Tuesday, March 27, 2007

மீட்டாத வீணை - 11

11
பக்கம் 112

"கொஞ்சம் எழும்பு பிள்ளை. மெதுவா... மெதுவா... வாயைக் கொஞ்சம் திற... ஆ... ஆ... இன்னொரு கரண்டிதானே. இதையும் குடி பிள்ளை."

ஒரு கரத்தால் தேவியை அணைத்தவாறு, மறு கரத்தால் தங்கம் மருந்தைப் பருக்கினாள். அந்த அணைப்பு, அன்பான வார்த்தைகள் அவை இருக்கும் போது தேவிக்கு ஏனந்த மருந்து?

"இப்ப என்ன செய்யிது பிள்ளை? இன்னும் கிறுதி இருக்கிறதே?"

"இப்ப எனக்கு ஒன்றும் இல்லை." தேவி சிரிக்க முயன்றாள். மயக்கம் வந்து அடுக்களையில் விழுந்ததாகத்தான் அவள் சொல்லியிருந்தாள். அவள் கன்னங்கள் வீங்கியிருந்தன. வலது கன்னம் வீங்கியதால் அவள் அகன்ற விழிகள் சிறிதாகக் காட்சியளித்தன. நெற்றியில் ஆங்காங்கே பஞ்சில் மருந்தைத் தோய்த்துத் தங்கம் ஒட்டியிருந்தாள்."

"அம்மா" இளங்கோ வந்தான். "எப்பிடி இப்ப அக்காவுக்கு?"

"காய்ச்சல் விட்டிட்டுது. இன்றைக்குச் சரக்குத் தண்ணியோட சோறு குடுப்பம்."

"இளங்கோ, உங்களுக்கு என்னாலே பெரிய கஷ்டம்." தேவி மெதுவாகப் பேசினாள்.

பக்கம் 113

"என்ன கதை இது? பிள்ளை நாங்களென்ன பிறத்தியே? நீ ஒரு சொல்லுச் சொல்லியிருந்தால் நான் வந்திருக்க மாட்டேனே...? தம்பி, வந்து சொல்லாட்டால் நீ அந்த அடுப்படிக்க தனிய கிடந்து செத்திருப்பாய்.

"இருந்தும் என்னத்துக்கு...?" தேவி முணுமுணுத்தாள்.

"அப்பிடிச் சொல்லாதை மேனை." தேவி படுத்திருந்த பாயில் அமர்ந்து தங்கம் அவள் தலையை வருடினாள். இளங்கோவிற்கே அது பொறாமையாக இருந்தது.

நான்கைந்து நாட்களாகத் தங்கம் தேவி வீட்டில்தான் இருக்கிறாள். சமையல் கூட அங்குதான். அங்கேயே அவள் படுத்துக் கொள்வாள். இளங்கோ மட்டும்தான் தங்கள் வீட்டில் படுத்தான்.

"மேனை, நான் சொன்ன சாமான் வாங்கினனீயே?"

"ஓமம்மா, இஞ்ச பையுக்க கிடக்கு. அக்காவுக்குத் தோடம்பழமும் வாங்கினனான்." அவன் சொன்னான்.

"எங்கே அது?" தாய் கேட்டாள்.

"தைக்க வேணுமில்லே"

"அவள் எழும்பித்தான் தைக்க வேணும்." தங்கம் சொன்னாள்.

"என்ன தங்கமக்கையது?" தேவி கேட்டாள். இளங்கோவின் கையில் சட்டைத் துணியிருந்தது.

"சட்டைத் துணி பிள்ளை."

"நாளைக்கு நான் தைச்சுத் தாரன்." தேவி சொன்னாள். தங்கம் சிரித்தாள்.

"உந்தத் துணியிலை சட்டை தைக்க நான் என்ன குமரியோ, இது உனக்குப் பிள்ளை."


பக்கம் 114

தேவியின் உடல் சிலிர்த்தது. மனிதர்கள் இன்னும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவள் கண்களில் நன்றி பெருகியது.

"நான் கடைக்குப் போறன். அம்மா, ஏதும் வாங்க இருக்கிறதே?" இளங்கோ கேட்டான்.

"கருவாடு வாங்கிக் கொண்டு வா." இளங்கோ வெளியே வந்தான். சிறிது தயங்கினான். தேவியின் வாயில் அவன் பெயர் அடிபட்டதே அவனைத் தயங்க வைத்தது.

"தங்கமக்கை, இளங்கோவைப் பற்றி ஒன்று கேட்கிறன் சொல்லுவீங்களோ?"

"என்ன பிள்ளை?" தங்கம் கேட்டாள்.

"தம்பி கோபாலன் அடிக்கடி சொல்லுவான், இளங்கோ மனசிலே பெரிய ஒரு கவலை இருக்கு"

"தேவி, நீ என்ன கேட்கப் போகிறாய் என்று எனக்கு விளங்குகிறது. ஆனால்..."

"ஏன் அதை மறைக்கிறியள்? தன்ரை தகப்பனைத் தெரிய இல்லையென்றால் ஒரு பிள்ளை எவ்வளவு கவலைப் படும்?"

"தேவி, அவன் எவ்வளவு வேதனைப் படுகிறான் என்று எனக்குத் தெரியும்." தங்கம் சொன்னாள்.

"தங்கமக்கை, அந்தப் பிள்ளைய இந்த ஊரெல்லாம் என்னமாய் பழிக்கிறது? ஏனிந்தக் கொடுமை? அவன் என்ன பாவஞ் செய்தான், ஆருக்கும்? நல்லதோ, கெட்டதோ அதைச் சொல்லி விடுங்கோவன்."

"தேவி, என்னிதயத்துக்குள்ளேயே அடங்கியிருக்கிற அந்த உண்மையை யாருக்குச் சொல்லி அழுவன்?"


பக்கம் 115

"ஏன் தங்கமக்கை, அவனுக்கே சொல்ல முடியாத..."

"அவனுக்குத்தான் சொல்ல முடியாது. அவன் அதை அறிஞ்சிட்டால்... தேவி... ஒரு தாய் தன் மகனிடம் என்னத்தை எதிர்பார்க்கிறாள்?"

"அவன் பெரிய மனுசனாக வேணும். நாலுபேர் அவனைப் பற்றி நல்லாச் சொல்ல வேணும். படிக்க வேணும். பட்டம் பெற வேணும். நாலு காசு சம்பாதிக்க வேணும்."

"இது எல்லாம் இருந்தும் எத்தனையோ தாய்மார்கள் கடைசி நேரத்திலே கவலைப் படுகீனம். அது ஏன்?"

தேவிக்குப் பதில் தெரியவில்லை. அவள தங்கத்தைக் கேள்விக் குறியோடு நோக்கினாள்.

"தேவி, உனக்கு இப்ப இது விளங்காது. தேவி உடலுக்கும், உள்ளத்துக்கும் நெருங்கின தொடர்பு இருக்கிறதென்று படிச்சவை சொல்லுவினம். உடலிலே சக்தி இருந்தால் மாத்திரம் மனுசன் வாழுறானே? உள்ளத்திலேயும் சக்தி வேணும். சாப்பாடு உடம்புக்குச் சக்தி கொடுக்கும். மனசுக்கு அன்புதானே சக்தியைக் கொடுக்கும்."

"உண்மைதான் தங்கமக்கை. அன்பையே அறியாத குழந்தைகள் மனக்கட்டுப்பாட்டை இழக்கின்றன. பயந்து வாழ்கின்றன. தாழ்வு மனப்பான்மையும், தன்னம்பிக்கை இல்லாத தன்மையும் வளருது."

"ஆனால்..." தேவி தங்கமக்கையைப் பேச விடவில்லை.

"அளவுக்கு மீறின அன்பும் குழந்தையைக் கெடுக்கும். தாயையே எல்லாத்துக்கும் நம்பியிருக்கிற குழந்தை தன் கால்களிலே நிற்க முடியிறதில்லை.. சில சமயங்களில் கட்டுக்கடங்காமல் போய் விடும். இதையெல்லாம் நான் தெரிஞ்சு என்ன பிரயோசனம்?"


பக்கம் 116

"அன்பு குழந்தைகளுக்கு எவ்வளவு தேவையோ அதை விட அதிகமாக ஒரு தாயும் அன்பை எதிர்பார்க்கிறாள் தேவி. ஒரு தாய் தன்ரை மகன் பெரிய வேலையில் இருந்தாலும் இல்லை இழிஞ்ச நிலையில் இருந்தாலும் எதிர்பார்க்கிறது அவனுடைய அன்பைத்தான். அன்பாக "அம்மா" என்று அவன் கூப்பிடைக்க... தேவி, அந்த சந்தோசத்தை எந்தத் தாய்தான் இழக்க விரும்புவாள்?

"தங்கமக்கை, எதையோ தொடங்கி எதையோ கதைக்கிறம்."

"இல்லை! தேவி, அதையேதான் கதைக்கிறம். இஞ்ச பார் இளங்கோ என்னோட இருக்க வேணுமென்றால், அவன் தகப்பன் யாரென்பதை எப்பவுமே அவனுக்குச் சொல்ல முடியாது. சொல்லக் கூடாது.

வெளியே நின்ற இளங்கோ ´அம்மா சொல்ல மாட்டியா?´ என்று எங்கினான்.

"அவன்ரை அன்பிலே உங்களுக்கு அவ்வளவு சந்தேகமே? ஏன் பயப்படுறியள்?" தேவி கேட்டாள்.

"அன்பு அதிகமாக, அதிகமாக அதை இழந்திடுவமோ என்ற பயமும் கூடுது. தேவி இந்த உண்மையைச் சொல்லி எங்கடை உறவை அழிக்க என்னாலே ஏலாது. நான் சரியாக பயந்தனான். இந்த உண்மையை மறைக்க என்ரை உயிரையும் நான் குடுப்பன்."

"தங்கமக்கை, எனக்காவது சொல்லக் கூடாதே. சத்தியமாகச் சொல்லுறன், நான் ஒருத்தருக்கும் சொல்ல மாட்N;டன்.

"என்னை அணுவணுவாகத் தின்று கொண்டிருக்கிற இந்த இரகசியத்தை ஆருக்காவது சொல்லத்தான் வேணும் தேவி, ஆனால் ஒன்று நான் செத்த பிறகுதான் அது அவனுக்குத் தெரிய வேணும்.

"சொல்லுங்கோ தங்கமக்கை"


பக்கம் 117

இளங்கோ தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டான். இதயம் வேகமாகத் துடித்தது. பரீட்சை முடிவைப் பார்க்கத் துடிக்கும் மாணவனைப் போல் அவன் நின்றான்.

"உலையை வைச்சிட்டு வந்தனான். அடுப்பிலே கொதிக்குது." தங்கமக்கை அவர்களை ´சஸ்பென்சில்´ விட்டு அடுக்களைக்குள் சென்றாள்.

"டேய் இன்னும் நீ கடைக்குப் போக இல்லையே. இஞ்ச என்னடா செய்யிறாய்?" தாயின் கேள்வி இளங்கோவை அங்கிருந்து அனுப்பியது. அவன் வேண்டா வெறுப்பாக நடந்தான். சோற்றடுப்பைப் பார்த்து விட்டு அவள் மீனைக் கழுவ ஆரம்பித்தாள். அவள் எண்ணமெல்லாம் கடந்து போன காலத்தைச் சுற்றியது.

தங்கம் சொன்ன கதை தேவியின் கண்களைக் குளமாக்கியது. "தங்கமக்கை, உங்கடை நெஞ்சு கல்லு. இல்லையென்றால் இதை எப்பவோ சொல்லியிருப்பியள்... ஒன்று சொல்லுறன். எங்களுக்காக நீங்கள் எவ்வளவோ செய்திட்டியள். என்ரை உயிர் இருக்கு மட்டும், இளங்கோக்காக நான் எதையும் செய்வன்." தேவி சொன்னாள். தங்கம் அழுதாள். அந்தக் கண்ணீரில் சோகமில்லை. ஓர் ஆறுதல் இருந்தது. அவள் இதயபாரம் குறைந்தது.

சூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூ

அரசியில் கல்லுப் பொறுக்கிக் கொண்டு இருந்தாள் மீனாட்சி. "கொம்மான் இப்ப வருவார். அவருக்கு இரண்டிலே ஒன்று சொல்ல வேணும்."

"அவனைக் கட்ட என்னாலே ஏலாது. வேற யாரையும் பார்க்கச் சொல்லு." செல்லம் புகையும் அடுப்போடு போராடிக் கொண்டிருந்தாள்.

"அடியே உனக்கு விசரே? என்னைத் தின்னுறதுக்குத்தானே எல்லாம் பிறந்திருக்கு. அவன் மீசை முளைச்சு


பக்கம் 118

கொஞ்ச நாள் ஆகவில்லை, அதுக்குள்ள குறுக்கால போறான். இவள் என்னடா என்றால் அவ நினைச்சதுதான் சட்டமாம்."

"அம்மா, எனக்கு அவனைப் பிடிக்கவில்லையென்றால் என்ன செய்யச் சொல்லுறாய்?"

"என்னடி அது பிடிக்கிறது? நாங்களெல்லாம் என்ன அவரைப் பார்த்து, இவரைப் பார்த்தே கலியாணம் கட்டினனாங்கள். அம்மா, அப்பு சொன்னால் அதுக்குப் பிறகு என்னடி பேச்சு?"

"அம்மா, அது அந்தக் காலம்."

"அப்ப நீ போய்த் தேடி ஒருத்தனை பிடிக்கப் போறியே? என்னடி நீ தேவடியாளுக்குப் பிறந்ததாக நினைப்பே? காலடிச்சு முறிச்சுப் போடுவன் கனக்கக் கதைச்சியென்றால்..."

"அடிச்சுக் கொல்லுங்கோவன், விருப்பமில்லையென்றால்..."

"சனியனே, இரண்டாங்கதை கதையாதே. உனக்கும், மணியனுக்கும் கலியாணம் நடக்கத்தான் போகுது. மூத்தவன் அங்கே ஆருக்கோ பின்னாலே திரியிறான். நான் எவ்வளவு நாளைக்கு நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கிறது? கொம்மானுக்கு நான் ஓமென்று சொல்லப் போறன். நாளைக் குறிச்சு சட்டு, புட்டென்று விசயத்தை முடிக்க வேண்டியதுதான்.

செல்லத்தின் கண்களில் கண்ணீர் வந்தது. அடுப்பின் புகையாலா? இல்லை இதயத்தில் இட்ட நெருப்பாலா?

"ஏனிப்ப கண்ணைக் கசக்கிறாய்?"

இதுவரை வெளியே இருந்து அவர்கள் உரையாடலைக் கவனித்த மகாதேவன், உள்ளே வந்தான்.

பக்கம் 119

"ஏனம்மா அவளைச் சும்மா அழ வைக்கிறாய்? மகாதேவன் கேட்டான்.

"புத்தி கெட்டவனே. அவளுக்குப் புத்தி சொல்ல வேண்டிய நீ நடக்கிற நடையைப் பார். ரோஷமில்லையேடா உங்களுக்கு? என்ரை மோளை என்னோட விடு, நான் அவளுக்குக் கட்டி வைப்பன். நீ உன்ரை வேலையைப் பார்."

வேதனையோடு மகாதேவன் தன் தங்கையைப் பார்த்தான். தனது செயல் தவறென எண்ணும் ஒருவன் தலை நிமிர்ந்து பேசும் சக்தியை இழந்து விடுகிறான். தேவியின் தொடர்பு அவன் குடும்பத்தில் புயலை உருவாக்கி விட்டது. அவன் வார்த்தைகள் மதிப்பிழந்தன. இல்லை அவனால் பேசவே முடியவில்லை. தங்கைக்காக அவன் வருந்தினான். ஆனால் அவன் என்ன செய்ய முடியும்?

"எடியே, கொம்மான் வருகுதில்லே, கண்ணைத் துடையடி." வேலுப்பிள்ளையர் வாய் நிறையச் சிரிப்புடன் வந்தார்.

"வா அண்ணே. ஏன் நிற்கிறாய்? இரன்."

மகாதேவன் கதிரையை இழுத்துப் போட்டான்.

"மேனை, போய் ஒரு சோடா வாங்கிக் கொண்டு வாவன்." மகாதேவனைத் தாய் வெளியேற்றினாள். செல்லம் உள்ளே போய் கதவிடுக்கில் மறைந்து கொண்டாள்.

"என்ன மீனாட்சி, நான் சொன்ன விசயம்...?" வேலுப்பிள்ளையர் கேட்டார்.

"அண்ணே, உனக்குத் தெரியுந்தானே எங்கடை நிலைமை. வீடும், தோட்டமும் அவளுக்குத்தானே. இருக்கிற நகையோட இன்னும் கொஞ்சம் செய்யலாம்."

"அப்ப எல்லாம் சரியென்று சொல்லு." வேலுப்பிள்ளையர் சொன்னார்.


பக்கம் 120

"எனக்கு இவன் மூத்தவனிலேயும் நம்பிக்கை இல்லை. நீ அவனுக்கும் எங்கேயும் ஒன்றைப் பேசன்!"

"அவனுக்கே பொம்பிளையில்லை? நீ பயப்படாதே. அவனுக்கு நல்ல இடம் நான் பார்க்கிறன். இவள் செல்லத்தின்ரையை எப்ப செய்வம்?"

"வாறமாசம் ஒரு நல்ல நாளிருக்கு. தப்பினால் மூன்று மாசம் போக வேணும்."

"இந்தா அவளின்ரை குறிப்பு. அதுகளுக்கு அருமையான பொருத்தமாம். நீங்கள் சரியென்றால் வாhற மாசமே வைக்கலாம்."

"எனக்கு ஒன்றுமில்லை. இவன் மகாதேவனிட்டையும் ஒரு சொல்லு சொல்லுவம்."

கதவிடுக்கில் செல்லம் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். ´அப்ப எனக்கு மணியன்தானோ புருசன்? கடவுளே இது என்ன அநியாயம்? ஐயோ எங்கே போவன்? ஆர் எனக்கு இருக்கீனம்? அண்ணனும் பேசாமல்தானே நிற்குது. அம்மா தான் நினைச்ச மாதிரி எல்லாம் செய்து போடுவா.´ ஒன்றும் செய்ய முடியாது அவள் தவித்தாள்.
´இளங்கோ... ஏன் என்ரை மனம் எப்பவும் அதை நினைக்கிறது. எனக்கும், அதுக்கும் என்ன உறவுß அது என்னைக் கட்டுமே...? கதைக்கிறதேயில்லை. அதுக்கு என்னைப் பிடிக்க இல்லையாக்கும்.´ அவள் ஏதேதோ எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தாள். மகாதேவன் சோடாவோடு வந்தான்.

"மேனை, இவள் செல்லத்தின்ரை விசயம்... வாற மாசம் நல்ல நாளொன்று இருக்குதாம். செய்யலாமென்று நாங்கள் நினைக்கிறம்." மீனாட்சி சொன்னாள்.

"இதிலே நான் என்னத்தைச் சொல்லுறது? அவள் தங்கச்சியைக் கேட்டுப் போட்டு செய்யுங்கோவன்." மகாதேவன் சொன்னான்.

"அவனும் சரியென்றிட்டான். அப்ப, அண்ணே நீ வேண்டியதைக் கவனி."


பக்கம் 121

மகாதேவன் வெறுப்போடு அறைக்குள் சென்றான். தங்கையின் கண்ணீர் ததும்பும் முகத்தைப் பார்த்தான்.

"செல்லம், உனக்கு விருப்பமில்லையென்றால் சொல்லன். ஏன் பயப்படுகிறாய்?" மகாதேவன் கேட்டான்.

"என்னைப் பார்த்தால் தெரிய இல்லையே? அண்ணே, எனக்காக நீ சொல்லன்."

"என்ரை சொல்லுக்கு இஞ்ச மதிப்பில்லையே! தங்கைச்சி, மனமுடைஞ்சு போய் நான் நிற்கிறன். அம்மாக்கு என்னைக் கண்டாலே பிடிக்க இல்லை."

"அண்ணே, எப்பவுமே என்ரை சொல்லுக்கு இஞ்ச மதிப்பில்லைத்தானே! நான் பெட்டைதானே! எல்லாருக்கும் பேய்ச்சிதானே! என்ரை சொல்லை அம்மா கேட்பாவே?"

"செல்லம், உனக்கு வேற யாரிலேயும் விருப்பமே?" மகாதேவன் தங்கையின் முகத்தைப் பார்த்தான். அவள் கண்கள் படபடத்தன. எப்படி அவள் அதைச் சொல்வாள்? அவனுக்கு விருப்பமோ என்று அவளுக்குத் தெரியாதே? ஒருதலைக் காதலா அது? அவள் தவிததாள். ´இல்லை´ என்பது போல் தலையசைத்தாள். அதற்குள் வேலுப்பிள்ளையர் விடைபெற்றார். வீடு அமைதியில் ஆழ்ந்தது. அவள் யாரோடு வாழ வேண்டும், அந்த வாழ்க்கை என்று ஆரம்பமாக வேண்டும் என்பதெல்லாம் தீர்மானிக்கப் பட்டு விட்டன.

இரவு மணி பத்து இருக்கும். செல்லம் தூக்கம் வராது புரண்டு கொண்டிருந்தாள். தாயோ நாட்டுக்கூத்து பார்க்கம் போய் விட்டாள். மகாதேவன் வாசலில் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தான். ஆட்டுக்குட்டி கத்தியது. விடாது தொடர்ந்து கத்தியது. அவள் எழுந்து பாயில் சிறிது நேரம் அமர்ந்தாள். ஆட்டுக்குட்டியின் கத்தல் அடங்கவில்லை. அவள் எழுந்து அதைப் பார்க்கச் சென்றாள் ஆட்


பக்கம் 122


டுக்குட்டியோ தன்னைக் கட்டியிருந்த கயிற்றில் தன் கால்களை மாட்டிக் கொண்டு அசைய முடியாது தவித்தது. ´டார்ச்சை´ நிலத்தில் வைத்து அதன் சிக்கை அவிழ்க்க முயன்றாள் அவள். தாயின் வார்த்தையை மீற முடியாமல் அவள் மாட்டிக் கொண்டாள். இங்கே ஆட்டுக்குட்டி மாட்டியிருக்கிறது. அவள் அதை அணைத்தவாறு சிக்கை அவிழ்த்தாள். அதன் மெல்லிய உடலை கன்னங்களில் பதித்தவாறு எண்ணங்களை எங்கோ ஓட விட்டாள்.

"ஆ..." ஓசை வந்த ஒழுங்கையை நோக்கினாள் அவள். ஒரு கணம் அவள் உடல் சிலிர்த்தது. பால் வெள்ளம் போல் பாயும் நிலவொளியில் ஒரு காலைக் கையில் பிடித்தவாறு நின்றது இளங்கோவேதான். ஆட்டுக்குட்டி அவள் கையில் இருந்து தாவியது. அவள் உள்ளமும்தான். நிலவின் ஒளியில் வெள்ளிக் கிண்ணம் போல் மின்னும் கன்னத்தையும், சுருண்டு இரு பக்கங்களிலும் திரண்டு அவ்வழகை மறைத்துத் தன்னழகைக் காட்டு முயலும் கருங்கூந்தலையும் பார்த்தவாறு இளங்கோ நின்றான்.

"செல்லம் காலிலே ஏதோ குத்திப் போட்டுது. உந்த ´டார்ச்´ சைக் கொண்டு வாவன்." அவன் மிக மிக மெதுவாகப் பேசினான். ஒருகணம் அவள் தயங்கினாள். பின்னர் அவர்களைப் பிரிக்கும் வேலியை நோக்கி நடந்தாள். அவன் வானத்தைப் பார்த்தான். நிலவு அங்கேதானே நிற்கிறது. எப்படி அவனருகில் வந்தது? அவன் கரங்கள் வேலியில். கண்களோ அவள்; வேல் விழியில். நிலவு, நிலவில் குளிக்கிறதே. மயக்கும் அவன் பார்வையைத் தாங்காது அவள் தன் பாதத்தை நோக்கினாள்.

"செல்லம்" அமுதென இனிக்கும் அச்சொல்லை அன்பெனும் தேனில் குழைத்து அவன் அழைத்தான். மல்லிகை மலரின் மணம் அவனை மயக்கியது. தென்றலாள் அதைச் சுமந்து வந்தாள். பந்தலில் இருந்தது மல்லிகை மலர். பக்கத்தில் நிற்பது...?

பக்கம் 123

"செல்லம்" மீண்டும் குழலின் நாதமென அவள் காதில் விழுந்தது அந்தக் குரல்.

"டார்ச்" அவள் நீட்டினாள்.

"காலிலே ஒன்றும் குத்த இல்லை." இளங்கோ சொன்னான்.

"என்ரை இதயத்திலேதான்..."

´சரியான கள்ளன்.´ அவள் மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

"மாமி கூத்துக்குப் போயிட்டாவே?"

அவள் ஆமெனத் தலையசைத்தாள்.

"கொண்ணன்...?"

அவள் வீட்டைக் கையால் சுட்டிக் காட்டினாள்.

"நித்திரையே?"

அவள் அதற்கும் தலையசைத்தாள். ஒருகணம் அவன் பேசவில்லை. பின்னர் கேட்டான்.

"கிணற்றடியில் போயிருந்து கதைப்பமே?"

அவள் நெஞ்சு படபடவெனத் துடித்தது. மின்னலென மறைந்து விடுமா இந்த இன்பம்?

´அதுக்கும் என்னிலே...´ அவள் உள்ளம் துள்ளியது. ´நெஞ்சுக்குள் இருக்கிறதெல்லாம் சொல்லிப் போட வேணும்.´ அவள் அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். ´கொஞ்சமும் பயமில்லை இதுக்கு´ அவள் மெல்லத் திரும்பி வீட்டை நோக்கி நடந்தாள். இளங்கோ ஏமாற்றத்தோடு அவள் பின்னழகில் தன்னை இழந்து நின்றான். செல்லம் வீட்டினுள் எட்டிப் பார்த்தாள். மகாதேவனின் குறட்டை ஒலி நன்றாகக் கேட்டது. அவள் திரும்பி இளங்


பக்கம் 124

கோவைப் பார்த்தாள். பின்னர் கால்கள் பின்னலிட கிணற்றடியை நோக்கி நடந்தாள். இளங்கோ இன்ப மிகுதியில் தன்னை மறந்தான். ஒரே தாவலில் வேலியைத் தாண்டி அவளைப் பின் தொடர்ந்தான். கிணற்றடியை இருவரும் அடைந்தனர். அவள் இருதயம் பலமாக அடித்தது. நிலவின் இனிமை! அவர்கள் தேடித் தவித்த தனிமை! அவன் அவளுக்கு மிக அருகில் நின்றான். இளந்தென்றலாள் அவர்களோடு விளையாடினாள். காற்றில் தவழ்ந்த அவள் கருங்கூந்தல் அவன் கன்னத்தைத் தீண்டியது. அந்த இதமான சுகத்தில் இமைக்கவும் மறந்து அவள் அழகைப் பருகினான். கரத்தை உயர்த்தி கூந்தலை அவள் ஒதுக்கினாள். பாய்ந்து கொண்டிருந்த மின்சாரமோ தடைபடவில்லை. ´கல கல´ வென்ற கண்ணாடி வளையலின் ஓசையை அவள் சிரிப்பொலியென எண்ணி அவன் ஏமாந்தான்.

"செல்லம்" அவள் கருவிழிகள் அவன் விழிகளைச் சந்தித்தன.

"செல்லம்... எனக்கு உன்னிலே... உனக்கு...?

அவள் ´கிளுக்´ கெனச் சிரித்தாள். இது சொல்லித் தெரிய வேண்டுமா? அவனுக்கும் வெட்கமாக இருந்தது. அவள் மெல்லிய கரத்தில் தன் கரத்தை வைத்தான். அவள் நடுங்கும் தன் கரத்தை இழுத்துக் கொண்டாள். இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். அதாவது வார்த்தைகள் வரவில்லையே தவிர இதயங்கள் பேசின. ´நான் அவசரப்பட்டு விட்டேனா?´ அவன் நினைத்தான்.

´கையை இழுத்துப் போட்டன். அதுக்கு கோவமோ தெரியாது, நானென்ன செய்ய, ஆசையிருந்தாலும் வெட்கம் விடுகுதே?´ அவள் நினைத்தாள்.

"செல்லம்" அவன் எச்சிலை விழுங்கினான். நெஞ்சில் நீண்ட காலமாக அரித்துக் கொண்டிருந்த கேள்வியை அவன் கேட்டான். "என்னை நீ கலியாணம் கட்டுவியே?"


பக்கம் 125

அவள் பளபளக்கும் விழிகள் மீண்டும் உயர்ந்தன. இம்முறை அதன் ஓரங்களில் பனித்துளியென இரு துளி நீர் திரண்டிருந்தது. அவனுக்கு என்னமோ செய்தது.

"நான் பிழையாக ஏதும் கேட்டுப் போட்டனே?" அவன் கேட்டான்.

"இல்லை" யென அவள் தலையசைத்தாள். இரு துளிகள் நீரும் அவன் கையில் பட்டுத் தெறித்தன.

"ஏன் செல்லம்?" அவன் மீண்டும் அவள் கரத்தைப் பற்றினான். அவள் தடுக்கவில்லை.

"பேசு செல்லம், ஏன் பயப்பிடுகிறாய்?"

அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. அவள் முதன் முதலாகப் பேசினாள்.

"எனக்கும் மணியனுக்கும் கல்யாணமாம். நீங்கள் என்னைக் கட்டாட்டால் நான் செத்துப் போவன்." சிறு குழந்தை போல் அவள் பேசினாள். அவனுடல் சிலிர்த்தது. அவனை நம்பி ஓர் உயிர். அதுவும் அவனில்லையென்றால் அவள் செத்துப் போவாளாம். அவள் இதயத்தில் அவனுக்கு ஓர் இடம். அதுவும் மிக உயர்ந்த இடம்.

"செல்லம்" அவன், அவள் கரத்தை எடுத்து ஒரு முத்தம் கொடுத்தான். "நீ இல்லையென்றால் எனக்கும் வாழ்க்கையில்லை. உன்னைத்தானே நாளெல்லாம் நினைச்சுக் கொண்டிருக்கிறன்."

"நினைச்சுக் கொண்டிருந்தால் போதுமே? கலியாணத்துக்கு நாளும் குறிச்சுப் போட்டினம்."

"நீ, விருப்பமில்லையென்று சொல்லுறதுதானே?"

"நான் சொன்னனான். அவே கேட்க மாட்டினம்."

பக்கம் 126

"உனக்குத் தெரியுந்தானே செல்லம், கொம்மா என்னைத் தன்ரை மருமகனாக ஒரு நாளும் ஏற்க மாட்டா."

"அப்ப, என்ன செய்யிறது?"

"செல்லம், இஞ்ச நாங்கள் ஒண்டாக வாழ ஏலாது"

"அப்பிடியென்றால்..."

"ஓம்... நாங்கள் எங்கேயாவது ஓடிப் போகத்தான் வேணும்."

"ஐயோ, எனக்குச் சரியான பயம்"

"என்னை நம்புறியே?"

"வேற ஆரை நான் நம்புறது?"

"நம்பிக்கை இருந்தால் என்னோட வாறதுக்கு ஏன் பயப்படுறாய்?"

அவள் அவனைப் பார்த்தாள். அவள் குரல் தழதழத்தது. "என்னைக் கைவிட மாட்டியளே?"

"செல்லம், நீ என்ரை உயிரில்லே!"

"அது ஒரு நாள் போயிடும். அப்பிடிப் போனாலும் என்னைக் கூட்டிக் கொண்டு போவியளே?"

"செல்லம்" அவன் அவளை வாரியணைத்துக் கொண்டான். "செல்லம், செல்லம்"

"விடுங்கோ" விழிகள் நான்கும் மிக மிக அருகில் நின்றன. அடக்கி வைத்த அன்பையெல்லாம் அவை பரிமாறிக் கொண்டன.

"செல்லம், உன்னை நான் எப்பவுமே விட மாட்டன்." எந்த இளம் பெண்ணும் தன் அன்புக்குரியவனிடம் இருந்து


பக்கம் 127

எதிர்பார்க்கும் அந்த வார்த்தைகள். செல்லத்தின் உடலெங்கும் ஓர் இன்பப் புயல் வீசுகிறது. அவள் அதரங்களின் துடிப்பில் என்ன வார்த்தையோ?

"ம்... நான் போக வேணும். அண்ணன் எழும்பினால்...?"

"செல்லம் வாற கிழமை சந்திப்பம். அப்ப நான் என்ரை திட்டத்தை சொல்றன். எங்கேயாவது போய் இரண்டு பேருமாக இருப்பம்."

"உங்களை நம்பி நான் எங்கேயும் வருவன். எப்பிடிச் சந்திக்கிறது?" பேசாத செல்லம் என்னவெல்லாம் பேசுகிறாள்! அவளுக்கே வெட்கமாக இருந்தது.

"வாற திங்களும் கூத்திருக்கு. கொம்மா தப்ப விட மாட்டா. நாங்களும் சந்தர்ப்பத்தை விடக் கூடாது."

"நான் போகட்டே? அண்ணன் எழும்பி வந்தாலும்..." அவள் அவன் அணைப்பை விட்டு விலகினாள்.

"செல்லம்" அவன் கண்களால் மீண்டும் அவளை அருகில் அழைத்தான். அவள் அருகில் வந்தாள். அவள் சிறு விரல்கள் அவன் கன்னத்தைத் தடவின. அவன் எங்கோ, எங்கோ பறந்தான். அவன் எதிர்பாராத போது கன்னத்தில் கிள்ளி விட்டு அவள் துள்ளி ஓடி மறைந்தாள். அவன் இதழ்களில் இன்பப் புன்னகை மலர்ந்தது. அவள் கிள்ளிய, அந்த இன்ப வேதனை அப்படியே நிலைக்காதா என அவன் ஏங்கினான். இமைகள் மூடாத ஓர் இரவு அவர்களை விட்டு மறைந்து விடலாம். ஆனால் அந்த இனிய இரவு அவர்கள் இதயங்களில் என்றுமே மறையவில்லை.

No comments: