Tuesday, March 27, 2007

மீட்டாத வீணை - 3

3

பக்கம்-20

இதயம் எங்கோ, எங்கோ பறக்கிறது. வெம்மையான ஏக்கப் பெருமூச்சு ஒன்று அவளையும் மீறி வருகிறது. வாளிப்பான தன்னுடலில் வாளி நீரை அள்ளி வார்க்கிறாள் தேவி. அந்த ஏக்கத்தின் வெம்மையைத் தகிக்க முடியவில்லை. அவள் வாளிக் கயிற்றைப் பற்றி இழுக்கும் போது, அவளை முத்தமிட வருவது போல வேகமாக ஓடி வரும் துலா, வாளியில் நீர் நிரம்பியதும் மெதுவாகப் போய் விடுகிறது. எத்தனை வாலிபர்கள் தேவியை ஏக்கத்தோடு பார்த்திருப்பார்கள்? அவள் ஏக்கமும் அவர்களுக்குப் புரிந்திருக்குமே! ஆனால் தேவி யாருக்கும் தேவியாக முடியவில்லை. சுற்றி வர கிடுகு வேலி போடப்பட்ட கிணற்றடி அது. ஓலைக் கிடுகின் ஊடாக ஒளிந்திருந்து, ஒட்டிய சேலையினூடே ஒளி விடும் அவள் உடலழகைப் பார்த்து இரசிக்க வாலிபர்கள் இருந்தார்கள். ஆனால் வாழ்வுக்கு வறுமை கட்டிய சுவரைக் கடந்து, அவளுக்குத் தாலி கட்ட யாரும் இருக்கவில்லை. உருண்டு, திரண்டிருந்த அவள் மார்பகங்களில் இன்று காணும் தளர்வு, அவள் முப்பதிரண்டு வயதைத் தாண்டுகிறாள் என்பதை அவளுக்கு உணர்த்தியது.

ஆழமான அந்தக் கிணற்றின் அடித் தளத்திலிருக்கும் நீரை அவளால் அள்ளி வார்க்க முடிகிறது. அவள் இதயத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆசைக் கனவுகள், ஏக்கங்கள் யாருக்குத் தெரியப் போகின்றன? அந்தக் கிணற்றில்தான் அவள் ஆவி பிரியுமென தேவி அடிக்கடி எண்ணுவ


பக்கம்-21

துண்டு. அள்ளிய நீரை அருகிலிருந்த வாளியில் ஊற்றுகிறாள்.

´கல கல´ வெனும் ஓசை கேட்கிறது. நீரை நிலத்தில் ஊற்றும் ஓசையா? இல்லை. செல்லத்தின் சிரிப்பொலி அது.

"என்ன அக்கா ஓட்டை வாளியிலை தண்ணியை ஊத்திறியள்" செல்லம் சிரித்தாள். "தண்ணீர் வெளியே ஓடுது."

தேவி வாளி ஓட்டை என்பதை அப்பொழுதுதான் உணர்ந்தாள். அவளும் ஓர் ஓட்டை வாளிதான். அவள் பருவமும் ஓட்டை வாளியில் ஊற்றிய நீராகத்தான் மாறுகின்றது.

"அதனாலை என்ன செல்லம்? வெளியிலை ஊற்றிய நீர் வாய்க்காலிலைதானே பாயும். உங்கடை வாழையளுக்குத்தானே நல்லது." தேவி குளிப்பது செல்லம் வீட்டுக் கிணற்றில்தான்.

"வாழைக்கு இந்தத் தண்ணி போகாது. அதோடை போதாது. தேவையில்லாத புல்லுக்கும் பூண்டுக்கும்தான் இது உதவும். செல்லத்தின் வார்த்தைகளில் கள்ளமில்லை. ஆனால் அவை தேவியின் உள்ளத்தை ஊடுருவத்தான் செய்தன. பாழாகி வரும் அவள் பருவம், எந்தப் பயிரை வளர்க்கப் பயன் படுமோ?

"என்னக்கா யோசிக்கிறியள்?"

தேவி கன்னத்தில் வடிந்த தண்ணீரோடு தன் கண்ணீரையும் சேர்த்துத் துடைத்தாள். செல்லத்தோடு எவ்வளவுதான் அன்பாக அவள் பழகினாலும், செல்லத்தின் இளமை அவளது பொறாமையைத் தூண்டுவதுண்டு. மலர்களெல்லாம் ஏன் வாட வேண்டும்? அப்படியே வாடாது இருந்து விட்டால்...?


பக்கம்-22

"செல்லம் நீ குளிக்க இல்லையே. நாலு வாளி அள்ளி வாக்கட்டே?" தேவி கேட்டாள்.

"குளிக்கத்தானே அக்கா வந்தனான். இரண்டு பேருமாகக் குளிப்பம்" செல்லம் சொன்னாள். அவள் உடைகளைக் களைய ஆரம்பிப்பதற்குள், தேவி ஒரு வாளி நீரை அப்படியே செல்லத்தின் மேனியில் ஊற்றி, கல கலவென நகைத்தாள்.

"போங்கோ அக்கா" என்று போலிக் கோபத்துடன் கூறிய படியே செல்லம் குளிப்பதற்குத் தயாரானாள்.

இரு பெண்களின் கேலிப் பேச்சும், சிரிப்பொலியும் கிணற்றடியைக் கலகலப்பாக்கின. ஊர் வம்பெல்லாவற்றையும் அவர்கள் கதைத்தார்கள். சிறிது நேரத்தில் இளங்கோவைப் பற்றிப் பேச்சுத் திரும்பியது. ஒரு வாரத்திற்கு முன்னர் திருவிழாவில் நடந்த சம்பவம் முதல் தனக்குத் தாயார் அடித்தது வரை ஒன்று விடாது செல்லம் சொன்னாள்.

"அது பாவம், சரியான காய்ச்சலாம். ஆசுபத்திரியிலை மூன்று நாள் இருந்ததாம். இப்ப எப்பிடியோ தெரியாது." செல்லம் சொன்னாள்.

"அவன் பாவந்தான். அவன்ரை தகப்பன் ஆரோ தெரியல்லை. எங்கடை அம்மம்மாக்கு ஏதாவது தெரிஞ்சிருக்கும். அவ பழைய காலத்து மனுசி. தங்கம் மனுசியும் ஒண்டும் சொல்லாதாம்." தேவியும் பரிந்து பேசினாள். "அது சரி, உனக்கேன் அவனிலை இவ்வளவு பரிவு?" தேவி கிண்டலாகத்தான் கேட்டாள்.

ஆனால் செல்லத்தின் கள்ளங் கபடமில்லாத உள்ளத்தில் அது ஏதோ செய்தது. நிமிர்ந்த அவள் விழிகளிரண்டும் கண்ணீரால் நிரம்பியிருந்தன. தேவி, செல்லத்தின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.


பக்கம்-23


"செல்லம் ஏனடி, நான் என்ன சொல்லிப் போட்டன்?"

"இல்லையக்கா, எனக்கு இது விளங்க இல்லையக்கா. தங்கம் மாமிக்கு நான் மருந்தெடுக்கப் போனது பெரிய குற்றமே? பாவம் மனுசி. காலெல்லாம் இரத்தத்தோடை கதறுது. இதுக்கு..." செல்லம் விம்மினாள். "அம்மா, அதுக்கு இப்பிடி என்னை அடிச்சிருக்கக் கூடாது." பொல பொலவென அவள் கன்னங்களில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது.

தேவி, செல்லத்தின் தலையை அன்போடு தடவி, அவளது முகத்தை நிமிர்த்தினாள். கண்ணீரைத் துடைத்தாள்.

"செல்லம், இப்பதான் உனக்கு வயசு பதினாறு. இதைப் போல ஆயிரம் பேச்சைக் கேட்டுக் கேட்டு நான் அழாத நாளேயில்லை. இப்பதானே இது உனக்கு ஆரம்பம். செல்லம் அழாதை"

"அக்கா, ஊரார் என்னைப் பற்றி என்னவும் பேசட்டும். என்ரை அம்மாவே அப்பிடி நினைக்கலாமோ?"

"போடி பேச்சி, உனக்கு உலகம் தெரியல்லை. கொம்மா, உன்னிலை கோவத்திலையே அடிச்சவ? ஊர் வாய்க்கு ஏற்பட்ட பயத்திலை. உன்னை அப்பிடிப் பார்த்த உடன் ஏற்பட்ட அதிர்ச்சியிலை உனக்கு அடிச்சிட்டா"

"ஊருக்குப் பயப்பிடுற அம்மா தன்ரை மகள் மனசைப் பற்றி யோசிக்க இல்லையே. அக்கா என்ரை மனம் பட்டபாடு. நான் விட்ட கண்ணீர் - அது அவவுக்குத் தெரிய இல்லையே"

"செல்லம், நீ இன்றைக்கு வடிக்கிற கண்ணீரைப் பற்றி யோசிக்கிறாய். ஊர் வாயைத் திறந்தால் இண்டைக்கு மட்டுமில்லை, நீ எண்டைக்குமே கண்ணீர் வடிக்க வேணுமே! இதைத்தான் கொம்மா யோசிக்கிறா.


பக்கம்-24

"அக்கா, நீங்கள் எப்பவுமே அம்மாமாரின்ரை பக்கந்தானே"

"பிள்ளையில்லையே தவிர, எனக்கும் அம்மாமாரின்ரை வயசுதானேடி" தேவி சொன்னாள்.

"அக்கா, அப்பிடிச் சொல்லாதையிங்கோ. காலம் வரும்."

"இல்லையடி. அதுக்கு முன்னாலை காலன்தானடி வருவான்."

"அக்கா"

"மரத்தைப் பாரடி. வளருது. பூக்குது காய்க்குது. என்னையும் பாரடி.... செல்லம். செல்லம் என்னைப் போலை ஒரு வாழ்க்கை எந்தப் பெண்ணுக்குமே வேண்டாமடி. கட்டழகன், கை நிறையக் காசோடை இருப்பவன்... எண்டெல்லாம் நான் கண்ட கனவுகளைக் கண்ணீராலேயே கலைச்சிட்டன். எனக்கு அன்பு காட்ட ஒருத்தன் வேண்டாமடி. இந்த ஊர் வாயை மூட, எனக்கும் ஒருவன் இருக்கிறானெண்டு சொல்ல ஒரு காலம் வருமோ?"

தேவியின் வேதனை, அவளையும் மீறி விட்டது. அவள் விம்மி, விம்மி அழலானாள். செல்லத்தின் ஆதரவான வார்த்தைகளால் அவள் துயரத்தை அடக்க முடியவில்லை. செல்லத்தின் கண்களிலும் கண்ணீர் பெருகியதுதான் மிச்சம். அவர்கள் கண்ணீரில் குளித்தார்கள். இன்னும் எத்தனை பேர் இப்படியோ...?

தேவியின் வீடும், தங்கத்தின் குடிசையும் மீனாட்சியின் வீட்டின் இருபங்கங்களிலும் உள்ளவை. மீனாட்சி வீட்டுக் கிணற்றைத்தான் அவர்கள் எல்லோரும் உபயோகித்தார்கள். தேவி, இடையில் நீர் நிறைந்த குடத்துடனும், தோளில் ஈரச் சேலையையும் போட்டுக் கொண்டு வீடு நோக்கி நடந்தாள். குடத்தை விட அவள் இதயந்தான்

பக்கம்-25

கனத்தது. குடத்தை நிலத்தில் வைத்து சேலையைப் பிழிந்து காய வைத்தாள். சேலையிலிருந்து நீர் சொட்டுச் சொட்டாக நிலத்தில் விழுந்தது. கனலென எரிக்கும் கதிரவனின் வெப்பத்தில் அது காய்ந்து விடும். ஆனால் அவள் கண்களில் கசியும் நீரை நிறுத்துவதற்கு யார் வரப் போகிறார்கள்?

"பிள்ளை, பிள்ளை முருங்கைக்காய் வேணுமே?" கையில் நான்கு முருங்கைக்காயுடன் தங்கம் நொண்டி, நொண்டி வந்தாள்.

"வாங்கோ தங்கமக்கை" எப்பிடி இப்ப இளங்கோக்கு?" தேவி தன் ஈரக் கூந்தலை உலர வைத்தபடி கேட்டாள்.

"யாரது தங்கமே...! கண் தெரியிது இல்லை. வா பிள்ளை இஞ்சாலை" தேவியின் பாட்டிக்கு யாராவது மனிதர்களைக் கண்டால் போதும். சிறு வயதிலே தாய், தந்தையை இழந்த தேவியையும், அவள் தம்பி கோபாலையும் வளர்த்தவள் அந்தக் கிழவிதான். ஓடியாடி உழைத்த அவள் இன்று ஓய்ந்து விட்டாள். நரை விழுந்த தலை, இருக்கையை விட்டு அதிகம் நகர முடியாத நிலை... காலதேவன் அவள் கதைக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருந்தான். ஆனால், அவளோ இன்னும் தன்கதையின் முகவுரையைக் கேட்க இரசிகர்களைத் தேடிக் கொண்டிருந்தாள்.

"பிள்ளை, அந்த நாளிலை... உவள் தேவிக்கு பத்து வயது... நல்ல காய்ச்சல்..." அவள் ஆரம்பித்தாள்.

"தங்கமக்கை, எனக்குப் பெடியள் படிக்க வரப் போகுதுகள். முருங்கைக்காய் என்ன விலை?" தேவி கேட்டாள். தேவி சொல்லிக் கொடுக்கும் ´டியூசனில்தான்´ அவர்கள் வயிறு நிரம்ப வழியிருந்தது.

"நீ தாரதைத் தா பிள்ளை" தங்கம் சொன்னாள். தேவி முருங்கைக்காயை வாங்கி, பணம் எடுப்பதற்கு


பக்கம்-26

உள்ளே சென்றாள். தங்கத்தின் எண்ணம் மகனைச் சுற்றிக் கொண்டிருந்தது.

"நேற்றுத்தானே இவ்வளவு நாளைக்குப் பிறது சோறு சாப்பிட்டவன். ஒரு நல்ல கறியோடை சாப்பாடு கூட அவனுக்குச் சரியாகக் குடுக்க முடியல்லை. பாவம், எழும்பக் கூட எவ்வளவு கஸ்டப் படுகிறான். என்ன செய்யிறது? எல்லாம் என்ரை தலை எழுத்து. செய்த பாவம்" தங்கத்தின் சிந்தனை திடீரெனத் தடைபட்டது. அவள் விழிகள் திண்ணையிலே விழுந்திருந்த ஓர், இரண்டு ரூபாய்த் தாளில் நிலைத்தன. மடித்தபடி இருந்தது அந்த நோட்டு. அவள் தன் வெறும் மடியைத தடவிக் கொண்டாள். ´இரண்டு முட்டை... ஒரு தோடம்பழம்... அரிசிக்கும் போதும்´ அவள் இதயம் கணக்குப் போட்டது. அடி மனதில் காசை எடுக்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்குகிறது. அதற்கு எதிர்க்கட்சியும் இல்லாமல் இல்லை. ஒரு வினாடிக்குள் அவள் இதயத்தில் நடக்கும் போராட்டம், உடலெங்கும் வியர்வையைப் பெருகச் செய்கிறது. எடுப்பதானால் தேவி வருமுன் எடுக்க வேண்டுமே! தேவியின் காலடி ஓசை கேட்கிறது. தங்கம் ஒரு கணம் சிலையாக நின்றாள். இருதயம் மிக வேகமாகத் துடிக்கிறது. கண்மூடி கண் திறக்கும் நேரத்தில், அந்த இரண்டு ரூபாயை அவள் தன் மடியில் செருகிக் கொண்டாள்.

அவள் இதயத்தின் படபடப்பு - அவள் உடலில், பேச்சில், இதழ்களில் மலர்ந்த சிரிப்பில் - எல்லாந் தெரிந்தது. தேவி பார்த்திருப்பாளா?

"ஏன் தங்கமக்கை உந்தக் காலுக்கு மருந்து போடுறதில்லையே?" தேவி கேட்டவாறு ஐம்பது சதத்தைக் கொடுத்தாள்.

"ஓம் பிள்ளை போடோணும்" தங்கம் திண்ணையிலிருந்து எழுந்தாள். தேவியை நிமிர்ந்து பார்ப்பதற்கு அவளால் முடியாதிருந்தது. அங்கிருந்து வேகமாகப் போக
பக்கம்-27

நினைத்தாள். நெற்றி வியர்வையைச் சேலைத் தலைப்பால் துடைத்தாள்.

"நான் வாறன் பிள்ளை." தங்கம் நடந்தாள். தலை குனிந்தவாறு நடந்தாள். இதயம் படபடத்தது. ´ஐயோ அதையேன் எடுத்தன்?´ என்று சஞ்சலத்துடன் அவள் நடந்தாள். இதயத்தில் புயல் வீசியது.

"மேனை, தேவி இஞ்சவா மேனை" கிழவி தேவியைக் கூப்பிட்டாள். "உவள் தங்கம் எனக்கொரு சொல்லும் சொல்லாமல் போயிட்டாள். வரட்டும்."

"என்ன அம்மம்மா, எனக்கில்லே வேலையிருக்கு" தேவி வந்தாள்.

"என்னடி பெரிய வேலை? அந்த நாளிலை உவள் தங்கம் செய்ற வேலை உனக்குத் தெரியுமோடி? பாவமவள் தனிச்சுப் போனாள். அப்ப, அவளுக்குச் செய்த பாவத்துக்குத்தானே, இப்ப நாங்கள் அனுபவிக்கிறம். எடியே, உவள் விட்ட கண்ணீர், என்ரை காலைப் பிடிச்சுக் கொண்டு உவள் கதறின கதறல், கலியாணஞ் செய்யாமல் அவள் பிள்ளைத்தாச்சி எண்ட உடன், நாங்கூட சிரிச்சனான். எடியே, உவள் ஆருக்காவது சொன்னாளே, உவன்ரை தகப்பன் ஆரெண்டு எனக்கு மட்டுந் தெரியும். பார் அவளை இண்டைக்கு வரை ஒரு பொடிப் பிள்ளைக்குஞ் சொல்ல இல்லை. எடியே தேவி, அவளின்ரை அரிசி தண்ணியிலை வேகிறதில்லையடி. அவள் விட்ட கண்ணீரிலை வெந்ததடி." கிழவி பேசிக் கொண்டே இருந்தாள். தேவியோ தன் வேலையைக் கவனிக்கச் சென்று விட்டாள். அதையே இளங்கோ கேட்டிருந்தால், இந்நேரம் அந்தக் கிழவியின் காலைப் பிடித்தாவது உண்மையை அறிந்திருக்க மாட்டானா?

No comments: