Tuesday, March 27, 2007

மீட்டாத வீணை - 5

5

பக்கம்-40

காலம் காதலரைப் பொறுத்த வரையில் கொடியதுதான். அவர்கள் பிரிந்திருக்கும் போது விரிந்தே செல்லும். பிரிந்தவர் கூடினால் அது விரைந்தே ஓடி விடும். எப்படியிருந்தாலும் கவலைகளை, கசப்பான நிகழ்சிகளை மறப்பதற்குக் காலம் ஒரு மருந்துதான். மாதங்கள் சில கடந்து விட்டன. கஞ்சியில் உப்பை விட்டுக் கரைத்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி. தங்கம் மீது அவள் கொண்ட கசப்புணர்ச்சி எப்பொழுதோ கரைந்து போய் விட்டது. அவள் எண்ணங்கள் மகளின் எதிர்காலத்தை எண்ணிக் கனவு காண்கின்றன. செல்லம் தேங்காய் துருவுகிறாள். அவள் இதயமோ தேனென அவள் காதுகளில் பாயும் பாடலுடன் கலந்து விடுகிறது. அதற்கு இணையாகப் பாட இதழ்கள் துடிக்கின்றன. கன்னம் இரண்டும் மாம்பழமெனச் சிவக்கின்றன. கருவிழிகளோ, அந்தப் பாடல் வந்த பாதையில் பறந்து செல்கின்றன. கண்களைக் கூசச் செய்வது அந்தக் கதிரவனா, இல்லை - அவன் கதிர்கள் வியர்வையில் மோத தீப்பிழம்பென ஒளி விடும் அக்காளையின் சிவந்த மேனியா? ஒரு கையில் கயிற்றுடன் துலா ஓடிக் கொண்டிருந்தான் இளங்கோ. ஓடும் துலா மீது தன் தங்கையின் இதயமும் ஓடுகிறது என்பதை அறியாமல், மகாதேவன் தண்ணீரை இறைத்துக் கொண்டிருந்தான். தன்பாதையில் தனித்து நடக்கக் கஸ்டப்படும் கோபால், வாய்க்காலில் பாய்ந்து வரும் நீருக்கு அதன் பாதையைக் காட்டிக் கொண்டிருந்தான்.


பக்கம்-41


"கோபால் வெங்காயத்துக்குத் தண்ணீ காணும். தக்காளிக்குத் திருப்பி விடு“ மகாதேவனின் இடையீட்டால் இளங்கோவின் பாடல் தடைப்படவில்லை.

"மச்சான், மேலை அவன் பாடுறான். இஞ்ச வயிறு தாளம் போடுது" கோபால் தந்திரமாகத் தன் பசியைத் தெரிவித்தான்.

இளங்கோ தன் பாட்டை இடையில் நிறுத்தி ´ரிகார்ட்டை´ மாற்றினான்.

"பசியாலே வாடும் ஏழை முகத்தைப் பார்ப்போரில்லையா" அடுக்களையில் வெண்கலப் பாத்திரத்தின் ஓசையுடன் செல்லத்தின் கிண்கிணிச் சிரிப்பொலி கேட்கிறது.

"அம்மா, பாட்டு கேட்டுதே? கஞ்சியைக் கொண்டு போ" செல்லம் தாயைப் பார்த்துச் சிரித்தாள்.

"பாரடி, அவங்களிண்டை பாட்டை" மீனாட்சி புன்சிரிப்போடு கஞ்சிக் கலயத்தைத் தூக்கினாள். பச்சைப் பசேலென்ற வெங்காயத் தோட்டமும், அதில் பாய்ந்து செல்லும் தண்ணீரும் அவள் உள்ளத்தைக் குளிரச் செய்கின்றன. ஒருபுறம் பழுத்துத் தொங்கும் தக்காளிப் பழங்களும், கத்தரிக்காய்களும் அவள் மகனின் உழைப்புக்கு நன்றி செலுத்துகின்றன.

"இளங்கோ, இறங்கு போதுமடா. கஞ்சியும் வந்திட்டுது" மகாதேவன் சொல்லியவாறு கிணற்றுக் கயிற்றை விட்டு கோபாலை நோக்கி நடந்தான். "போடா மண்வெட்டியைத் தந்திட்டுப் போய் முகத்தைக் கழுவு"

"மாமி, கஞ்சியை ஊத்துங்கோ. வந்திட்டன்" கோபால் நொண்டி, நொண்டி கிணற்றடியை நோக்கி நடந்தான். இல்லை ஓடினான். மகாதேவன் வாய்க்கால்களைச் சரிப்படுத்தினான்.



பக்கம்-42


"தம்பிமாரே, வாங்கோ. கஞ்சி ஆறப் போகுது" மீனாட்சி நின்றவாறு குரல் கொடுத்தாள்.

தோட்டம் அவர்கள் வீட்டின் பின்புறம் இருந்தது. அடுக்களையிலிருந்த செல்லத்துக்கு அங்கு நடப்பதெல்hலம் நன்கு தெரியும். திருவிழா நிகழ்ச்சியின் பின் அவள் இதயம் புதுக் கோலங் கொண்டது: எண்ணங்கள் ஏனோ இங்கோவையே வட்டமிட்டன. அவனைப் பற்றிய அவளது கள்ளத் தனமான எண்ணங்களினால் அவள் உள்ளத்திலே ஒரு கிளுகிளுப்பு உண்டாயிற்று. அடிக்கடி தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். தலையை வாரிக் கொள்வாள்: உடைகளையும் மாற்றிக் கொள்வாள். அவன் விழிகள் தன்மீது பட வேண்டுமென ஏங்குவாள். ஏதோ நினைத்துப் புன்னகை புரிவாள்.

"உனக்கு ஏன் அவனிலை இவ்வளவு பரிவு? தேவியின் கேள்வி, அவள் காதுகளில் ரீங்காரம் செய்யும். அவள் ´கிளுக்´கெனச் சிரிப்பாள்.
அது... அது... அததான்... அந்த உறவுக்குப் பெயரை அவள் இதயம் தேடும். ´காதல்´ என மனதுக்குள் சொல்வாள். வேறு யாருக்கும் கேட்டு விட்டதோ என்று பயத்துடன் அங்குமிங்கும் பார்த்துக் கொள்வாள்.

"பாருங்கோ மாமி, நான் இரண்டு கோப்பை குடிக்க இல்லை. இளங்கோ நாலாவது கோப்பைக்கு நீட்டினான். டேய் போதுமடா"

"கோபாலண்ணன் எப்பவும் பகிடிதான். பாவம் அதுக்குப் பசியாக்கும். அதின்ரை கோப்பை சின்னன்தானே. நல்லாக் களைச்சுப் போச்சு. செல்லம் தன்னோடு பேசிக் கொண்டாள். அவள் விழிகள் அடுக்களை யன்னலினூடே இளங்கோவை விழுங்கிக் கொண்டிருந்தன.





பக்கம்-43



குடியுங்கோடா, பெடியள், நல்லாக் குடியுங்கோ. களைச்சுப் போனியள். பசிக்காதே?" மீனாட்சி சொல்லியவாறு கோப்பைகளில் கஞ்சிலை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். மூன்று நண்பர்களும் அவள் முன்னாலிருந்து கஞ்சியைப் பருகினர்.

"எண்டாலும் மாமி, உங்கடை கை பட்டால் கஞ்சி ஒரு தனிச் சுவைதான்."

"ஏனடா கோபால் வேண்டியளவு கஞ்சி இருக்கிதே, பிறகு ஏன் அம்மாவுக்கு ஐஸ் வைக்கிறாய்?" மகாதேவன் கேட்டான்.

"பார்த்தீங்களே மாமி, ஒரு சொல்லு உங்களைப் பற்றி நல்லாச் சொல்ல விட மாட்டான்"

கோபால் கஞ்சிக் கோப்பையை நீட்டினான்.

"ஓமடா மேனை, உவனுக்கு என்ன தெரியும்? அப்ப அவர் இருக்கைக்க என்ரை கஞ்சியெண்டால் போதும். மனுசன் சோறும் சாப்பிடாது. அவ்வளவு ஆசை"

"அம்மான்ரை சோறு அவ்வளவு திறம். அதுதான்" மகாதேவன் சொன்னான்.

"ஊத்துங்கோ மாமி" கோபால், மகாதேவனைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினான்.

"இளங்கோ, என்னடா வெட்கப் படுகிறாய்? இந்தா பிடி" மீனாட்சி கஞ்சியை ஊற்றினாள். கஞ்சியைப் பருகும் நிலையில் அவனில்லை. அவன் கண்களோ யன்னலினூடே நடமாடும் இளவஞ்சியின் அழகைப் பருகின.

´அது பார்க்குது´ அவள் விழிகள் படபடத்தன. முகமோ மேலும் சிவந்தது. அவள் விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள். ´பாரடி, பாரடி´ என்றது ஓர் உள்ளம். ம்.... ஹ_ம் ´அது பார்க்குது´ என்றது மறு உள்ளம்.



பக்கம்-44


ஆசையும் நாணமும் போட்டியிட்டன. இறுதியில் இரண்டுக்குமே பாதித் தோல்விதான். அவள் கடைக்கண்ணால் அவனைப் பார்த்தாள். ´குபு குபு´ வென கறி கொதித்து அடுப்பை அணைத்தது. அவன் தன்னிலை அடைந்தாள். நேரம் நகர்ந்தது. மாலையில் கூடுவதாகக் கூறி நண்பர்கள் பிரிந்தனர்.

சுருண்ட தன் கேசத்தைச் சீப்பின் பின்பக்கத்தால் அழுத்தி மேலும் அழகு படுத்தினான் இளங்கோ. வெடித்திருந்த சிறிய கண்ணாடியில் அவனுருவம் இரண்டாகத் தெரிந்தது. அவனிதழ்கள் காலையில் பாடிய பாடலை அசை போட்டுக் கொண்டிருந்தன. மறைந்து கொண்டிருந்த கதிரவனின் ஒளி மங்கிய செந்நிறத்தை எங்கும் பரப்பியது. "தியேட்டர்கார கணபதிப்பிள்ளையாரோட கதைச்சனான். உன்னை வந்து தன்னைக் காணட்டுமாம். சொல்லுறது கேட்டிதே" தங்கம் மாட்டுக்கு நுங்கைச் சீவியவாறு மகனுக்குக் கதையைச் சொன்னாள். "அவருக்கும் என்னாலே ஒரு அலுவல் நடக்க வேண்டுமாம். சொன்னவர். மனுசன், என்றுதான் சொல்லவில்லை. நீ போய் அவரைப் பார்க்கிறியே?"

"ஓம்... ஓம் படத்துக்குத்தானே போறம். தியேட்டரிலே அவரோட கதைக்கிறன். தேத்தண்ணி இல்லையே?" இளங்கோ கேட்டான்.

கொஞ்சம் பொறடா மேனை. தண்ணி கொதிக்க இல்லை." "எனக்கு நேரஞ் சென்று போச்சு" இனங்கோ புறப்பட்டான். வெள்ளை வேட்டியும், தவிட்டு நிறச் சேர்ட்டும் அவனை அழகு படுத்தின.

"அட இதைக் குடிச்சிட்டுப் போவனடா"

எல்லாத்துக்கும் பிறகு வாரன்.

"தம்பி டேய், பெரிய மனுசர் கொஞ்சம் கவனமாகக் கதையடா. எல்லாம் பிள்ளையார் செய்வார்."



பக்கம்-45

"சரி சரி நான் வாரன்"

இளங்கோ மகாதேவனது வீட்டை நோக்கி நடந்தான். அடுத்த வீடுதான் ஆனாலும் இரு வீட்டிற்கும் இடையில் பல பனைமரங்கள் இருந்தன. இனம் தெரியாத ஓர் இன்ப உணர்ச்சி அவன் இதயத்தில் பரவியது. புதியதொரு நற்கருத்தைப் படிப்பது போன்ற ஓர் உணர்ச்சியது. ´செல்லம்´ புத்தம் புதியதொரு கவதைதான். அவன் இதயவீணையில் அந்த இன்பக் கவிதை இசையாகப் பிறந்து எங்கோ அவனை அழைத்துச் சென்றது.

´சட சட´ வென வேலியைப் பிரித்துக் கொண்டு துள்ளி விழுந்தது ஓர் ஆட்டுக்குட்டி. இளங்கோ ஆட்டுக்குட்டியை நோக்கினான். வேலிக்கு அப்பால் தன் விழிகளைத் திருப்பினான். கைகளை உதறியவாறு நின்றாள் செல்லம். ´பட பட´ வென அவள் விழிகள் துடித்தன. முத்தான அவள் மேல்வாய்ப் பற்கள், கீழ் அதரத்தைக் கடித்தன. இயற்கையிலேயே சிவந்த அவள் இதழ்கள் இரத்தம் சிந்தும் நிலையில் இருந்தன. மலரைச் சுற்றும் வண்டென அவன் விழிகள் அவளது அழகு முகத்தைச் சுற்றின. அவள் ஒரு பனையை அணைத்தபடி பைங்கொடியென நின்றாள். பச்சைக் கொடியல்ல அது பவளக்கொடி. சில கணங்கள்தான் கண்கள் பேசின. ஆனால் பலயுகங்கள் பேச வேண்டியதைப் பேசின.

செல்லம் ஏதோ சொல்லத் துடித்தாள். ம்.... வாதம் முடியவேயில்லை. கையை நீட்டி ஆட்டுக்குட்டியைக் காட்டினாள். இளங்கோவிற்கு உணர்வு வந்தது. துள்ளும் ஆட்டுக்குட்டியை மார்போடு அணைத்துத் தூக்கினான். வேலிக்கு அருகில் அவள் வந்தாள். ஆட்டுக்குட்டியை அவள் கரங்களில் கொடுத்தான். அவனது இதயத்தை...? குட்டியை அணைத்தபடி அவளஇ ஓடினாள். ஆனால் அவள் உள்ளம்...?



பக்கம்-46

"செல்லம்" துணிந்து அவன் அழைத்தான். ஓடிய கால்கள் நின்றன. அவளிதயம் ´பட பட´ வெனத் துடிக்கிறது. யாராவது பார்த்தால்...? மெல்ல அவள் திரும்பினாள்.

"என்னாலே எல்லாருக்கும் கரைச்சல். கொம்மா உனக்கு அடிச்சும் போட்டாவாம்" இளங்கோ விக்கி, விக்கிச் சொன்னான். முதன்முறை மேடையில் பேசுபவனுக்குக் கூட அத்தனை தயக்கம் வராது.

´இல்லை´ என்பது போல் அவள் தலையை அசைத்தாள். குறுநகை ஒன்று அவள் இதழ்களில் நெளிந்தது. கன்னத்தில் தெரிந்த சிகப்பு செவ்வானத்தின் பிரதிபலிப்பா? இல்லை வானம்தான் அவள் சிவந்த வண்ணத்தைப் பிரதிபலிக்கிறதா? ´டக்´ கென ஒரு ஓசை. ´படக்´ கென்றன இதயங்கள் இரண்டு. இரண்டா? விளாமரத்திலிருந்து விழுந்த பழமொன்று அவள் காலடியில் உருண்டது. அவள் அதை எடுத்தாள். அவனை நோக்கி எறிந்தாள். அவன் இரு கரங்களாலும் ஏந்திக் கொண்டான். புன்னகை சிரிப்பொலியாக மாறியது. அவள் துள்ளி ஓடி மறைந்தாள். அவன் கரங்களில் அந்தப் பழமிருந்தது.

"டேய் கெதியாக வாவனடா, நேரமாச்சுது இல்லே" ஏதுமறியாத மகாதேவன் படலையருகிலிருந்து கத்தினான். இளங்கோ அவனை நோக்கி விரைந்தான். "சைக்கிளுக்கு காத்து காணுமே?" இளங்கோ சைக்கிள் டயரை அழுத்தியபடி கேட்டான்.

"அது காணுமடாப்பா. எங்கே உவன் கோபால்?"

"நான் ரெடி. வாங்கோவனடாப்பா" கோபால் தங்களது வீட்டுப் படலையில் இருந்து கத்தினான்.

"நாங்கள் படத்துக்குப் போறம். செல்லம் அம்மாட்டைச் சொல்லு" மகாதேவன் சொல்லியவாறு சைக்கிளை கோபாலை நோக்கி உருட்டினான். இளங்கோ பின் தொடர்ந்தான்.


பக்கம்-47

அவர்களது ´அரசடி´ கிரமாத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது அவர்கள் படம் பார்க்கச் செல்லும் தியேட்டர். மாதம் ஒரு முறையோ இரு முறையோ படம் பார்க்க அக்கிராமத்து வாலிபர்கள் தவறுவதில்லை. பயிர்கள் நன்கு பலன் கொடுக்கும் நாட்களில் வாரம் ஒரு படம் கூடப் பார்ப்பார்கள். சைக்கிள் முன்பக்கத்தில்(பாரில்) கோபால் இருந்தான். பின்பக்க ´கரியரில்´ இளங்கோ இருக்க மகாதேவன் வெகுவேகமாக சயிக்கிளைச் செலுத்தினான். கோபாலின் வேடிக்கைப் பேச்சில் சிரித்து மகிழ்ந்தவாறு அவர்கள் சென்றனர். தியேட்டர் நெருங்கினதும் இளங்கோ குதித்தோடிச் சென்று ´கலரி´ கியூவில் நின்றான். கோபால் இறங்கி வேடிக்கை பார்த்தான். மகாதேவனோ சயிக்கிளைப் ´பார்க்´ பண்ணுவதற்குச் சென்றான். கோபால் கரிய மெல்லிய உருவம் கொண்டவன். ஆனால் கண்களோ மிகுந்த ஒளி வீசுபவை. அங்குமிங்கும் ஓடிய அவன் விழிகள், ஓர் அழகு மங்கையிடம் அடைக்கலம் கொண்டன.

அரைப்பாவாடை, அழகாக வாரிய கேசம், காதில் இரண்டு பெரிய வளையங்கள், அதனோரத்தில் சுருண்டு தொங்கும் மயிரிழைகள், அதுவரை நீண்டிருக்கும் அழகிய கண்கள். கோபால் அவளையே பார்த்தவாறு நின்றான். "என்ன மச்சான் கணபதியரின்ரை மகளைப் பார்த்துக் கொட்டாவி விடுகிறாய்?" மகாதேவன் தோளில் தட்டிக் கேட்டான். "கணபதிப்பிளையரின்ரை தியேட்டரிலே ஓடுற படம் பார்க்கத்தான் டிக்கட் எடுக்க வேணும். வாசலிலே நடமாடும் இவளைப் பார்க்கிறதுக்கு..."

"டேய் கொஞ்சம் பண்பாடு வேணுமடா. அக்கா, தங்கையளோட பிறந்தநாங்கள் எங்கள் பார்வையிலாவது கொஞ்சம் பண்டு வேணுமடா"

"அழகு இரசிக்கத்தானே மச்சான்"


பக்கம்-48


"மலரை இரசிக்கிற மாதிரி ரசியடா, சுவைக்கிற மாதிரியில்லை" "மதுவுக்காகத்தானேடா வண்டு மலரைச் சுத்துது"

"வண்டு எல்லா மலரையும் சுத்தும். நாங்களும் அப்படிச் செய்தால்..."

"என்ரை கண் அந்த மலரை மாந்திரந்தானேடா நாடுது"

"கோபால், நீ கொம்புத்தேனுக்கு ஆசைப் படலாமேடா?"

கோபால் சிரித்தான்.

"மச்சான், எல்லாரும் மனம் புண்படக்கே அழுவீனம். நீ சிரிக்கிறாய். உள்ளத்திலே நீ அழுகிறதை உலகுக்கு மறைக்கலாம். ஆனால் உயிர் நண்பனுக்கு நீ மறைக்க முடியாதடா"

கோபால் பலமாகச் சிரித்தான்.

"உன் கற்பனை அருமையடா. எதுக்ககாக நான் அழ வேணும்?"

"என் நாவாலேயே உன்னை நான் சுட்டதற்காக. மச்சான், வேதனையாக இருந்தாலும் இந்த ஆசையை உன் இதயத்தில் இருந்து முளையிலே கிள்ளி விட நான் விரும்புகிறேன். அடைய முடியாத ஆசைகள் உன் இதயத்தையே பிரித்துக் கொண்டு விருட்சமாகி விடக்கூடாது பார்.."

"எது எப்பிடியோ, ஒன்றை நீ சரியாகப் பிடிச்சிட்டாய்" மகாதேவா, உணர்ச்சிகள் சாதாரணமான மனிதனை விட குறைகள் நிறைந்த மனிதனிடந்தான் அதிகம். என்ரை உடல்தானடா ஊனம். ஆனால் உள்ளம் உயரத்திலேதான் எப்பவும் தாவும். அது அவளிடம் தானே தாவிட்டுது." அவன் அவளைச் சுட்டிக் காட்டினான். தியேட்டர் வாசலில் நின்ற அவளும் திரும்பிப் பார்த்தாள். அவன்


பக்கம்-49

வேடிக்கையாக ஆந்தை போல தன் விழிகளை உருட்டினான். அவள் அவனது குறும்பைப்பார்த்துச் சிரித்தாள். போலனின் முகத்தில் வெற்றிப் புன்னகை படர்ந்தது.

"தோழரே, பார்த்தீரா, என் சிந்தை தனைக் கொள்ளை கொண்ட சிங்காரப் பைங்கிளியின் சிரிப்பழகை?" கோபால் ராஜபாட் நடிகனைப் போல் பேசினான்.

"டிக்கட் எடுத்தாச்சு வாங்கோ" இளங்கோ அழைத்தான்.

"ஒன்று அங்கொடைக்கே" மகாதேவன் கேட்டான். ஆனால் படம் முடிந்து அவர்கள் வெளியெ வந்த போது மகாதேவனுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. தியேட்டர் ஊழியன் ஒருவன் வந்து கோபாலைக் சுட்டிக் காட்டி முதலாளி அழைப்பதாகக் கூறினான். கோபாலின் குறும்ப வம்மை விலைக்கு வாங்கி விட்டதோ என்று அவன் நினைத்தான். கோபாலோ சிரித்தவாறு ஊழியனைப் பின் தொடர்ந்தான். முதலாளியின் அறையை அவன் நெருங்கிய போது அவனது இதயத்தரசியின் இனிய குரல்தான் அவனை வரவேற்றது.

"அப்பா பசிக்குது வாங்கோவன் வீட்டை போவம்"

"பொறு அமுதா. ஒரு சின்ன வேலை. முடிச்சிட்டுப் போவம். கணபதிப்பிள்ளையர் மகளை அமைதிப் படுத்தினார். ஐம்பதை அவர் நெருங்கிக் கொண்டிருந்தாலும், அவரைப் பார்ப்பவர்கள் வயதைக் குறைத்தே மதிப்பார்கள். அழகான ´பிரேம்´ போட்ட கண்ணாடி அணிந்திருந்தார். தேசிய உடையில் அவர் தோற்றம் அவரது பெரிய உருவத்தை அழகாகக் காட்டியது.

"வா தம்பி உள்ளே, ஏதோ வேலை கேட்டியாம்" கணபதிப்பிள்ளையா அப்படி அழைத்த போது, கோபால், யாருடைய கண்பார்வை படாவிட்டாலும் அதிர்ஷ்ட தேவதையின் ஓர் விழி தன் மீது விழுவதை உணர்ந்தான்.


பக்கம்-50


"ஓம் பாருங்கோ. கால் கொஞ்சம் ஏலாதுதான். என்றாலும் ஏதாவது செய்வன். உங்களுக்கு ஆர் சொன்னது, எனக்கு வேலை வேணுமென்று?"

"கொம்மாதான்."

கோபால் மனதுக்குள் சிரித்துக் கொண்டான். அதிர்ஷ்ட தேவதையாவது தன்னைப் பார்ப்பதாவது. இந்த அழகு தேவதையாவது கொஞ்சம் சிரிக்கட்டுமென நினைத்தான். இளங்கோ நிற்க வேண்டிய இடத்தில் தான் நிற்பது அவனுக்குப் புரிந்தது.

"அம்மாவோ சொன்னவ? வயர்லசிலேயே கதைச்சனீங்கள்? கோபால் கேட்டு விட்டு தலையைச் சொறிந்தவாறு அவளைப் பார்த்தான். அவள் ´கிளுக்´ கெனச் சிரித்தாள்.

அவனது மெலிந்த தோற்றமும், அசட்டுச் சிரிப்பும் கணபதிப்பிள்ளையரையும் மனதுக்குள் சிரிக்க வைத்தாலும் அதை மறைத்தவாறே அவர் சிறிது கடுமையாகக் கேட்டார் "என்ன சொல்லுறாய்?"

"கோவியாதேங்கோ ஐயா, எங்கடையம்மா மேலே போய் கனகாலம்"

"அப்ப... நீ...?"

"நான் தங்கத்தின்ரை மகனில்லை. அவன் வெளியிலே நிற்கிறான்" ஓகோ... அவனை வரச் சொல்லு"

"அப்ப எனக்கு வேலை...? கோபால் நீட்டினான்.

"ஓய் வாரவனுக்கெல்லாம் வேலை குடுக்கவே தியேட்டர் வைச்சிருக்கிறம். போங்காணும் வெளியிலே"
கணபதிப்பிள்ளையர் சத்தமிட்டார்.

"முதலாளி கோவியாதையிங்கோ. வேலை தராமலே சீட்டைக் கிழிக்காமல், வாசலிலே சீட்டுக் கிழிக்கிற வேலையென்றாலும் தாங்கோ."
கோபால் முதலாளியைக் கேட்டானா? இல்லை அமுதாவைக் கேட்டானா? திடீரென கணபதிப்பிள்ளையின் குரல் மாறியது.



பக்கம்-51

"நீ அரசடியே?"

"ஓம், ஓம் நாங்களெல்லாரும் ஒரு ஊர்தான். நீங்கள் பட்டணம் வந்திட்டியள். தியேட்டர் நல்ல தியேட்டர். சோக்கான படம்." அவன் ஏதேதோ சொன்னான். ´அமுதா´ அவன் நெஞ்சை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள். "உனக்கு தேவியவை சொந்தமே?"

கணபதிப்பிள்ளையரின் கேள்வி கோபலைத் திகைக்க வைக்கவில்லை. டியூசன் டீச்சர் தேவியக்கா பிரசித்தமானவள்தான். "அவள் எனக்கு அக்கா"

"நீ அவவின்ரை தம்பியே!" கணபதிப்பிள்ளையர் ஆச்சரியத்தோடு கேட்டார்.

"அவ அக்கா என்றால், நான் தம்பிதானே"
துணிவோடு அவன் அளித்த பதில் அமுதாவை மீண்டும் நகைக்க வைத்தது.

"இளங்கோ இஞ்ச வா. உன்னைத்தான் தேடுகினம்" வாசலில் காத்திருந்த இளங்கோவை கோபால் கூப்பிட்டான்.

"இவன்தான் தங்கத்தின்ரை மோன்" கோபால் அறிமுகப் படுத்தினான்.

"கொம்மா உன்னைப் பற்றிச் சொன்னவ. வேலை இல்லாமல் பெடியள் படுகிறபாடு உனக்குத் தெரியுந்தானே? வேலை தந்தால் ஒழுங்காகச் செய்வியே?" கணபதிப்பிள்ளையர் இளங்கோவைக் கேட்டார். இளங்கோ தலையசைத்தான்.

"இப்ப உனக்கு டிக்கட் கிழிக்கிற வேலைதான். ஓழுங்காக இருந்தால் பிறகு பார்த்துச் செய்வன். கசம்பள விசயம் முதல் மாத வேலையைப் பார்த்துத்தான் தருவன். சரியே!"

"ஓம்" இளங்கோ தலையையும் அசைத்தான்.

"மனேஜரோட நாளைக்கு வந்து கதை. எத்தனை மணிக்கு வரவேண்டும் என்றெல்லாம் அவர் சொல்லுவார். கவனமாக அவர் சொல்லுற படியெல்லாம் நடக்க வேணும்"


பக்கம்-52


"சரி"

"அப்ப போயிட்டு நாளைக்கு வா"

இளங்கோ நடந்தான்.

"அப்ப நான்... கோபால் இழுத்தான்.

"ஓ... உனக்கு..." கணபதிப்பிள்ளையர் அவனை உற்று நோக்கினார். "எதுக்கும் நீ நாளைக்கு எங்கடை வீட்டை வா. நான் சொல்லுறன்" கோபாலும் விடை பெற்றுக் கொண்டான். விருப்பமின்றித்தான்.

வீடு நோக்கி நண்பர்கள் சென்றனர். வழியெல்லாம் கோபால் அமுதாவின் அழகைப் பற்றியே பேசினான். மகாதேவன் மனமோ தோட்டத்திலிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட அவன் தோட்டத்தில் சில தக்காளிப் பழங்கள் களவாடப் பட்டிருந்தன. யாராக இருக்கும்? மணியனும் அவன்ரை ஆட்களுமோ? மகாதேவனின் கேள்விக்கு அன்றிரவு பதில் கிடைத்தது. ஆனால் பதிலோ அவனை அதிர்ச்சியடையச் செய்தது. தங்கையின் கையால் சோறு வாங்கிச் சாப்பிட்டு, வெளியே சிறிது உலாவ அவன் வந்த பொழுது இரவு பதினொரு மணி இருக்கும்.

No comments: