே ஒன்று குடியன்"

"இல்லையண்ணை"

"சரி பின்னே இந்த பீடியை என்றாலும் பத்து"

"உதுகளும் பாவிக்கிறதில்லை"


பக்கம் 69

"நல்ல பழக்கம் தம்பி, அப்ப சைக்கிளிலை ஏறன் போவம்"

இளங்கோ சைக்களில் தாவி ஏறினான். கோவிந்தர் பின்னால் ஏறிக் கொண்டார். தலையில் தலைப்பாகை, காதில் ஒரு பீடி, சவரம் செய்யாத முகம், சீமேந்து படிந்த கால்கள் இவைகள் கொண்ட கோவிந்தருக்கு வயது நாற்பது இருக்கும். சைக்கிள் நகர்ந்தது.

"தம்பி, வேலுப்பிள்ளையவையோட கொளுவலாம், உண்மையே?" இளங்கோ பேசவில்லை.

"தம்பி, நல்லதுக்குச் சொல்லுறன். பெரியாக்களோட கொஞ்சம் கவனமாக இருக்க வேணும். வயித்தைப் பார்க்க வேணும் இல்லையோ?"

"அண்ணே, ஒரு வேலையுமில்லாமல் பெரிய கஷ்டமா இருக்கு" இளங்கோ சொன்னான்.

"என்ன கதையிது? வேலையோ இல்லை? எங்கடை பொடியளுக்கு உடம்பைக் கொஞ்சம் வளைக்க விருப்பமில்லை."

"அப்பிடிச் சொல்லாதேங்கோ அண்ணே. கமம் செய்ய எனக்கு விருப்பம்தான். இப்ப காடு வெட்டவும் கட்சி மாற வேணுமே. கையிலை நாலு காசு வேண்டாமே?"

"அது உண்மைதான். சொல்லுரன் என்று கோவிக்கக் கூடாது. தம்பி கூலிவேலை செய்தால் என்ன குறைஞ்சே போயிடுவம்!"

அது உங்கடை வாயாலே வரவேணுமென்றுதான் கதையே தொடங்கினனான். அண்ணே உங்கடை மேசன் பாட்டியிலே எனக்கும் ஒரு வேலை தாங்கோவன்"

"அட தம்பி நீயோ? என்ரை சிவ சிவா. உந்த உடம்பு என்ன ஆகும்? நானொரு கதைக்குச் சொன்னால்..."


பக்கம் 70

"அண்ணே, அப்பிடிச் சொல்லாதேங்கோ. அழகு பார்க்கிறதுக்கு இல்லை இந்த உடம்பு. தன்னைத்தானே பார்க்க முடியவில்லை என்றால்..."

"தம்பி, நீ வெற்றிக்குத்தான் கதைக்கிறியே"

"அண்ணே, ஒரு வேலை தர மாட்டிங்களே?"

"தம்பி, சைக்கிளை நிற்பாட்டு" கோவிந்தர் சைக்கிளால் குதித்து இளங்கோவின் இரு கைகளையும் பிடித்தார்.

"தம்பி, உனக்கு நல்லகாலம் காத்திருக்கு. உன் கையை நம்புறாய். உன்னை யாருமே நம்பலாம். நான் வெறியிலை சொல்ல இல்லை. நாளைக்குக் காலைமை வெள்ளன அரசடிச் சந்திக்கு வா. வேலை காத்திருக்கும். உதுக்குள்ளை ஒரு கொட்டில் இருக்கு. ஒன்று போட்டிட்டு வாரன். நீ போ" கோவிந்தர் போய் விட்டார். இளங்கோவின் இதயத்தில் ஒருவிதத் திருப்தி.

----------------------------------------------------------------

இளங்கோ வீட்டிற்கு வந்த பொழுது அவன் தாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்:

"தம்பி, கணபதிப்பிள்ளையரோட கதைச்சனீயே?"

"நான் கதைக்க இல்லை. என்னாலை கதைக்க முடியவில்லை. அம்மா, நானும் மனுஷன்தானே. நானும் மற்றவையைப் போல தலை நிமிர்ந்து வாழக் கூடாதா? எந்தச் சாதிக்காரனுக்கு நான் பிறந்தனான் என்று கேட்டார்" அவன் குரல் தழுதழுத்தது. "சொல்லம்மா, உனக்குத் தெரியாமல் இருக்காதே. யாரம்மா, என்ரை அப்பன்?"

இளங்கோ தன் முதுகைத் தாய்க்குக் காட்டியவாறே பேசினான். தங்கம் அவனருகில் வந்து அவன் முதுகில் கையை வைத்தாள்.


பக்கம் 71


"மோனை, உன்ரை இதயம் துடிக்கிற மாதிரி என்ரை வயிறும் எரியுதடா. ஆனால் என்னாலை எப்பிடி இதைச் சொல்லுறது என்றுதானடா தெரிய இல்லை"

"அம்மா" இளங்கோ தாயின் கைகளைப் பற்றினான். நான்கு கண்களும் குளமாயின.

"அம்மா, நீ கலியாணமே கட்ட இல்லையாமே. உனக்கு எப்பிடியம்மா நான் பிறந்தேன்?"

"டேய், டேய் உன்னைக் கும்பிட்டனடா. என்னைக் கேளாதேயடா" அவள் கெஞ்சினாள்.

"அம்மா, கசப்பான உண்மைகள் வேதனையாகத்தான் இருக்கும். அதை மறைக்கிறது அதைவிட வேதனை அம்மா. சொல்லம்மா, சொல்லம்மா" அவன் கெஞ்சினான்.

"இல்லை இல்லை என்னைக் கேட்காதேயடா. அதை என்னாலே சொல்ல முடியாதடா"

"அம்மா, பயப்படாதே. இனி எந்த உண்மையுமே என்ரை இதயத்தை இதுக்கு மேலே சித்திரவதை செய்யாது. உன்னை விட்டு நான் போக மாட்டேன். எது நடந்தாலும் உன்னோடையே இருப்பன். சொல்லம்மா" அவன் மீண்டும் மீண்டும் கெஞ்சினான்.

வேதனையும் வெட்கமும் கொண்டு தங்கம் அவன் முகத்தைப் பார்க்க முடியாது தவித்தாள். ஒரு தாயிடம் ஒரு மகன் இப்படியும் கேட்க நேர்ந்ததே! தங்கள் ஒரு மூலையில் போய் நின்று அழுதாள். இளங்கோவின் இதயத்தை அது ஏதோ செய்தது. தனது துயரை விடத் தன் தாய் படும் வேதனை மிக மிக அதிகமென அவன் நினைத்தான். அந்த வேதனையை அவளோடு அவனால் பகிர்ந்து கொள்ள முடியாதா? ஒருவருக்காக ஒருவர் அங்கு கண்ணீர் வடித்தனர்.

No comments: